Tuesday, June 9, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 2

வாகன இறக்குமதியில் சர்ச்சை: நெருக்கமானவர்களுக்கு முன்கூட்டிய அனுமதி?

0

வாகன இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகும் முன்னரே, அரசாங்கத்திற்கு நெருக்கமான தரப்பினருக்கு நாணயக் கடிதங்கள் (LC) திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர், இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான பொருளாதார நிர்வாகம் குறித்த கேள்விகளை எழுப்புவதாக தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) தற்போதைய அரசாங்கத்திற்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைத்திருந்த போதிலும், உள்நாட்டு சந்தையில் டொலரின் பெறுமதி கணிசமாகக் குறையாதது கவலைக்கிடமான விடயமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சந்தையில் நிலவும் நம்பிக்கையின்மை மற்றும் எதிர்கால பொருளாதார நிலை குறித்த நிச்சயமற்ற தன்மையே இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், ரூபாயின் மதிப்பு மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்றுமதியாளர்களும் வணிகர்களும் தங்களிடம் உள்ள டொலர்களை சந்தைக்குள் விடாமல் வைத்திருப்பதாக கூறினார்.

மேலும், வாகன இறக்குமதி தொடர்பாக 1,700 வாகனங்களை நாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு முக்கியமான விடயமாக, ஜனாதிபதி மே 16ஆம் திகதி வாகன இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னரான மே 15ஆம் திகதியே 1,600 வாகனங்களுக்கான நாணயக் கடிதங்கள் அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளதாக அவர் அம்பலப்படுத்தினார்.

இந்த தகவல் முன்கூட்டியே சிலருக்கு வழங்கப்பட்டதா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பினார்.

அதேவேளை, வெள்ளிக்கிழமைகளில்தான் அதிகளவில் நாணயக் கடிதங்கள் திறக்கப்படுகின்றன என்று நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்த கருத்தை நிராகரித்த முஜிபுர் ரஹ்மான், அது “பச்சைப் பொய்” என விமர்சித்தார். உண்மையில் வாரத்தின் ஏனைய நாட்களுடன் ஒப்பிடுகையில் வெள்ளிக்கிழமைகளில்தான் குறைவான அளவில் நாணயக் கடிதங்கள் திறக்கப்படுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.

வர்த்தமானி அறிவிப்பு வெளியாகவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்த சிலருக்கு, வாகன இறக்குமதிக்கான நாணயக் கடிதங்களை திறக்க அரசாங்கம் வாய்ப்பளித்துள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், இது ஜனாதிபதியின் “நண்பர்களுக்கான பொருளாதாரக் கொள்கை” எவ்வாறு நடைமுறையில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக தெரிவித்தார்.

ஆட்சியில் இருப்பவர்கள் தமக்கு நெருக்கமானவர்களின் நலன்களையே முன்னிலைப்படுத்தி, சாதாரண மக்களின் தேவைகளையும் நலன்களையும் புறக்கணித்து வருகின்றனர் என அவர் கடுமையாக விமர்சித்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசாங்கம் இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறது என்பது தற்போது கவனிக்கப்படும் முக்கிய விடயமாக மாறியுள்ளது.

இந்தியாவில் எபோலா அச்சம்! உகாண்டா பெண் தனிமைப்படுத்தல்!

0

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் எபோலா வைரஸ் நோய் தொடர்பான சந்தேகத்திற்குரிய ஒரு சம்பவம் பதிவாகியுள்ளமை சுகாதாரத் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானத்தின் மூலம் வெள்ளிக்கிழமை காலை ஜெய்ப்பூரை வந்தடைந்தார். வழக்கமான விமான நிலைய சுகாதாரப் பரிசோதனையின் போது, எபோலா நோயுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சில அறிகுறிகள் அவரிடம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அந்தப் பெண் உடனடியாக ஜெய்ப்பூரிலுள்ள RUHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடுமையான தனிமைப்படுத்தல் பிரிவில் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என மருத்துவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். RUHS மருத்துவமனையின் மேற்பார்வையாளர் டாக்டர் அனில் குப்தா, “அந்தப் பெண்ணுக்கு எபோலா உறுதியாக இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை. நோய்க்கு ஒத்த சில அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆனால் ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே உறுதியான தகவலை வழங்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நோயாளியிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், தொற்று நோய் மேலாண்மை நடைமுறைகளுக்கு அமைய அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எபோலா உலகின் மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படுவதால், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய சுகாதார அதிகாரிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட்டு வருவதுடன், தற்போது அனைவரின் கவனமும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகளின் மீதே திரும்பியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் டெங்கு உயிரிழப்புக்கள் அதிகரிப்பு!

0

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். 

தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 30% முதல் 40% வரையான அதிகரிப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நோயாளர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அவர்களுள் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலேயே கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தென் மாகாணத்தின் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்திலும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

டெங்கு நோயாளர்களில் சுமார் 80 சதவீதமானோர் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலிருந்தே பதிவாகியுள்ளனர். 

‘டித்வா’ புயல் நிலைமையுடன் நாட்டில் ஏற்பட்ட பலத்த மழைவீழ்ச்சி மற்றும் அதன் பின்னர் அவ்வப்போது பெய்த மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, இன்றைய தினத்தில் (05) மற்றுமொரு டெங்கு மரணம் பதிவாகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனுடன் இந்த வருடத்தின் மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர மேலும் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்தவர்களில் ஐந்து ஆண்கள் அடங்குவதுடன், ஏனையோர் பெண்கள் எனவும் குறிப்பிட்ட அவர் இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவதாக தகவல் வெளியிட்டுள்ளார். 

கடந்த 2025-ஆம் ஆண்டில் 29 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்திருந்தனர் என்றும் வைத்தியர் கபில கன்னங்கர அங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

இனி பணப் பரிமாற்றங்களுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்!

0

உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்திற்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன நேற்று (03) தனது சான்றொப்பத்தை இட்டுள்ளார்.

உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பு மீதான விவாதம் கடந்த 2026 மே 19ஆம் திகதி நடைபெற்றதோடு, அதன் போது இச்சட்டமூலம் திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தைத் திருத்தங்களுடன் அங்கீகரித்ததன் மூலம், வரி நிர்வாகச் செயல்முறைகளை நவீனப்படுத்துதல், தற்போதுள்ள விதிகளின் தெளிவை அதிகரித்தல், வரி இணக்கம் மற்றும் வரிச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை வலுப்படுத்துதல் ஆகிய பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், வரி கணிப்பீடுகள் மற்றும் வரி விலக்குகளை மிகவும் துல்லியமாக்குதல், மூலோபாய பொருளாதாரத் தேவைகளுக்கு ஆதரவளித்தல், அத்துடன் வெளிப்படைத்தன்மை மற்றும் பணமோசடியைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை மேம்படுத்துவதுமே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

குறிப்பிட்ட சில நிதிப் பரிமாற்றங்களின் போது வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்குதல், வருமானத்தைக் கணக்கிடும் முறையில் சில திருத்தங்களை மேற்கொள்ளுதல், குறிப்பிட்ட சில திட்டங்கள் மற்றும் வணிகங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குகளை மேலும் தெளிவுபடுத்துதல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல்களை வெளிப்படுத்தும் வரம்பை விரிவுபடுத்துதல் போன்ற சில முக்கிய மாற்றங்கள் இந்த புதிய சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, இந்த உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.

கல்முனையில் சீனத் தூதுவர்: ‘சீனாவின் சகோதர பாசம்’ எனும் பெயரில் அன்பளிப்புகள்!

0

ஏ.எஸ்.எம்.அர்ஹம் – நிருபர் 

கல்முனை: கல்வி, மனிதநேயம் மற்றும் சர்வதேச நட்புறவின் உன்னத வெளிப்பாடாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் அதிமேதகு கீ ஜென்ஹொங் (HE. Qi Zhenhong) அவர்கள் நேற்று (04) கல்முனை நகருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

பாடசாலையின் அதிபர் திருமதி ரிஷானா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், “சீனாவின் சகோதர பாசம்” எனும் தொனிப்பொருளின் கீழ் 3.8 மில்லியன் பெறுமதிமிக்க மாணவர்களுக்கான கற்றல் உபகரணப் பொதிகளும், தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், ‘ரஹ்மத் பவுண்டேஷன்’ அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் விசேட அழைப்பை ஏற்று சீனத் தூதுவர் இந்த விஜயத்தை அமைத்திருந்தார்.

கோலாகலமாக நடந்த வரவேற்பும் “சகோதர பாச” திட்டமும்

சீனத் தூதுவரின் வருகையை முன்னிட்டு, கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாடசாலையின் அதிபர் திருமதி ரிஷானா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, இரு நாட்டு நட்புறவை பறைசாற்றும் வகையில் அமைந்தது.

“சீனாவின் சகோதர பாசம்” எனும் உன்னத தொணிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் மாணவர்களின் கல்வியையும் ஊக்குவிக்கும் வகையில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை மாணவர்களின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணப் பொதிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் இதன்போது தூதுவரால் நேரடியாகக் கையளிக்கப்பட்டன.

முக்கிய பிரமுகர்களின் பங்கேற்பு

இப்பிராந்தியத்தின் கல்வி மற்றும் சமூக நலனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வில் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஷஹ்துல் நஜீம் ஆகியோர் இதில் கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

கல்முனை மண்ணில் சர்வதேச தூதுவர் ஒருவரின் பங்களிப்போடு நடைபெற்ற இந்த மனிதாபிமானப் பணி, வெறும் உதவித்திட்டமாக மட்டுமன்றி, மாணவர்களின் எதிர்காலக் கனவுகளுக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. கல்வியையும் மனிதநேயத்தையும் முன்னிறுத்தி ரஹ்மத் பவுண்டேஷன் மற்றும் சீனத் தூதரகம் இணைந்து மேற்கொண்ட இத்தகைய முயற்சிகள், எதிர்காலச் சமூக முன்னேற்றத்திற்கான மிகச்சிறந்த முதலீடாகும் எனப் பிரதேச மக்கள் நன்றியோடு நினைவு கூருகின்றனர்.

வணாத்தவில்லு வெள்ளப் பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

0

புத்தளம் மாவட்டத்தின் வணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சேரக்குளிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள சின்னநாகவில்லுவ கிராமத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான அனர்த்த நிலைமைகளை நேரில் ஆராய்ந்து, அதற்கான உடனடி தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன சுமார் 7 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் நேற்று (03) அங்கு விசேட கள விஜயமொன்றை மேற்கொண்டார்.

ஏற்கனவே ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான காலநிலை காரணமாக மீண்டுமொரு இரட்டை அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், இதனால் சின்னநாகவில்லுவ பிரதேசத்தில் 24 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

அத்துடன், கிராமத்தில் அமைந்துள்ள தேவாலயம், முன்பள்ளி மற்றும் மேலும் 13 வீடுகள் இதுவரை வெள்ள நீரில் மூழ்கியிருப்பதுடன், தொடர்ந்தும் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளன.

இதன்போது, குறித்த இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர், அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுத்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சேதமடைந்த பொது இடங்களுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் அங்கு வருகை தந்திருந்த உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், அனர்த்த நிலைமைகளுக்கு மத்தியிலும், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கள்ளக்கண்டல் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு வழங்கலாம் என்பது குறித்தும் அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார். இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் அப்பிரதேசத்தின் பங்குத்தந்தையும் கலந்துகொண்டார்.

இவ்விஜயத்தின் போது அமைச்சருடன் வணாத்தவில்லு பிரதேச செயலாளர், அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

புத்தளத்தில் ‘தித்வா’ நிவாரணம்: 3-ஆம் கட்ட நிதியுதவி வழங்கிவைப்பு!

0

புத்தளம்: இயற்கையின் சீற்றத்திற்கு இலக்காகி, தங்களின் வாழ்வாதாரங்களையும் உடைமைகளையும் இழந்து தவித்த புத்தளம் பிரதேச மக்களுக்கு, புதிய நம்பிக்கையூட்டும் வகையில் மூன்றாம் கட்டமாக நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

‘தித்வா’ புயல் தாக்கத்தினால் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த வர்த்தகர்களுக்கான நிதியுதவிகள் வழங்கும் மூன்றாம் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (01.06.2026) அன்று புத்தளம் பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

புயலின் கோரத்தாண்டவத்தால் வீடுகளை இழந்து தவித்த குடும்பங்களுக்கு, அவர்களின் மறுவாழ்விற்கான மூன்றாம் கட்ட காசோலைகள் இதன்போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

அதேநேரம், புயல் காரணமாக கடும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த உள்ளூர் வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில், அவர்களுக்கான விசேட இழப்பீட்டுத் தொகைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிதியுதவியானது, முடங்கிப்போயிருந்த புத்தளத்தின் உள்ளூர் வர்த்தக நடவடிக்கைகளுக்கு புதியதொரு புத்துயிரை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்பு

பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் இந்த முக்கிய நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கி வைத்தனர்.

  • சகோதரர் எம்.ஜே.பைசல் – புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
  • சகோதரர் எம்.எப்.ரின்சாத் அஹமட் – புத்தளம் மாநகர சபை முதல்வர்
  • எஸ்.பி.விதனகே – புத்தளம் பிரதேச செயலாளர்

இவர்களுடன் புத்தளம் மாநகர சபை மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் (CDC) தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளான பொதுமக்கள் எனப் பலரும் சமூகமளித்திருந்தனர்.

மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழப்பு!

0

நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதில் பயணித்த பாடசாலை மாணவர் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (04) காலை 6:45 மணியளவில் குறித்த முச்சக்கரவண்டி மாபாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பிரதான வீதிக்கு அருகில் இருந்த இந்த பெரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் முச்சக்கரவண்டியில் இருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அதன் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்த விபத்தையடுத்து நாவலப்பிட்டி காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றியதுடன், உயிரிழந்தவர்களின் உடலங்களை நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

நெடுங்காலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இந்த மரத்தை வெட்டி அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்தும், அதற்கு முறையான தீர்வு வழங்கப்படாதமையினாலேயே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நேர்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

விபத்து குறித்து நாவலப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை பொருளாதாரம் மீண்டும் ஒரு பேராபத்தை நோக்கி நகர்கிறதா?

0

நாடாளுமன்ற அரச கணக்குகள் பற்றிய குழுவின் (COPF) தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முக்கிய உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா விடுத்துள்ள புதிய எச்சரிக்கை, தற்பொழுது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைத்தன்மை தற்காலிகமானது என்றும், வரும் நாட்களில் மக்கள் மேலும் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் கணித்துள்ளார்.

எகிறப்போகும் டாலர் மதிப்பு: வாகன இறக்குமதியால் வரும் சிக்கல்!

வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு அவசரமாக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஹர்ஷ டி சில்வா, ஊடகங்களைச் சந்தித்தபோது சந்தையின் தற்போதைய பலவீனத்தை போட்டுடைத்தார்.

“வாகன இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கடன் கடிதங்கள் (Letters of Credit) சந்தைக்கு வரும்போது, அமெரிக்க டாலருக்கான தேவை மிகக் கொடூரமாக அதிகரிக்கும். ஆனால், தற்போதைய சந்தையில் அதற்கான போதிய நம்பிக்கை இல்லை.”

இந்த நம்பிக்கையின்மை காரணமாக, இறக்குமதியாளர்கள் தங்களது ரூபாய்களை உடனடியாக டாலராக மாற்ற துடிக்கிறார்கள். மறுபுறம், ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் டாலர் வருமானத்தை ரூபாயாக மாற்றாமல் தங்களின் வசமே வைத்திருக்க விரும்புகிறார்கள். மத்திய வங்கி போன்ற முன்னணி நிறுவனங்கள் உடனடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு, சந்தை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், வட்டி விகிதங்கள் முன்னரே அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சாமானியர்களைச் சாடப்போகும் எரிபொருள் விலை உயர்வு!

வாகனக் கனவு ஒருபுறமிருக்க, அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கும் எரிபொருள் விலையிலும் பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அரசாங்கம் தற்போது வழங்கி வரும் எரிபொருள் மானியத்தைக் குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய எம்பி ஹர்ஷ டி சில்வா, “எரிபொருள் விலை உயருமா என்று யாரும் இனி கேள்வி கேட்கத் தேவையில்லை; ஏனெனில் அது நிச்சயம் உயரத்தான் போகிறது” என மிகத் திட்டவட்டமாகக் கூறினார். மானியக் குறைப்பு அமலுக்கு வந்தவுடன், எரிபொருள் விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும் என அவர் எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தின் மற்றுமொரு திட்டமான ‘ஏற்றுமதி தீர்வை’ (Export Cess) நீக்கும் முடிவு குறித்தும் அவர் தனது கவலையை வெளியிட்டார். இந்த வரி நீக்கமானது, உள்நாட்டு உற்பத்தியாளர்களை மிக மோசமாகப் பாதிக்கும் என்றும், அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் செயலாக இது அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்த வரவிருக்கும் பொருளாதாரச் சவால்களைச் சமாளிப்பது சாத்தியமற்றது அல்ல என்றும், மிகுந்த அர்ப்பணிப்புடனும் சாதுரியத்துடனும் அரசாங்கம் செயல்பட்டால் இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீள முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

$2.5 பில்லியன் திருட்டு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது ஏன்?

சமீபத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய 2.5 பில்லியன் டாலர் திருட்டு தொடர்பான அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதற்கான பின்னணியையும் அவர் வெளிப்படுத்தினார்.

நிதி அமைச்சகம் அந்த அறிக்கையை நாடாளுமன்றக் குழுவின் பார்வைக்கு வைக்காமல், ஹர்ஷ டி சில்வாவின் தனிப்பட்ட பார்வைக்காக மட்டுமே அனுப்பியிருந்ததே அதற்குக் காரணம்.

“ஒரு முக்கிய ஆவணத்தை எனது தனிப்பட்ட பார்வைக்கு மட்டும் அனுப்புவது முறையல்ல. COPF குழுவின் மற்ற உறுப்பினர்களுடனும் நான் இதை விவாதிக்க வேண்டும். எனவேதான் அதைத் திருப்பி அனுப்பினோம்.”

தற்போது, அனைத்து உறுப்பினர்களின் பார்வைக்கும் உகந்த வகையில் முறையானதொரு அறிக்கையைச் சமர்ப்பிக்க நிதி அமைச்சகத்திற்கு 4 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

எரிபொருள் விலை உயர்வு, டாலர் தட்டுப்பாடு, உள்நாட்டு உற்பத்திக்கான சவால்கள் எனப் பலமுனைத் தாக்குதல்களை இலங்கை சந்திக்கவிருப்பதாக ஹர்ஷ டி சில்வாவின் இந்த அறிக்கை எச்சரிக்கிறது. அரசாங்கம் அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகள் மட்டுமே இந்தச் சூறாவளியில் இருந்து நாட்டைக் காக்கும்!

முடங்கிக்கிடக்கும் 950 கோடி ரூபாய் ‘டித்வா மறுசீரமைப்பு’ நிதி!

0

கொழும்பு: ‘டித்வா’ சூறாவளி ஏற்படுத்திய பேரழிவிலிருந்து மீள முடியாமல், இன்னும் தற்காலிக முகாம்களிலும் பாதுகாப்பான இடங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீரோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களைக் கைதூக்கி விடுவதற்காக உலகெங்கிலும் இருந்து திரட்டப்பட்ட ‘ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவோம்’ (Rebuilding Sri Lanka) நிதியத்தின் கோடிக்கணக்கான பணம், ஒரு சதம் கூட பயன்படுத்தப்படாமல் வங்கிக் கணக்கில் முடங்கிக்கிடக்கும் அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பொது நிதி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் (CoPF) கூட்டத்தில் நேற்று இந்தத் திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகின.

காகிதத்தில் மட்டுமே இருக்கும் நிதியம்?

அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவோம்’ நிதியத்திற்கு பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், கொடையாளிகள் எனப் பலரும் வாரி வழங்கியுள்ளனர். ஆனால், அவ்வாறு பெறப்பட்ட நிதியில் இருந்து ஒரு ரூபா கூட இதுவரை பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காகச் செலவிடப்படவில்லை என்பதை சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கெல்லாம் மேலாக, நாடாளுமன்றக் குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, “இந்த நிதியத்தை நாம் தணிக்கை (Audit) செய்ய முடியுமா? அப்படியொரு நிதியம் சட்டப்பூர்வமாக இருக்கிறதா?” என்று எழுப்பிய கேள்விக்கு, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி அளித்த பதில் அங்கிருந்த அனைவரையும் உரைய வைத்தது.

“உண்மையில் ‘ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவோம்’ என்ற பெயரில் இன்னும் ஒரு நிதியம் சட்டப்பூர்வமாக உருவாக்கப்படவே இல்லை!” என சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இதனை ஒரு ‘சட்டப்பூர்வ நிதியமாக’ அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் அது இன்னும் சட்டமாக்கப்படவில்லை. இதனால், உலகெங்கிலும் இருந்து வந்த கோடிக்கணக்கான பணம் திறைசேரியின் பிரதிச் செயலாளரின் (DST) ஒரு சிறப்பு வங்கிக் கணக்கில் மட்டுமே தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது.

900 கோடியைத் தாண்டிய நிதி: முட்டுக்கட்டையாக இருக்கும் புதிய சட்டம்!

புதிய பொது நிதி மேலாண்மைச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற அங்கீகாரம் இல்லாத ‘சட்டத்திற்குப் புறம்பான நிதியங்களை’ இலங்கையில் உருவாக்க முடியாது.

இதைக் சுட்டிக்காட்டிய CoPF தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, “முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ (Helping Hambantota) நிதி விவகாரத்திற்குப் பிறகுதான், நாடாளுமன்ற அனுமதியின்றி நிதியங்களைத் தொடங்க முடியாது என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனவே, தற்போதைய சிறப்பு வங்கிக் கணக்கு நிதி அமைச்சின் கீழ் வருவதால், அதனை உடனடியாகத் தணிக்கை செய்து, பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

நிதியுதவி தொடர்பான தரவுகளை வெளியிட்ட நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, கடந்த ஏப்ரல் 24, 2026 அன்றைய நிலவரப்படி, இந்த நிதியத்திற்கு 9,583 மில்லியன் ரூபாய் (958 கோடி ரூபாவிற்கும் அதிகம்) கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

உலக நாடுகள் கொடுத்த பணம் என்ன ஆனது?

புயல் பாதிப்பைக் கண்டு உருகி, இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் தாராள மனம்கொண்ட மனிதர்கள் இலங்கை வங்கி (BOC) மற்றும் மத்திய வங்கியின் சிறப்பு கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பியிருந்தனர். இலங்கை ரூபாய் மட்டுமன்றி அமெரிக்க டாலர் (USD), யூரோ (EUR), ஸ்டெர்லிங் பவுண்ட் (GBP), ஜப்பானிய யென் (JPY) மற்றும் அவுஸ்திரேலிய டாலர் (AUD) எனப் பல வெளிநாட்டு நாணயங்களிலும் இந்த நிதியுதவிகள் குவிந்திருந்தன.

இந்த நிதியை நிர்வகிக்க பிரதி நிதி அமைச்சர் அனில் ஜெயந்த தலைமையில், அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு மேலாண்மைக் குழுவும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தது.

இவ்வளவு ஏற்பாடுகளும், ஒன்பதாயிரத்து ஐந்நூறு கோடிகளுக்கு மேல் பணமும் இருந்தும், வெறும் ‘சட்ட நடைமுறை’ என்ற நிர்வாகத் தாமதத்தால் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் நடுத்தெருவில் தவித்து வருகின்றனர்.

நிர்வாக இயந்திரத்தின் இந்த மெத்தனப் போக்கு, “அரசாங்கம் உடனடியாகச் செயல்பட்டு இந்த நிதியத்தை முறைப்படி சட்டப்பூர்வமாக்கி, முகாம்களில் முடங்கிக் கிடக்கும் மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா?” என்ற பலத்த கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.