Wednesday, July 29, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 4

நீதிபதிகளின் ஓய்வு விவகாரம்: ரணில், சஜித் தலைமையில் அதிரடி சந்திப்பு!

0

நீதிமன்றங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் ஒரு மிக முக்கியமான அரசியல் களம் இன்று சூடுபிடித்திருக்கிறது. நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய முன்மொழிவு தொடர்பில் ஆராய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் உற்பட நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் முத்திரை பதிக்கும் வகையில் ஒன்றுகூடினர்.

இந்த அதிரடிக் கூட்டத்தின் பின்னணியில் மிக முக்கியமான அரசியல் திருப்பம் ஒன்று மறைந்துள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்தில் இந்த நகர்வு எத்தகைய தாக்கங்களைச் செலுத்தப் போகிறது என்ற ஆழமான கவலைகளே எதிர்க்கட்சிகளை ஒரே மேடையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன. அரசாங்கத்தின் இந்தத் திட்டத்திற்கு எதிராகப் பொதுவானதொரு பலத்த எதிர்க்கட்சி நிலைப்பாட்டை வகுக்கும் நோக்கத்தோடு சஜித் பிரேமதாச இந்தக் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த அரங்குக்குள் நடந்த விவாதங்களின் அனல் பறக்கும் தன்மையை உயர்த்திய மற்றொரு முக்கிய நிகழ்வு, இதில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டமையாகும். நாட்டின் மூத்த தலைவர்களும் பிரதான எதிர்க்கட்சி முகாம்களும் கைகோர்த்துள்ள இந்தத் தருணம், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

சமீப நாட்களாக நாட்டின் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள இந்த ஓய்வு வயது உயர்வு விவகாரம், சாதாரணமானதல்ல என்கிறார்கள் அரசியல் அவதானிகள். நீதிமன்ற அமைப்பைப் பாதிக்கக் கூடிய எந்தவொரு பாரிய மாற்றமும், அவசரப்பட்டு எடுக்கப்படக் கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. பரந்த கலந்தாலலோசனைகளும் ஆழ்ந்த எச்சரிக்கையுமே இத்தகைய விவகாரங்களில் அவசியம் என வாதிடும் இவர்கள், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை எந்தக் காரணத்திற்காகவும் எளிதில் கடந்து செல்லப் போவதில்லை என்ற தெளிவான சைகையைக் காட்டியுள்ளனர்.

ரத்கம விதுரவுக்கு விழுந்த பலத்த அடி: 15 கோடி சொத்துக்கள் முடக்கம்!

0

பாதாள உலகக் குழுக்களின் நிழல் ராஜ்ஜியத்திற்கும், குற்றச் செயல்கள் மூலம் திரட்டப்படும் சட்டவிரோதப் பணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பாதுகாப்புத் தரப்பினர் தங்களது அதிடிரடி நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, ‘ரத்கம விதுர’ என்று பரவலாக அறியப்படும் குற்றவாளியான புபுதுமுனு விதுர லக்ஷான் டி சொய்ஸா விஜேசிங்கவுக்குச் சொந்தமான பெருமளவிலான சொத்துக்கள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன.

சுமார் 15 கோடி ரூபாய் சந்தைப் பெறுமதி கொண்ட இந்த மாபெரும் சொத்துக் குவியல், பொலிஸாரின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நுட்பமான விசாரணைகளின் பின்னரே தற்போது முடக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. அரச அதிகாரிகளையே வியப்பில் ஆழ்த்திய இந்த சொத்து வேட்டையின் பின்னணியில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

சந்தேகநபர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் தந்திரமாக, தனது பெயரில் எவ்வித சொத்துக்களையும் வைத்துக்கொள்ளாமல், அனைத்துச் சொத்துக்களையும் தனது தாயாரின் பெயரிலேயே கொள்வனவு செய்துள்ளார் என்பது பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. தாயின் பெயரைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி, சட்ட விரோதப் பணத்தைச் சட்டப்பூர்வ சொத்துக்களாக மாற்ற முயன்ற விதுரவின் திட்டம் தற்போது தவிடுபொடியாகியுள்ளது.

இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களின் பட்டியலை நோக்கும் போது, ரத்ம – தேவனிஹொட பகுதியில் உள்ள 13.72 பேர்ச்சஸ் நிலத்தில் பிரமாண்டமாக எழுப்பப்பட்டுள்ள சுமார் 600 இலட்சம் (6 கோடி) ரூபாய் பெறுமதியான சொகுசு மூன்று மாடிக் கட்டிடம் இதில் பிரதான இடத்தை வகிக்கின்றது. அத்துடன் நிற்காமல், அதே பகுதியில் அமைந்துள்ள சுமார் 450 இலட்சம் ரூபாய் பெறுமதியான 9.10 பேர்ச்சஸ் நிலமும், அதில் அரைகுறையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள மற்றொரு மூன்று மாடிக் கட்டிடமும் பொலிஸாரால் முடக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக, அதே தேவனிஹொட பகுதியில் 12.33 பேர்ச்சஸ் பரப்பளவைக் கொண்ட சுமார் 250 இலட்சம் ரூபாய் பெறுமதியான மற்றொரு காணியும், சுமார் 200 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிலப்பரப்பும் என மொத்தமாக 1500 இலட்சம் (15 கோடி) ரூபாய் பெறுமதியான அனைத்துச் சொத்துக்களும் தற்போது சட்டத்தின் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பாதாள உலகச் சட்டவிரோத வலையமைப்பை அடியோடு அறுக்க மேற்கொள்ளப்படும் இந்த அதிரடி நடவடிக்கை, குற்றச் செயல்களில் ஈடுபடும் ஏனைய நபர்களுக்கும் ஒரு பலமான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.

டெங்கு தடுப்பூசி தற்போதைய அவசர நோய்த்தொற்றுக்கு உடனடித் தீர்வல்ல!

0
தீயாய் பரவும் டெங்கு அரக்கன்: இலங்கையை உலுக்கும் திடுக்கிடும் புள்ளிவிபரங்கள்!

நாடெங்கிலும் டெங்கு நோயின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்து வரும் சூழலில், மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகின்றது. இந்த நிலையில், தற்போதைய பேரழிவுக்கு டெங்கு தடுப்பூசி ஒரு உடனடித் தீர்வாக அமையாது என விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) வெளியிட்டுள்ள சமீபத்திய உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,125 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால், ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் மட்டுமே 22,749 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நேற்றைய முன் தினம் (21) ஒரே நாளில் 1,097 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் 162 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

டெங்குவின் கொடூர பிடிக்குள் சிக்கி இதுவரை 56 உயிர்கள் பறிபோயுள்ள நிலையில், இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்பதை வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம வெளிப்படுத்தியுள்ளார்.

காய்ச்சல் மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்ட போதிலும், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல் சிகிச்சை பெறுவதில் மக்கள் காட்டும் காலதாமதமே உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டுகிறார். அத்துடன் ஒரே நேரத்தில் பெருமளவிலான நோயாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிப்பால் சுகாதாரக் கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள பெரும் அழுத்தமும் நிலமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

கொசுக்கள் பெருகும் இடங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இந்த கொடூர நோய்த்தொற்று கட்டுக்கடங்காமல் பரவுவதற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட மருத்துவர், கொசு உற்பத்தி மையங்களை அழிப்பதே தற்போதைக்கு நம் முன்னால் இருக்கும் ஒரே முதன்மை பாதுகாப்பு அரண் என்றார்.

டெங்கு தடுப்பூசி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தற்போது பரவி வரும் தீவிர தொற்றை தடுப்பூசியால் உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது. கொசுக்கள் பெருகும் இடங்களை முற்றாக ஒழிப்பது, கொசுக்கடியிலிருந்து தப்பிப்பது மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மருத்துவ சிகிச்சையைப் பெறுவது மட்டுமே மரணங்களைத் தடுப்பதற்கான ஒரே வழி” என வலியுறுத்தினார்.

மே மாதத்தில் 8,590 ஆக இருந்த பாதிப்பு, ஜூன் மாதத்தில் 21,535 ஆக எகிறிய நிலையில், ஜூலையில் நிலமை எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது. எனவே, எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உரிய நேரத்தில் மருத்துவ உதவியைப் பெற்று உயிர் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் மக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.

இலங்கை ஊடகத்துறையில் புதிய அத்தியாயம்: சட்டமூலம் சமர்ப்பிப்பு!

0

இலங்கையின் ஊடகத்துறை வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான வாசலைத் திறந்து வைத்துள்ளது புதிய சட்டமூலம் ஒன்று! நாட்டில் ஊடகவியலின் தொழில்முறைத் தரத்தை உயர்த்தவும், சர்வதேச ரீதியிலான அங்கீகாரத்தைப் பெற்றுத்தரவும் வழியமைக்கும் “இலங்கை சாட்டர்ட் ஊடக நிபுணர்கள் நிறுவனம்” (Chartered Institute of Media Professionals) தொடர்பான சட்டமூலம் அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஊடகத் துறையில் முறையான தொழில்முறைத் தரநிலைகளை அறிமுகப்படுத்துதல், அவற்றை மேம்படுத்துதல் மற்றும் தொடர்ச்சியாகக் கண்காணித்தல் போன்ற சக்திவாய்ந்த அதிகாரங்கள் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளன. வெறும் உள்நாட்டு நடைமுறைகளோடு நின்றுவிடாமல், இதேபோன்ற நோக்கங்களைக் கொண்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்தி, ஒருங்கிணைந்து செயற்படும் வாய்ப்பையும் இந்த நிறுவனம் ஊடகவியலாளர்களுக்குப் பெற்றுத்தரவுள்ளது.

ஊடகவியலாளர்களின் தொழில்முறை ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாப்பது இந்த அமைப்பின் பிரதான இலக்குகளில் ஒன்றாகும். இதற்காகத் தனித்துவமான ‘நடத்தைக்கட்டுப்பாடு’ (Code of Conduct) ஒன்றை உருவாக்கவும், அதன் உறுப்பினர்கள் அதைக் கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதிசெய்யவும் தேவையான முழு அதிகாரமும் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் இலங்கை ஊடகவியலாளர்களின் நம்பகத்தன்மை மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுமட்டுமன்றி, ஊடகத் துறையிலுள்ள நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் வளர்ந்து வரும் ஊடகவியலாளர்களின் திறன்களையும் நடைமுறைப் பயிற்சிகளையும் கூர்மைப்படுத்தும் மையமாக இது இயங்கும். உரிய மதிப்பீடுகளுக்குப் பின்னர் ஊடகவியலாளர்களுக்குச் சான்றளிக்கப்பட்ட அங்கீகாரத்தை வழங்கும் இந்த நிறுவனம், கட்டண அடிப்படையில் சிறப்புப் படிப்புகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும், இலங்கையில் ஊடகத் தொழில்முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு திட்டம் குறித்தும் ஊடகத்துறை அமைச்சருக்கு நேரடியாக ஆலோசனை வழங்கும் அதிமுக்கிய அதிகாரமும் இந்த நிறுவனத்திற்கு அளிக்கப்படவுள்ளது.

இத்தகைய பிரம்மாண்டமான நிறுவனம் எவ்வாறு நிர்வகிக்கப்படப் போகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்! தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சில் மூலமே இது வழிநடத்தப்படும். இருப்பினும், தொடக்கத்தில் ஊடக அமைச்சின் செயலாளர் மற்றும் ஊடகத் துறையில் குறைந்தது 20 ஆண்டுகள் அனுபவமும் புகழும் மிக்க 6 நிபுணர்களைக் கொண்ட ஒரு இடைக்காலச் சபை (Interim Council) அமைக்கப்பட்டு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிறுவனம் கட்டமைப்பு செய்யப்படவுள்ளது.

மாணவர் போராட்டக் களத்தில் குவிந்த எம்பிக்கள்!

0

டெல்லி: கடந்த 20ம் தேதி போலவே, நேற்றிரவும் ஜந்தர் மந்தரிலிருந்து துணை ராணுவத்தினர் மூலம் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், போராட்டக்களத்தில் அரசியல் தலைவர்கள் குவிந்ததால் மத்திய அரசு தனது முடிவிலிருந்து பின்வாங்கிக்கொண்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் கோரிக்கை.

மாணவர்களின் கோரிக்கை

கடந்த ஒரு மாதத்திற்கும் மேல், கரப்பான் ஜனதா கட்சியின் (CJP) சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு ஜூலை 20 வரை கெடு விதித்திருந்தனர். அதற்குள் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். ஆனால், மத்திய அரசு இதை ஏற்கவில்லை. எனவே மாணவர்களும், இளைஞர்களும் டெல்லி நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.

தடியடி, கண்ணீர் புகை குண்டுகள்

போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை அவர்கள் தாண்டியபோது.. கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை போலீசார் கலைக்க முயன்றனர். மீறி முன்னேறியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டன. ஒரு கட்டத்தில் பெல்லட் குண்டுகள் வீசப்பட்டன என்றும், மின் அதிர்ச்சி தடியை பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை 150க்கும் அதிகமான முறை வினாத்தாள்கள் லீக் ஆகியிருக்கின்றன. இதை செய்தவர்கள் நல்லா ஜாலியா இருக்காங்க.. ஆனா, ஏன் வினாத்தாள்கள் லீக் ஆகியது? என்று கேட்ட எங்களுக்கு தடியடியா? என மாணவர்கள் கொந்தளித்தனர்.

இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத துணை ராணுவமும், டெல்லி போலீசும் போராட்டக்காரர்களை ஜந்தர் மந்தர் பகுதிகியில் இருந்து அப்புறப்படுத்தியது. ஆனால், மீண்டும் மாணவர்கள் ஜந்தர் மந்தரில் அதிக அளவில் குவிந்தனர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளின் எம்பிக்கள், எம்எல்ஏக்களும் குவிந்தனர். திமுக எம்பி கனிமொழி, சிபிஎம், சிபிஐ, ஆம் ஆத்மி, சிவசேனா எம்பிக்கள் நேரில் வந்து போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். நடிகர் பிரகாஷ் ராஜ் போன்ற அரசியல் தலைவர்களும் மாணவர் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

மீண்டும் முயற்சி

இருந்தும் கூட, நேற்றிரவு மீண்டும் துணை ராணுவத்தினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். ஆனால், போராட்டக்களத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்களும் இருந்ததால், மத்திய அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டது. வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் முயற்சியை கைவிட்டது என உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியிருக்கிறார்.

போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து பலரும் ஸ்விகி, சொமட்டோ மூலம் உணவை ஆர்டர் செய்து அனுப்பி வைத்து வருகின்றனர். மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்படும் வரை உண்ணாவிரதம் முடியாதது என்று சோனம் வாங்சுக் அறிவித்திருக்கிறார். மத்திய அரசு இது வரை கல்வி அமைச்சரின் ராஜினாமா குறித்து வாய் திறக்கவில்லை.

வாய் திறந்த பிரதமர்

மாறாக, நீட் வினாத்தாள் கசிவு குறித்து விசாரணை நடத்தி.. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் விதமாக விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும். தவறு செய்தவர்கள் தப்பிக்க மாட்டார்கள். மாணவர்களின் நலன்தான் எங்களுக்கு முக்கியம் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் புதிய திருப்பம்: சவுதி-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்!

உலக அரசியலின் பார்வையை மீண்டும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது மத்திய கிழக்கு! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், சவூதி அரேபியாவுடன் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும், பொருளாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அணுசக்திச் சட்டத்தின் பிரிவு 123-ன் கீழ் (Section 123) கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம், பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான, பல தசாப்த கால கூட்டாண்மைக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் சவூதி அரேபியாவிற்கு அணுசக்தி தொழில்நுட்பங்களை வழங்கி அணு உலைகளை அமைக்க உதவும். “அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பங்களிப்புடன், சர்வதேச பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டே இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என அமெரிக்க ஆற்றல் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட் (Chris Wright) தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் வெளிவராத ஒரு விடயம் தான் தற்போது உலக நாடுகளிடையே மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சவூதி அரேபியா தனது சொந்த மண்ணிலேயே யுரேனியத்தைச் செறிவூட்ட (Uranium Enrichment) இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யலாம் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆற்றல் தேவைக்காக யுரேனியத்தைச் செறிவூட்டுவது அணு ஆயுத உற்பத்திப் பாதைக்கு வித்திட்டுவிடுமோ என்ற அச்சத்தால், வாஷிங்டன் காங்கிரஸ் இதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், ஈரானுக்கு எதிரான போரும், பிராந்தியத்தில் நிலவும் கடுமையான மோதல் சூழலும் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னணியில், சவூதி அரேபியாவுக்கு அணுசக்தி கதவுகளை அமெரிக்கா திறந்துவிடுவது மத்திய கிழக்கின் பாதுகாப்புச் சமநிலையை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதை உலக நாடுகள் மிக உற்றுநோக்கி வருகின்றன.

சுகாதார ஊழியர் ஒருவருக்கு மரண தண்டனை தீர்ப்பு!

0

கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு,வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம்  இன்று (22) மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளர் தரப்பினால் சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டானது நியாயமான சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

அதன்படி, ஜனாதிபதியினால் நிர்ணயிக்கப்படும் திகதி மற்றும் நேரத்தில், சிறைச்சாலை ஒன்றிற்குள் பிரதிவாதியின் உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டார். 

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் எப்பாவல பகுதியைச் சேர்ந்த,அரச வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிந்த டபிள்யூ.டி.தேவாநந்த என்ற சுகாதார உதவி ஊழியராவார்.

2014 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி அல்லது அதனையொட்டிய தினத்தில் எப்பாவல, 20 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த பெலிகல என்ற பி.மகிந்த குமார என்பவரை கொலை செய்ததாக, இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 296 ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. 

தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்பக்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைக்காக இவ்வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. 

இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பான சட்டமா அதிபர் சார்பில் அரசு சட்டத்தரணி யோமாலி நாகொட விதான ஆஜரான அதேவேளை, பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம், சேதாப்பொலையில் இடம்பெற்ற வரலாற்று சிறப்பு நிகழ்வு!

0
  • ‘MSC ELSA 3’ கப்பல் விபத்தினால் இலங்கை கடற்பரப்பில் கலந்த பிளாஸ்டிக் கழிவுகளை முழுமையாக அகற்றி மறுசுழற்சி செய்யும் பிரமாண்ட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • புத்தளம், சேதாப்பொலையில் ஒரு வருடமாக சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்காக அகற்றப்படும் சிறப்பு நிகழ்வு சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
  • கப்பல் விபத்தில் வெளியான கழிவுகள் மட்டுமன்றி, யாழ்ப்பாண தீவுகள் முதல் தெற்கு கடற்கரை வரை பல தசாப்தங்களாக சேர்ந்திருந்த கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்பரப்பை உலுக்கிய பாரிய விபத்து: பிளாஸ்டிக் கழிவுகளுக்கு கிடைத்த வரலாற்று முடிவு!

கடல் அலைகளோடு அடித்து வரப்பட்ட கோடிக்கணக்கான பிளாஸ்டிக் துகள்கள்… இலங்கை கடற்பரப்பிற்கு ஏற்பட்ட ஆகப்பாரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலுக்கு இப்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்வு கிடைத்துள்ளது!

லைபீரியக் கொடியுடன் பயணித்த “MSC ELSA 3” சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, இலங்கைக் கடற்கரைகளில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் (Plastic Nurdles) மற்றும் கடல்சார் கழிவுகள் அதிகளவில் குவிந்தன. பேரழிவை ஏற்படுத்திய இந்தச் சூழல் மாசுபாட்டை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA), புத்தளம் – சேதாப்பொல மத்திய களஞ்சியத்தில் ஒரு வருடமாகச் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்காக விடுவிக்கும் விசேட திட்டத்தை இன்று (22) முற்பகல் ஆரம்பித்து வைத்துள்ளது.

சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, நாட்டின் கடல்சார் சூழல் பாதுகாப்பில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது!

ஆனால், இந்த மறுசுழற்சித் திட்டத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மையான பின்னணியும், இலங்கைக்குக் கிடைத்துள்ள மாபெரும் நன்மையும் என்ன தெரியுமா?

அரசிற்கு ஒரு சதம் செலவில்லை: கப்பல் நிறுவனமே ஏற்கும் முழுப் பொறுப்பு!

பொதுவாக இதுபோன்ற சூழலியல் பேரழிவுகளின் போது அரசுக்கே பெருமளவு நிதி இழப்பு ஏற்படும். ஆனால், இங்கு நிலைமையே வேறு! இந்த ஒட்டுமொத்தக் கடற்கரை தூய்மையாக்கல் மற்றும் கழிவு மேலாண்மை செயல்பாட்டிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு சதம் கூட செலவு ஏற்படவில்லை.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் (MEPA) நேரடி வழிகாட்டலின் கீழ், “MSC” கப்பல் நிறுவனத்தின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் இத்திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இன்றைய நிகழ்வில், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பான ஒப்பந்தம் பரிமாறப்பட்டதுடன், MEPA அதிகாரசபைக்கு MSC Lanka (Pvt) Ltd நிறுவனத்தினால் இடைக்கால இழப்பீட்டு காசோலையும் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. MEPA தலைவர் கலாநிதி சமந்த குணசேகர, பொது முகாமையாளர் ஜகத் குணசேகர மற்றும் MSC, Interocean, Colombo Logistics, P&I club ஆகிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.

13 அபாயகரமான இரசாயன கொள்கலன்கள்… கடலுக்குள் கவிழ்ந்த பேரபாயம்!

விபத்துக்குள்ளான சமயத்தில் இந்த கப்பலில் 13 அபாயகரமான இரசாயனக் கொள்கலன்கள், 66 பிளாஸ்டிக் துகள்கள் (Plastic Nurdles) அடங்கிய கொள்கலன்கள் உட்பட மொத்தம் 643 கொள்கலன்களும், சுமார் 452 மெட்ரிக் தொன் எரிபொருளும் இருந்தன!

எண்ணெய் மற்றும் இரசாயனங்கள் கடலில் கசியும் அபாயத்தைக் கட்டுப்படுத்த, தேசிய அவசரகால திட்டத்தின் கீழ் 2025 ஜூன் 12 அன்று விசேட கூட்டங்கள் கூட்டப்பட்டு உடனடி நடவடிக்கைகள் பாய்ந்தன. அடுத்த நாளே, அதாவது 2025 ஜூன் 13 அன்று முப்படையினர் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பங்களிப்புடன் வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்கரை சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

இதில் ஆச்சரியப்பட வைக்கும் இன்னொரு விடயம் என்னவென்றால், ‘MSC ELSA 3’ கப்பலிலிருந்து சிதறிய பிளாஸ்டிக் துகள்கள் மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தின் வடக்குத் தீவுகள், மன்னார், புத்தளம் முதல் நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் வரை பல தசாப்தங்களாகச் சேர்ந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகளும் இத்திட்டத்தின் மூலம் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன!

சேகரிக்கப்படும் கழிவுகள் முதலில் மாவட்ட ரீதியிலான தற்காலிக களஞ்சியங்களில் திரட்டப்பட்டு, பின்னர் புத்தளத்தில் இதற்காகவே விசேடமாக அமைக்கப்பட்ட மத்திய களஞ்சியத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. Interocean மற்றும் Colombo Logistics ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன், MSC நிறுவனத்தின் நிதியுதவியில் இந்த நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இலங்கையின் இயற்கை வளத்தைப் பாதுகாப்பதில் சர்வதேச நிறுவனங்களை முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்து, வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, உலகளவில் சூழல் பாதுகாப்புத் துறையில் இலங்கைக்கு ஒரு புதிய அடையாளத்தைப் பெற்றுத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தம்பியைக் கொன்றுவிட்டு பொலிஸில் சரணடைந்த அண்ணன்!

0

ஆராச்சிக்கட்டுவை: அமைதியாகச் சென்றுகொண்டிருந்த அந்த மதிய வேளையில், ஆராச்சிக்கட்டுவை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த அந்த நபரைப் பார்த்து அங்கிருந்த அதிகாரிகள் நிலைகுலைந்து போயினர். கையில் இரத்தம் சொட்டச் சொட்ட ஒரு கூர்மையான கத்தி, முகத்தில் எந்தவித சலனமும் இல்லாத உறைநிலை… பொலிஸார் சற்றும் எதிர்பாராத அந்த வார்த்தையை அவர் கூறினார் — “நான் என் தம்பியைக் கொன்னுட்டேன்!”

இன்று (22) மதியம் 2.10 மணியளவில் இடம்பெற்ற இந்த அதிரடிச் சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் நொடிப் பொழுதில் செயற்படத் தொடங்கினர். சந்தேகநபரை உடனடியாகக் கைதுசெய்த அதிகாரிகள், அவரை அழைத்துக்கொண்டு அவர் சுட்டிக்காட்டிய வீட்டிற்கு விரைந்தனர்.

ராஜகதளுவை பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டிற்குள் சென்று பார்த்த பொலிஸாருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. அங்குள்ள ஒரு கட்டிலில், உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் துலேன் ஹசங்க என்ற இளைஞன் சடலமாகக் கிடந்துள்ளார். கொலையுண்ட இளைஞன் மனவளர்ச்சி குன்றியவர் என்பது பின்னர்தான் தெரியவந்தது.

அதிர்ச்சியளிக்கும் பின்னணி என்னவென்றால், உயிரிழந்த இளைஞனின் தந்தை ஒரு பாடசாலை ஆசிரியர், தாய் சிலாபம் பொது வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர். பெற்றோர் இருவரும் கடமைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டிலிருந்த மனவளர்ச்சி குன்றிய தம்பியைப் பராமரிக்கும் பொறுப்பு இந்தச் சகோதரனிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அன்போடு பராமரிக்க வேண்டிய கை, தம்பியின் உயிரையே பறிக்கும் கூர்மையான ஆயுதமாக மாறியது ஏன்? குடும்பத் தகராறா அல்லது வேறு ஏதேனும் பின்னணியா?

தற்போது உடலத்தைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், நீதவான் பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதுடன், ஆராச்சிக்கட்டுவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜுட் சமந்த

அரசின் அதிரடித் தடை: எதிர்க்கட்சிகள் அவசர ஆலோசனை!

0

நீதித்துறை தொடர்பான விவாதத்திற்கு அரசாங்கத்தால் தடை. எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவசர கூட்டம்.

கடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய அரச ஆளுகையின் மூன்று முக்கிய தூண்களும் (Tripartite System of Government), அதிகாரத்தை பகிர்வு (Separation of Powers), மற்றும் அதிகாரங்களுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகள் (Checks and Balances) ஆகிய ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் பாராளுமன்ற விவாதத்தை நடத்துமாறு எதிர்க்கட்சி வலியுறுத்திய கோரிக்கைக்கு அரசாங்கத் தரப்பு உடன்பாடு தெரிவிக்கவில்லை.

இதன்பிரகாம், நீதித்துறை தொடர்பான விடயங்களை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்காமை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று (22) பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட அவசரக் கூட்டமொன்று இடம்பெற்றது.

ஜனநாயக ஆட்சிமுறையின் அடிப்படையான சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான அதிகார பகிர்வு மற்றும் அதிகாரங்கள் இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளின் (Checks and Balances) முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் விடயங்கள் வெளிப்படையாக பாராளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் கவனம் செலுத்தப்பட்டன.

நீதித்துறை தொடர்பான விடயங்கள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்த சந்தர்ப்பம் வழங்காமை ஜனநாயக ஆட்சிக் கோட்பாடுகளை பாதிக்கும் விடயம் என இங்கு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இது தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாராளுமன்ற மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இங்கு மேலும் கலந்துரையாடினார்.

இதில், பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி விஜேரத்ன, சித்ரால் பெர்னாண்டோ, வி. இராதாகிருஷ்ணன், சமிந்த விஜேசிறி, கயந்த கருணாதிலக்க, ஜே. சி. அலவத்துவல, சுஜித் சஞ்சய பெரேரா, காவிந்த ஜயவர்தன, சதுர கலப்பத்தி, கபீர் ஹாஷீம், ரவி கருணாநாயக்க, எம். எஸ். ஏ. வாசித், ரோஹண பண்டார, டபிள்யூ. எச். எம். தர்மசேன, பி. ஆரியவங்ச, தயாசிறி ஜயசேகர, அனுராத ஜயரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹகீம், இராமநாதன் அர்ச்சுனா, நிசாம் காரியப்பர், எம். எஸ். உதுமாலெப்பே, சானக மதுகொட, சுரங்க ரத்நாயக்க மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.