சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு விபத்துச் சம்பவங்களினால் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மாத்திரம் 53 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக, புத்தாண்டுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 13 மற்றும் ஏப்ரல் 10 ஆகிய திகதிகளிலேயே அதிகளவிலான விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதிக வேகம், மதுபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் கவனயீனம் ஆகியவையே இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னாலுள்ள பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இதேவேளை கொண்டாட்டங்களுக்காக நீர்நிலைகளுக்குச் சென்றவர்களில் 27 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பற்ற இடங்களில் நீராடியமை மற்றும் நீர்நிலைகளின் தன்மை அறியாது இறங்கியமை இந்தத் துயரங்களுக்குக் காரணமாகியுள்ளது.
கடந்த ஆண்டுகளின் புத்தாண்டு கால புள்ளிவிபரங்களோடு ஒப்பிடுகையில், இந்த வருடம் வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் ஏற்பட்ட மரணங்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன.
“கொண்டாட்டங்களின் போது பொதுமக்கள் போதியளவு அவதானத்துடன் செயற்படாததே இவ்வாறான உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாகியுள்ளது. எதிர்காலத்திலாவது வீதி ஒழுங்குவிதிகளையும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் முறையாகப் பின்பற்றுவது அவசியமாகும்.”
புத்தாண்டு மகிழ்ச்சி பல குடும்பங்களில் சோகமாக மாறியுள்ள இந்தச் சூழல், சமூகப் பாதுகாப்பு குறித்த மேலதிக விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (20) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின் படி, இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
குறிப்பாக மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம், தென் மாகாணம், குருநாகல் மாவட்டம் ஆகிய பகுதிகளில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது:
இன்று அதிகாலை வேளையில் சில பகுதிகளில் பனிமூட்டமான நிலை காணப்பட்டது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இந்த நிலை நீடித்தது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது வெட்டவெளிகளிலும் மரங்களின் அடியிலும் தங்குவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
இலங்கையின் கடல் வளங்களைப் பாதுகாக்கவும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, கடந்த இரண்டு வாரங்களில் பாரிய சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
2026 ஏப்ரல் 01 முதல் 15 வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் இலங்கை கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியன இணைந்து முன்னெடுத்த இந்த விசேட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்திய 41 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படைக் கட்டளைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்தச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் செம்மலை, செட்டிபாளையம், எலிசபெத் தீவு, கோழிப்பண்ணை, கிளிப்பன்பேர்க் முனை மற்றும் உப்புரால் பகுதிகளிலும், வடக்கில், நந்திக்கடல் களப்பு, அலம்பில், யானை தீவு, புடுவக்கட்டு மற்றும் யாழ்ப்பாணத்தின் கோமர் முனை பகுதிகளிலும், புத்தளம் உச்சமுனை பகுதிகளில் கடற்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்:
இந்த சுற்றிவளைப்புகளின் போது சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் வாகனங்களும் கைப்பற்றப்பட்டன:
11 சிறுபடகுகள் மற்றும் 02 இழுவைப் படகுகள்
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள்.
மீன்பிடிக்காகப் பயன்படுத்தப்படும் வணிக வெடிபொருட்கள்.
தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் இதர மீன்பிடி உபகரணங்கள்.
கரைப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள்.
கைது செய்யப்பட்ட 41 சந்தேக நபர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில், தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இன்று முற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
ஜனாதிபதிஅலுவலகத்திற்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமோக வரவேற்பளித்ததுடன், இந்திய துணை ஜனாதிபதியாக பதவியேற்றமைக்காக சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இதுவே இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் எனக் குறிப்பிட்ட இந்திய துணை ஜனாதிபதி, இலங்கையில் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் தொடர்பில் தனது நன்றியினைத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தலைவர்களுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானதுடன், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது
பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுலா, முதலீடு மற்றும் வர்த்தகத் துறைகளிலும், குறிப்பாக வலுசக்தி பாதுகாப்பு மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இந்திய துணை ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
இந்திய அரசின் ஆதரவுடன் இந்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் குறித்தும், டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிப் பொதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
அவசர நிலைமைகளுக்கு மேலதிகமாக, அண்மையில் தான் இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போதும், பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதும் எட்டப்பட்ட புரிந்துணர்வுக்கு ஏற்ப, இந்தியா தற்போது இலங்கைக்கு வழங்கும் பொருளாதார மற்றும் சமூக ரீதியான அனைத்துத் துறைசார்ந்த ஒத்துழைப்புகளும் விரிவடைந்துள்ளதாகவும், அதன்படி தற்போது பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் மூலம் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், டித்வா சூறாவளியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய சிறப்பான ஆதரவை இங்கு பாராட்டிய ஜனாதிபதி, இந்திய வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்காக நிதி ஒதுக்கீடு செய்தமைக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார்.
அதேபோன்று, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்ட வலுசக்தி நெருக்கடியின் போது, இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை அனுப்புவதற்கு இந்தியா எடுத்த நடவடிக்கையையும் ஜனாதிபதி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
தொழில்நுட்ப ரீதியாக இந்தியா அடைந்துள்ள சிறப்பான வெற்றிகளை இங்கு நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அந்தத் துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட இலங்கை எதிர்பார்ப்பதாகவும், குறிப்பாக, மனிதவள அபிவிருத்தி மற்றும் அரச துறையை டிஜிட்டல் மயப்படுத்தல் வேலைத்திட்டங்களில் இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
மீனவர் பிரச்சினைகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு தரப்பினரும் இணைந்து செயற்பட்டு, அதற்கு நீண்டகால நிரந்தர தீர்வைக் காண வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்தியத் தூதுக்குழுவின் சார்பில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல், பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி கே. லக்ஷ்மண், கலாநிதி மேதா விஷ்ரம் குல்கர்னி, வெளியுறவு அமைச்சின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஆர்.கே. லெனகல உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு விளையாட்டுத் திணைக்களத்துடன் இணைந்து நடத்திய ‘வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் – 2026’, கரவெட்டி இமையாணன் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் கடந்த (17.04.2026) அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் விழா மைதானத்துக்கு வருகை தந்த விருந்தினர்கள் பாரம்பரிய முறைப்படி கௌரவமாக வரவேற்று அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் மற்றும் சிங்களப் பாரம்பரியக் குடில்களை விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
மேலும் மைதானத்தில் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகள் அடங்கிய கண்காட்சிக்கூடங்களையும் விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
மேடை நிகழ்வுகளாக, வரவேற்பு நடனம், பேடிக்கூத்து, கண்டிய நடனம், கண்ணன் நடனம், பாரம்பரிய சிங்கள நடனம், புத்தாக்க நடனம், பாம்பு நடனம், தில்லானா நடனம் ஆகியனவும் இடம்பெற்றன.
அதேநேரம், பாரம்பரிய விளையாட்டுக்களான வழுக்கு மரம் (கிறீஸ் மரம்) ஏறுதல், தலையணைச் சண்டை உள்ளிட்ட பல கிராமிய விளையாட்டுப் போட்டிகளும் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவான்களாக வலம் வந்த விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களையே அணியை விட்டு வெளியேற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர். இவரது தேர்வின் கீழ் அணித் தேர்வில் பல அதிர்ச்சிகளைச் சந்தித்தாலும், இந்திய அணி வரலாற்று வெற்றிகளையும் குவித்தது. இதனால் பிசிசிஐ அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராகச் செயல்பட்டு வருபவர் அஜித் அகர்கர். இவரது தற்போதைய பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இவரது பதவிக்காலத்தை 2027 ஜூன் வரை நீட்டிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அகர்கர் தேர்வுக் குழு தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி 2024 மற்றும் 2026 டி20 உலகக்கோப்பைகளையும், கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று அசத்தியது. இந்தத் தொடர் வெற்றிகளே அவரது பதவி நீட்டிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
அகர்கர் பதவியேற்ற பிறகு இந்திய அணியில் பல கடுமையான மாற்றங்கள் அரங்கேறின. குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற மூத்த வீரர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு அணி ஒரு புதிய கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மேலும், டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில், டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் என புதிய கேப்டன்களையும் அகர்கர் துணிச்சலாக நியமித்தார்.
நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியா தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அடைந்த அபார வெற்றிகள் அவரது தேர்வுக் கொள்கைக்கு வலு சேர்த்துள்ளன. அணி நிர்வாகத்தின் பேச்சை கேட்காத இஷான் கிஷன் போன்ற வீரர்களை அணியிலிருந்து நீக்கித் தனது கண்டிப்பைக் காட்டிய அவர், பின்னர் அவர்கள் திறமையை நிரூபித்ததும் மீண்டும் உலகக்கோப்பை அணியில் சேர்த்து தனது நெகிழ்வுத்தன்மையையும் வெளிப்படுத்தினார்.
மேலும், தற்போதைய தேர்வுக் குழுவில் உள்ள ஆர் பி சிங் மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோர் புதிதாகப் பொறுப்பேற்றவர்கள் என்பதால், அகர்கர் போன்ற அனுபவமிக்க ஒருவரின் வழிகாட்டுதல் தொடர்ந்து அணிக்குத் தேவை என வாரியம் கருதுகிறது. அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெற உள்ளதால், அணியின் தேர்வில் எந்தவிதமான குழப்பமும் இன்றி ஒரு நிலைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளின் இடையே பிசிசிஐ அதிகாரிகள் அகர்கரை நேரில் சந்தித்து இந்த பதவி நீட்டிப்பு குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க உள்ளனர். துணிச்சலான முடிவுகளுக்குக் கிடைத்த பரிசாகவே இது பார்க்கப்படுகிறது.
மஹரகமையில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரு ஆண்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
மஹரகம, பமுணுவ வீதி, எக்சத் சுபசாதக மாவத்தை, இரண்டாவது குறுக்கு ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த 55 வயதுடைய பெண் மற்றும் அவரது 16 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமியின் தந்தை மற்றும் வீட்டின் உரிமையாளரான 76 வயதுடைய முதியவர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் வீட்டைச் சோதனையிட்ட போது, அறையொன்றுக்குள் தாயும் மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல் நடந்த இடத்தில் பெட்ரோல் வாடை வீசியுள்ளதோடு, வீடொன்றிற்குத் தீ வைத்து மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவம் இதுவென விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்று உழவியந்திரம் கவிழ்ந்து இடம்பெற்ற கோர விபத்தில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் குறித்த நபர் தனது அத்தியாவசியத் தேவை ஒன்றின் நிமித்தம் உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது, எதிர்பாராத விதமாக உழவியந்திரம் கட்டுப்பாட்டை இழந்து திடீரெனத் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின்போது உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்ற சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த புளியங்குளம் பொலிஸார், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புத்தளம்: “டிட்வா” (Ditva) சூறாவளியினால் புத்தளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு அண்மையில் புத்தளம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரச நிர்வாக அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பயனாளிகளுக்கு மொத்தமாக 318 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.
இச்சூறாவளியின் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் 07 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டனர். இதில் அதிகப்படியான பாதிப்புகள் கருவலாகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவில் பதிவாகியுள்ளன. மாவட்ட ரீதியாக:
150 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.
29 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
49 தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு தொழில்துறைகள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக முதற்கட்டமாக பின்வரும் இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டன:
முழுமையாகச் சேதமடைந்த வீடுகளை மீளக் கட்டியெழுப்ப முதற்கட்டமாக தலா 20 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
பகுதியளவில் சேதமடைந்த வீடுகளைப் புனரமைக்க தலா 30 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முதற்கட்டமாக தலா 20 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன, அரசாங்கம் கடந்த ஒரு வருடத்தில் மேற்கொண்ட முறையான நிதி முகாமைத்துவம் மற்றும் வரிக் கொள்கை காரணமாக ஒரு இலட்சம் கோடி ரூபாவை சேமிக்க முடிந்துள்ளதாகத் தெரிவித்தார். இதன் விளைவாகவே, பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக 50,000 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்ய முடிந்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், பேரிடர் நிலைமைகளைக் காரணம் காட்டி நாட்டின் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளும் நிறுத்தப்படவோ அல்லது ஒத்திவைக்கப்படவோ இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த இழப்பீட்டு நிதி ஜனாதிபதியினதோ, அமைச்சர்களினதோ அல்லது அரச அதிகாரிகளினதோ தனிப்பட்ட பணம் அல்ல; இது பொதுமக்களின் பணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்று அமைச்சர் வலியுறுத்தினார். அத்துடன், தொழிற்சாலைகள் இயங்குவதன் மூலமே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும் என்பதால், பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை விரைவாக மீண்டும் ஆரம்பிக்குமாறு அதன் உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், புத்தளம் மாவட்டச் செயலாளர் இந்திகா சில்வா உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அமைச்சர் கே.டி லாந்காந்தவின் சொத்துக்கள் தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியூடாக ஒளிபரப்பிய செய்தி தவறானது என அறிவித்து, அமைச்சரின் சட்டத்தரணியால் கோரிக்கை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹிரு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதற்கு அமைய, அமைச்சரின் பிணையங்களின் பெறுமதி மற்றும் சொத்துக்களின் மொத்த பெறுமதி ஆகியன தவறாக அறிக்கையிடப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சில தரவுகளை மீண்டும் உறுதி செய்துக் கொள்வதற்கான உரித்துக்கு அமைய, குறித்த தகவல்களை ஹிரு தொலைக்காட்சி செய்தி மீண்டும் வெளியிட்டுள்ளது.
அமைச்சர் கே.டி. லால்காந்த, தன்னுடையதும், தனது குடும்ப உறுப்பினர்களுக்குமான 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்குரிய சொத்து விபரங்களை கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்பித்தமை தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி ஹிரு செய்தி வெளியிட்டது.
அதற்கமைய, அசையா சொத்துக்களாக, அன்பளிப்பு உரித்தினூடாக கிடைக்கப்பெற்ற 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2500 சதுரஅடி கட்டடம், 10 பேர்ச்சஸ் காணி, 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிரந்தர கட்டடம் மற்றும் 20 பேர்ச்சஸ் காணி, 560 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்காயிரத்து 50 சதுர அடி கட்டடம் மற்றும் 14 பேர்ச்சஸ் காணி ஆகியன தொடர்பில் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், உரித்தினூடாக கிடைக்கப்பெற்ற 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7.26 பேர்ச்சஸ் காணியிலுள்ள 2500 சதுர அடியிலான கட்டடம் மற்றும் வணிக கட்டடம் என்பனவும் தமது அசையா சொத்துக்கள் என அமைச்சர் கே.டி லாந்காந்த அறிவித்துள்ளார்.
இதனை தவிர அசையும் சொத்துக்களாக, 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 பவுண் தங்க ஆபரணங்களும், 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான 120 கிராம் தங்கம் மற்றும் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிற்றூர்ந்து ஒன்றும் உள்ளதாக தெரிவித்து அவர் ஆவணங்களை சமர்பித்துள்ளார்.
அத்துடன், மாதாந்த சம்பளத்தினூடாக உழைத்த 7 இலட்சத்து, 38 ஆயிரத்து 918 ரூபாய் 10 சதம் பணமும், சொத்துக்களை குத்தகைக்கு வழங்கியமையூடாக பெற்றுக் கொள்ளப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பணமும், ஓய்வூதிய கொடுப்பனவாக 7 இலட்சத்து 71 ஆயிரத்து 400 ரூபாய் பணமும் அவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தவிர, சொத்து விபரங்களின் அடிப்படையில், நிலையான வைப்பினூடாக வருடாந்தம் 27 இலட்சத்து 55 ஆயிரத்து 851 ரூபாய் 97 சதம் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதாகவும், தற்போதைய தொழில் என்ற அடிப்படையில் வருடாந்தம் 18 இலட்சம் வருவாய் சமர்பிக்கப்பட்டுள்ளதாக, ஹிரு தொலைக்காட்சியின் செய்தியில் அறிக்கையிடப்பட்டது.
இந்த சொத்து விபரங்களில் தவறில்லை என்பது, கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களுடாக அறியமுடிகிறது.
எனினும், அமைச்சரின் பிணையங்கள் மற்றும் சொத்துக்களின் மொத்த பெறுமதி தவறானது என தெரிவித்து, அமைச்சரின் சட்டத்தரணி ஹிரு ஊடகத்திற்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
அமைச்சரின் பிணையங்களின் மொத்த பெறுமதி 38 கோடியே 39 இலட்சத்து ஆறாயிரத்து 705 ரூபாய் 40 சதம் என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்ததாக, தவறாக அறிக்கையிடப்பட்டதை ஹிரு தொலைக்காட்சி இன்று தெரிவித்துள்ளது.
அதன்படி, அமைச்சருக்கு சொந்தமான பிணையங்களின் மொத்த பெறுமதி ஒரு இலட்சத்து, 43 ஆயிரத்து 475 ரூபாய் 08 சதம் என்பதே சரியான அறிக்கையாகும்.
இதனை தவிர அமைச்சரூடாக சமர்பிக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த பெறுமதி 46 கோடி ரூபாய்க்கும் அதிகம் என அறிக்கையிட்டமை, மொத்தக் கணிப்பில் ஏற்பட்ட தவறு என்பதையும் ஹிரு தொலைக்காட்சி செய்தி இன்று குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமைச்சரூடாக சமர்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கு அமைய, சொத்துக்களின் மொத்த பெறுமதி சுமார் 08 கோடி ரூபாய் ஆகும்.
இதற்கமைய, அமைச்சர் கே.டி.லால்காந்தவுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஹிரு தொலைக்காட்சி செய்தி கவலை வெளியிட்டுள்ளது.