தொடர் விடுமுறை நாட்கள் வந்தாலே போதும்; நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதும், சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து அதிகரிப்பதும் வழமையான ஒன்றுதான். ஆனால், கடந்த வார இறுதியில் இலங்கை அதிவேக வீதிகளில் பதிவான புள்ளிவிவரங்கள் அத்தனை பேரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளன.
கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் மாத்திரம், அதிவேக வீதி வலையமைப்பைப் பயன்படுத்திய வாகனங்கள் ஊடாக 12 கோடியே 45 இலட்சத்து 74 ஆயிரத்து 925 ரூபாய் (ரூ. 124,574,925) வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த இரண்டு நாட்களில் மாத்திரம் ஒட்டுமொத்த அதிவேக வீதி அமைப்பிலும் பயணித்த வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 325,316 ஆகப் பதிவாகியுள்ளது.
நாளாந்த வருமான விபரங்களை உற்றுநோக்கினால், ஓகஸ்ட் 26 ஆம் திகதி 163,763 வாகனங்கள் அதிவேக வீதிகளில் பயணித்துள்ளன. இதன் மூலம் அன்றைய தினம் மாத்திரம் ரூபா 60,409,995 வருமானம் பெறப்பட்டுள்ளது.
அடுத்த நாளான ஓகஸ்ட் 27 ஆம் திகதி வாகனங்களின் எண்ணிக்கை 161,553 ஆக சற்று குறைந்த போதிலும், நீண்ட தூரப் பயணங்களின் அதிகரிப்பு காரணமாக அன்றைய தின வருமானம் ரூபா 64,164,930 ஆக எகிறியுள்ளது.
குறிப்பாக, வழமை போலவே இம்முறையும் தெற்கு அதிவேக வீதி (E-01) மற்றும் வெளிவட்ட அதிவேக வீதி (E-02) ஆகியவற்றிலேயே உச்சகட்ட வாகனப் போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


