Tuesday, June 9, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 3

புத்தளத்தில் ஊடகவியலாளர்களுக்கான விசேட பயிற்சிப் பட்டறை!

0

புத்தளம்: புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களின் திறன்களையும் கௌரவத்தையும் மேம்படுத்தும் நோக்கில் விசேட ஒருநாள் பயிற்சிப் பட்டறை ஒன்று புத்தளம் மாவட்ட செயலாளர் வை. இந்திக மஞ்சுள சில்வாவின் தலைமையில் இன்று 03.06.2026 வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

இன்றைய வேகமான டிஜிட்டல் உலகில், பொதுமக்களுக்கு உண்மையான செய்திகளை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்கு அளப்பரியது. அதேநேரம், அவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் சட்ட ரீதியான சவால்களுக்கும், தொழில்நுட்ப மாற்றங்களுக்கும் மத்தியிலேயே குறித்த பயிற்சிப் பட்டறை இடம்பெற்றது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் இலங்கை பத்திரிகைப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சிப் பட்டறை, இன்று புதன்கிழமை புத்தளம் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இப்பயிற்சிப் பட்டறையில் ஊடகத் துறையின் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து ஆழமான பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன:

இன்றைய காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரிக்கும் போதும், அவற்றை வெளியிடும் போதும் சட்ட ரீதியாக எதிர்நோக்கும் சிக்கல்கள் என்னென்ன, அவற்றிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் அதற்கான சட்டபூர்வ தீர்வுகள் எவை என்பது குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கை பத்திரிகை பேரவை ஆணைக்குழுவின் கட்டமைப்பு, அதன் பணிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் பேரவைக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள் குறித்தும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

சமூக மாற்றத்திற்கு வித்திடும் பிரதேச ஊடகவியலாளர்களின் சமூக அந்தஸ்து மற்றும் கௌரவத்தைப் பாதுகாப்பது எவ்வாறு, தொழில்முறை ஒழுக்கக்கோவைகளை எவ்வாறு பேணுவது என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.

மாறிவரும் உலகிற்கு ஏற்ப, நவீன தொழில்நுட்பக் கருவிகளையும் டிஜிட்டல் தளங்களையும் கையாண்டு, பொதுமக்களுக்கு மிகவும் நம்பகத்தன்மையுடனும் வேகமாகவும் ஊடகச் சேவைகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து இதன்போது வழிகாட்டப்பட்டது.

முக்கியத்துவமிக்க இந்த அமர்வில் பல்துறை சார்ந்த ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்:

இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர் பீ.என்.ஆர். விஜயபண்டார, முன்னாள் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் அங்கத்தவரும் பிரபல சட்டத்தரணியுமான ஜகத் லியாணாராச்சி, சிரேஷ்ட ஊடகவியலாளர் சிசிர யாப்பா, இலங்கை பத்திரிகை பேரவையின் உதவி ஆணையாளர் சுரோஷன இரங்க மற்றும் இலங்கை பத்திரிகை பேரவையின் ஆணையாளர் நிரோஷன தம்பவிட்ட ஆகியோர் வளவாளர்களாகவும் அதிதிகளாகவும் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

இவர்களுடன் புத்தளம் மாவட்ட செயலகத்தின் ஊடக இணைப்பாளர் இந்துனி மற்றும் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்திரளான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு, தங்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டதோடு பயனுள்ள பல அனுபவங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்பயிற்சிப் பட்டறையானது, புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்கள் தங்களின் ஊடகப் பணியை புதியதொரு பரிமாணத்தில், அதிக பொறுப்புணர்வுடனும் கௌரவத்துடனும் தொடர்வதற்குப் பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புனித பூமியில் துரோகம்: 3,500 இலங்கை ஹாஜிகளின் கண்ணீர்!

0

மினா (புனித பூமி): வாழ்க்கையின் ஆகச்சிறந்த ஆன்மீக உச்சத்தைத் தொடுவதற்காக, தங்களின் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் கொட்டிக் கொடுத்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற 3,500 இலங்கை யாத்திரிகர்களின் கனவு, தற்போது ஒரு கொடூரமான நரக வேதனையாக மாறியுள்ளது. மினாவின் கூடாரங்களில் தங்கியுள்ள இலங்கை ஹாஜிகள், தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தைக்கூட இழந்து தவிக்கும் அவல நிலை அரங்கேறியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கெல்லாம் காரணம், இலங்கை ஹஜ் குழுவின் தன்னிச்சையான மற்றும் பொறுப்பற்ற நிர்வாகச் சீர்கேடுதான் என்று குற்றம் சாட்டப்பட்டு, பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

டெய்லி மிரர் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

‘A-வகுப்பு’ என்ற பெயரில் அரங்கேறிய ‘C-வகுப்பு’ மோசடி!

அனுபவமிக்க உள்ளூர் முகவர்களை கலந்தாலோசிக்காமல், ‘ரஹ்லத் வா மனாஃபி’ (Rehlat Wa Manafe) என்ற சுற்றுலா நிறுவனத்தை இலங்கை ஹஜ் குழு தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்ததே இந்த ஒட்டுமொத்த பேரழிவிற்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு யாத்திரிகரிடமிருந்தும் உயர்தரமான (A-வகுப்பு) சேவைகளை வழங்குவதாகக் கூறி, தலா 562,000 இலங்கை ரூபா பிரீமியம் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், களத்திலோ அவர்கள் செலுத்திய தொகையில் பாதிக்கும் குறைவான மதிப்புடைய, தரம் குறைந்த (C-வகுப்பு) கூடாரங்களில் மிருகங்களைப் போல அடைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார சீர்கேடு: 3,500 பேருக்கு வெறும் 32 கழிவறைகள்!

மினாவில் தங்கியிருந்த ஒட்டுமொத்த இலங்கை ஹாஜிகளின் கூட்டத்திற்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது வெறும் 32 கழிவறைகள் மட்டுமே! இந்த கழிவறைகளே குளிப்பதற்கும் பயன்படுத்தப்படுவதால், 100 யாத்திரிகர்களுக்கு 1 கழிவறை என்ற சாத்தியமற்ற விகிதம் உருவாகியுள்ளது.

இதனால், முதியவர்களும், நோயாளிகளும் கொளுத்தும் வெயிலில் மணிக்கணக்காகக் வரிசையில் நின்று, தங்களின் இயற்கை உபாதைகளைக் கூட கழிக்க முடியாமல் கண்ணீர் வடிக்கும் அவலம் நேர்ந்துள்ளது.

பசிப் பட்டினி: 3,500 பேருக்கு இரண்டே இரண்டு பஃபே (Buffet) வரிசைகள்!

கடும் பாலைவன வெயிலில், அலைந்து திரிந்து சோர்வடைந்த 3,500 யாத்திரிகர்களுக்கும் உணவளிப்பதற்காக, ஆண்களுக்கு ஒன்று, பெண்களுக்கு ஒன்று என வெறும் இரண்டு பொபே (Buffet) உணவு விநியோகம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

பல மணிநேரக் காத்திருப்புக்குப் பிறகு, அந்த நீண்ட வரிசையில் நின்று வாங்கும் உணவும், மனிதர்கள் வாயில் வைக்க முடியாத அளவிற்கு மிக மோசமான தரத்தில் இருப்பதாக ஹாஜிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்களின் அவலமும், அதிகாரிகளின் சொகுசும்: வெடித்தது மக்கள் ஆக்ரோஷம்!

சாதாரண குடிமக்கள் பசியாலும், தாகத்தாலும், கடுமையான வெப்பத்தாலும் மயங்கி விழும் நிலையில், அவர்களுக்கு உதவ வேண்டிய ஹஜ் குழு உறுப்பினர்களின் அநாகரிகமான செயல்பாடு ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆத்திரமடையச் செய்துள்ளது.

பொதுக் கூடாரங்களுக்குச் சென்று மக்களின் குறைகளைக் கேட்கக்கூட மறுத்துள்ள ஹஜ் குழு உறுப்பினர்கள், குளிரூட்டப்பட்ட சொகுசு VIP தங்குமிடங்களில் தங்களை ஒளித்துக் கொண்டுள்ளனர். மக்கள் அங்கே நரக வேதனைப் பட, இவர்கள் சொகுசு குளியலறைகளையும், உயர்தர வசதிகளையும் அநுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உடனடிப் பதவி விலகலுக்கு வலுக்கும் கோரிக்கை!

இது வெறும் ஒரு நிர்வாகத் தோல்வி மட்டுமல்ல; புனித யாத்திரை வந்த மக்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களின் பணத்தைச் சூறையாடிய நிர்வாணமான நிதி மோசடி என்றே குற்றம் சாட்டப்படுகிறது. நமது நாட்டின் முதியவர்களையும், பெற்றோர்களையும் பாலைவனத்தில் தவிக்கவிட்டு, சொகுசு வாழ்க்கை வாழும் ஹஜ் குழுவின் செயல், அவர்களின் தரமற்ற செயலைத்தான் காட்டுகிறது.

எனவே, இந்த பேரழிவிற்கு முழுப் பொறுப்பேற்று, இலங்கை ஹஜ் குழுவின் ஐந்து உறுப்பினர்களும் உடனடியாகத் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். அவர்கள் இன்று பதவி விலகாவிட்டால், புனித ஹஜ் விவகாரத்தில் திட்டமிட்ட மோசடி நடந்துள்ளது என்பது அசைக்க முடியாத உண்மையாகிவிடும் என சமூக ஆர்வலர்களும், பாதிக்கப்பட்டோரின் உறவினர்களும் கொதித்தெழுந்துள்ளனர் என டெய்லி மிரர் இணைய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடங்கியது பஸ் சேவை: மதுரங்குளி விபத்தால் பரிதவிக்கும் மாணவர்கள்!

0

மதுரங்குளி: ஒரு கிராமத்தின் ஒட்டுமொத்த இயக்கமும் ஒரேயொரு பேருந்தை நம்பி இருந்தால், அந்தப் பேருந்துக்கு ஏதேனும் நேர்ந்தால் மக்களின் நிலை என்னவாகும்? அப்படியொரு அவல நிலையைத்தான் தற்போது கரம்பை, மதுரங்குளி, கொத்தந்தீவு மற்றும் பெரியபாடு கிராம மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

விபத்தும்… முடங்கிய பேருந்தும்!

கடந்த மே மாதம் 29ஆம் தேதி (29.05.2026) மாலை வேளையில், மதுரங்குளி – கொத்தந்தீவு பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்து ஒன்று துரதிர்ஷ்டவசமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது. விபத்தையடுத்து, சட்டம் மற்றும் விசாரணை நடைமுறைகளுக்காக விபத்துக்குள்ளான பேருந்து தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் இந்தப் பேருந்தையே தங்கள் பிரதான போக்குவரத்தாக நம்பியுள்ள கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

இந்தக் கிராமங்களுக்குச் சேவை செய்ய இருக்கும் ஒரேயொரு பொதுப் போக்குவரத்து இந்த இ.போ.ச பேருந்து மட்டும்தான் என்பதுதான் இங்குள்ள ஆகப்பெரிய சோகம்.

  • காலை நேரத்து கல்விப் பயணம்: தினமும் காலையில் பெரியபாடு கிராமத்தில் இருந்து சின்னப்பாடு பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஒரேயொரு பேருந்து இது மட்டும்தான்.
  • அரச மற்றும் தனியார் ஊழியர்கள்: காலை 07:50 மணிக்கு கொத்தந்தீவில் இருந்து அரச பணியாளர்கள், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் என புத்தளம் நோக்கிப் பயணிக்கும் பலரும் இந்தப் பேருந்தை மாத்திரம் நம்பியே உள்ளனர்.
  • பிற்பகல் நேரத்துப் பள்ளி மாணவர்கள்: மதியம் 02:00 மணியளவில் புத்தளத்தில் இருந்து புறப்படும் இந்த ஒரேயொரு பேருந்தில்தான் புத்தளம் ஆனந்தா கல்லூரி மற்றும் புத்தளம் நகரில் உள்ள ஏனைய பாடசாலைகளில் கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களின் இருப்பிடங்களை வந்தடைகின்றனர்.
5 நாட்களாகத் தொடரும் அவதி: தீர்வு எப்போது?

விபத்து நடந்து சுமார் 5 தினங்களாகக் கடந்த நிலையிலும், இந்தப் பகுதிக்கு மாற்றுப் பேருந்துச் சேவை எதுவும் வழங்கப்படவில்லை. இதனால், பள்ளி மாணவர்கள் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமலும், பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பணிகளுக்குச் செல்ல முடியாமலும் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பொதுமக்களின் குமுறல்: “விபத்து நடந்தது துரதிர்ஷ்டவசமானதுதான். அதற்கான சட்ட நடவடிக்கைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதைக் காரணம் காட்டி ஒட்டுமொத்த கிராமத்தின் போக்குவரத்தையும் முடக்குவது எந்த வகையில் நியாயம்? எங்களின் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மாற்றுப் பேருந்து ஒன்றை இயக்க அதிகாரிகள் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?” என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.

பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தையும், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளையும் கருத்தில் கொண்டு, இலங்கை போக்குவரத்துச் சபையின் உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, இப்பகுதிக்கு மாற்றுப் பேருந்துச் சேவை ஒன்றை விரைந்து வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கிராமத்தினரதும் அவசரக் கோரிக்கையாக உள்ளது.

கல்பிட்டியில் விளையப்போகும் ‘வெள்ளை தங்கம்: மாறப்போகும் கிராமத்து பொருளாதாரம்!

0

கல்பிட்டி: இலங்கையின் கிராமப்புறங்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவித்து, மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் பிரம்மாண்டமான தேசிய திட்டம் ஒன்று களம் இறக்கப்பட்டுள்ளது.

“பிரஜா சக்தி 2026 – ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” என்ற பெயரிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய வேலைத்திட்டம் நேற்று (2026 ஜூன் 02) கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவிலும் கல்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ எம்.ஜே.எம்.பைசல் அவர்களின் தலைமையில் இந்த ஆரம்ப விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து 25,000 மில்லியன் ரூபாய் என்ற பிரம்மாண்ட நிதி ஒதுக்கீட்டில், நாடு முழுவதும் பல்பரிமாண வறுமையை ஒழிப்பதற்காக இந்த விசேட திட்டம் நேற்றைய தினம் நடைமுறைக்கு வந்துள்ளது.

புதுக்குடியிருப்பில் உதித்த புதிய விடியல்!

இதன் முதற்கட்டமாக, கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில், பிரதேச பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் மிக முக்கிய வாழ்வாதாரத் திட்டமான “உப்பு உற்பத்தி” திட்டத்திற்கான மதகு அமைக்கும் பணி முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டம் அப்பகுதி மக்களின் பொருளாதாரத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்பு

இந்த விசேட ஆரம்ப விழாவில் அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து புதியதோர் ஆரம்பத்திற்கு வித்திட்டனர்.

குறித்த நிகழ்வில் கல்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.ஆர். ரிகாஸ், உப தவிசாளர் சமன் குமார ஹேரத் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டதுடன், கல்பிட்டி பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் குழுவினர் பங்கேற்று திட்டங்களை வழிநடத்தினர்.

மக்களின் பலமே நாட்டின் பலம்!

வறுமையை ஒழித்து, ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதே “பிரஜா சக்தி 2026” திட்டத்தின் முக்கிய இலக்காகும். இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளி பொதுமக்கள், தங்களின் பொருளாதாரத்தை தாங்களே கட்டியெழுப்பும் இந்த அரிய வாய்ப்பை மிகவும் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்று இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மக்களை உண்மையிலேயே வலுவூட்டும் இந்த “பிரஜா சக்தி” திட்டம், கல்பிட்டி மண்ணில் ஒரு புதிய பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு பயணத்தடை!

0

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.​

ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலைத் குண்டுத்தாக்குதல்கள் குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த அதிரடி உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.​

இத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையிலேயே, சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் இப்பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.​

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் நோக்கம் மற்றும் சதி இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ச்சியாக மறுத்து வரும் நிலையில் குறித்த தீர்ப்பு வெளியாகியுள்ளமை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

​உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் வகையில், தற்போதுள்ள அரசாங்கம் இந்த விசாரணைகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள சூழலில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எபோலா வைரஸ் பரவல் குறித்த அச்சம் அதிகரிப்பு!

0

அதிகரித்து வரும் எபோலா நோய் பரவல் அச்சங்களுக்கு மத்தியில் 3 எபோலா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முறையான பரிசோதனை செய்ய முடியாத நிலையில், எபோலா அறிகுறிகளுடன் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 220-க்கும் மேல் உயர்ந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காங்கோவின் ‘இடூரி’ (Ituri) மாகாணத்தில் உள்ள மொங்ப்வாலு, புனியா போன்ற பகுதிகளிலேயே அதிகப்படியான மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் பல சுகாதாரப் பணியாளர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆபிரிக்க நாடான காங்கோவில் அரிய வகை எபோலா வைரஸ் தொற்றால் சுமார் 1000 பேர் வரை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்க்கனவே கிட்டத்தட்ட 250 பேரின் உயிரை பறித்து இருக்கும் எபோலா நோயை சமாளிக்க 3 புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனிடையே இந்த தடுப்பூசிகளில் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வதேச எய்ட்ஸ் தடுப்பு நிறுவனம், எபோலா பரவல் இதுவரை இல்லாத அளவு மிகவும் மோசமாக இருக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், மாடர்னா என்ற மருந்து நிறுவனமும் ‘பண்டிபுக்யோ’ (Bundibugyo) என்ற எபோலா வகைக்கு எதிரான தடுப்பூசிகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.

இதனிடையே மெடிசின் சான்ஸ் ஃப்ரான்டியர்ஸ் (MSF) என்ற மருத்துவத் தொண்டு நிறுவனம் இந்த நிலைமை மிகவும் கவலையளிப்பதாகவும், இதற்கு முன்பு இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு அதிகமான பாதிப்புகள் பதிவானதில்லை என்று கவலை தெரிவித்து உள்ளது.

இதனிடையே தற்போது எபோலாவின் சையர் (Zaire) வகைக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் (Ervebo, Zabdeno) உள்ளன. ஆனால், இப்போது பரவி வரும் ‘பண்டிபுக்யோ’ ‘Bundibugyo’ வகைக்கு என்று தனியாக தடுப்பூசிகள் இல்லாததால், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஆலோசனையின் பேரில் இந்த 3 தடுப்பூசிகளின் மருத்துவப் பரிசோதனைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

கடல் அரிப்பைத் தடுக்க களமிறங்கிய கல்பிட்டி – டச்பே கிராம மக்கள்!

0

கற்பிட்டி: கடல் அரிப்பின் கோரப்பிடியில் இருந்து தங்களது வாழ்வாதாரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக, கற்பிட்டி – கீரிமுந்தல் (டச்பே) கிராமிய மீனவ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இன்று அதிரடி நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளனர்.

கீரிமுந்தல் (டச்பே) கிராமிய மீனவ அமைப்பின் தலைவர் தினேஷ் சுரஞ்சன் பெர்னாண்டோ விடுத்த அவசர வேண்டுகோளுக்கு இணங்க, கரையோரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த அவசர மண்வேலி கட்டும் பணி இன்று காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று காலை கற்பிட்டி பங்குத்தந்தை, உதவிப் பங்குத்தந்தை ஆகியோரின் விசேட ஆசிர்வாதங்கள் மற்றும் இறை வழிபாடுகளுடன் இப்பணிகள் சுபயோக முகூர்த்தத்தில் தொடங்கப்பட்டன. இயற்கைச் சீற்றத்திடமிருந்து தங்களது கிராமத்தையும், கடற்கரையையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு அப்பகுதி மக்கள் அதிகாலையிலேயே திரண்டிருந்தனர்.

அதிகாரிகள் மற்றும் அமைப்புகளின் நேரடி மேற்பார்வை

கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதேச காரியாலய அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ் இப்பணிகள் மிகவும் திட்டமிட்டபடி தரம் வாய்ந்ததாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், இந்த உன்னத காரியத்திற்கு ஆலய நிர்வாக சபையினர், மீனவ சங்கத் தலைவர் மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்கள், கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, களத்தில் இறங்கி வேலை செய்து வருவதுடன், சுமார் 80 மீட்டர் நீளம் கொண்ட குறித்த மண்வேலி 10 அடி அகலத்தை கொண்டதாக அமைக்கப்பட்டு வருகின்றது

இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் கைகட்டி நிற்காமல், “நம் கிராமத்தை நாமே காப்போம்” என்ற நோக்கில் கீரிமுந்தல் (டச்பே) கிராம மக்கள் காட்டி வரும் இந்த ஒற்றுமையும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த கரையோர பகுதி மக்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. இந்த மண்வேலி அமைக்கும் பணி நிறைவடையும் பட்சத்தில், இப்பகுதியில் நிலவி வரும் கடல் அரிப்பு அபாயம் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்படும் என மக்களும் அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புத்தளத்தில் “ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் பணிகள்” திட்டம் ஆரம்பம்!

0

மாதம்பை (மகாவெவ)

இலங்கையின் கிராமியப் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்டு, நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பிரம்மாண்டமான “ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் பணிகள்” திட்டத்தின் புத்தளம் மாவட்டத்திற்கான அங்குரார்ப்பண விழா இன்று மகாவெவ, மாதகொட கிராமத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து 25,000 மில்லியன் ரூபாய் அசுரச் செலவில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மாபெரும் தேசியத் திட்டத்தின் கீழ், புத்தளம் மாவட்டத்திற்கான முதற்கட்டப் பணிகள் மாதகொட கிராமத்தில் உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டன.

விவசாயிகளின் பல தசாப்த காலக் கனவு நனவாகிறது!

இத்திட்டத்தின் கீழ், மாதகொட பகுதியில் நீண்டகாலத் தேவையாக இருந்த “மாதகொட பொல்வத்தை கந்த” கால்வாயை புனரமைத்தல், 2 மதகுகள் (Water doors) அமைத்தல் மற்றும் முறையான நீரோட்டத்தை சீரமைத்தல் ஆகிய கட்டமைப்புப் பணிகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் சந்தன அபேரத்ன அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

மொத்த மதிப்பீட்டுச் செலவு: ரூ. 8,000,000/= (80 இலட்சம் ரூபாய்)
நேரடிப் பயன்: இப்பகுதியில் உள்ள 600 ஏக்கருக்கும் அதிகமான நெல் வயல்களுக்குத் தடையின்றி நீர் பாய்வதற்கான வசதி இதன் மூலம் ஏற்படுத்தப்படும்.

இந்தக் கால்வாய் புனரமைப்பின் மூலம், மாதகொட மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் செழிப்படைவதோடு, பிராந்தியத்தின் நெல் உற்பத்தியும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்பு

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்ப விழாவில், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான திரு. கயான் ஜனக, நாத்தாண்டிய பிரதேச சபையின் தலைவர் திரு. சாகர விஜேசேகர, புத்தளம் மாவட்டச் செயலாளர் திரு. இந்திக சில்வா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சிந்தா விதான மற்றும் மகாவெவ பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல உயர் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், பிரதேசத்தின் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் இப்புரட்சிகரமான திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இந்தத் திட்டம், புத்தளம் மாவட்ட விவசாய வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக அமையும் என விழாவில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அஷ்ஷைக் அர்கம் நூராமித்!

0

கொழும்பு: இவ்வருட புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா சென்றிருந்த போது, அங்கு இடம்பெற்ற சில சம்பவங்கள் மற்றும் பரவிய வதந்திகள் குறித்து முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நூல் பரிசீலனைக் குழு உறுப்பினரும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளருமான அஷ்ஷைக் அர்கம் நூராமித் தெளிவுபடுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தான் சவூதி அதிகாரிகளால் கைது செய்யப்படவோ அல்லது தடுத்து வைக்கப்படவோ இல்லை என்பதை அவர் மிகவும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய பின்னணி என்ன?

இலங்கை முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நூல் பரிசீலனைக் குழு உறுப்பினராக தான் வகிக்கும் பொறுப்பு தொடர்பாக நபர் ஒருவர் முன்வைத்த முறைப்பாடே இந்த விசாரணைக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், நான் மீனா பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கோரப்பட்டதுடன், சில விடயங்கள் குறித்து என்னிடம் வழக்கமான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சின் அதிகாரிகளாலும் சில தகவல்கள் கோரப்பட்டன.

எனினும், இந்த சாதாரண, வழக்கமான நடைமுறையானது சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் பல்வேறு உண்மைக்குப் புறம்பான வதந்திகளுக்கும், ஊகங்களுக்கும் வழிவகுத்துவிட்டது என அஷ்ஷைக் அர்கம் நூராமித் தந்து முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வதந்திகளை உடைக்கும் உண்மைத் தகவல்கள்

தன்னைப்பற்றி பரவிய செய்திகள் அனைத்தும் அபாண்டமானவை என்பதை உறுதிப்படுத்திய அவர், பின்வரும் முக்கிய உண்மைகளைத் தெளிவுபடுத்தியுள்ளார்:

  • கைது செய்யப்படவில்லை: சவூதி அரேபியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் சவூதி அதிகாரிகளால் கைது செய்யப்படவோ அல்லது தடுத்து வைக்கப்படவோ இல்லை.
  • கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்படவில்லை: அவரது பாஸ்போர்ட் (Passport) அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் பரவிய செய்தியும் முற்றிலும் பொய்யானது.
  • பாதுகாப்பான நாடு திரும்பல்: சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட சுமுகமான கலந்தாலோசனைகளின் அடிப்படையில், கடந்த 2026 மே 31 ஆம் திகதி அவர் பாதுகாப்பாக இலங்கை வந்தடைந்துள்ளார்.
இராஜதந்திர ரீதியில் நகர்த்தப்பட்ட காய்நகர்த்தல்கள்

இந்த விவகாரத்தின் போது இலங்கை அரசாங்கமும், இராஜதந்திர அதிகாரிகளும் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் (ACJU) மிகத் துரிதமாகச் செயற்பட்டுள்ளன என்பதை அஷ்ஷைக் அர்கம் நூராமித் நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார்.

பங்களிப்பு செய்த தரப்பினர்மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை
இலங்கைத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகம்சவூதிக்கான இலங்கைத் தூதுவர் மேதகு அமீர் அஜ்வாத் மற்றும் ஜித்தாவிற்கான துணைத் தூதுவர் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். லஃபார் தாஹிர் ஆகியோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய பிரதிநிதித்துவங்களை மேற்கொண்டனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU)பொறுப்புணர்வுடன் செயற்பட்டு, பிரதமரின் அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புகொண்டு தேவையான தூதரக உதவிகளை உறுதிப்படுத்தினர்.
அரசாங்கத் தலைவர்கள்இலங்கைப் பிரதமர் கௌரவ டாக்டர் ஹரிணி அமரசூரிய மற்றும் பதில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர ஆகியோர் தனிப்பட்ட அக்கறையுடன் செயற்பட்டனர்.
அஷ்ஷைக் அர்கம் நூராமித் விடுத்துள்ள விசேட வேண்டுகோள்

தற்போது தான் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளதால், இந்த விவகாரம் குறித்து மேலும் ஊகங்களை வெளியிடுவதையோ அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதையோ முற்றாகத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களிடமும் ஊடகங்களிடமும் பணிவன்புடன் வேண்டிக்கொண்டுள்ளார்.

“எஞ்சியுள்ள ஏதேனும் நிர்வாக அல்லது சட்ட நடைமுறைகள் இருப்பின், அவை உரிய முறையில் கையாளப்படும். நாம் அனைவரும் பரஸ்பர புரிந்துணர்வு, ஒற்றுமை மற்றும் மரியாதையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்த நிகழ்வுகளால் யாரேனும் மனவருத்தமடைந்திருந்தால் அவர்களிடம் பணிவுடன் மன்னிப்புக் கோருகின்றேன் என்றும் அர்கம் நூரமித் தெரிவித்துள்ளார்.

எமது ஒற்றுமையை அல்லாஹ் வலுப்படுத்துவானாக; தவறான புரிதல்களிலிருந்தும் பிளவுகளிலிருந்தும் நம்மைப் பாதுகாத்து, மார்க்கத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்யும் பாக்கியத்தை வழங்குவானாக” என துஆப் பிரார்த்தனையுடன் தனது அறிக்கையை அவர் நிறைவு செய்துள்ளார்.

ஜூன் மாதத்துடன் முடியும் மானியம் – மக்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை!

0

கொழும்பு, ஜூன் 02- Daily Mirror:

சமீபத்தில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளிலும் சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்னமும் பெருமளவிலான நிதி நட்டத்தையே எதிர்கொண்டு வருவதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், அரசாங்கம் பெரும் தொகையை மானியமாக வழங்கி மக்களைப் பாதுகாத்து வந்தபோதிலும், இந்த மானியங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மிக வேகமாக தீர்ந்து வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.

ஜூன் மாதத்துடன் முடியும் ரூ. 57 பில்லியன் மானியம்!

டீசல் லீற்றர் ஒன்றுக்கு 100 ரூபாவையும், பெட்ரோல் லீற்றர் ஒன்றுக்கு 20 ரூபாவையும் மானியமாக வழங்குவதற்காக அரசாங்கம் 57 பில்லியன் ரூபா என்ற மாபெரும் தொகையை ஒதுக்கியிருந்த இந்த நிதியுதவி, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வழங்கப்பட்டதுடன், இந்த ஜூன் மாதத்திலும் தொடர்கிறது.

“ஆனால், இந்த மானிய நிதி ஜூன் மாத இறுதியுடன் முழுமையாகத் தீர்ந்துவிடும். இதனால், நாடு மேலும் கடுமையான பொருளாதார சீர்குலைவுக்குள் தள்ளப்படுவதைத் தவிர்க்கவே எரிபொருள் விலையை உயர்த்த அரசாங்கம் தள்ளப்பட்டது,” என தலைவர் ராஜகருணா விளக்கியுள்ளார்.

தீவிரமடையும் டொலர் தட்டுப்பாடு: 100 மில்லியனிலிருந்து 522 மில்லியனாக உயர்ந்த செலவு!

இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணம், இலங்கையிலிருந்து வெளியேறும் மாபெரும் வெளிநாட்டு நாணயப் பரிமாற்றமாகும் (Foreign Exchange). முன்னைய மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்கு 100 மில்லியன் முதல் 120 மில்லியன் டொலர்கள் வரை மட்டுமே செலவிடப்பட்டது. ஆனால், கடந்த மாதத்தில் இந்தச் செலவு 522 மில்லியன் டொலர்களாக அதிரடியாக உயர்ந்துள்ளது!

“இந்த பாரிய டொலர் வெளியேற்றம் நமது வெளிநாட்டு நாணய சந்தையை கடுமையாகப் பாதித்துள்ளது. இது இப்படியே தொடர்ந்தால், எரிபொருள் விலையை மட்டுமல்லாமல், அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளையும் உயர்த்தி, ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் மரண அடியைக் கொடுக்கும்,” என எச்சரித்துள்ள தலைவர், பொதுமக்கள் தங்களின் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு அவசரமாகக் கோரியுள்ளார்.

ஒரு லீற்றர் எரிபொருளில் அரசுக்கு எவ்வளவு நட்டம்? (விலை விபரம்)

அரசாங்கம் மானியம் வழங்கிய பின்னரும், தற்போதைய சந்தை விலையின்படி சிபெட்கோவிற்கு ஏற்படும் நட்ட விபரங்கள் இதோ:

எரிபொருள் வகைஉண்மைச் செலவு (ரூபா)தற்போதைய விற்பனை விலை (ரூபா)கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நட்டம் (ரூபா)
ஒட்டோ டீசல் (Auto Diesel)ரூ. 536ரூ. 407ரூ. 29 (ஒரு லீற்றருக்கு)
பெட்ரோல் (Petrol)ரூ. 494ரூ. 434ரூ. 60 க்கும் மேல் (ஒரு லீற்றருக்கு)
QR குறியீடு (QR Code) கட்டாயமாக்கப்படுகிறது: மீறினால் கமிஷன் கட்!

இந்த நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சினுடன் இணைந்து, தேசிய எரிபொருள் QR குறியீடு முறையை (QR Code System) 100% கட்டாயமாக்க சிபெட்கோ தீர்மானித்துள்ளது.

கடந்த காலங்களில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இந்த QR முறையைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட தலைவர், தற்பொழுது எரிபொருள் விற்பனையாளர்களின் இயக்கச் செலவுகளை ஈடுசெய்ய அவர்களுக்கான கமிஷன் தொகையை சிபெட்கோ அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“இனிமேல், நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீடு மூலம் எவ்வளவு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது என்பதை எங்களால் டிஜிட்டல் முறையில் கண்காணிக்க முடியும். இந்த வாரம் முதல் இது தீவிரமாக கண்காணிக்கப்படும். எந்தவொரு எரிபொருள் நிலையமாவது QR முறையைத் துல்லியமாகப் பின்பற்றத் தவறினால், அவர்களுக்கு வழங்கப்பட்ட நிதிச் சலுகைகளும் கமிஷன்களும் உடனடியாக ரத்து செய்யப்படும்,” என சிபெட்கோ தலைவர் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.