- டித்வா புயல் விட்டுச்சென்ற பேராபத்து: இலங்கையில் 30,000 குடும்பங்களுக்கு மண்சரிவு அச்சுறுத்தல்!
- பாதுகாப்பான இடங்களும் இனி ஆபத்து: NBRO விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
- நிலத்தில் தெரியும் ஆரம்ப அறிகுறிகள்: மலையக மக்களை உடனடியாக வெளியேறக் கோரும் விஞ்ஞானிகள்!
நாட்டை உலுக்கிச் சென்ற ‘டித்வா’ புயலின் நேரடித் தாக்கம் தணிந்தாலும், அதன் பின்னணியில் எழும் அடுத்தகட்ட இயற்கை அனர்த்தம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையின் எதிரொலியாக, 30,000-க்கும் அதிகமான குடும்பங்கள் எந்த நேரத்திலும் மண்சரிவு அனர்த்தத்திற்குள் சிக்கும் பாரிய பேராபத்தை எதிர்கொண்டுள்ளன.
இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் ஏற்கனவே தென்படத் தொடங்கிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இயற்கையின் சமநிலை குலைந்துள்ள இந்த அபாயகரமான சூழலில், கண்முன்னே முழுமையாக சரிவு ஏற்படாத போதிலும் மண் தளம்பல் மற்றும் பாறைகள் நகர்ந்த பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தொடரும் அடைமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, இத்தகைய பகுதிகள் மிக விரைவாக பாரிய மண்சரிவுகளாக மாறும் அச்சுறுத்தல் நிலவுகிறது.
புள்ளிவிபரங்களின்படி, கடந்த 15 ஆண்டுகளில் அதிக ஆபத்துள்ளவர்களாக சுமார் 15,000 குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அவர்களில் 5,000 குடும்பங்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டு வருகின்றன. ஆனால், அண்மைய ‘டித்வா’ புயலின் கோரத் தாண்டவத்திற்குப் பின்னர், மேலும் 16,793 குடும்பங்கள் புதிதாக அதிக ஆபத்து வலயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதுடன், தற்போதைய கள ஆய்வுகள் முடிவடையும்போது இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
“புயலின் தாக்கத்திற்குப் பிறகு, இதுவரை நாம் பாதுகாப்பானது எனக் கருதிய நிலப்பரப்புகளும் கூட தற்பொழுது பாதுகாப்பற்றவையாக மாறியுள்ளன” என்று எச்சரித்துள்ள கலாநிதி சேனாதீர, பலத்த மழை பெய்யும் தருணங்களில் அபாய வலயங்களில் வாழும் மக்களைத் தாமதிக்காமல் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை, மண்சரிவு அபாயம் நிலவும் இடங்களை வேடிக்கை பார்க்கவோ அல்லது கையடக்கத் தொலைபேசிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்கவோ மக்கள் அந்த இடங்களை அணுகுவது தற்கொலைக்குச் சமமானது எனவும் அவர் எச்சரித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகளைப் புறந்தள்ளி, அரச நிறுவனங்களால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் வழிகாட்டல்களை மட்டுமே பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



