இலங்கையில் பல்வேறு தீவிர குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவனும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர (அழைக்கப்படும் ‘பஸ் லலித்’) துபாயில் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 36 வயதான இந்த நிழலுலக தாதா, நீண்டகாலமாக பாதுகாப்பு பிரிவினருக்கு சவால் விடுத்து வெளிநாட்டில் தலைமறைவாக இருந்துவந்தார். இவருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் மற்றும் பாரியளவில் கப்பம் கோருதல் உள்ளிட்ட பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
குறிப்பாக, அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கின் அடிப்படையில், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினால் பெறப்பட்ட சர்வதேச பொலிஸாரின் (Interpol) ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) மூலமாகவே இவர் துபாயில் வைத்து பாதுகாப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
சந்தேகநபர் மீது ஹங்வெல்ல, அவிசாவளை, கட்டுகுருந்த, பாடுக்க, மீகொட மற்றும் கல்தோட்டை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், C-4 வகையைச் சேர்ந்த அதிக சக்திவாய்ந்த வெடிபொருட்களை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவர் மீது நீதிமன்றங்களால் பல திறந்த பிடியாணைகளும் (Open Warrants) பிறப்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள கொலை வழக்கு ஒன்றில் ஆஜராகத் தவறியமை, 2021 செப்டம்பர் 20 அன்று நெலுண்துடுவ பகுதியில் நபர் ஒருவரை வீட்டின் முன் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்தமை மற்றும் 2022 அக்டோபர் 16 அன்று மூவரை கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியமை உள்ளிட்ட சம்பவங்கள் இதில் பிரதானமானவை.
இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள ‘பஸ் லலித்’ தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, அவரது நிழலுலக வலையமைப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பாக தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.




