‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.
ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.
இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.
முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.
4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.
5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.
புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!
இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.
அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.
உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.
கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.
ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்
தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:
மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.
நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.
ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.
ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.
மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.
மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.
நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.
மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.
மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.
அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.
அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.
அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.
தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.
எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.
அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.
அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.
எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.
அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.
புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.
எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.
இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.
தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.
அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.
வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.
நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.
முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.
தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர், மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை வழங்கப்பட்டு வருகின்றது.
புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால் பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற மாகாண மட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 18 வயதின் கீழ் பிரிவில் புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை சம்பியன் பட்டம் வென்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியது.
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் அகில இலங்கை போட்டிக்கு பு/வெட்டாளை அசன்குத்தூஸ் மு.வித்தியாலயம் இன்று (2025.07.15) புத்தளம் எருக்கலம்பிட்டி மு.வித்தியாலயத்தில் நடைபெற்ற வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் வெ/ஜோன்போல் அணியை 2:1 கோல் கணக்கில் வெற்றி பெற்று அகில இலங்கை போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டது
கடந்த இரண்டு தினங்களாக புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில், 18 வயதின் கீழ் பிரிவில் இடம்பெற்ற மாகாண மட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில், புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை மற்றும் வென்னப்புவ ஜோன் போள் சர்வதேச பாடசாலை ஆகியன பலப்பரீட்சை நடத்தின.
இதில் ஆரம்பம் முதல் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை 2:1 கோல் கணக்கில் வெற்றிபெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியதுடன் இரண்டாம் இடத்தை வென்னப்புவ ஜோன் போள் சர்வதேச பாடசாலை பெற்றுக்கொண்டது.
இதேவேளை மூன்றாவது இடத்தை பெரும் அணியை தெரிவுசெய்வதற்காக இடம்பெற்ற போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அணி மற்றும் புத்தளம் ஸாஹிரா கல்லூரிகள் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில், 2:0 அடிப்படையில் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அணி, புத்தளம் ஸாஹிரா கல்லூரி அணியை வீழ்த்தி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் தீர்வை வரி குறித்து கலந்துரையாட இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (15) நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “எங்கள் குழு வொஷிங்டன் செல்கிறது. பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்பு எங்கள் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அது குறித்து இருதரப்பு ஒப்பந்தத்தை எட்டுவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடினோம். நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார்.
அமெரிக்காவில் கல்வித்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபரான பின்னர் டிரம்ப் செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார். பல்வேறு அரசு துறைகளில் இருக்கும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார்.
அதன் முக்கிய கட்டமாக, கல்வித்துறையில் இருக்கும் 1300க்கும் அதிகமானோரை பணி நீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்தார். ஆனால் டிரம்பின் நடவடிக்கைக்கு கடும் விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில், கல்வித்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. டிரம்பின் செலவின குறைப்பு நடவடிக்கைக்கு பாஸ்டன் நீதிமன்றம் தடை பிறப்பித்து இருந்தது.
ஆனால் தற்போது அந்த தடை உத்தரவை தகர்க்கும் வகையில் அந்நாட்டு உச்சநீதிமன்றம், பணியாளர்களை நீக்க ஒப்புதல் தந்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த அனுமதியை வரவேற்றுள்ள டிரம்ப், நாடு முழுவதும் உள்ள பெற்றோர், மாணவர்களுக்கு நன்றி என்று கூறி உள்ளார்.
மேலும் தனது நிர்வாகம் எடுக்க இருக்கக்கூடிய சில முக்கிய சீர்திருத்தங்களின் தொடக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் அலைகளின் உயரம் 2.5-3 மீட்டர் வரை அதிகரிக்கலாம் எனவும், இதனால் குறித்த பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகங்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கு புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கப் பொறுப்புக் கணக்குகள் குழுவின் (COPE) பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்காக நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இக்குழுவினை உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி விஜித் கே. மலல்கொட, ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க, அரச உடமைகள் மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டபிள்யு.எம்.சி. பண்டார ஆகியோர் குழு அங்கத்தவர்களாகவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவி கணக்காய்வாளர் திருமதி ஹஸ்தி பத்திரண அழைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கையினை 60 நாட்களுக்குள் கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும்.
நோய்வாய்ப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ‘பாத்திய’ காட்டு யானை உயிரிழந்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் அசோக தன்கொல்ல தலைமையிலான குழு, பொல்பிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் ஆபத்தான நிலையில் இருந்த ‘பாத்திய’ யானைக்கு சிகிச்சை அளிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டது.
எனினும், தசைச் சிதைவு மற்றும் பாதிக்கப்பட்ட இரத்த ஓட்டம் காரணமாக யானை ஆபத்தான நிலையில் இருந்ததாக கால்நடை வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பல நாட்களாக ஒரே பக்கத்தில் இருந்த பாத்திய, நேற்று (14) மறு பக்கத்திற்கு திருப்பப்பட்டது.
பேராசிரியர் அசோக தன்கொல்லவின் அறிவுறுத்தலின் பேரில், வைத்தியர் தரிந்து விஜேகோன், வனவிலங்கு மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து தேவையான பணிகளை மிகுந்த முயற்சியுடன் மேற்கொண்டார்.
இந்நிலையில், 30-35 வயது மதிக்கப்பட்ட ‘பாத்திய’ யானை, கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (15) காலை உயிரிழந்தது.
இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 30 முதல் ஜூலை 10 வரை புத்தளம் மற்றும் கல்பிட்டி கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் கலால் துறையுடன் இணைந்து மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1307 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் இரண்டு (02) டிங்கிகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளை புத்தளம் கலால் அலுவலகத்துடன் இணைந்து புத்தளம், பாரமுனை, வெல்லமுண்டலம் மற்றும் உச்சமுனை ஆகிய பகுதிகளில் புத்தளம் மற்றும் கல்பிட்டி ஆகிய இடங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் பீடி 1307 கிலோகிராம் இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.
இலங்கையில் சவூதி அரேபியாவின் 11 வது மேம்பாட்டு முயற்சியான வயம்ப பல்கலைக்கழகம் நகர அபிவிருத்தி திட்டம் இன்று (14) திறந்துவைக்கப்பட்டது.
வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த கல்வி மற்றும் வளர்ச்சித் திட்டம், சவுதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்குமிடையேயான ஆழமான உறவுகளை பிரதிபலிக்கிறது என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி அரேபிய கொண்டுள்ள நம்பிக்கையே இந்த திட்டங்களை செயற்படுத்த காரணமாக அமைந்துள்ளன.
பல்கலைக்கழகங்களை கட்டுதல், அபிவிருத்தி செய்தல் என்பது வெறும் கட்டிடங்களை நிர்மாணிப்பது மட்டுமல்ல, மாறாக அது ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான அடித்தளமாகவும், மக்களுக்கிடையேயான புரிதலையும் அறிவையும் இணைக்கும் பாலமாகவும் அமைகிறது.
இந்த திட்டம், எவ்வித உட்புற நோக்கங்களோ அல்லது நிபந்தனைகளோ இல்லாமல், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட உண்மையான அபிவிருத்தி கூட்டுறவுகள் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கான ஒரு முன்னுதாரணமாக உள்ளது.
1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, சவூதி அபிவிருத்தி நிதியம், உலகம் முழுவதும் அபிவிருத்தி மற்றும் அமைதிக்காக சேவையாற்றும் சவூதியன் கொள்கையின் அடிப்படையில், 90க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலைத்த பயனுடைய திட்டங்களை செயற்படுத்த மிகுந்த முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக கல்விக்கு செய்கின்ற உதவி மாபெரும் தர்மம் என்பதை இத்திட்டத்தின் மூலம் அறிகிறோம். கல்வியே ஒரு சமூகத்தின் மேம்பாட்டுக்கு காரணமாகும்.
இது முன்னுதாரணம் மிக்க நடவடிக்கை என்றும் கூறலாம். ஒவ்வொருவரும் இந்த உலகில் வாழும் போது மற்ற மனிதனின் துன்பங்களில் பங்கு கொண்டு அதனை தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
எங்கள் தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த உலகத்தில் இப்படியான முன்னுதாரண மனிதராக மாநபியாக இருந்து வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார்கள்.
இந்த வகையில் இப்பொழுது திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற வயம்ப பல்கலைக்கழகத்திட்டம் நபிகளாரின் சிந்தனையை பிரதிபலிக்கின்ற ஒரு செயல் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
வயம்ப பல்கலைக்கழகம் அறிவின் கலங்கரை விளக்கமாகவும் நம்பிக்கையின் இல்லமாகவும் இருப்பதையும், மேலும் செழிப்பான மற்றும் பாதுகாப்பான இலங்கையை கட்டியெழுப்ப உதவும் புது தலைமுறைகளை உருவாக்கும் தளமாகவும் அமையும் என நான் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார்.
மீரிகம, ஏக்கர் 20 பகுதியில் உள்ள துரியன் (முள்நாறி) தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மீரிகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட காவலாளி மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 2025.01.01 முதல் 2025.07.13 வரை பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 50 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடையவை என்றும், ஏனைய 18 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேற்படி 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் 34 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும், துப்பாக்கிச் சூட்டில் 39 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 30 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
1805 ஆம் ஆண்டு இலங்கை சுங்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, சிவப்பு லேபிள்கள் கொண்ட எந்த கொள்கலன்களும் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை, ஆனால் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 309 சிவப்பு லேபிள் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அதுல டி சில்வா தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கொள்கலன்களுக்கு சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் லேபிள்கள் இருப்பதாகவும், பச்சை மற்றும் மஞ்சள் கொள்கலன்களை வெளியிடுவது சிக்கலானது இல்லை என்றும் அவர் கூறினார்.
கொள்கலனை இறக்குமதி செய்யும் நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளமை, கொள்கலனை அனுப்பும் நபர் போதைப்பொருள் அல்லது ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளமை, அல்லது கொள்கலனை அனுப்பும் நபருக்கு துறைமுகம் அல்லது நாடு குறித்து சந்தேகம் உள்ளமை போன்ற காரணிகளின் அடிப்படையில் கொள்கலன்கள் சிவப்பு லேபிள் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கூறினார்.
சிவப்பு லேபிள்கள் கொண்ட கொள்கலன்களில் ஆயுதங்கள், விவசாயத் தொழில் மற்றும் தேயிலைத் தொழிலை அழிக்கக்கூடிய பூச்சிக்கொல்லிகள் மற்றும் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகள் இருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.
அத்தகைய சிவப்பு லேபிள் கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் அதையும் மீறி 309 சிவப்பு லேபிள் கொள்கலன்களை வெளியிட்டுள்ளது என்றும், இது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.