Home Blog Page 150

போராட்டத்தை தொடரும் JMOA!

தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தமது பிரச்சினைகள் தொடர்பில் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டார். 

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (17) முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

குறித்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நேற்று முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. 

வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையை பேணுவதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கம் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்கு ஆதரவு வழங்குமாறு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

எவ்வாறாயினும், குறித்த கலந்துரையாடலின் பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர நிறைவேற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தமது தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டதாக அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். 

இதேவேளை, விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. 

பாராளுமன்ற வளாகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறும் என்று விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் செயலாளர் விசேட வைத்தியர் ஆர். ஞானசேகரம் குறிப்பிட்டார்.

சூடு பிடித்துள்ள திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்!

அப்துல் ஸலாம் யாசீம் – நிருபர்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: அரசை குற்றம் சாட்டும் மிஹிந்தலை பீடாதிபதி!!

​மிஹிந்தலை இராஜ மகா விகாரையின் தலைமை விகாராதிபதி, வளவாஹெங்குணாவெவ தம்மரத்ன தேரர், திருகோணமலையில் உள்ள போதிராஜ சம்புத்த ஜயந்தி விகாரையில் நடந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்போதைய நிர்வாகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எச்சரிக்கை அறிகுறிகள் தெளிவாக இருந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

​சமயத் துறவிகள் தாக்கப்பட்டதாகவும், புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தேரர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசே இந்தச் சம்பவங்களுக்கு நேரடியாகப் பொறுப்பு என்று குற்றம் சாட்டினார்.

​“இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே, புத்த சாசனத்துக்கு (பௌத்த மதத்திற்கு) ஏற்படக்கூடிய சேதம் குறித்து நாங்கள் எச்சரித்தோம். இவர்களுக்கு வாக்களித்தவர்கள், நாம் இப்போது எதிர்கொள்ளும் நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சம்பவங்கள் குறித்து இப்போது வருத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

​இதற்கிடையில், அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர், கரகோட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரர், நேற்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், திருகோணமலை போதிராஜ சம்புத்த ஜயந்தி விகாரையில் நடந்த சம்பவம் குறித்து அவர் தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

​இந்த விகாரை 1951 ஆம் ஆண்டு முதல் இந்த இடத்தில் இருந்து வருவதாகவும், 2014 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் கட்டளையின் மூலம் கோவில் அதிகாரிகளுக்கு நில உரிமை வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். எனவே, அங்குள்ள நிரந்தர துறவிகள் நேற்று பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளானது வருந்தத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டத்தில்!

அப்துல் ஸலாம் யாசீன் – நிருபர்

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் கொட்டும் மழையில் சத்தியாக்கிரக போராட்டத்தில்!!

திருகோணமலை – புல்மோட்டை கனிய மணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்து கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக இன்றய தினம் (18) 37வது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் பொருளாதார ரீதியாக தங்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் உரிய துறை சார் அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த தேர்தலின் போது தங்களுக்கு அனுர அரசாங்கம் தீர்வுகளை பெற்று தரும் என்ற நம்பிக்கையில் வாக்களித்த போதிலும் தங்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாதது போல் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

தங்களுக்கு சாதகமான தீர்வை பெற்றுத் தரக் கோரி சத்தியாக் கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

ஜூட் சமந்த

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக சந்தேக நபர் ஒருவர் ஆரச்சிகட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சோதனை நேற்று17 ஆம் தேதி மாலை மேற்கொள்ளப்பட்டது.

நல்லதரங்கட்டுவ – பன்குலாவ பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ஒரு தச்சுத் தொழிலாளி என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை போலீசார் கண்டுபிடித்தனர். சந்தேக நபர் துப்பாக்கியை வைத்திருந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரும் துப்பாக்கியும் சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.

ஆரச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகவில்லு வடிகான் பிரச்சினை தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கை!

புத்தளம் நாகவில்லு கிராமத்தில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள நீரினை வடிகான்கள் ஊடாக வெளியேற்ற முறையான வடிகான் வசதிகளை மேற்கொண்டு தருமாறு கோரி வடமேல் மாகாண ஆளுநரிடம் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்று இன்று 17.11.2025 திங்கட்கிழமை கையளிக்கப்பட்டது.

புத்தளம் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஜனாப் லரீப் காசிம் அவர்களினால் எழுத்து மூலமான கோரிக்கை அடங்கிய மகஜர் வடமேல் மாகாண கெளரவ ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய அவர்களிடம் அவரின் காரியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

புத்தளம் நாகவில்லு கிராமத்தில் சுமார் 1500இற்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்துவருவதுடன், தற்போது வருடா வருடம் பெய்யும் கனமழை காரணமாக இக்கிராமம் வெள்ள அனர்த்தத்திற்கு தொடர்ச்சியாக முகம்கொடுத்து வருவதாக ஜனாப் லரீப் காசிம் அவர்கள் கெளரவ ஆளுநருக்கு எடுத்துரைத்தார்.

மேலும் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான முறையான வடிகான் வசதி இல்லாமையால், நாகவில்லு கிராம மக்கள் வருடம்தோறும் வெள்ள நீர் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதுடன், பொருளாதார ரீதியாகவும் பாரிய இழப்புகளை சந்தித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மழை காலங்களில் நாகவில்லு கிராமத்திற்கு அருகில் உள்ள பொத்துவில்லு கிராமத்தில் அமையப்பெற்றுள்ள குளத்தின் நீர் மட்டும் உயரும் நேரங்களில், அதன் வான் கதவுகள் திறக்கப்படுவதினாலும், குளத்தை மேவி மழை நீர் பாய்ந்து வழிந்தோடி வருவதினாலும் நாகவில்லு கிராமம் நேரடியாக பாதிக்கப்படுவதாக கெளரவ ஆளுநரிடம் தெரிவித்தார்.

வெள்ள அனர்த்தத்தினால் நாகவில்லு கிராமம் பல வகையான இழப்புகளை சந்தித்து வருவதாக குறிப்பிட்ட புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் லரீப் காசிம், இந்த வெள்ள அபாயத்தை நிரந்தரமாக தடுக்கும் நோக்கில் வடிகான் வசதிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு கெளரவ ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.

விடயங்களை நன்கு கேட்டறிந்த கெளரவ வடமேல் மாகாண கெளரவ ஆளுநர் அவர்கள், இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கு தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

36 தபால் சாரதிகளுக்கு நாளை நியமனக் கடிதம்!

இலங்கை தபால் திணைக்களத்தில் 36 தபால் சாரதி (திறந்த) பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நாளை (18) பிற்பகல் 2.00 மணிக்கு நாரஹேன்பிட்ட அரசாங்க செய்தித் துறை கேட்போர் கூடத்தில் வழங்கப்பட உள்ளது.

தரம் III தபால் சாரதி (திறந்த) பதவிகளுக்கான 40 பதவிகளை நிரப்புவதற்காக கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 1500 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இலங்கை தபால் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்றிருந்தது.

இதனடிப்படையில் மேலும் விண்ணப்பதாரர்கள் செய்முறைப் பரீட்சை மற்றும் பொது நேர்முகத் தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இதனடிப்படையில் தகுதிகளை முறையாக பூர்த்தி செய்த 36 பேருக்கு நியமனக் கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

இந்த புதிய தபால் சாரதிகளுக்கு நாளை (2025.11.18) அமுலுக்கு வரும் வகையில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் 19, 20 ஆகிய இரு தினங்களில் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டதன்பின் தபால் போக்குவரத்துத் சேவையில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை அஞ்சல் துறையின் கீழ் சுமார் 129 அஞ்சல் சாரதிகள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

காகிதப் பைகளைத் தயாரிக்க மேற்பார்வைக் குழு ஆலோசனை!

பொலிதீன் (சிலிசிலி) பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்க சுற்றாடல் அமைச்சு தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியது.

பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது சிலிசிலி பைகளுக்கு கட்டணம் அறவிடும் தீர்மானம் தொடர்பில் குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் பொலிதீன் பயன்பாடு குறைக்கப்படுமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது இந்தப் பைகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை முடிவு செய்த அதிகாரிகள் யார் என்பதையும் குழுவின் தலைவர் வினவினார். சிலிசிலி பைகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை என இங்கு ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய தினங்களில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், குறித்த அமைச்சுக்களின் கீழ் உள்ள பல நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், ரொஷான் அக்மீமன, சதுரி கங்கானி, சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத், (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, ஜே.சி.அலவத்துவல, (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க மற்றும் உபுல் கித்சிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெரும்போக நெற்செய்கைக்கு உரமானியமாக 10 கோடி வைப்பில்!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2025/2026 பெரும்போக நெற்செய்கைக்காக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 10 கமநல சேவை நிலையங்களின் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இதுவரை 6,256 விவசாயிகளுக்கு 4,649.1752 ஹெக்டேயர் விவசாய நிலங்களில் பயிர்செய்கைக்காக 10கோடியே 13லட்சத்து 61ஆயிரத்து 486 ரூபா தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பில் இடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள ஏனைய விவசாயிகளுக்கு தொடர்ந்து வைப்பிலிடும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு வழங்கப்படும் 15ஆயிரம் ரூபா உரமானிய கொடுப்பனவு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு 25ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பீடி இலை கடத்திய முன்னாள் கலால் அதிகாரி புத்தளத்தில் கைது!

ஜூட் சமந்த

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளை வைத்திருந்ததற்காக புத்தளம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் முன்னாள் கலால் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் – பிடவட ரவும் சாலை பகுதியில் இன்று 17 ஆம் தேதி காலை 7.30 மணியளவில் இவர் கைது செய்யப்பட்டார்.

ஹக்மன – மாத்தறையைச் சேர்ந்த 29 வயதான குறித்த சந்தேக நபர், கலால் துறையில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு அதை விட்டு வெளியேறியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபரிடம் கலால் துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டையும் அவர் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் புத்தளம் – பிடவட ரவும் சாலை பகுதியில் தற்காலிகமாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு வசித்து வந்த நிலையில், அதிகாரியின் வாழ்க்கை முறை குறித்து சந்தேகம் கொண்ட காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரின் மோட்டார் காரில் பீடி இலைகள் அடங்கிய 10 பொலிதீன் பைகளை கவனமாக பொதி செய்ததை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சோதனையை நடத்திய அதிகாரிகள், சந்தேக நபர் பீடி இலைகளை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராகி இருந்ததாகவும் சந்தேகிக்கின்றனர்.

கலால் துறையால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டையைப் பயன்படுத்தி சந்தேக நபர் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சோதனையை நடத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அவரது காவலில் எடுக்கப்பட்ட பீடி இலைகள் மற்றும் மோட்டார் காரை மேலதிக விசாரணைக்காக புத்தளம் காவல்துறையிடம் ஒப்படைக்க சோதனையை நடத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வடக்கில் திண்மக்கழிவிலிருந்து மின்சார உற்பத்தி!

வடக்கு மாகாணத்தில் நீடித்து வரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் ‘கழிவிலிருந்து மின்சார உற்பத்தி’ (Waste-to-Energy) திட்டத்தை நிறுவுவதற்கான உதவியை இலங்கைக்கான கொரியக் குடியரசுத் தூதுவர் லீ மியோன் அவர்களிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் முன்வைத்துள்ளார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை (17.11.2025) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கொரியத் தூதுவர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்துக்கான திட்டம் ஒன்றை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்காக நிதி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளதாகவும் கொரியத் தூதுவர் தெரிவித்தார். வடக்கு மாகாணத்திலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை ஆளுநர் வரவேற்றதோடு, மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் திண்மக் கழிவகற்றலில் எதிர்கொள்ளும் சவால்களை அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுச்சூழல் சமநிலை மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட மங்குரோவ் நடுகை ஊக்குவிப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் யோசனையையும் தூதுவர் முன்வைத்தார். மேலும், கொரியாவின் சர்வதேச சுகாதார அறக்கட்டளை (Korea Foundation for International Healthcare) ஊடாக இலங்கையில் 11 சுகாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதனுள் வடக்கு மாகாணமும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரிக்காக கொய்கா (KOICA) திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கட்டட வசதிகளுக்காக ஆளுநர் நன்றியைத் தெரிவித்தார். தற்போதைய தேவைகளுக்கேற்ப தொழில்நுட்ப உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் கட்டட மேம்பாட்டு தேவைகளைவும் அவர் சுட்டிக்காட்டினார். கொய்கா திட்டம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையிலும் இவற்றை கவனத்தில் கொள்ளுவதாக தூதுவர் உறுதியளித்தார்.

கொரியா தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உலகளவில் முன்னேற்றத்தைப் பதிவுசெய்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டதோடு, வடக்கு மாகாண இளையோருக்கான தொழில்துறை வேலை வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகளை அறிமுகப்படுத்துவதற்கான முதலீடுகளை ஊக்குவிக்குமாறு அவர் கோரினார். மேலும், கொரிய மொழிப் பயிற்சி மையம் அல்லது மொழிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்குவதற்கான உதவியையும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொரியாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பச்சை வீட்டு (Greenhouse) விவசாயம் மற்றும் நுண்ணறிவு பாசன முறைகள் (Smart Irrigation) பற்றியும் ஆளுநர் கூறி, வடக்கு மாகாணத்தில் ஒரு கிராமத்தைத் தெரிவுசெய்து இத்திட்டங்களைப் பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்துவதற்கான ஒத்துழைப்பைத் தூதுவரிடம் கோரினார்.

வடக்கு மாகாண விவசாயிகள் கடின உழைப்பாளர்களாக இருந்தாலும், பாரம்பரிய முறைகளால் உற்பத்தி செலவு அதிகரித்து விளைச்சல் குறைந்து வருவதாக அவர் எடுத்துக்காட்டினார். இத்திட்டங்கள் அறிமுகமானால் குறைந்த செலவில் அதிக உற்பத்தி பெற முடியும் என ஆளுநர் வலியுறுத்தியதுடன், இதனைத் தூதுவர் ஆராய்வதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.