Tuesday, July 28, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 3

பதவியில் நீடிக்க அமைச்சருக்கு தார்மீக உரிமை கிடையாது – சஜித்!

0

நாடாளுமன்றில் தற்போது சூடுபிடித்துள்ள அரசியல் களத்தில், நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடுத்துள்ள வார்த்தைக் கணைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின்போதே, எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தை கடுமையாகச் சாடினார்.

பொறுப்புக்கூற வேண்டிய இடத்தில் இருந்து விலகி, தன் கடமையை முற்றிலும் புறக்கணித்த நீதி அமைச்சருக்கு அந்தப் பதவியை வகிப்பதற்கு எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை என சஜித் பிரேமதாச அடித்துக் கூறினார். “அவர் நீதித் துறையிலும் தோல்வி… சிறைச்சாலைத் துறையிலும் தோல்வி…” என நாடாளுமன்றத்தை அதிரவைக்கும் வகையில் அவர் நேரடியாகவே குற்றஞ்சாட்டினார்.

இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், நாட்டின் நீதித்துறையை தற்போதைய அரசாங்கம் மெல்ல மெல்லத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் தீவிரமாக முயற்சிக்கிறது என்பதாகும். “இந்த அரசாங்கம் செயலற்ற ஒரு அரசாங்கம்” எனச் சுட்டிக்காட்டிய அவர், அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதித்துறையை முழுமையாக விழுங்கும் இந்த அபாயகரமான போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எச்சரித்தார்.

அதேவேளை, அண்மையில் நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்பது? என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய அமைச்சர் பதவியில் இருக்கும் காலப்பகுதியில் நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மழுங்கடிக்கவே முயற்சிகள் நடப்பதாகவும் சாட்டினார்.

நிலைமை இத்துடன் முடிந்துவிடவில்லை. நீதித்துறைக்குள் தன்னிச்சையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டாம் என நாட்டின் அனைத்துச் சட்டத்தரணிகள் சங்கங்களும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ள நிலையிலும், தற்போது நீதிபதிகளை வேட்டையாடும் வேலைகள் பகிரங்கமாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். நீதிமன்றங்களைத் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் துடிக்கும் அரசாங்கத்தின் இந்த நகர்வுகள் ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நீதித்துறையை வளைக்க பார்க்கிறதா அரசு? சூடாகி பேசிய ஹக்கீம்!

0

நீதித்துறை அமைப்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் சில சர்ச்சைக்குரிய நகர்வுகள் குறித்து பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.

அந்தவகையில் இன்று பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு காரசாரமாக உரையாற்றிய ரவூப் ஹக்கீமின் பேச்சு தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் ஜே.வி.பி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட போது, அவர்களுக்காகத் தோன்றிப் போராடிய சட்டத்தரணி நீலாரத்னவின் தியாகங்களைச் சுட்டிக்காட்டிய ஹக்கீம், தற்போதைய அரசாங்கம் வரலாற்றை மறந்து நீதித்துறையின் அழுத்தங்களுக்குச் செவிசாய்க்காமல் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.

“பொறுப்பற்ற மௌனம்” – அரசைக் கிழித்தெறிந்த குற்றச்சாட்டு!

முக்கியமான தருணங்களில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவே மக்கள் தகவல்களைப் பெற வேண்டிய நிலை உள்ளது என்றும், 24 முதல் 48 மணிநேரம் வரை பொறுப்பான அமைச்சர்கள் எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்காமல் மௌனம் காப்பது கடமை தவறிய செயலாகும் என்றும் தெரிவித்த ஹக்கீம், இதன் காரணமாகவே நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய ஹக்கீம்,

சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி, நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்ட பின்னரே அமைச்சு தரப்பு விளக்கமளிக்க முன்வருவது, அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து விலகியிருப்பதையே காட்டுகிறது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திடீரென உயர்த்துவது என்பது, மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெறக் காத்திருக்கும் ஜூனியர் நீதிபதிகளின் நியாயமான எதிர்பார்ப்புகளை முடக்கும் செயலாகும். இது நீதித்துறை கட்டமைப்புக்குள்ளேயே பெரும் குழப்பத்தையும் சீர்குலைவையும் ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சட்டத்திருத்தங்களை தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தாமல், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்குப் பிறகே அமலுக்கு வரும் வகையில் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

பிரதம நீதியரசர்கள் ஓய்வுபெற்ற உடனடியாக, அவர்களுக்கு நியூயோர்க் போன்ற முக்கிய நகரங்களில் நிரந்தர தூதரகப் பிரதிநிதித்துவ உயர் பதவிகளை வழங்கி கௌரவிக்கும் நடைமுறை தொடர்கிறது.

முந்தைய அரசாங்கங்கள் முதல் தற்போதைய ஆட்சி வரை தொடரும் இந்த “பரிசளிக்கும் கலாச்சாரம்”, நீதித்துறையின் சுயாதீனத் தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது என்றும், இத்தகைய நடவடிக்கைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் ஹக்கீம் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா எம்.பிக்கு வோரண்ட்: பாராளுமன்றில் சலசலப்பு!

0

பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக எம்பி அர்ச்சுனா அமர்ந்திருக்கும் போதே, அவரை உடனடியாகக் கைது செய்ய நீதிமன்றம் எப்படி பிடியாணை (வோரண்ட்) பிறப்பிக்க முடியும்? – இன்று பாராளுமன்றத்தை அதிரவைத்த முக்கிய கேள்வி இதுதான். எதிர்க்கட்சி எம்பி கலாநிதி ஹர்ஷ டி சில்வா இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த அடுத்த கணமே, சபைக்குள் இருந்த அமைதி காற்றில் பறந்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு கூச்சலிட, பாராளுமன்றமே அனல் பறக்கும் களமான மாறியது.

“நீதிமன்றம் அப்புறம்… முதல்ல இந்த சபைதான்!” – சஜித் பிரேமதாச ஆவேசம்!

சபையில் நிலவிய பதற்றத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. “அர்ச்சுனா இந்தச் சபையில் கலந்து கொள்வது அவருடைய சிறப்புரிமை! அவர் மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி. அவருடைய கடமையைச் செய்வதை எந்தவொரு நிறுவனத்தாலும் தடுக்க முடியாது!” என முழங்கினார்.

அத்துடன் நிறுத்தாமல் பிரதி சபாநாயகரை நோக்கி, “மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பியின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் உடனடியாக ஒரு தீர்ப்பை வழங்க வேண்டும்! இது விஷயத்தில் சபாநாயகரிடம் கேட்கத் தேவையில்லை, அவருக்கு இருக்கும் அதிகாரம் நீதிமன்றத்தில் இல்லை, இந்தச் சபையில்தான் இருக்கிறது!” எனக் குரலை உயர்த்தினார்.

“என்னால் முடியாது…” – பிரதி சபாநாயகரின் கைகழுவல்!

எதிர்க்கட்சியினரின் இந்த அதிரடித் தாக்குதலால் நிலைகுலைந்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, நிலைமையைச் சமாளிக்க முயன்றார். இருப்பினும், சஜித்தின் நேரடிக் கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்தச் சந்தர்ப்பத்தில் என்னால் உடனடியாக எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது” எனத் தெரிவிக்க, எதிர்க்கட்சியினரின் கோபம் இரட்டிப்பானது.

இதேவேளை, எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கப் புயலாகக் களமிறங்கினார் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல. “எந்தவொரு சிவில் குற்றவியல் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்குச் சென்றுதான் ஆக வேண்டும். வழக்கறிஞர் மட்டும் போனால் போதாது!” என வெட்டிப் பேசினார்.

மேலும், “எம்பி நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாத நிலை இருந்தால், அவருடைய பிணையாளியாவது சென்று நீதிமன்றத்தில் நிலைமையை விளக்கியிருக்க வேண்டும். அதை விடுத்துச் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது” என நியாயம் கற்பிக்க, சபையில் காரசாரமான வாக்குவாதங்கள் தொடர்ந்தன.

நீதிமன்ற உத்தரவா? பாராளுமன்ற சிறப்புரிமையா? எது ஜெயிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போது நாடு முழுவதும் பரவியுள்ளது.

11 லட்சம் வழக்குகள் தேக்கம்: நீதிமன்ற நெருக்கடிக்கு ரணில் மாஸ்டர் பிளேன்!

0

இலங்கையின் நீதிமன்றங்களில் ஆண்டுகள் பலவாகத் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை, நாட்டின் நீதித் துறை அமைப்பையே பெரும் சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தத் தீவிரப் பிரச்சினைக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், புதிய அரசியல் நகர்வு ஒன்றுடன் களமிறங்கியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

தற்போது நாட்டின் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை சாதாரணமானதல்ல. நீதி அமைச்சரின் கூற்றுப்படி, சுமார் 11 லட்சம் (1.1 மில்லியன்) வழக்குகள் முடிவின்றித் தேங்கிக் கிடக்கின்றன. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இந்த வழக்குத் தேக்கத்தைக் குறைப்பதே அதன் முதன்மை நோக்கம் என அரசுத் தரப்பில் காரணம் கூறப்பட்டு வருகின்றது. ஆனால், வெறும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் மட்டும் இந்த பிரம்மாண்ட மலை போன்ற வழக்குகளைக் கரைத்துவிட முடியுமா?

இந்தக் கேள்விதான் தற்போது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் சூடான விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெறும் நிர்வாக ரீதியிலான மாற்றங்களைத் தாண்டி, வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நடைமுறைச் சாத்தியமான மற்றும் அறிவியல் பூர்வமான வழிகளைக் கண்டறிய வலுவான ஒரு கட்டமைப்பு தேவை என்பதை ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காகவே பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு (Select Committee) ஒன்றை அமைக்க வேண்டும் என்ற அதிரடி யோசனையை அவர் முன்வைத்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் நீதித் துறையை முடக்கி வைத்துள்ள இந்த 11 லட்சம் வழக்குத் தேக்கத்திற்குத் தீர்வு காண்பதற்கு விரிவான ஆய்வு அவசியம் என்றார். இதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், தெரிவுக் குழுவை உடனடியாக அமைக்குமாறு வலியுறுத்தியும் பாராளுமன்றத்தில் முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு தாம் எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றப் படிகளையேறிப் பல தசாப்தங்களாக நீதிக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான சாதாரண பொதுமக்களின் அவலத்திற்குப் பாராளுமன்றத் தெரிவுக் குழு மூலம் நிரந்தர விடிவு கிடைக்குமா? ரணிலின் இந்த யோசனைக்கு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து எவ்வாறு பதிலளிக்கப் போகின்றன என்பதை நாடு கூர்ந்து கவனித்து வருகிறது.

இலங்கைக்கு விழுந்தது அமெரிக்காவின் புதிய வரிச் சாட்டை!

உலக வர்த்தக அரங்கில் மீண்டும் ஒருமுறை பெரும் புயலைக் கிளப்பியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். சர்வதேச விநியோகச் சங்கிலிகளில் கட்டாயத் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலைத் தடுக்கத் தவறிய நாடுகளை இலக்கு வைத்து, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) வியாழக்கிழமை புதிய கூடுதல் இறக்குமதி வரிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அதிரடிப் பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது வர்த்தக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சாதாரணமானதல்ல. சர்வதேச சந்தைக்குள் கட்டாயத் தொழிலாளர்களின் பங்களிப்போடு உருவாக்கப்படும் பொருட்கள் நுழைவதைத் தடுப்பதில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத 60 உலகப் பொருளாதாரங்களை ஆராய்ந்து, அவற்றின் மீது 10% முதல் 12.5% வரையிலான கூடுதல் வரிகளை வாஷிங்டன் சுமத்தியுள்ளது. ஆனால், இலங்கைக்கு இதில் ஒரு சிறிய நிம்மதிப் பெருமூச்சு விடும் செய்தி என்னவென்றால், இலங்கை மிக மோசமான 12.5% வரிப் பிரிவுக்குப் பதிலாக, குறைந்தபட்ச வரியான 10% பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் போலவே இந்தியா, பிரித்தானியா, கனடா, பங்களாதேஷ், இந்தோனேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், மலேசியா, கம்போடியா உள்ளிட்ட 17 நாடுகள் மட்டுமே இந்த 10 சதவீத வரிச் சலுகை வரம்பிற்குள் தப்பியுள்ளன. கட்டாயத் தொழிலாளர் உற்பத்திப் பொருட்களுக்கு ஏற்கனவே தடை விதித்த, அல்லது பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் அத்தகைய தடைகளை அமல்படுத்த உறுதியளித்த, அல்லது பகுதி வரம்புகளை நடைமுறைப்படுத்தியுள்ள நாடுகளுக்கே இந்த 10% வரி விதிக்கப்படுவதாக USTR விளக்கமளித்துள்ளது.

அதேவேளை, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய நாடுகள் 12.5% என்ற கடினமான வரியைச் சந்திக்கவுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா, தைவான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய வல்லரசு நாடுகளின் பொருட்கள் கூட, ஏற்கனவே நடைமுறையிலுள்ள வரிகளுக்கு மேலதிகமாக 10% அல்லது 12.5% கூடுதல் வரியைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை முதலே நடைமுறைக்கு வரும் இந்த வரியானது சர்வதேச வர்த்தகச் சூழலில் புதியதொரு மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.

“பத்தாண்டு காலமாக சர்வதேச அளவில் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தங்களால் உலகளாவிய விநியோகச் சங்கிலியிலிருந்து கட்டாயத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியாமல் போய்விட்டது” என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ள USTR தூதர் ஜேமிசன் கிரீர், அமெரிக்காவைப் போல் ஏனைய வர்த்தகப் பங்காளிகளும் கடுமையான தடைச் சட்டங்களை இயற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 1974 ஆம் ஆண்டின் அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301 இன் கீழ் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணையில், 45 க்கும் மேற்பட்ட அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 1,600 க்கும் மேற்பட்ட பொதுப் மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த இறுதி வரி விகிதங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆரம்பத்தில் 12.5% அதிக வரி விதிக்கப்படவிருந்த இந்தியா, வாஷிங்டனுடன் நடத்திய ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளின் பலனாகத் தனது வரியை 10% ஆகக் குறைத்துக் கொண்டுள்ளது. அத்துடன், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பான விவகாரத்தில் இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த தனிப்பட்ட 25% வரியையும் ட்ரம்ப் நிர்வாகம் சமீபத்தில் திரும்பப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனிதப் புதைகுழி: மழை அங்கியுடன் சிறுவன் ஒருவரின் எலும்புக்கூடு!

0

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மீண்டும் ஒருமுறை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 41 ஆவது நாளான நேற்று (23), வழக்கமான அகழ்வுப் பணிகளையும் தாண்டி, அனைவரையும் உரைய வைக்கும் வகையிலான அதிர்ச்சி உண்மைகள் சில நிலத்தடி மண்ணுக்குள்ளிருந்து வெளிவந்துள்ளன.

நேற்றைய அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 9 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், மூன்று இடப் பகுதிகளில் எலும்புக் குவியல்களும், சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் ஆணிகள் மற்றும் சிமெந்துத் துண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கிருந்த அனைவரையும் உற்றுநோக்க வைத்தது வேறு ஒரு காட்சி!

அடையாளம் காணப்பட்ட 467 ஆவது எலும்புக்கூடு, இதுவரை கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருந்தது. மழைக்காலத்தில் அணியும் மழை அங்கி (Raincoat) மற்றும் காலின் பகுதியில் காலுறை (Socks) அணிந்த நிலையில் சிறுவன் ஒருவனின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த இடத்தில் சவப்பெட்டி ஒன்று பயன்பாட்டில் இருந்ததற்கான தடயங்களும் காணப்படுகின்றன.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், “இந்த எலும்புக்கூடு அமைந்திருக்கும் விதம் பெரும் ஐயத்தை ஏற்படுத்துகிறது. இது சட்டரீதியாக அடக்கம் செய்யப்பட்ட ஒன்றா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றம் இது குறித்து விரிவாக ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், மேலதிக விவரங்கள் விரைவில் தெளிவுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

செம்மணிப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரை மொத்தம் 95 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 478 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதில் 464 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் அகழ அகழ வெளிவரும் மனித எச்சங்கள், நிலத்தடியில் புதைந்து கிடக்கும் மர்மங்களை நோக்கி நாட்டையே உற்றுநோக்க வைத்துள்ளது.

மோடியின் ஆயுதத்தையே கையில் எடுத்த Gen Z: இந்தியாவில் வெடிக்கும் புரட்சி!

0

கண்ணீர்ப்புகைக் குண்டுகள் தலைக்கு மேலாக வெடித்துச் சிதற, மூச்சுத்திணறலுக்கு மத்தியிலும் ஒரு கையில் தன் போனை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு ஓடுகிறார் 18 வயது அவன்ஷிகா சிங். தன் கண் முன்னாலேயே நிராயுதபாணியாக நின்ற மாணவிகளைப் பொலிஸார் கொடூரமாகத் தாக்குவதைப் படம் பிடித்த அவர், வீட்டிற்குச் சென்றதும் அதைச் சிறிய ரீல்ஸாக (Reels) மாற்றி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார். “இன்று நாடாளுமன்றத்தின் அழைப்பு மணியை அடித்துவிட்டு ஓடிவிட்டோம்” என்ற அவரது ஒற்றை வரிக் குறிப்புடன் வெளியான அந்த வீடியோ, இந்தியாவில் இப்போது வெடித்துள்ள பிரம்மாண்ட மாணவர் புரட்சியின் சாட்சியாக மாறியுள்ளது.

ஜூலை 20 அன்று தேசிய அளவில் நடைபெற்ற பரீட்சை வினாத்தாள்கள் தொடர்ச்சியாக கசிந்தமைக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் டெல்லி வீதிகளில் திரண்டபோது, இந்தியத் தலைநகரமே ஸ்தம்பித்தது. பொலிஸார் நடத்திய கொடூரமான தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். வரலாற்றில் முதன்முறையாக டெல்லியில் மாணவர்கள் மீது ‘பெலட்’ (Pellet) குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், பொலிஸார் ‘Meta’ ஸ்மார்ட் கண்ணாடிகளை அணிந்து தாக்குதல் நடத்தியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகார வர்க்கம் இந்த அத்துமீறல்களை மறுப்பதற்கு முன்பே, மாணவர்களின் ஸ்மார்ட்போன்களில் பதிவான காட்சிகள் இணையத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன.

கடந்த 12 ஆண்டுகளாகப் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பாரதிய ஜனதா கட்சியும் சோஷியல் மீடியாவைத் தங்கள் பிரசார ஆயுதமாகக் கச்சிதமாகப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அதே சோஷியல் மீடியாவை மோடி அரசுக்கு எதிரான கூர்மையான ஆயுதமாக ‘Gen Z’ இளைஞர்கள் திருப்பியுள்ளனர். தடிச்சூடு மற்றும் கண்ணீர்ப்புகைக் காட்சிகளை ஹிப்-ஹாப் பாடல்களுடனும், கூர்மையான நகைச்சுவை மீம்ஸ்களுடனும் இணைத்து வைரலாக்கும் இளைஞர்கள், “நாங்கள் எங்களது புரட்சியை நேரலை செய்கிறோம்” என கெத்தாக முழங்குகின்றனர்.

போராட்டக் களத்தில் பொலிஸாருக்குப் பூக்களைக் கொடுத்துக் கிண்டல் செய்வதும், ‘One Piece’ அனிமேஷன் மற்றும் ‘Marvel’ சூப்பர்ஹீரோ உடைகளை அணிந்து கலந்துகொள்வதும் என இந்த Gen Z தலைமுறையின் எதிர்ப்பு வடிவம் முற்றிலும் புதுமையாக இருக்கிறது. “Cockroach Janta Party” என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ள இவர்கள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பெறல் மற்றும் வினாத்தாள் கசிவால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு என 3 கோரிக்கைகளை முன்வைத்து அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கின்றனர்.

பாரம்பரிய தொலைக்காட்சி ஊடகங்கள் இந்தச் செய்தியை சரிவரக் காண்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ள நிலையில், இன்ஸ்டாகிராம் மற்றும் சுயாதீன ஊடகங்கள் மூலம் இந்த போராட்டம் மும்பை, பெங்களூரு, லக்னோ என இந்தியாவெங்கும் தீயாகப் பரவியுள்ளது. “மோடியின் அரசுக்கு இருக்கும் அளவுக்கு அதிகமான அகந்தையை எங்கள் தலைமுறை சகித்துக்கொள்ளாது” என முழங்கும் இந்த இளைஞர்கள், பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளப் பக்கங்களையும் தங்கள் கருத்துக்களால் முடக்கி வருகின்றனர். சோஷியல் மீடியா மூலம் ஆட்சியைப் பிடித்த மோடிக்கு, அதே சோஷியல் மீடியா மூலம் Gen Z தலைமுறை இப்போது மிகப்பெரிய அரசியல் சவாலை விடுத்துள்ளது.

நீதிபதிகளின் ஓய்வு விவகாரம்: ரணில், சஜித் தலைமையில் அதிரடி சந்திப்பு!

0

நீதிமன்றங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் ஒரு மிக முக்கியமான அரசியல் களம் இன்று சூடுபிடித்திருக்கிறது. நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய முன்மொழிவு தொடர்பில் ஆராய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் உற்பட நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் முத்திரை பதிக்கும் வகையில் ஒன்றுகூடினர்.

இந்த அதிரடிக் கூட்டத்தின் பின்னணியில் மிக முக்கியமான அரசியல் திருப்பம் ஒன்று மறைந்துள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்தில் இந்த நகர்வு எத்தகைய தாக்கங்களைச் செலுத்தப் போகிறது என்ற ஆழமான கவலைகளே எதிர்க்கட்சிகளை ஒரே மேடையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன. அரசாங்கத்தின் இந்தத் திட்டத்திற்கு எதிராகப் பொதுவானதொரு பலத்த எதிர்க்கட்சி நிலைப்பாட்டை வகுக்கும் நோக்கத்தோடு சஜித் பிரேமதாச இந்தக் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த அரங்குக்குள் நடந்த விவாதங்களின் அனல் பறக்கும் தன்மையை உயர்த்திய மற்றொரு முக்கிய நிகழ்வு, இதில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டமையாகும். நாட்டின் மூத்த தலைவர்களும் பிரதான எதிர்க்கட்சி முகாம்களும் கைகோர்த்துள்ள இந்தத் தருணம், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

சமீப நாட்களாக நாட்டின் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள இந்த ஓய்வு வயது உயர்வு விவகாரம், சாதாரணமானதல்ல என்கிறார்கள் அரசியல் அவதானிகள். நீதிமன்ற அமைப்பைப் பாதிக்கக் கூடிய எந்தவொரு பாரிய மாற்றமும், அவசரப்பட்டு எடுக்கப்படக் கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. பரந்த கலந்தாலலோசனைகளும் ஆழ்ந்த எச்சரிக்கையுமே இத்தகைய விவகாரங்களில் அவசியம் என வாதிடும் இவர்கள், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை எந்தக் காரணத்திற்காகவும் எளிதில் கடந்து செல்லப் போவதில்லை என்ற தெளிவான சைகையைக் காட்டியுள்ளனர்.

ரத்கம விதுரவுக்கு விழுந்த பலத்த அடி: 15 கோடி சொத்துக்கள் முடக்கம்!

0

பாதாள உலகக் குழுக்களின் நிழல் ராஜ்ஜியத்திற்கும், குற்றச் செயல்கள் மூலம் திரட்டப்படும் சட்டவிரோதப் பணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பாதுகாப்புத் தரப்பினர் தங்களது அதிடிரடி நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, ‘ரத்கம விதுர’ என்று பரவலாக அறியப்படும் குற்றவாளியான புபுதுமுனு விதுர லக்ஷான் டி சொய்ஸா விஜேசிங்கவுக்குச் சொந்தமான பெருமளவிலான சொத்துக்கள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன.

சுமார் 15 கோடி ரூபாய் சந்தைப் பெறுமதி கொண்ட இந்த மாபெரும் சொத்துக் குவியல், பொலிஸாரின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நுட்பமான விசாரணைகளின் பின்னரே தற்போது முடக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. அரச அதிகாரிகளையே வியப்பில் ஆழ்த்திய இந்த சொத்து வேட்டையின் பின்னணியில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

சந்தேகநபர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் தந்திரமாக, தனது பெயரில் எவ்வித சொத்துக்களையும் வைத்துக்கொள்ளாமல், அனைத்துச் சொத்துக்களையும் தனது தாயாரின் பெயரிலேயே கொள்வனவு செய்துள்ளார் என்பது பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. தாயின் பெயரைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி, சட்ட விரோதப் பணத்தைச் சட்டப்பூர்வ சொத்துக்களாக மாற்ற முயன்ற விதுரவின் திட்டம் தற்போது தவிடுபொடியாகியுள்ளது.

இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களின் பட்டியலை நோக்கும் போது, ரத்ம – தேவனிஹொட பகுதியில் உள்ள 13.72 பேர்ச்சஸ் நிலத்தில் பிரமாண்டமாக எழுப்பப்பட்டுள்ள சுமார் 600 இலட்சம் (6 கோடி) ரூபாய் பெறுமதியான சொகுசு மூன்று மாடிக் கட்டிடம் இதில் பிரதான இடத்தை வகிக்கின்றது. அத்துடன் நிற்காமல், அதே பகுதியில் அமைந்துள்ள சுமார் 450 இலட்சம் ரூபாய் பெறுமதியான 9.10 பேர்ச்சஸ் நிலமும், அதில் அரைகுறையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள மற்றொரு மூன்று மாடிக் கட்டிடமும் பொலிஸாரால் முடக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக, அதே தேவனிஹொட பகுதியில் 12.33 பேர்ச்சஸ் பரப்பளவைக் கொண்ட சுமார் 250 இலட்சம் ரூபாய் பெறுமதியான மற்றொரு காணியும், சுமார் 200 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிலப்பரப்பும் என மொத்தமாக 1500 இலட்சம் (15 கோடி) ரூபாய் பெறுமதியான அனைத்துச் சொத்துக்களும் தற்போது சட்டத்தின் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பாதாள உலகச் சட்டவிரோத வலையமைப்பை அடியோடு அறுக்க மேற்கொள்ளப்படும் இந்த அதிரடி நடவடிக்கை, குற்றச் செயல்களில் ஈடுபடும் ஏனைய நபர்களுக்கும் ஒரு பலமான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.

டெங்கு தடுப்பூசி தற்போதைய அவசர நோய்த்தொற்றுக்கு உடனடித் தீர்வல்ல!

0
தீயாய் பரவும் டெங்கு அரக்கன்: இலங்கையை உலுக்கும் திடுக்கிடும் புள்ளிவிபரங்கள்!

நாடெங்கிலும் டெங்கு நோயின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்து வரும் சூழலில், மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகின்றது. இந்த நிலையில், தற்போதைய பேரழிவுக்கு டெங்கு தடுப்பூசி ஒரு உடனடித் தீர்வாக அமையாது என விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) வெளியிட்டுள்ள சமீபத்திய உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,125 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால், ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் மட்டுமே 22,749 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நேற்றைய முன் தினம் (21) ஒரே நாளில் 1,097 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் 162 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

டெங்குவின் கொடூர பிடிக்குள் சிக்கி இதுவரை 56 உயிர்கள் பறிபோயுள்ள நிலையில், இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்பதை வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம வெளிப்படுத்தியுள்ளார்.

காய்ச்சல் மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்ட போதிலும், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல் சிகிச்சை பெறுவதில் மக்கள் காட்டும் காலதாமதமே உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டுகிறார். அத்துடன் ஒரே நேரத்தில் பெருமளவிலான நோயாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிப்பால் சுகாதாரக் கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள பெரும் அழுத்தமும் நிலமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

கொசுக்கள் பெருகும் இடங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இந்த கொடூர நோய்த்தொற்று கட்டுக்கடங்காமல் பரவுவதற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட மருத்துவர், கொசு உற்பத்தி மையங்களை அழிப்பதே தற்போதைக்கு நம் முன்னால் இருக்கும் ஒரே முதன்மை பாதுகாப்பு அரண் என்றார்.

டெங்கு தடுப்பூசி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தற்போது பரவி வரும் தீவிர தொற்றை தடுப்பூசியால் உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது. கொசுக்கள் பெருகும் இடங்களை முற்றாக ஒழிப்பது, கொசுக்கடியிலிருந்து தப்பிப்பது மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மருத்துவ சிகிச்சையைப் பெறுவது மட்டுமே மரணங்களைத் தடுப்பதற்கான ஒரே வழி” என வலியுறுத்தினார்.

மே மாதத்தில் 8,590 ஆக இருந்த பாதிப்பு, ஜூன் மாதத்தில் 21,535 ஆக எகிறிய நிலையில், ஜூலையில் நிலமை எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது. எனவே, எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உரிய நேரத்தில் மருத்துவ உதவியைப் பெற்று உயிர் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் மக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.