எரிசக்தி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது புதிய எரிசக்தி அமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் எம்.ஆர்.டி. அபோன்சு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
புதிய அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்கும் இந்த நிகழ்வில், எரிசக்தி பிரதி அமைச்சர் இலியாஸ் முஹம்மது அர்கம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மற்றும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கடமைகளை பொறுப்பேற்றதை தொடர்ந்து, அமைச்சர் தனது அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார்.
தற்போது நிலவும் மத்திய கிழக்கு போர் சூழலால் எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடி நிலை குறித்து அமைச்சர் இதன்போது கருத்து தெரிவித்தார். இந்த சவாலான சூழ்நிலையை கையாள்வதற்கு முன்னாள் அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏற்கனவே முறையான திட்டங்களை வகுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அந்தத் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதன் மூலம் மக்களின் தேவைகளை எவ்வித தடையுமின்றி பூர்த்தி செய்ய தான் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக அமைச்சர் உறுதியளித்தார்.
எரிசக்தி விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் வலுவான நம்பிக்கை இருக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அமைச்சர், இது தொடர்பான உண்மையான தகவல்களை சமூகத்திற்கு கொண்டு சேர்க்குமாறு ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டார். எரிசக்தி துறையின் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்துவதில் ஊடகங்களுக்கு பெரும் பொறுப்பு இருப்பதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று இம்முறை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதற்காக உழைத்த அனைவரையும் பாராட்டும் அதேவேளை, இந்த இடத்தை எமது மாகாணம் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பும், அடுத்த ஆண்டு இவ்வீதத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் எமக்கு ஏற்பட்டுள்ளதை நாம் ஒவ்வொருவரும் மனதிலிருத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
கிளிநொச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் ஏற்பாட்டில், 2025ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு ஆலய முன்றலில் இன்று (21.04.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சாதனை மாணவர்களைக் கௌரவித்த பின்னர் உரையாற்றுகையிலேயே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
சமூகப் பணிகளுக்காக நிதியுதவி கோரினால் பலரும் தயங்குவார்கள்;. ஆனால், ஆலயங்களுக்குத் தாராளமாக வழங்குவார்கள். எனவே, ஆலய நிர்வாகங்கள் அந்தப் பணத்தை வைத்துச் சிறந்த சமூகப் பணிகளை முன்னெடுக்க முடியும். அந்த வகையில், புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தினர் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியது.
ஆலயங்கள் தொடர்பில் எனக்குக் கிடைக்கப்பெறும் சில முறைப்பாடுகள் கவலைக்குரியனவாக உள்ளன. பல கோடி ரூபாய்களைச் செலவிட்டு ஆலயங்களைப் புனரமைப்புச் செய்து, கும்பாபிஷேகமும் நடத்தி முடித்த பின்னர், அது தொடர்பான கணக்கறிக்கைகளை வெளியிடாத ஆலயங்கள் உள்ளன. இது குறித்து அண்மையில்கூட எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சில இடங்களில் ஆலய நிர்வாகங்களுக்குள் முரண்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகளும் நடைபெறுகின்றன. வழக்குகளுக்காக செலவிடும் பணத்தை, ஆலயத்தின் பெயரால் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் பயன்படுத்தலாம்.
ஆனால், புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தினர் பொங்கல் நிகழ்வு முடிந்த கையோடு, தமது வருவாய் தொடர்பான முழுமையான விவரங்களை வெறும் மூன்று நாட்களுக்குள் பொதுவெளியில் சமர்ப்பித்திருந்தனர். இது ஏனைய ஆலயங்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாகும். இவ்வாறான வெளிப்படைத்தன்மை ஊடாக அவர்கள் மீதான மதிப்பு மேலும் அதிகரிப்பதுடன், பலரும் அவர்களை நம்பி உதவ முன்வருவார்கள்.
சமூகம் வேறு, ஆலயம் வேறு அல்ல. சமூகத்துக்குச் செய்யும் தொண்டே கடவுளுக்குச் செய்யும் தொண்டாகும். சமூகத்தில் ஒருவன் பட்டினியாக இருக்கும்போது, ஆலயத்துக்கு ஆடம்பரமான கோபுரம் அவசியமில்லை. ஆலயத்தின் வரலாற்றை எதிர்காலத் தலைமுறைக்குக் கடத்துவதற்கு கோபுரங்கள் உள்ளிட்ட நிர்மாணப் பணிகள் அவசியம்தான்; ஆனால், சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் அவற்றை முன்னெடுப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
கல்வியால்தான் எதனையும் சாதிக்க முடியும்; சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும் புரட்சியையும் கல்வியால்தான் ஏற்படுத்த முடியும். இன்று க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடத்தை இந்தக் கிளிநொச்சி மண்ணைச் சேர்ந்த மாணவன் தனதாக்கியுள்ளான்.
இந்தப் பிள்ளைகள் அனைவரும் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர்க் காலத்தில் சிறு குழந்தைகளாக இருந்திருப்பார்கள். அந்தப் போரின் கொடூரம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதன் வலியை அவர்கள் ஆழமாக உணர்ந்திருப்பார்கள். பல குடும்பங்கள் அந்தப் போரில் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டன. அப்படியானதொரு கொடிய துயரம் நிகழ்ந்து, அழித்தொழிக்கப்பட்ட இந்தக் கிளிநொச்சி மண்ணிலிருந்து, மிகக் குறுகிய காலத்துக்குள் தேசிய மட்டத்தில் ஒரு மாணவன் உச்சத்தைத் தொட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.
இந்த மாணவர்களின் விடாமுயற்சியே இன்று பெரும் வெற்றியாக மாறியிருக்கின்றது. ஒரு முயற்சி தோல்வியடைந்தால் நாம் வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் என அர்த்தமில்லை. நாம் எப்போது எமது முயற்சியைக் கைவிடுகின்றோமோ, அப்போதுதான் வாழ்க்கையில் தோற்றுப்போகின்றோம். இலட்சியத்துடன் உறுதியாகப் போராடினால் நினைத்ததை அடைய முடியும். இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் இந்த மண்ணுக்குச் சேவை செய்ய வேண்டும். தங்களைப் போன்று அடுத்த தலைமுறை மாணவர்களையும் சாதிக்கத் தூண்ட வேண்டும்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர், தமது பாடசாலையில் கற்று வெளியேறிய பழைய மாணவர்களைப் பயன்படுத்தி அடுத்தாண்டு பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குவதைப் போன்று, இந்தச் சாதனை மாணவர்களைப் பயன்படுத்தி எதிர்வரும் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம். இவர்களைப் பார்க்கும்போது ஏனைய மாணவர்களுக்கும் நாமும் இவ்வாறு சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இதனை முறையாக ஒழுங்கமைக்க வேண்டும்.
இறுதியாக, நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் சாதித்து உயர்ந்த நிலையை அடைந்தாலும், ஏனையோரை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அனைவரிடமும் பண்பாக நடந்துகொள்ளுங்கள். எத்தகைய சூழ்நிலை வந்தாலும் நேர்மையைக் கைவிடாதீர்கள். அதுவே உங்களை வாழ்வில் மேலும் உயர்த்தும், என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன், மாவட்ட மட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் கண்டாவளைக் கோட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஆலய நிர்வாகத்தினரால் பணப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், ஆலயத்தால் நடத்தப்படும் அறநெறிப் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கும் இதன்போது பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அ.வேளமாலிகிதன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இணையதளம் ஊடாகப் பண மோசடி செய்யும் நோக்கில் இலங்கையில் தங்கியிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட 152 வெளிநாட்டவர்களில் 74 பேர் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி மாலை, சிலாபம் – அம்பகந்தவில பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சுற்றிவளைப்பின் போது 131 சீனர்கள் (அவர்களில் 6 பெண்கள்), 10 வியட்நாமியர்கள் (அவர்களில் 3 பெண்கள்), ஒரு தாய்வான் பெண் மற்றும் ஒரு மலேசியர் என மொத்தம் 152 பேர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து 99 டெஸ்க்டாப் கணினிகள், 26 மடிக்கணினிகள் மற்றும் 259 கைத்தொலைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இவர்கள் சுமார் மூன்று மாதங்களாக குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளதோடு, ‘புதிய தொழிலதிபர்களுக்குப் பயிற்சியளிப்பதாக’ விடுதி ஊழியர்களிடம் கூறி ஏமாற்றியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தச் சோதனையை முன்னெடுத்தது.
கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம் மேலதிக மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் எஸ்.டி. அபேரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, ஏப்ரல் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர் சிலாபம் மாவட்ட நீதிபதி ஜே.எஸ்.டி. வீரசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் இவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அவர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றப் பொறுப்பில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வரை இவர்கள் வெலிசரையில் உள்ள வெளிநாட்டவர் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தனர். ஏப்ரல் 15ஆம் திகதி 20 பேரும், 17ஆம் திகதி 54 பேரும் என மொத்தம் 74 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேக நபர்கள் இன்னமும் தடுப்பு முகாமிலேயே உள்ளனர்.
இந்த விடுதலையில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்த வெளிநாட்டவர்களுக்காகப் பிணை நின்றவர்கள் இலங்கைப் பிரஜைகள் என்பதாகும். இவர்களுக்குப் பிணை பெற்றுக்கொடுக்க முன்னின்று செயற்பட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்துவது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது பிணையில் சென்றுள்ளவர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் தங்குவதற்கு வாய்ப்புள்ளது. அவர்களின் தொலைபேசிகளும் கணினிகளும் அதிகாரிகளிடம் இருந்தாலும், அவர்கள் மீண்டும் புதிய சாதனங்களை கொள்வனவு செய்து குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்பில்லை என்று கூற முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பது பாதுகாப்புத் தரப்பினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் அக்டோபர் மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெங்கு நோயின் அபாயகரமான நிலை குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வுத் திட்டமொன்று அண்மையில் மாதம்பை வாராந்த சந்தை வளாகத்தில் நடைபெற்றது.
தேசிய கிறிஸ்தவ சபையினது வடமேல் மாகாண இடர் மேலாண்மைக் குழுவினால் இந்த விழிப்புணர்வுத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
துண்டுப்பிரசுரம் விநியோகம்: சந்தைக்கு வருகை தந்த பொதுமக்களுக்கு டெங்கு பரவும் விதம் மற்றும் அதனைத் தடுக்கும் முறைகள் அடங்கிய அச்சுப்பிரதிகள் விநியோகிக்கப்பட்டன.
வீதி நாடகம்: இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, சிறுவர்களால் டெங்கு நோயின் பாரதூரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான விளைவுகளைச் சித்தரிக்கும் விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது.
டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதன் முக்கியத்துவம் மற்றும் இந்நோய் ஒரு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காரணி என்பதை சிறுவர்கள் தமது திறமையான நடிப்பின் மூலம் மக்களுக்கு எடுத்துக் காட்டினர். இச்சிறுவர்களின் விழிப்புணர்வுச் செயற்பாடு அங்கிருந்த பொதுமக்களின் பாரிய வரவேற்பைப் பெற்றது.
இந்தத் திட்டத்தின் ஊடாக, சமூகப் பொறுப்புடன் டெங்கு அற்ற சூழலை உருவாக்குவதற்கு பிரதேச மக்களை ஊக்குவிப்பதையே ஏற்பாட்டாளர்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தை தற்போதைய அரசாங்கம் முழுமையாக அரசியல் மயமாக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (20) நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் அமைச்சர் பிள்ளையான் மற்றும் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே ஆகியோரின் கைதுகள் மற்றும் விசாரணைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை மூடி மறைத்தவர்களே தற்போது விசாரணைகளை முன்னெடுப்பது ஒரு வேடிக்கையான விடயம்.
ஜே.வி.பி-யின் தேசியப் பட்டியலில் இருந்த இப்ராஹிமின் புதல்வர்களே இத்தாக்குதலில் ஈடுபட்டனர். தனது கட்சிக்கு நிதி வழங்கியவர்களைப் பாதுகாத்துவிட்டு, மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது நியாயமற்றது எனத் தெரிவித்துள்ளார்.
தனியார் வங்கி ஒன்றின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே போலி இணையதளத்தை உருவாக்கி, பத்து இலட்சத்து இருபத்தி நான்கு (1,000,024) ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதற்கமைய, நேற்று திங்கட்கிழமை (20) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, வாரியப்பொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று செவ்வாய்க்கிழமை (21) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சமீபத்திய நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, திருச்சி மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவர் போட்டியிடும் வேளையில், அவருக்குக் கிடைத்துள்ள ரகசிய கள ஆய்வுகள் அவருக்குச் சாதகமாக இல்லை என்று தகவல்கள் கசிந்துள்ளன.
விஜய் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவரது வெற்றி வாய்ப்பு குறித்து கட்சி மேலிடம் நடத்திய ரகசிய ஆய்வில், அவருக்குப் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பெரம்பூரில் ஆளும் திமுகவின் பலமான கட்டமைப்பு மற்றும் திருச்சி கிழக்கில் இனிகோ இருதயராஜூக்கு இருக்கும் கிறிஸ்துவர்கள் வாக்கு ஆகியவை விஜய்க்கு சவாலாக உள்ளன. இந்த இரண்டு தொகுதிகளிலும் விஜய் தோல்வியைத் தழுவக்கூடும் என்ற ‘நெகட்டிவ் ரிப்போர்ட்’ வந்ததைத் தொடர்ந்து, அவர் தனது தேர்தல் வியூகத்தை அதிரடியாக மாற்றியுள்ளார்.
திருச்சி கிழக்குத் தொகுதியைப் பொறுத்தவரை, சுமார் 35% கிறிஸ்தவ வாக்காளர்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். ஏற்கனவே கிறிஸ்தவ ஆயர்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது விஜய்க்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில், எப்படியாவது சிறுபான்மையின வாக்குகளைத் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காகவே, புனித அந்தோணியார் ஆலயத்தில் விஜய் முட்டிப் போட்டுப் பிரார்த்தனை செய்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது ஒரு ‘இறுதிக்கட்ட முயற்சி’ என்றும், தனது மத அடையாளத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மக்களின் உணர்வுகளைக் கவர விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யின் இந்த திடீர் ‘பக்தி அரசியல்’ ஆளும் திமுக தரப்பிற்குச் சிறு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது உறுதியான வாக்கு வங்கியில் விஜய் ஓட்டை போடுகிறாரோ என்ற அச்சம் திமுகவினரிடையே எழுந்துள்ளது.
மறுபுறம், இந்த மோதலைக் கண்டு அதிமுக உற்சாகத்தில் உள்ளது. திமுகவின் வாக்குகள் விஜய்யால் பிரிக்கப்பட்டால், அது தங்களுக்கு எளிதான வெற்றியைத் தேடித்தரும் என அதிமுக கணக்குப் போடுகிறது.
பொதுவாக கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையின வாக்குகள் திமுகவின் கோட்டையாகக் கருதப்படுபவை. தற்போது விஜய் அந்த வாக்கு வங்கியில் கை வைப்பதால், திமுகவிற்குச் செல்ல வேண்டிய வாக்குகள் இரண்டாகப் பிரியும் (DMK & TVK). இதில் விஜய் பாதியை எடுத்தால் போதும்.. வாக்குகள் அப்படியே சிதறும். அப்படியே மற்ற வாக்குகள் எதிரணிக்கு செல்லும். அதாவது அதிமுகவிற்கு மற்ற வாக்குகள் அதிமுகவிற்கு செல்லும். அதிமுக வாக்குகள் உடையாமல் இருப்பதால் அது அவர்களுக்கு சாதகமாக மாறும்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானது. தோல்வி பயம் காரணமாக அவர் மேற்கொண்டுள்ள இந்தத் தீவிர முயற்சி, திருச்சி மற்றும் பெரம்பூர் மக்களின் மனதை மாற்றுமா? அல்லது ரகசிய ஆய்வுகள் சொன்னது போலவே அவருக்குப் பின்னடைவு ஏற்படுமா? என்பது வாக்கு எண்ணிக்கையின் போதுதான் தெரியவரும்.
இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழு தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனைகள் தொடர்பில் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்பாளர் ஜஸ்வர் உமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து எதிர்ப்புகளும் சுயாதீனத் தேர்தல் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தகவலின்படி, இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் செயல்முறையில் ஜஸ்வர் உமரின் வேட்புமனு முழுமையாக செல்லுபடியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலில், ஜஸ்வர் உமர் மீது தேசிய ஒலிம்பிக் குழு அல்லது ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஆகியவற்றின் எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரின் தகுதி குறித்து எழுந்திருந்த சந்தேகங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பிரித்திவிராஜ் பெரேரா, மொஹம்மட் ரிப்தி பாகிம் மற்றும் சுனில் செனவீர ஆகியோர் மூன்று தனித்தனியான ஆட்சேபனைகளை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த ஆட்சேபனைகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஜஸ்வர் உமர் சர்வதேச விளையாட்டு சட்ட நிபுணத்துவம் கொண்ட சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட சட்ட நிறுவனத்தின் மூலம் விரிவான சட்ட விளக்கங்களை சமர்ப்பித்தார்.
அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பின்னர், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஆர். சித்ரஸ்ரீ தலைமையிலான தேர்தல் குழு, நீதிபதி பியசேன ரணசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஹர்ஷ அமரசேகர ஆகியோரின் பங்கேற்புடன், அனைத்து ஆட்சேபனைகளையும் நிராகரித்துள்ளது.
இதனிடையே, தேர்தல் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெற வேண்டும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் பதவி விலகும் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் செயல்முறையை தாமதப்படுத்தும் எந்த முயற்சிகளுக்கும் தானாக பதவி நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றங்களுடன், தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஜஸ்வர் உமர், தேசிய ஒலிம்பிக் குழு தலைவர் பதவிக்கான முன்னணி வேட்பாளராக காணப்படுகின்றார்.
இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இம்மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போதைய நிலவரத்தில், இந்த தீர்ப்பு தேர்தல் சூழ்நிலையை மேலும் தெளிவுபடுத்தியுள்ளதாக விளையாட்டு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.