நாட்டின் பிரதான விவசாய மாவட்டங்களில் நிலவிவரும் கடுமையான வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிக விரைவாகக் காப்பீட்டு நட்டஈட்டை வழங்கும் நோக்கில், அரசாங்கம் 3,000 மில்லியன் ரூபா நிதியை உடனடியாக ஒதுக்கியுள்ளது.
உலகளாவிய ரீதியில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் இலங்கையின் விவசாயப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் சோளம் உள்ளிட்ட பிரதான பயிர்கள் போதிய நீரின்றி முற்றாகக் கருகிப்போயுள்ளன.
தற்போதைய களநிலைமைத் தரவுகளின்படி, இந்த 5 மாவட்டங்களிலும் 7,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதில் நெற்செய்கையில் மட்டும் அனுராதபுரத்தில் 1,923 ஏக்கர்களும், மொனராகலையில் 1,401 ஏக்கர்களும், பொலன்னறுவையில் 1,259 ஏக்கர்களும், அம்பாறையில் 1,055 ஏக்கர்களும், அம்பாந்தோட்டையில் 783 ஏக்கர்களும் நாசமாகியுள்ளமை பதிவாகியுள்ளது.
விவசாயிகளின் இந்த அவல நிலையைக் கருத்திற்கொண்டு, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் சேத மதிப்பீட்டுப் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையின் கள உத்தியோகத்தர்களும், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்குச் சென்று தரவுகளைச் சரிபார்த்து வருகின்றனர்.
இந்த விசேட நிவாரணத் திட்டத்தின் கீழ் நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய 6 வகையான பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 100,000 வீதம், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை நட்டஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, இதுவரை தமது பயிர்ச் சேதங்களை அறிவிக்காத விவசாயிகள் எவரேனும் இருப்பின், தாமதிக்காது உடனடியாக அருகிலுள்ள கமநல சேவை நிலையங்களின் சேத அறிவிப்புப் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு அல்லது பிரதேச விவசாய உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள 1918 என்ற விவசாய காப்புறுதிச் சபையின் உடனடித் தொலைபேசி இலக்கத்தை அழைக்க முடியும்.


