நேற்று முழுமையாகத் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, இன்று மீண்டும் மூடப்பட்டுள்ளதாக ஈரானிய கடற்படை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் துறைமுக முற்றுகை தொடர்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த வணிகக் கப்பல்களுக்கு, ஈரானிய கடற்படை வானொலி தகவல் ஊடாக அவசரச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், “ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டுள்ளது, எந்தக் கப்பல்களும் கடந்து செல்ல அனுமதி இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச கப்பல் போக்குவரத்து தகவல் உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரான் தனது வான்பரப்பு மற்றும் நீரிணையைத் திறப்பதாக அறிவித்திருந்த போதிலும், ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையைத் தளர்த்தப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் இந்த ‘கடல்சார் கொள்ளை’ மற்றும் முற்றுகை தொடர்வதால், நீரிணையின் கட்டுப்பாடு மீண்டும் பழைய நிலைக்கு (கடுமையான இராணுவக் கண்காணிப்பு) கொண்டுவரப்படுவதாக ஈரானின் ‘காதம் அல்-அன்பியா’ (Khatam Al-Anbiya) இராணுவக் கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.
இந்தத் திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து, நீரிணையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுமார் 5க்கும் மேற்பட்ட எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் (கிரேக்கம் மற்றும் இந்தியக் கப்பல்கள் உட்பட) தமது பயணத்தை ரத்து செய்துவிட்டுத் திரும்பியுள்ளன.
ஈரானில் 10 நாள் போர்நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும், ஹோர்முஸ் நீரிணை விவகாரம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் பெரும் முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் மிகமுக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை அனைத்த வணிகக் கப்பல்களுக்கு முழுமையாக திறந்துவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்துள்ளது. இது உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான சிக்னலாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா – ஈரான் மத்தியிலான 2ஆம் கட்ட பேச்சுவாத்தைக்கு முன்பு இத்தகைய அறிவிப்பு வெளியானது முதலீட்டு சந்தைக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். லெபனான் நாட்டில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தும் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் முழுமையாக செல்ல அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் வரையில் ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும் என்றும் அப்பாஸ் அராக்சி குறிப்பிட்டார். மேலும், பாதுகாப்பான பயணம் ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பு ஏற்கெனவே அறிவித்த ஒருங்கிணைக்கப்பட்ட பாதையில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார்.
ஈரான் வெளியுறவு அமைச்சரின் அறிவிப்பு வெளியான உடனேயே சர்வதேச எண்ணெய் சந்தையில் இதன் விலை வீழ்ச்சியடைந்தது. கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் (futures market) ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் ஒப்பந்தம் மதிப்பு இந்திய நேரப்படி மாலை 7.45 மணியளவில் 10.80 சதவீதம் குறைந்து 88.66 டாலருக்கு வர்த்தகமானது.
இதுவே அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் 10.88 சதவீதம் குறைந்து 84.03 டாலராக உள்ளது. இன்று காலை முதல் பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்கா மத்தியில் விரைவில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை துவங்கும் என தகவல் வெளியான நிலையில் கச்சா எண்ணெய் விலை சிறிய அளவில் குறைந்து வந்தது. தற்போது ஹார்முஸ் மொத்தமாக திறக்கப்பட்டது மூலம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் சுமார் 9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி உலக எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கிய பாதையாக இருப்பதால், இதில் ஏற்பட்ட முடக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது ஈரான் முழுமையாக திறக்கப்பட்டதாக அறிவித்தது மூலம் விலை குறைய துவங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்திலும் இந்த அறிவிப்பை தெரிவித்தார். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறந்துவிட்டதாகவும், உலகளாவிய சரக்கு கப்பல்கள் பயணிக்க முழுமையாக தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளது என்று அவர் பதிவிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு தலைமையில் நேற்று நடந்த லெபனான் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் மத்தியிலான கூட்டத்தில், 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதை டிரம்ப் லாஸ் வேகாஸ் செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தார். இதை லெபனான் மக்கள் கொண்டாடி தீர்த்தனர். மேலும் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீதான தாக்குதலையும் நிறுத்துவதாக அந்த சந்திப்பில் உத்தரவாதம் கொடுத்துள்ள காரணத்தால் மத்திய கிழக்கில் தற்காலிக அமைதி உருவாக்கியுள்ளது.
இதன் தாக்கமாக, ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றத்தையும் குறைக்கும் முயற்சிகளும், வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. கடந்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், ஈரான் தரப்பு, ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்துவது முக்கிய கோரிக்கையாக முன்வைத்தது. இஸ்ரேல் நேரடியாக லெபனானுடன் அல்லாமல், அந்த நாட்டுக்குள் செயல்படும் ஹெஸ்புல்லா அமைப்புடன் மோதி வருகிறது.
இந்த ஹிஸ்புல்லா அமைப்பு ஈறானுக்கு ஆதரவாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்துவதை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.
ஆனால் இஸ்ரேல் தனது படைகளை லெபனானில் இருந்து திரும்பப் பெறப்படமாட்டாது என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொத்தத்தில், இந்த தற்காலிக போர்நிறுத்தம் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நிலைமை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்பதே உண்மை. மேலும் ஈரானும் லெபனான் மீதான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ள இந்த 10 நாட்களுக்கு மட்டுமே ஹார்முஸ் திறக்கப்படும் என தெளிவாக தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் வழித்தடம் ஏன் முக்கியம்
உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 – 25 சதவீதம் வரையிலும், இயற்கை எரிவாயுவில் (LNG) சுமார் 25 சதவீத பங்கும் இந்த குறுகிய நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. ஹார்முஸ் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருட்கள் பெரும்பாலும் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுக்கே அதிகளவில் சென்றடைகின்றன.
ஹார்முஸ் நீரிணை வழியாக எரிபொருள் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளின் பட்டியல்: சவுதி அரேபியா தனது மொத்த ஏற்றுமதியில் சுமார் சுமார் 37.2% ஹார்முஸ் நீரிணை வாயிலாக ஏற்றுமதி செய்கிறது. ஈராக் – சுமார் 22.8% ஏற்றுமதி செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சுமார் 12.9%, ஈரான் சுமார் 10.6%, குவைத் 10.1%, உலகின் முக்கிய LNG ஏற்றுமதியாளரான கத்தார் முழுமையாக இந்த பாதையை நம்பியிருக்கிறது. பஹ்ரைன் பெட்ரோலிய மற்றும் ரசாயன ஏற்றுமதிக்கு இந்த வழியைப் பயன்படுத்துகிறது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையிலும், நியாயமாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த, தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அருட்தந்தை ரொஹான் டி சில்வா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள சமூக மற்றும் சமய மையத்தினால் (CSR) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ‘நினைவு, வலி மற்றும் நம்பிக்கை: 7 ஆண்டுகளின் பின்னர் நீதியைத் தேடி’ எனும் தலைப்பில் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய அருட்தந்தை ரொஹான் டி சில்வா, விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து கருத்துத் தெரிவித்தார்.
அவர் தனது உரையில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்:
சாதகமான நகர்வு: நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு, தற்போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஒரு நம்பிக்கையூட்டும் திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.
பதவி நீக்கம் ஏன்?: தாக்குதல்கள் நடைபெற்ற காலகட்டத்தில், சர்ச்சைக்குரிய சாய்ந்தமருது சம்பவங்கள் இடம்பெற்ற போது, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக அருண ஜயசேகர கடமையாற்றியிருந்தார்.
சுயாதீன விசாரணை: தற்போது அவர் பாதுகாப்பு பிரதி அமைச்சராகப் பதவி வகிப்பது, விசாரணைகளின் வெளிப்படைத்தன்மையைப் பாதிக்கக்கூடும். எனவே, விசாரணைகள் முழுமையாக நிறைவடையும் வரை அவரை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்.
நீதி வேண்டிய போராட்டம்
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், விசாரணைகளைத் தடுக்கும் அல்லது செல்வாக்கு செலுத்தும் நிலையில் எவரும் இருக்கக் கூடாது. இதற்கான தகுந்த சூழலை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என அருட்தந்தை மேலும் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் தாக்குதல் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கத்தோலிக்க திருச்சபை மற்றும் சிவில் அமைப்புகள் தொடர்ந்து நீதிக்காகக் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனமடுவ பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் ஏப்ரல் 17ஆம் தேதி காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் ஆனமடுவ, பரமாகந்தகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ரன்கொத்பேடி துரயலாகே தினேஷ் மங்கள அமரதாச என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பரமாகந்த மலையின் பின்புற பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் தாம் கட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகவும், ஏப்ரல் 17 அன்று காலை 7.30 மணியளவில் அங்கு சென்று பார்த்தபோது, அத்துப்பாக்கி வெடித்ததில் தினேஷ் என்பவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டதாகவும் சந்தேகநபர் ஒருவரே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டனர். இருப்பினும், உயிரிழந்த நபர் எதற்காக அந்த காட்டுப் பகுதிக்குச் சென்றார் என்பது குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பரமாகந்தகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக சட்ட நடவடிக்கைகளை ஆனைமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அனுப்பிய கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
“நிலக்கரி விநியோகம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க எடுத்த தீர்மானத்தையும், 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலாளர் ஊடாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தமையையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன். இதன் மூலம் ஊழலுக்கு எதிராகவும், மக்கள் ஆணையை நிறைவேற்றுவதிலும் உங்களுக்கு இருக்கும் துணிச்சலான உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது.
எவ்வாறாயினும், இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணை நடவடிக்கைகள் மிகவும் சுதந்திரமாகவும், எந்தவொரு பக்கச்சார்பின்றியும் முன்னெடுக்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். இந்த விசாரணைகள் இடம்பெறும் காலப்பகுதியில் நான் இப்பதவியில் நீடிப்பது அதற்கு ஒரு தடையாக அமையக்கூடும் என்ற நிலப்பாட்டில் இருந்து, 17.04.2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிசக்தி அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளேன்.
இந்த விசாரணை நிறைவடைந்து உண்மை மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படும் வரை நான் இத்தீர்மானத்தில் உறுதியாக இருப்பேன். அத்துடன், இந்த விசாரணைகளின் மூலம் கிடைக்கப்பெறும் எந்தவொரு முடிவையும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன். தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக நீங்களும் அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும்.”
நிக்கவரட்டிய: புதுவருட விடுமுறையைக் கழிக்கவும், உறவினர்களைச் சந்திக்கவும் மகிழ்ச்சியுடன் சென்ற ஒரு பயணக் குழுவிற்கு, தெதுறு ஓயா மரணப் பொறையாக மாறியுள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் இலங்கையைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொழும்பு, கடவத்தை பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர், நிக்கவரட்டிய – கொபெய்கனே பகுதியில் உள்ள தங்களது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு உறவினர்களைச் சந்தித்த மகிழ்ச்சியில், அனைவரும் இணைந்து அப்பகுதியில் உள்ள தெதுறு ஓயாவில் நீராட முடிவு செய்துள்ளனர்.
நேற்று (16) மாலை, கடவத்தை மற்றும் கொபெய்கனே ஆகிய இரண்டு குடும்பங்களையும் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் உற்சாகமாக ஆற்றில் இறங்கியுள்ளனர். ஆனால், அந்த மகிழ்ச்சி சில நிமிடங்களிலேயே மரண ஓலமாக மாறியுள்ளது.
நீரில் மூழ்கிய 10 பேர்
ஆற்றின் ஆழமான பகுதி மற்றும் நீரோட்டத்தின் வேகம் தெரியாமல் நீராடியபோது, எதிர்பாராத விதமாக 10 பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகினர். அருகில் இருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றபோதிலும், 6 பேர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இருவர் உயிருடன் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
நேற்று மாலையே இருவர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
சோகத்தில் முடிந்த தேடுதல் வேட்டை
காணாமல் போன ஏனைய 6 பேரைத் தேடும் பணிகள் பொலிஸாரால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. இன்று (17) காலை மீட்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் மேலும் 4 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தீவிரமாகத் தேடப்பட்டு வந்த எஞ்சிய இருவரின் சடலங்களும் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே இடத்தைச் சேர்ந்த மற்றும் உறவினர்களான 8 பேர் உயிரிழந்துள்ள செய்தி கடவத்தை மற்றும் கொபெய்கனே பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு ஆற்றுக்குச் சென்றவர்கள் பிணமாகத் திரும்புவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை” என உறவினர்கள் கதறி அழுவது பார்ப்போர் நெஞ்சைப் பதற வைக்கிறது.
எச்சரிக்கை
அண்மைக்காலமாக ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீராடச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நீர்நிலைகளின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் தன்மையை அறியாமல் இறங்குவது இத்தகைய பாரிய உயிரிழப்புகளுக்குக் காரணமாகிறது எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
தெதுறு ஓயா இன்று 8 உயிர்களைப் பறித்த ஒரு துயர இடமாக மாறி நிற்கிறது. கடவத்தை மற்றும் கொபெய்கனே கிராமங்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளன.
நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் இவர்கள் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.
நிலக்கரி இறக்குமதி மற்றும் அது சார்ந்த மின்சார உற்பத்தியின் போது ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று (17) விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையிலும் சுதந்திரமாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இவர்கள் பதவிலகியுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாரச்சி கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து இரண்டு T-56 ரக தோட்டாக்களுக்கான மெகசின்கள், 221 தோட்டாக்கள், ஒரு கைக்குண்டு, 7.2 வகை தோட்டாக்கள் 31, 0.2 வகை தோட்டாக்கள் 103 ஆகியன இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கைக்குண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.
முன்னாள் பாரதளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாரச்சி ஆயுதங்கள் வைத்திருப்பதாக கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவானது, கெஸ்பேவ நீதவானுக்கு தெரிவித்ததை அடுத்து நீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் அடிப்படையில், பிலியந்தலவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (16) காலை சோதனை நடத்தப்பட்டபோது இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிலியந்தல, மாம்பேவில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பொலிஸார் சோதனை நடத்தியதாகவும், சட்டவிரோதமாக கைவசம் இருந்த ஆயுதங்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
சந்தன கத்ரியாரச்சியின் இல்லத்தில் மேலும் சோதனைகளை நடத்தியதில், பதிவு செய்யப்பட்ட 4 துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இரண்டு ஷொட்-கன்களும் இரண்டு 9 மி.மீ. துப்பாக்கிகளுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிகளில் ஒன்று சந்தனா கத்ரியாரச்சியின் பெயரிலும், ஏனைய 3 துப்பாக்கிகளும் சந்தனா கத்ரியாரச்சியின் மனைவியின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அதற்கமைய, சந்தன கத்ரியாரச்சி இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கான காரணத்தைக் கண்டறிய, கொழும்பு குற்றவியல் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் தனியான விசாரணையை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரான நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையின் கீழ், கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
விஜய குமாரதுங்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை மக்கள் கட்சியின் மூலம் அரசியலில் நுழைந்த சந்தன கத்ரியாரச்சி, பின்னர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கெஸ்பேவ தேர்தல் அமைப்பாளராகவும் பிரதி அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து: தம்பதியினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
கிளிநொச்சி – முறிகண்டி பகுதியில் இன்று (16) சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து ஒன்று அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் இருவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள புகையிரதப் பாதையை கார் ஒன்று கடக்க முற்பட்ட வேளையில், அதே திசையில் வந்துகொண்டிருந்த புகையிரதத்துடன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது காரில் பயணித்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருமே காயங்களுக்குள்ளாகினர்.
விபத்து இடம்பெற்ற உடனேயே அப்பகுதி மக்கள் மற்றும் அவசர உதவிப் பிரிவினர் இணைந்து காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அப்பகுதிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்து வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தொகுதி மறுசீரமைப்பால், சொந்த நாட்டுக்குள்ளேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்படும் ஒரு கொடுமையை அனுமதிக்கலாமா? எனவும், டெல்லி அடங்கும்வரை நாம் அடிக்க வேண்டும்! நாம் அடிக்கும் அடியில் திமிரெடுத்த பா.ஜ.க. அடங்கியே ஆக வேண்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
தருமபுரியில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,” நம்முடைய திராவிட மாடலில், இந்தியாவுக்கே வழிகாட்டும் ரோட்டை நாம் போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தப் பாதையில், முன்னோக்கிப் போகலாம் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் அழைக்கிறோம். இது, பாஜகவுக்குப் பிடிக்கவில்லை!
ஏனென்றால், இந்தியா வளர்ந்துவிட்டால், ஆர்.எஸ்.எஸ். உருவாக்க நினைக்கும் 200 ஆண்டுகாலப் பிற்போக்குச் சமூகத்தை உருவாக்க முடியாது! அந்தச் சமுதாயம் வந்தால்தான், மக்களை மயக்கி, உழைப்பைச் சுரண்டி ஒரு சிலர் மட்டும் வளமாக வாழலாம்.
ஆனால், நம்முடைய திராவிட மாடலில் வளர்ச்சி என்பது, எல்லோருக்குமானது! யாரோ ஒரு சிலர் மட்டும் வளர்ந்தால், அது பிசினஸ்! எல்லோரும் வளர வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று உழைப்பதுதான், திராவிட மாடலின் சக்சஸ்! அதனால்தான், தமிழ்நாடு முழுவதும் பரவலான வளர்ச்சியைக் கொண்டு போகிறோம். தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கிறது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
தொகுதி மறுசீரமைப்பு! அதாவது, இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த நாட்டில் பசியும் – வறுமையும் அதிகமாக இருக்கிறது. இதைச் சரி செய்ய வேண்டும் என்றால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, நம்முடைய தமிழ்நாட்டிலும் – இன்னும் பல மாநிலங்களிலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாகச் செயல்படுத்தினோம். இப்போது என்னவென்றால், உங்கள் மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ற மாதிரி, தொகுதி மறுசீரமைப்புச் செய்யப் போகிறோம், உங்களுக்குக் கூடுதலாக எம்.பி. சீட் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
தமிழ்நாடு அரசியல்
உண்மை என்னவென்றால், இதே காலகட்டத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் சில மாநிலங்களுக்குத்தான், விகிதாச்சாரப்படி அதிக இடம் கிடைக்கப் போகிறது! இதனால், நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல் வலுவிழந்து போய்விடும். நம்முடைய எம்.பி.க்களுக்குப் பவர் இல்லை என்றால், டெல்லி அதிகார வர்க்கம் தமிழ்நாட்டைப் பற்றிச் சிந்திக்குமா? நமக்கு எந்தத் திட்டமாவது கிடைக்குமா? தென்னிந்தியாவிலிருந்து பிரதமர் உருவாக வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவே முடியாது. சொந்த நாட்டுக்குள்ளேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்படும் ஒரு கொடுமையை அனுமதிக்கலாமா?
திமுக கருப்புக்கொடி போராட்டம்
இந்த ஆபத்துதான், தொகுதி மறுசீரமைப்பு! இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றுதான் நாளைக்குத் தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப் போகிறோம். எல்லோரும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, டெல்லியின் ஆணவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தயாராகிவிட்டீர்களா? உங்கள் வீட்டு வாசலில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முழக்கமிடத் தயாரா? தமிழ்நாட்டில் நாம் இந்தப் போராட்டத்தை நாளை நடத்தும்போது டெல்லியில் நம்முடைய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டிருப்பார்கள்!
உரிமைக்குரல் தேர்தல்
வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து எம்.பி.க்களும் தொகுதியில் ஆங்காங்கே இருந்தார்கள். அனைவரும் சென்றுவிட்டார்கள். மணி மட்டும்தான் இருக்கிறார். அவரும் நாளை காலை சென்றுவிடுவார். ஒருவர்கூட இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டேன். தேர்தல் எல்லாம் அதற்குப்பிறகுதான், இதுதான் நமக்கு முக்கியம். இதுதான் நமக்கு சுயமரியாதை. நாளைக்கு நாம் குரல் எழுப்பத் தவறிவிட்டால், நம்முடைய குரலுக்கு எப்பொழுதுமே மதிப்பு இருக்காது! இந்தப் போராட்டத்தில் வெல்லும் வரை நம்முடைய உரிமைக்குரல் அடங்கக் கூடாது!
திமிரெடுத்த பா.ஜ.க
டெல்லி அடங்கும்வரை நாம் அடிக்க வேண்டும்! நாம் அடிக்கும் அடியில் திமிரெடுத்த பா.ஜ.க. அடங்கியே ஆக வேண்டும்! பழனிசாமி அவர்களே… இது தமிழ்நாட்டுக்கான போர்! இதிலாவது கொஞ்சம் சுயமரியாதையோடு நடந்து கொள்ளுங்கள்!அடிமையாகவும், துரோகியாகவும் இருப்பது பழனிசாமிக்கு மட்டும் பழக்கமில்லை; அவரோடு வருகிறவர்களின் இலட்சணத்தையும் பாருங்கள்… துரோகிகளின் மொத்தக் கூடாரமாக உருவாகியிருப்பது N.D.A.” என்றார்.