Wednesday, May 21, 2025
Sponsored advertisementspot_img
Home Blog

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அறிமுகமாகவுள்ள புதிய வீதி பாதுகாப்புத் திட்டம்!

0

“Take Care வீதிகளைப் பாதுகாப்போம்’ திட்டம் அறிமுகம்”

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாகன விபத்துக்களை தடுத்து, வீதிகளை அனைவருக்கும் பாதுகாப்பான இடங்களாக மாற்றுவதற்காக பாடசாலை மாணவர்களை அடிப்படையாக கொண்ட “Take Care வீதிகளைப் பாதுகாப்போம்” எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேற்குறித்த திட்டம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, ஸ்ரீலங்கா பொலிஸ் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அமுல்படுத்தவதற்கு வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு திட்டமிட்டுள்ளது.

பாடசாலை வாகன ஒழுங்குபடுத்தல் அணிகள் மற்றும் மாணவ தலைவர்களை இணைத்து, 100 கல்வி வலயங்களில் உத்தேச திட்டம் அமுல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கல்வி வலயத்திலிருந்து தலா 500 மாணவர்கள் என்ற ரீதியில் 50,000 மாணவர்களை நேரடியாக நிகழ்ச்சித்திட்டத்தில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வையில் தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு மூலம் உத்தேச திட்டத்தை அமுல்படுத்துவதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    தொழிற்கல்விப் பிரிவுக்கு மாணவர்கள் சேர்ப்பு!

    0

    க.பொ.த(சா/த) பரீட்சையில் தோல்வி நிலையைப் பொருட்படுத்தாமல், உயர்தர தொழிற்கல்விப் பிரிவில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

    2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழிற்கல்விப் பிரிவின் (13 ஆண்டு சான்றளிக்கப்பட்ட கல்வித் திட்டம்) கீழ், பாடசாலைகளில் 12 ஆம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

    அதன்படி, தொழிற்கல்விப் பிரிவுக்கு 12 ஆம் தரத்தில் மாணவர்களைச் சேர்க்கும்போது, ​​க.பொ.த (சா/த) பரீட்சையில் தேர்ச்சி/தோல்வி நிலை கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான விண்ணப்பத்தை கீழே உள்ள இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

    பாடசாலைகள் விபரம் கீழே,
    https://moe.gov.lk/wp-content/uploads/2025/05/16/Annex2ALVSSchoolList2025.pdf

    விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய கீழே அழுத்தவும்.
    https://moe.gov.lk/wp-content/uploads/2025/05/16/Annex3ALVS13YearsSchoolApplicationTam.pdf

    காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி!

    0

    வவுனியா, கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    நேற்று (19) இரவு, அவரது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றபோது, வீதியோரத்தில் இருந்த காட்டு யானை அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    இச்சம்பவத்தில், கண்னாட்டி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய சுப்பிரமணியம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

    இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பறையனாலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    நைஜீரியா பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் பலி!

    0

    நைஜீரியாவில் வட கிழக்கு பகுதியில் 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர்.

    மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்த நாட்டில் ஐ.எஸ், அல்கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. போகோ ஹாரம் என்ற கும்பல் போர்னோ மாகாணம் மாளம் கராண்தி கிராமத்தில் திடீரனெ தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 23 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பெண்கள், சிறுமிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கொள்ளை கும்பலால் கடத்திச் சென்றனர். அதேபோல் மற்றொரு கிராமத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

    தகவலறிந்த ராணுவத்தினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொள்ளை கும்பலிடம் பிணைக்கைதிகளாகச் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இணைந்தது ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி!

    0

    2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. 

    நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கிய உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக இன்று (19) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

    இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரல ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வௌியிட்டு இந்த விடயத்தை தெரிவித்தனர்.

    தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற அவசர கூட்டம்!

    0

    நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலை மையப்படுத்தி வன்னி,கம்பஹா, கொழும்பு, களுத்துறை,பதுளை ஆகிய மாவட்டங்களில் கட்சியின் பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு , ஆட்சி அமைப்பில் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய ஆலோசனை கூட்டம் தாருஸ் ஸலாம்” தலைமையகத்தில் நேற்று (18) இடம்பெற்றது.

    தற்போதைய அரசியல் கள நிலைவரம் தொடர்பில் மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் அடங்கலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் பங்குபற்றலுடன் கட்சியின் தலைமையகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

    குறிப்பாக மன்னார் பிரதேச சபைக்கான கட்சியின் போனஸ் ஆசனம் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதுடன், எருக்கலம்பிட்டி வட்டாரத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று சரித்திர வெற்றிபெற்ற மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் இஸ்மாயீல் இஸ்ஸதீன் கட்சியின் தலைமையினால் வெகுவாக பாராட்டப்பட்டார்.

    இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், எம்.எஸ்.எம்.அஸ்லம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான அர்ஷாத் நிஸாம்தீன், ஷாபி ரஹீம் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

    மின்சார கட்டணம் குறித்து அதிர்ச்சி தகவல்!

    0

    இந்த ஆண்டின் பிற்பகுதிக்கான மின்சார கட்டண திருத்தத்தின்படி மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்றும், ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்த மின்சாரக் கட்டணங்களை விட அது குறைவாக இருக்கும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

    முன்மொழியப்பட்ட திருத்தத்துக்கமைய, இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்ததை விட மின்சார கட்டணம் சுமார் 5.4 சதவீதம் குறைவடையும் என இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

    இந்த ஆண்டின் முதல் அரையாண்டில், மின்சார நுகர்வோருக்கு நிவாரணமாக மின்சாரக் கட்டணங்களில் 20 சதவீதக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், இதன் விளைவாக, ஒரு அலகு மின்சாரத்தின் சராசரி கட்டணம் 24 ரூபாய் வரை குறைவடைந்தது.

    எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணங்களை 18.3 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை நேற்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்மொழிந்திருந்தது. 

    கடந்த ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட மின்சார கட்டணக் குறைப்பின் தாக்கம் உட்பட, ஆணைக்குழுவுக்கு 8 ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியது. 

    அத்துடன், அண்மையில் சர்வதேச நாணய நிதியம், செலவுகளை ஈடுகட்ட மின்சாரக் கட்டணங்களை உடனடியாக மறுசீரமைக்க வேண்டும் என பரிந்துரைத்தது. 

    இந்தப் பின்னணியில்தான், மின்சாரக் கட்டணங்களை 18.3 சதவீதம் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

    கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    0

    உயர்தர தொழிற்கல்விப் பாடப் பிரிவின் கீழ் தரம் 12இற்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

    இந்த வருடம் முதல் 608 பாடசாலைகளில் தொழிற்கல்விப் பிரிவு செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

    இந்தப் பாடப்பிரிவிற்கு மாணவர்களைச் சேர்க்கும் போது, ​​க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையத் தவறியது கருத்திற்கொள்ளப்படாது என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

    இதற்காக, அனுமதிக்காக எதிர்பார்க்கப்படும் பாடசாலை அதிபர்களிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா!

    0

    போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், தாக்குதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

    இதனிடையே, கடந்த 15ம் தேதி துருக்கியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நிறுத்தத்திற்கான நேரடி பேச்சுவார்த்தையில் முதல்முறையாக ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், இருநாட்டு கைதிகளை பரிமாறி கொள்வதில் மட்டுமே உடன்பாடு எட்டப்பட்டது. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பிறகு, போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப், இருநாட்டு தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளார்.

    அதேவேளையில், உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளது. நேற்று சுமி மாகாணத்தில் பஸ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில், உக்ரைனின் முக்கிய பகுதிகள் மீது ரஷ்யா மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. மத்திய கிவ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகிய பகுதிகளில் 273 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 4 வயது குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

    உக்ரைனுடனான போர் தொடங்கியது முதல் மிகப்பெரிய டிரோன் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. போரின் 3வது ஆண்டான கடந்த பிப்.,23ம் தேதி, உக்ரைன் மீது 267 டிரோன்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது, அதை விட கூடுதலான டிரோன்களில் தாக்குதலை நடத்தியுள்ளது.

    இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உக்ரைன் ராணுவம் கூறுகையில்,’உக்ரைனின் கிழக்கு பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ராணுவம் தக்க பதிலடியை கொடுத்து ள்ளது. 88 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. எஞ்சிய டிரோன்கள் திரும்ப சென்று விட்டன,’ என தெரிவித்துள்ளது.

    வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்!

    முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு வடக்கின் பல பகுதிகளிலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    அந்த வகையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முரசுமோட்டை வட்டாரத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி முன்றலில் இன்று (18)நடைபெற்றது.

    வட்டார தமிழரசுக்கட்சி இளைஞர் அணி செயற்பாட்டாளர் அ.பமீகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழரசுக்கட்சி சார்பாக குறித்த வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட பரமலிங்கம் பாஸ்கரன் கலந்து கொண்டு இரத்ததான நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

    இதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சி பல பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் நிலையில் வகையில் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஏற்பாட்டில் முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி இன்றைய இறுதி நாளில் வழங்கப்பட்டது.

    மேலும் யுத்தம் முடிந்து 16வருடங்கள் ஆகின்ற நிலையில் அரசியல் கைதிகளை முழுமையாக விடுவிக்க வலியுறுத்தியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா அவர்களினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தை நோக்கி தர்மபுரம் பகுதியிலிருந்து ஊர்தி முன்னெடுக்கப்பட்டது.

    இதேவேளை இறுதிப்போரில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் 16ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய குறிப்பிடத்தக்கது.