Home Blog Page 102

அரசாங்கத்தின் தவறால் பொது மக்கள் மீது சுமை!

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தின் சுமையை மின்சார நுகர்வோர் மீது சுமத்துவது சட்டவிரோதமான செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

விசேட உரையொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். 

தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தி வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் பொறுப்புள்ள தரப்பினர் இப்போது மக்கள் முன்பாக அந்த நிலக்கரி தரமற்றது என கூறி வருகின்றனர். 

இந்தத் தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் மின் உற்பத்தி செயல்முறை உரிய செயற்திறனை காட்டாது காணப்படுகின்றது. 

இந்தத் தரமற்ற நிலக்கரி பயன்பாட்டால் உபகரணங்களுக்கு சேதம் ஏற்படும் போக்கு அதிகரித்துள்ளது. 

இதனால் உருவாகும் சாம்பல் அளவு இரண்டு மடங்காக அதிகரித்து, இருக்க வேண்டிய 11–15% என்ற அளவிலிருந்து 21% வரை அதிகரித்து காணப்படுகின்றன. 

இந்தச் சாம்பல் வெளியேற்றத்தால் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றன. 

எதிர்வரும் 2–3 மாதங்களில் மேலும் 15 முதல் 16 நிலக்கரி கப்பல்கள் இறக்குமதிக்கு கொண்டு வரவப்படவுள்ளன. தரமான நிலக்கரி இறக்குமதி செய்யாமல் தரமற்ற நிலக்கரி பயன்படுத்துவதால் உற்பத்திக்குத் தேவையான மெகாவோட் அளவு குறைந்து, மின்சாரத்துக்கு ஏற்படும் தட்டுப்பாட்டை ஈடுசெய்ய எரிபொருள் மின் நிலையங்களை நாட வேண்டியுள்ளதால், நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் மின் நுகர்வோருக்கும் பாரிய பண நட்டம் ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

2009 ஆம் ஆண்டு மின்சார சட்டத்தின் 30 ஆவது பிரிவின்படி, வினைத்திறனான மின்உற்பத்தி மூலம் மட்டுமே மின்சார நுகர்வோரிடம் கட்டணம் அறவிட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மின்சார நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும். இந்தத் தரமற்ற நிலக்கரியால் ஏற்படும், நஷ்டகரமான, ஒழுங்கீனமான மின்உற்பத்தி காரணத்தால் ஏற்பட்ட பெரும் நிதி நஷ்டத்தை நாட்டின் சுமார் 75 இலட்சம் மின் நுகர்வோரிடம் இருந்து அறவிட அரசாங்கத்திற்கோ பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கோ எந்த வகையிலும் முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

தரமற்ற நிலக்கரி பயன்படுத்தி ஏற்பட்ட நஷ்டத்தின் சுமையை மின்சார நுகர்வோர் மீது சுமத்துவது சட்டவிரோதமான செயலாக அமைந்து காணப்படுகின்றன. 

முறைமையில் மாற்றம் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்த தற்போதைய அரசாங்கம் இன்று தரமற்ற நிலக்கரியை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. ஏற்பட்ட இந்த நட்டத்தில், இழந்த பணத்தால் பாடசாலைகள், வைத்தியசாலைகளை நிர்மாணித்திருக்க முடியும். 

வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்திருக்கும். புதிய தொழில்களை ஆரம்பித்து அவற்றை முன்னேற்ற முடிந்திருக்கும். 

ஆனால் முறைமையில் மாற்றத்தை கொண்டு வருவோம் என வாக்குறுதியளித்த அரசாங்கம் மிகவும் ஊழல் நிறைந்த தரமற்ற நிலக்கரி திட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டையும் மக்களையும் ஏமாற்றியுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

நியூசிலாந்து அணியுடன் படுதோல்வி அடைந்து வெளியேறிய இலங்கை!

இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர் 8 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 61 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது.

169 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இதனூடாக அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது.

இதேவேளை இலங்கைத் தேசிய கிரிக்கெட் அணியைச் சுற்றி நிலவும் எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளத் தாக்குதல்கள், வீரர்களின் மனநலத்தையும் விளையாட்டின் எதிர்காலத்தையும் பாதிப்பதாகத் தெரிவித்துள்ள அணியின் தலைவர் தசுன் ஷானக, இதில் அரசாங்கம் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தோல்விக்கான பொறுப்பை அணி ஏற்றுக்கொண்டாலும், வெளியிலிருந்து வரும் தொடர்ச்சியான எதிர்மறை விமர்சனங்கள் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இலங்கைத் தேசிய கிரிக்கெட் அணியைச் சுற்றி நிலவும் எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளத் தாக்குதல்கள், வீரர்களின் மனநலத்தையும் விளையாட்டின் எதிர்காலத்தையும் பாதிப்பதாகத் தெரிவித்துள்ள அணியின் தலைவர் தசுன் ஷானக, இதில் அரசாங்கம் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தோல்விக்கான பொறுப்பை அணி ஏற்றுக்கொண்டாலும், வெளியிலிருந்து வரும் தொடர்ச்சியான எதிர்மறை விமர்சனங்கள் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அணிக்குள் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க முயற்சி செய்தாலும், பொதுவெளியில் பரப்பப்படும் விமர்சனங்களைக் கட்டுப்படுத்துவது வீரர்களுக்கு கடினமாக இருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

குறிப்பாக, உலகக்கிண்ணத் தோல்விக்கான காரணங்களை அணி நிர்வாகம் அறிந்திருப்பதாகவும், ஆனால் குறைகளை நிவர்த்தி செய்வதை விட எதிர்மறையான கருத்துக்களே அதிகம் பரப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இலங்கை அணியின் சரிவு குறித்து சங்கக்கார உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள விடயம் கிரிக்கட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பின்னடைவுகள் குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது கவலையையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால தோல்விகளால் ரசிகர்கள் ஏமாற்றத்திலும் கோபத்திலும் உள்ளதைப் போலவே, வீரர்களும் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டுக்காக விளையாடுவது என்பது ஒரு கௌரவம் மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக கிரிக்கெட் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நாம் பழைய முறைகளையே பின்பற்றினால் பின்தங்கிவிடுவோம் என அவர் எச்சரித்துள்ளார்.

“நாம் மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளத் தவறினால், சர்வதேச அரங்கில் முக்கியத்துவமற்ற ஒரு அணியாக மாறும் அபாயம் உள்ளது” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் 491 மில்லியன் செலவில் 491 வீடுகள்!

அரசின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், “சொந்தமான ஓரிடம் – அழகான வாழ்க்கை” வீடமைப்பு உதவித் திட்டத்தின் புத்தளம் மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (25) நடைபெற்றது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (NHDA) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வேலைத்திட்டம், நாடு முழுவதும் 13 மாவட்டங்களில் இன்று ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஒரு கட்டமாக, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 125 பயனாளிகளுக்கு இன்றைய நிகழ்வின் போது வீடமைப்பு உதவிக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டில் புத்தளம் மாவட்டத்திலுள்ள 548 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மொத்தம் 491 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்காக 491 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு பயனாளியும் 1 மில்லியன் ரூபா (10 இலட்சம்) நிதியுதவியைப் பெற்றுக்கொள்வர்.

பயனாளிகள் தலா 550 சதுர அடிக்கு குறையாத நிரந்தர வீடுகளை அமைப்பதை இந்தத் திட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. கட்டுமானப் பணிகளைப் பயனாளிகளே முன்னெடுக்கும் அதேவேளை, கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை அந்தந்த பிரதேச செயலகங்களின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் வழங்குவர்.

இந்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான பயனாளிகள் தெரிவில் பின்வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது:

  • நிரந்தர வீடற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள்.
  • பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள்.
  • மாற்றுத்திறனாளிகள் அல்லது நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட குடும்பங்கள்.
  • கல்வி கற்கும் வயதுடைய பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள்.

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 31,218 வீடுகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எஞ்சியுள்ள வீட்டுத் தேவைகளை அடுத்த மூன்று ஆண்டுகளில் (2027–2029) முழுமையாகப் பூர்த்தி செய்ய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான், முகமது பைசல், கயன் ஜனக குமார ஆகியோருடன் புத்தளம் மாவட்டச் செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றைத் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. 

கடந்த காலங்களிலும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், பரீட்சை முடிந்த பின்னர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் போக்கு காணப்பட்டதாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய, பெற்றோர்களும் தமது பிள்ளைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இவ்வாறான நிலைமைகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பணிப்பகிஷ்கரிப்பில் குதிக்கும் மின்சார, சுங்கத் தொழிற்சங்கங்கள்!

எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (26) 06 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தமது பிரச்சினைகள் குறித்து பலமுறை அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்திய போதிலும், இதுவரை அதற்குத் தீர்வு கிடைக்கவில்லை என அந்த தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதன்படி, இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சருடன் இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் முடிவுகளின் அடிப்படையில், அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என சுங்கத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கறுப்புப் பட்டிகளை அணிந்து கடமைகளை முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் கீதாஞ்சன மடபாத தெரிவித்துள்ளார்.

பிங்கிரிய – ரஸ்நாயக்கபுர இடையான பாலம் இடியும் அபாயம்!

ஜூட் சமந்த

பிங்கிரிய – போவத்தையிலிருந்து ரஸ்நாயக்கபுர வரையான வீதியில் தெதுரு ஓயாவிற்கு குறுக்கே அமைந்துள்ள “கடிகாவ பாலம்” (Kadigawa Bridge), ‘டிட்வா’ (Ditwa) சூறாவளிக்குப் பின்னர் பாரிய சேதமடைந்து தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

‘டிட்வா’ சூறாவளி நிலவிய காலப்பகுதியில், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இந்தப் பாலம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. பாலத்தின் பாதுகாப்புத் தூண்களின் அடிப்பகுதி (Foundation) முழுமையாக அரிப்புக்குள்ளாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

மேலும், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாரிய மரக்கட்டைகள் பாலத்தின் அடியில் சிக்கியுள்ளன. எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக இந்த மரக்கட்டைகளை அகற்றி பாலத்தைப் பாதுகாக்கத் தவறினால், பாலம் பாரிய ஆபத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சேதமடைந்துள்ள அரச கட்டமைப்புக்கள்

பாலத்திற்கு அருகில் தெதுரு ஓயா ஆற்றின் கரை கடுமையாக அரிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்குச் சொந்தமான நீர் அளவீட்டு கருவி மற்றும் நீர்வளச் சபையின் நீர்ப்பரேற்று நிலையம் என்பனவும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூறாவளி அனர்த்தம் ஏற்பட்டு சுமார் மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும், சேதமடைந்த பாலத்தைச் சீரமைக்கவோ அல்லது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் புனரமைக்கவோ இதுவரை எந்தவொரு அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் கடிகாவ பாலம் எந்நேரமும் சரிந்து விழக்கூடும் எனவும், அவ்வாறு நேர்ந்தால் பிங்கிரிய மற்றும் ரஸ்நாயக்கபுர இடையிலான போக்குவரத்துத் தொடர்புகள் முழுமையாகத் துண்டிக்கப்படும் எனவும் மக்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, பாரிய அனர்த்தம் ஒன்று ஏற்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் தலையிட்டு பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிலாபத்தில் 14 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

ஜூட் சமந்த

சிலாபம், ஆராச்சிகட்டுவ பகுதியில் 7ஆம் தரத்தில் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை சிலாபம் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.

தனது பெற்றோருடன் அடிக்கடி முரண்பட்டுக் கொண்டு, வன்முறையான முறையில் நடந்து கொண்ட அந்தச் சிறுமியை, அதற்கான காரணத்தைக் கண்டறிய சிலாபம் சட்ட வைத்திய அதிகாரியிடம் பொலிஸார் ஒப்படைத்தனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் பின்னரே, அந்தச் சிறுமி இதற்கு முன்னர் இரண்டு முறை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக சிறுமி சிலாபம் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் விரிவான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

உறவினர் செய்த அத்துமீறல்

சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் படி, முதன்முதலில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி நாத்தாண்டியா – வலஹாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த அவரது 37 வயதுடைய உறவினர் ஒருவரால் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

தனது வீட்டில் வைத்து இந்த அத்துமீறலைச் செய்த அந்த நபர், இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகச் சிறுமியை மிரட்டியதுடன், அவருக்கு 500 ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மாரவில பொலிஸாரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மற்றொரு சம்பவமாக, கடந்த 2025 ஜூலை 05 ஆம் திகதி நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த தனது காதலனுடன் இரண்டு சந்தர்ப்பங்களில் உடலுறவு கொண்டதாகச் சிறுமி தெரிவித்துள்ளார். தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக அவர் வாக்குறுதி அளித்ததால் இந்த விடயத்தை மறைத்ததாகவும், அந்தச் சமயத்தில் தனது தாய் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்ததாகவும் சிறுமி குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அவரது தாயின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் கடற்கரையில் அதிரடி – அகற்றப்பட்ட கட்டிடங்கள்!

ஜூட் சமந்த

சிலாபம், தெதுரு ஓயா முகத்துவாரத்தை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களை கடற்கரை பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் அகற்றியுள்ளனர். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கடந்த 25 ஆம் திகதி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

முந்தைய முயற்சி தோல்வி

கடந்த ஆண்டு செப்டம்பர் 29 ஆம் திகதி, இந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முதன்முதலில் முயன்றனர். இருப்பினும், அந்தச் சந்தர்ப்பத்தில் கட்டிட உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டு அதிகாரிகள் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.

இதனைத் தொடர்ந்து, கடற்கரை பாதுகாப்பு அதிகாரிகள் ஜனவரி மாதம் 19 ஆம் திகதி இது தொடர்பான விடயங்களை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். வழக்கை ஆராய்ந்த நீதவான், மூன்று வார காலத்திற்குள் குறித்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றி, அது குறித்த அறிக்கையை ஏப்ரல் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

மின்சாரம் துண்டிப்பு மற்றும் இடிப்பு

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு அமைய, தெதுரு ஓயா முகத்துவாரப் பகுதியில் இருந்த கட்டிடங்களை கடற்கரை பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் இடித்து அகற்றினர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கை மின்சார சபையினரால் அந்த கட்டிடங்களுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டது.

கட்டிடங்கள் அகற்றப்படும் போது மீண்டும் எவ்வித கலவரங்களும் அல்லது அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரிஷாட் பதியுதீன் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமான இப்தார்!

புனித ரமழான் மாதம் என்பது வெறும் பசியையும் தாகத்தையும் அடக்கும் மாதமல்ல; அது இதயங்களை இணைக்கும் மாதம்.

அந்த உன்னத நோக்கத்தை பறைசாற்றும் வகையில், இன்று கல்பிட்டி திகளி பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஏற்பாட்டில் மிகப்பிரம்மாண்டமான இப்தார் நிகழ்வு அரங்கேறியது.​

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் NTM தாஹிர் மரிக்கார் அவர்களின் நுணுக்கமான நெறிப்படுத்தலில், இந்த நிகழ்வு வெறும் அரசியல் நிகழ்வாக அமையாமல், ஒரு குடும்ப விழாவாகவே மாறியிருந்தது.

திகளி பகுதியே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. மக்களின் உணர்வுகளை மதிக்கும் தலைவர்களும், தலைவர்களின் அழைப்பை ஏற்று திரண்ட மக்களும் ஒரு புள்ளியில் இணைந்த காட்சி, அந்தப் பிரதேசத்தின் ஒற்றுமையை பறைசாற்றியது.​

ஊர் மக்கள், உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் இதில் கலந்துகொண்டனர்.​

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட காட்சி, சமூக நல்லிணக்கத்தின் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்தது.​

“மக்களுக்காக உழைக்கும் தலைவன், மக்களோடு அமர்ந்து நோன்பு துறப்பதில்தான் உண்மையான திருப்தி காண்கிறான்.” – இந்த இப்தார் நிகழ்வு இந்த வரிகளுக்கு உயிரூட்டியது.​

​இன்றைய இப்தார் நிகழ்வு மற்றும் அதற்கான ஏற்பாடுகள் குறித்து அப்பகுதி மக்கள் பெரும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேர்த்தியான ஒழுங்கமைப்பு மற்றும் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்ற உபசரிப்பு முறை என அனைத்தும் பாராட்டுக்குரியதாக அமைந்தன.

​தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் மரிக்கார் ஆகியோரின் இந்த முயற்சி, கல்பிட்டி பிரதேச மக்களின் இதயங்களில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது என்பதில் ஐயமில்லை.

அழுகை, ஆவேசம், மவுனம், கூட்டம் என்ற பெயரில் ஷூட்டிங் ஸ்கிரிப்ட்!

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அனுமதி உள்ளவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விஜய் ரசிகர்கள் பலர் போலீசாரை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றனர். இருக்கையில் அமராமல் நாற்காலிகள் மீது ஏறி நின்று கூச்சலிட்டனர். இந்நிலையில் கூட்டத்தில் பேசிய விஜய் முதலில் ஒரு குட்டிக்கதை சொல்லலாமா? எனக்கேட்டுக்கொண்டு விளங்காத ஒரு கதையை கூறினார்.

தொடர்ந்து பேச ஆரம்பித்த அவர், திடீரென ஆவேசப்பட்டார். சில நொடிகள் வார்த்தை வராதது போல் தவித்தார். பிறகு கண் கலங்குவது போல் நடித்தார். அதன்பிறகு ‘சாரி’ என்று சொல்லிவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். இதை நேரடி ஒளிபரப்பில் பார்த்த பலரும், ‘‘உலக மகா நடிப்புடா சாமி’’ என்று கலாய்த்தனர்.

அது உண்மைதான் என்பதை அவரது ஸ்கிரிப்ட் காட்டிக்கொடுத்துள்ளது. விஜய் பேசுவதற்காக எழுதி கொடுத்த ‘ஸ்பீச் காபி’ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் உள்ள ஒரு சில தகவல்கள்: ‘எவ்வளவு கத்தி பேச முடியுமோ அவ்வளவு கத்த வேண்டும். (குறிப்பு) இந்த வரியை பேசி முடித்து விட்டு சிறிது கேப் விட வேண்டும்.பேச முடியாதது போல் செய்து, மைக்கை விட்டு சற்று நகர்ந்து சென்று அழவும். (உங்கள் பாணியில்).மறுபடியும் மைக் பக்கம் வந்து, கண்கலங்கி ‘சாரி’ சொல்லிவிட்டு, எமோஷனலாக பேச தொடங்கவும் என எழுதப்பட்டிருந்தது. இந்த ஸ்கிரிப்ட்டில் எழுதியிருந்ததை ஒரு வரி கூட தவறாமல் விஜய் சூப்பராக பேசி, மவுனித்து, நடித்து காட்டினார் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மானபங்கப்படுத்தி வருகின்றனர். மைக் முன்னாடியும் கேமரா முன்னாடி நடிப்பதைப் போல நடித்து விஜய் வெளுத்து வாங்கிவிட்டார் என்று ஏகத்துக்கும் அவரை கலாய்த்து வருகின்றனர்.