Wednesday, July 29, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 5

தம்பியைக் கொன்றுவிட்டு பொலிஸில் சரணடைந்த அண்ணன்!

0

ஆராச்சிக்கட்டுவை: அமைதியாகச் சென்றுகொண்டிருந்த அந்த மதிய வேளையில், ஆராச்சிக்கட்டுவை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த அந்த நபரைப் பார்த்து அங்கிருந்த அதிகாரிகள் நிலைகுலைந்து போயினர். கையில் இரத்தம் சொட்டச் சொட்ட ஒரு கூர்மையான கத்தி, முகத்தில் எந்தவித சலனமும் இல்லாத உறைநிலை… பொலிஸார் சற்றும் எதிர்பாராத அந்த வார்த்தையை அவர் கூறினார் — “நான் என் தம்பியைக் கொன்னுட்டேன்!”

இன்று (22) மதியம் 2.10 மணியளவில் இடம்பெற்ற இந்த அதிரடிச் சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் நொடிப் பொழுதில் செயற்படத் தொடங்கினர். சந்தேகநபரை உடனடியாகக் கைதுசெய்த அதிகாரிகள், அவரை அழைத்துக்கொண்டு அவர் சுட்டிக்காட்டிய வீட்டிற்கு விரைந்தனர்.

ராஜகதளுவை பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டிற்குள் சென்று பார்த்த பொலிஸாருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. அங்குள்ள ஒரு கட்டிலில், உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் துலேன் ஹசங்க என்ற இளைஞன் சடலமாகக் கிடந்துள்ளார். கொலையுண்ட இளைஞன் மனவளர்ச்சி குன்றியவர் என்பது பின்னர்தான் தெரியவந்தது.

அதிர்ச்சியளிக்கும் பின்னணி என்னவென்றால், உயிரிழந்த இளைஞனின் தந்தை ஒரு பாடசாலை ஆசிரியர், தாய் சிலாபம் பொது வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர். பெற்றோர் இருவரும் கடமைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டிலிருந்த மனவளர்ச்சி குன்றிய தம்பியைப் பராமரிக்கும் பொறுப்பு இந்தச் சகோதரனிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அன்போடு பராமரிக்க வேண்டிய கை, தம்பியின் உயிரையே பறிக்கும் கூர்மையான ஆயுதமாக மாறியது ஏன்? குடும்பத் தகராறா அல்லது வேறு ஏதேனும் பின்னணியா?

தற்போது உடலத்தைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், நீதவான் பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதுடன், ஆராச்சிக்கட்டுவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜுட் சமந்த

அரசின் அதிரடித் தடை: எதிர்க்கட்சிகள் அவசர ஆலோசனை!

0

நீதித்துறை தொடர்பான விவாதத்திற்கு அரசாங்கத்தால் தடை. எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவசர கூட்டம்.

கடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய அரச ஆளுகையின் மூன்று முக்கிய தூண்களும் (Tripartite System of Government), அதிகாரத்தை பகிர்வு (Separation of Powers), மற்றும் அதிகாரங்களுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகள் (Checks and Balances) ஆகிய ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் பாராளுமன்ற விவாதத்தை நடத்துமாறு எதிர்க்கட்சி வலியுறுத்திய கோரிக்கைக்கு அரசாங்கத் தரப்பு உடன்பாடு தெரிவிக்கவில்லை.

இதன்பிரகாம், நீதித்துறை தொடர்பான விடயங்களை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்காமை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று (22) பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட அவசரக் கூட்டமொன்று இடம்பெற்றது.

ஜனநாயக ஆட்சிமுறையின் அடிப்படையான சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான அதிகார பகிர்வு மற்றும் அதிகாரங்கள் இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளின் (Checks and Balances) முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் விடயங்கள் வெளிப்படையாக பாராளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் கவனம் செலுத்தப்பட்டன.

நீதித்துறை தொடர்பான விடயங்கள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்த சந்தர்ப்பம் வழங்காமை ஜனநாயக ஆட்சிக் கோட்பாடுகளை பாதிக்கும் விடயம் என இங்கு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இது தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாராளுமன்ற மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இங்கு மேலும் கலந்துரையாடினார்.

இதில், பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி விஜேரத்ன, சித்ரால் பெர்னாண்டோ, வி. இராதாகிருஷ்ணன், சமிந்த விஜேசிறி, கயந்த கருணாதிலக்க, ஜே. சி. அலவத்துவல, சுஜித் சஞ்சய பெரேரா, காவிந்த ஜயவர்தன, சதுர கலப்பத்தி, கபீர் ஹாஷீம், ரவி கருணாநாயக்க, எம். எஸ். ஏ. வாசித், ரோஹண பண்டார, டபிள்யூ. எச். எம். தர்மசேன, பி. ஆரியவங்ச, தயாசிறி ஜயசேகர, அனுராத ஜயரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹகீம், இராமநாதன் அர்ச்சுனா, நிசாம் காரியப்பர், எம். எஸ். உதுமாலெப்பே, சானக மதுகொட, சுரங்க ரத்நாயக்க மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மோகினி நீர்வீழ்ச்சி அருகே கொடூர விபத்து: இருவர் பலி!

0

நல்லதன்னிய: நல்லதன்னியிலிருந்து மஸ்கெலியா நோக்கி இன்று (22) காலை 7.30 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த த்ரீவீலர் ஒன்று, நல்லதன்னியா மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகில் வீதியை விட்டு விலகி, சுமார் 10 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுக் கவிழ்ந்தது.

வளைவுகள் நிறைந்த அந்த ஆபத்தான பாதையில் எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தின் வேகம், த்ரீவீலரில் பயணித்தவர்களின் உயிரையே பறிக்கும் அளவுக்குக் கொடூரமாக அமைந்தது.

இந்த கோரச் சம்பவத்தில் நல்லதன்னியா, முல்கம கீழ் பிரிவைச் சேர்ந்த 46 வயதான கந்தசாமி செல்வம் மற்றும் 26 வயதான இராமலிங்கம் திவாகர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேவேளை, த்ரீவீலரில் பயணித்த மேலும் மூவர் படுகாயமடைந்தனர். இதில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த இரு சிறுவர்களும் அடங்குவது அதிர்ச்சியையும் வேதனையையும் இரட்டிப்பாக்கியுள்ளது.

விபத்து நடந்தவுடனேயே ஓடிவந்த பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர்களின் நிலைமையைக் கருத்திற் கொண்டு மேல் சிகிச்சைக்காக அவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அவசரமாக மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்துக்கான பின்னணி என்ன, வாகனக் கோளாறா அல்லது வீதியின் வழுக்கும் தன்மையா என்பது குறித்து நல்லதன்னிய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

240 பில்லியன் போதைப்பொருள் பணத்தில் பிரம்மாண்ட மோசடி!

0

கொழும்பு: நாட்டின் நிதி அமைப்பையே உலுக்கும் வகையிலான மிகப்பெரிய நிதி முறைகேடு மற்றும் கறுப்புப் பண சுத்திகரிப்புச் சம்பவம் ஒன்று தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழு (CoPF) முன்னிலையில் அம்பலமாகியுள்ளன.

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரதூரமான குற்றச்செயல்கள் மூலம் உழைக்கப்பட்ட சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை ரூபாவில் சுமார் 240 பில்லியன்) நிதியானது, போலி இறக்குமதி ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் நேற்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பொருட்கள் இறக்குமதிக்கான முன்பணம் என்ற பெயரில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வரை நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார். பொருட்கள் எதுவும் நாட்டிற்கு வந்து சேராத நிலையில், தந்திப் பரிமாற்றங்கள் (TT) மூலமாகவே இந்த பிரம்மாண்டத் தொகை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த வெளிப்படுத்தலைத் தொடர்ந்து, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளில் இறங்கினர். இதன் தொடர்ச்சியாக, மத்திய வங்கி மற்றும் சுங்கத் திணைக்கள அதிகாரிகளை அழைத்து அரச நிதி பற்றிய குழு (CoPF) நடத்திய விசாரணையின் போதே, இந்த சட்டவிரோதப் பரிமாற்றங்கள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் உறுதி செய்யப்பட்டன.

இந்த நிதி முறைகேட்டின் பின்னணியை ஆராய்ந்த போது, நாட்டின் வங்கிக் கட்டமைப்பு, சுங்கத் திணைக்களம் மற்றும் நிதி அமைச்சின் இறக்குமதி – ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் ஆகியவற்றின் செயல்பாடுகளிடையே நிலவிய பாரிய கண்காணிப்புக் குறைபாடுகளே இத்தகைய மோசடிக்காரர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்து வெளியிட்ட அரச நிதி பற்றிய குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அரச மற்றும் தனியார் வங்கிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு நிதி அனுப்பப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், நேர்மையான இறக்குமதியாளர்களுக்கு தேவையற்ற சுமையையோ அல்லது புதிய சட்டக் கட்டுப்பாடுகளையோ விதிக்காமல், நடைமுறையிலுள்ள சட்டங்களை வலுப்படுத்தி இவ்வாறான மோசடிக்காரர்களைக் சட்டத்தின் முன் நிறுத்துவதே தங்களின் முதன்மை நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான புலனாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க இரு மாத கால அவகாசத்துடன் பல்துறை முகமைகளைக் கொண்ட விசேட குழுவொன்றை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

14 வருட பதவியை தூக்கிப் எறிந்த ஓமல்பே சோபித தேரர்!

0

தென் மாகாணம்: அதிகாரத்தையும் பதவிகளையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்க நினைக்கும் தற்போதைய சூழலில், மதத் தலைவரொருவர் எடுத்த அதிரடித் தீர்மானம் ஒன்று நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் தென் மாகாண பிரதம சங்கநாயக பதவியிலிருந்து பூஜ்ய கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார். கடந்த 14 வருடங்களாக இந்தப் பொறுப்பை வகித்து வந்த நிலையிலேயே, அவர் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளார்.

கடந்த ஜூலை 11 ஆம் திகதி சிறிமங்கல பிரிவேனா விகாரையில் நடைபெற்ற தென் மாகாண மகா சங்க சபையின் விசேட கூட்டத்தின் போதே, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணம் தான் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

தலைமைத்துவப் பதவிகள் என்பது ஆயுட்காலம் முழுமைக்கும் அனுபவிப்பதற்கான ஒன்று அல்ல எனக் குறிப்பிட்ட தேரர், இளம் பிக்குகள் பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், சங்கநாயக பதவிகள் என்பது முதிய வயதில் வழங்கப்படும் கௌரவப் பட்டங்களாகக் கருதப்படக் கூடாது என்றும், சாசனத்தின் வளர்ச்சிக்குச் சுறுசுறுப்பாகப் பங்காற்றக் கூடிய திறமையாளர்களுக்கே அவை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் தென் மாகாண சங்க சபையால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட இவர், தான் விலகுவதற்கு முன்னர் ஒரு முன்மாதிரியான காரியத்தையும் செய்துள்ளார். தனது வழிகாட்டலின் கீழ் இயங்கி வந்த 14 விகாரைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பொறுப்புகளைத் தனது சீடர்களிடமும் ஏனைய பிக்குகளிடமும் முழுமையாக ஒப்படைத்த பின்னரே அவர் தனது பதவியைத் துறந்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகைகளுக்கு வந்த சோதனை! பிரதமர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

0

கொழும்பு: அரச சொத்துக்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளின் பராமரிப்புச் செலவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 22) வெளியாக்கப்பட்ட தகவல், பொதுமக்கள் மற்றும் அரசியல் தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, இதுவரை பராமரிப்பிலேயே முடங்கிக் கிடந்த ஜனாதிபதி மாளிகைகள் இனி எவ்வாறு பயன்படுத்தப்படவுள்ளன என்பது குறித்த முக்கிய திட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் உள்ள சில ஜனாதிபதி மாளிகைகள் ஏற்கனவே நீதிமன்றங்களாக மாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளதுடன், எஞ்சியுள்ள மாளிகைகளை நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கும் திட்டங்களுக்குப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இம்மாளிகைகளுக்காகச் செலவிடப்பட்ட பிரம்மாண்டத் தொகை குறித்த விவரம் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், நாட்டின் 8 ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்காக அரசாங்கம் 13.9 மில்லியன் ரூபாவை (1.39 கோடி) செலவிட்டுள்ளதாகப் பிரதமர் உறுதிப்படுத்தினார்.

இவ்வளவு பெரிய தொகையை பராமரிப்புக்காக மட்டுமே செலவிடுவது குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், “இந்த மாளிகைகள் பொருளாதார ரீதியில் பயன்படும் திட்டங்களாக முழுமையாக மாற்றப்படும் வரை, அவற்றைப் பாழடைய விடாமல் பராமரிக்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு உள்ளது” எனத் தெளிவுபடுத்தினார்.

விரைவில் இம்மாளிகைகள் நாட்டின் வருமானத்தை உயர்த்தும் புதிய திட்டங்களாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வண்டியின் விலையை விட டெக்ஸ் அதிகம்! ஹாபரில் துருப்பிடிக்கும் 1,000 கார்கள்!

0
  • துறைமுகத்தில் முடங்கிய 1,000 சொகுசு வாகனங்கள்:
  • 40,000 வாகனங்கள் தேக்கம்:
  • காருக்கு 2 கோடி… கட்டணம் 5 கோடி!:
  • உண்மையான விலையை விட 3 மடங்கு அதிகம்:
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நடப்பது என்ன?

உங்களின் கனவு காரின் உண்மையான விலை 2 கோடி ரூபா. ஆனால், அதனைத் துறைமுகத்தில் இருந்து வெளியில் எடுக்க வேண்டும் என்றால் 5 கோடி ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இவ்வாறானதொரு நம்பமுடியாத அதிர்ச்சிச் சம்பவம்தான் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அரங்கேறியுள்ளது!

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 1,000 சொகுசு மோட்டார் வாகனங்களை இறக்குமதியாளர்கள் விடுவித்துக்கொள்ளாமல் அப்படியே கைவிட்டுள்ளதால், அவை துறைமுக வளாகத்திலேயே துருப்பிடித்து நாசமடைந்து வருவதாக இலங்கை சுங்கத் திணைக்கள வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

40,000 வாகனங்கள் தேங்கிக் கிடப்பது ஏன்?

தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏறத்தாழ 40,000 மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் மறு ஏற்றுமதி செய்யப்பட வேண்டியவை. உலகளவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலைமைகள் காரணமாக துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு இவற்றை ஏற்றிச் செல்ல வேண்டிய கப்பல்களால் பயணிக்க முடியாமல் போனதால் இவை அம்பாந்தோட்டையில் இறக்கி வைக்கப்பட்டன.

ஆனால், இவ்வாறு தற்காலிகமாக இறக்கப்பட்ட வாகனங்களுக்கும் தங்குமிடக் கட்டணம் பூதாகரமாக உருவெடுத்துள்ளதால், வாகன உரிமையாளர்கள் பெரும் தலையிடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

“6 வருடங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு காரை விடுவிக்கச் சென்ற உரிமையாளருக்கு, 5 கோடி ரூபாவை தங்கிடக் கட்டணமாகச் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது! இதனால் காரின் மொத்த விலை 7 கோடி ரூபாவாக, அதாவது அதன் உண்மையான பெறுமதியை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது.”

இந்த அதிரடிக் கட்டண விபரத்தைக் கேட்டறிந்த இறக்குமதியாளர் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். காரை மீட்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் அதிர்ச்சியையடுத்து, அவர் சுங்கத் திணைக்களத்திற்கு நிலைமையை விளக்கிக் கூறியதுடன், காரை மீட்கும் எண்ணத்தையே முற்றாகக் கைவிட்டுவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளார்.

சீன நிறுவனத்தின் கட்டுப்பாடும் உருவான நெருக்கடியும்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாகப் பொறுப்பு சீன நிறுவனமொன்றின் கீழ் கையளிக்கப்பட்டதன் பின்னரே இத்தகைய அநியாயமான தங்கிடக் கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலை உருவானதாக சுங்க அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வணிக நோக்கில் விதிக்கப்படும் இந்த அதீதக் கட்டணங்களால், பல கோடி பெறுமதியான வாகனங்கள் துறைமுகத்திலேயே முடங்கி, இலங்கையின் பொருளாதாரத்திற்கும் இறக்குமதியாளர்களுக்கும் பாரிய இழப்பை ஏற்படுத்தி வருகின்ற பேரதிர்ச்சி செய்தி வாகன பிரியர்களுக்கு பெரும் இடியாக விழுந்துள்ளது.

முரண்பாடுகளின் உச்சம்! கால்பந்துத் தொடர் உலகிற்குச் சொன்ன பாடம் என்ன?

  • ட்ரம்பின் அரசியல் சர்ச்சை: வெற்றி கிண்ணத்தை வழங்கும் மேடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடந்துகொண்ட விதம் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
  • மக்களின் பஸாட்டை முடக்கிய கட்டணங்கள்: சாதாரண உழைக்கும் வர்க்க ரசிகர்கள் போட்டிகளைக் காண முடியாத அளவுக்கு நுழைவுச்சீட்டுகளின் விலைகள் விண்ணைத் தொட்டன.
  • அரசியல் களமாக மாறிய மைதானங்கள்: விசா மறுப்புகள், ஈரானிய அணி மீதான தடைகள் மற்றும் பாலஸ்தீனக் கொடிகளின் அலை என விளையாட்டுத் தொடர் அரசியல் உச்சகட்டமாக மாறியது.

பிரான்ஸை அரையிறுதியிலும், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை இறுதிப் போட்டியிலும் வீழ்த்தி ஸ்பெயின் அணி உலகக் கிண்ணத்தை வென்ற அந்த வரலாற்று தருணத்தை உலகம் முழுதும் இருந்த கோடி கணக்கான ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். ஸ்பெயின் அணித் தலைவர் ரொட்ரி தங்கக் கோப்பையை உயர்த்தக் காத்திருந்த வேளையில், மேடையில் நகராமல் நின்றுகொண்டிருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

இறுதியில் பீபாத் (FIFA) தலைவர் ஜியான்னி இன்ஃபாண்டினோ தலையிட்டு டிரம்பை சற்று தள்ளி நகர்த்திய பிறகே, ஸ்பெயின் அணித் தலைவரால் அந்த வெற்றிக் கோப்பையைக் கைகளில் ஏந்த முடிந்தது. இராணுவச் செலவினங்கள் மற்றும் ஈரான் உடனான போர் எதிர்ப்பைக் காரணம் காட்டி ஸ்பெயினுடனான வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்திய பின்னணியில், இந்த மேடைச் சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

களத்தில் விளையாட்டு… பின்னணியில் அரசியல் கூத்து!

இந்த 2026 உலகக் கிண்ணத் தொடர் வெறும் கால்பந்து போட்டியாக மட்டும் அமையவில்லை; அது உலக அரசியலின் பிளவுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

  • சோமாலியா நடுவருக்கு விசா மறுக்கப்பட்டது முதல் ஈரான் அணிக்கு ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் வரை அமெரிக்க நிர்வாகத்தின் அணுகுமுறை கடும் விமர்சனத்துக்குள்ளானது.
  • ஈரான் தொடரிலிருந்து வெளியேறியதை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் பகிரங்கமாகக் கேலி செய்து கருத்து வெளியிட்டார்.
  • மைதானங்களில் பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலியக் கொடிகள் பறக்கவிடப்பட்டு, கால்பந்து மைதானம் ஒரு ‘அரசியல் மாநாடாக’ மாறியதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்தனர்.
சாமானியனுக்கு எட்டாக்கனியான உலகக் கிண்ணம்!

கால்பந்து விளையாட்டு உலகம் முழுவதும் இவ்வளவு பிரபலமாக இருப்பதற்கு முக்கியக் காரணமே, அது ஏழை-பணக்காரன் வித்தியாசம் இன்றி அனைவரும் ஆடக்கூடிய எளிய விளையாட்டு என்பதால் தான். ஆனால், இந்த உலகக் கிண்ணத்தில் போட்டியை நேரில் காண்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.

நூற்றுக்கணக்கான டொலர்கள் முதல் இலட்சக்கணக்கான டொலர்கள் வரை நுழைவுச்சீட்டுகளின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டதால், மைதானத்திற்கு சில கிலோமீட்டர் தொலைவில் வசித்த தீவிர ரசிகர்கள் கூட உள்ளே செல்ல முடியாமல் போனது. “எங்களைப் போன்ற தீவிர ரசிகர்கள் தங்கள் கதாநாயகர்களை நேரில் பார்க்க அரசாங்கம் உதவியிருக்கலாம்” என லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் வாழும் மெக்கானிக் ஒருவரின் ஆதங்கம் ஒட்டுமொத்த சாமானிய மக்களின் குரலாகவே ஒலித்தது.

அமெரிக்க பாணியில் மாறிய பாரம்பரிய விளையாட்டு!

கால்பந்தின் பாரம்பரிய முறைகளை மாற்றி, வணிக நோக்கில் அமெரிக்கா தனது சொந்த முத்திரையைப் பதிக்க முயன்றது தெளிவாகத் தெரிந்தது.

போட்டியின் நடுவே விளம்பரங்களுக்காக வழங்கப்பட்ட இடைவேளைகள், ‘ஹாஃப்-டைம் ஷோ’ மற்றும் சாம்பியன்ஷிப் மோதிரங்கள் என அனைத்தும் ‘கால்பந்தின் அமெரிக்கமயமாக்கலை’ உலகிற்கு உணர்த்தின.

இருப்பினும், லாம்மின் யமால் போன்ற இளம் நட்சத்திரங்களின் எழுச்சி, லியோனல் மெஸ்ஸியின் குறையாத வீரியம், நோர்வே மற்றும் கேப் வெர்டே அணிகளின் எதிர்பாராத வெற்றிகள் என அற்புதம் நிறைந்த தருணங்களுக்கும் பஞ்சமிருக்கவில்லை.

ஜெர்மனியின் புகழ்பெற்ற கால்பந்து மேலாளர் செப் ஹெர்பெர்கர் கூறியது போல: “பந்து உருண்டையானது. ஆட்டம் 90 நிமிடங்கள் நீடிக்கும். மற்றவையெல்லாம் வெறும் தியரிகள்தான்!” இறுதியில் சர்ச்சைகளைத் தாண்டி, கால்பந்து தன் மாயாஜாலத்தால் உலகை மீண்டும் ஒருமுறை கட்டிப்போட்டுள்ளது.

10,440க்கும் மேற்பட்டோருக்கு வழக்கு: PHI சங்கம் அதிரடி அறிவிப்பு!

0

நாட்டில் டெங்கு அதி-தீவிர வலயங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதிவேகமாகப் பரவி வரும் நோயைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ரீதியில் பல விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக, டெங்கு கொசுக்கள் பெருகும் வகையில் சூழலை அசுத்தமாக வைத்திருந்த நபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதுவரை 10,440 க்கும் மேற்பட்டோருக்கு எதிராக நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் (PHI) பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது அரசாங்கத்தினதோ அல்லது பொது சுகாதார பரிசோதகர்களினதோ நோக்கமல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார். நோயின் பரவலைத் தடுப்பதற்கு ஏதோவொரு கடுமையான நடைமுறை அவசியமாக இருந்ததன் காரணமாகவே, டெங்கு சுழலை உருவாக்கிய நபர்களுக்கு எதிராக இத்தகைய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“வெறும் நீதிமன்ற வழக்குகளைத் தொடர்வதன் மூலம் மட்டும் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் டெங்குவைக் கட்டுப்படுத்திவிட முடியாது. இதற்கு மக்களின் நேரடிப் பங்களிப்பு இன்றியமையாதது.”

டெங்கு அச்சுறுத்தலில் இருந்து விடுபட வேண்டுமாயின், ஒரு நாடாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். அரசாங்கமும் அதிகாரிகளும் எடுக்கும் முயற்சிகளுக்கு மக்கள் தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே, உயிர்களைப் பலிவாங்கும் இந்த டெங்கு அரக்கனை ஓரளவுக்கேனும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

போலை அடிக்காமல் ஆளை அடித்த அர்ஜென்டினா! WWE பாணி அராஜகம்!

மெட்லைஃப் மைதானத்தில் நேற்று நடந்த 2026 ஃபீஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி, வரலாற்றில் ஒரு மறக்க முடியாத ஆட்டமாக மாறியுள்ளது. முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவும், ஸ்பெயின் அணியும் மோதிய இந்த ஆட்டம், கால்பந்து மைதானத்தை விட ஒரு WWE மல்யுத்த ரிங்கைத்தான் அதிகம் நினைவூட்டியது.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அர்ஜென்டினா அணி கடுமையான உடல் ரீதியான தாக்குதல்களை கையில் எடுத்தது. ஸ்பெயின் வீரர்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், அவர்களை முரட்டுத்தனமாக இடித்து தள்ளுவது, சட்டையை பிடித்து இழுப்பது என அர்ஜென்டினா வீரர்கள் முரட்டு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, லிசாண்ட்ரோ மார்டினெஸ், லியான்ட்ரோ பரேடஸ் மற்றும் கிறிஸ்டியன் ரொமேரோ ஆகியோர் நடுவரின் கண் முன்னாலேயே ஸ்பெயின் வீரர்களை தாக்கி மஞ்சள் அட்டைகளைப் பெற்றனர்.

இருப்பினும், அர்ஜென்டினாவின் இந்த ரவுடித்தனமான அப்ரோச்சை கண்டு ஸ்பெயின் அணி சற்றும் பதற்றமடையவில்லை.

அர்ஜென்டினாவின் ஒவ்வொரு முரட்டு அடியையும் புன்னகையுடனும், நிதானத்துடனும் எதிர்கொண்டது. பந்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்த ஸ்பெயின், பாசிங் கேமில் கவனம் செலுத்தி அர்ஜென்டினாவை ஓடவிட்டது.

65 சதவீதத்திற்கும் மேலாக பந்தை தன் வசம் வைத்திருந்த ஸ்பெயின், அர்ஜென்டினாவின் மோசமான ஆட்டத்திற்கு தங்களின் கிளாஸ் ஆட்டத்தின் மூலமே பதிலடி கொடுத்தது.

ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ், ஸ்பெயின் இளம் டிஃபெண்டர் பாவ் குபார்சியை மிக மோசமான முறையில் கீழே தள்ளி இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.

இதனால் அர்ஜென்டினா 10 வீரர்களாக குறைந்தது. 90 நிமிடங்கள் முடிவிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.

கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் அடித்த ஒரு கோல் நடுவரால் மறுக்கப்பட்டாலும், அவர்கள் தங்களின் பொறுமையை இழக்கவில்லை. நடுவரிடம் சண்டைக்கு செல்லவில்லை.

இறுதியாக ஆட்டத்தின் 106-வது நிமிடத்தில், நிக்கோ வில்லியம்ஸ் கொடுத்த அற்புதமான அசிஸ்ட்டை, மாற்று வீரராக களம் புகுந்த பெரான் டோரஸ் கோலாக மாற்றினார்.

மைதானமே அதிரும் வகையில் ஸ்பெயின் ரசிகர்கள் இந்த வரலாற்று கோலை கொண்டாடினர்.

கோலை இழந்த பின் அர்ஜென்டினாவின் ஆக்ரோஷம் எல்லை மீறியது. ஆட்டத்தின் இறுதி விசிலுக்குப் பிறகு, அர்ஜென்டினாவின் லியான்ட்ரோ பரேடஸ் ஸ்பெயின் வீரர்களின் தொண்டையைப் பிடித்து தள்ளியதால் அவருக்கு நேரடியாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

அர்ஜென்டினா வீரர்கள் இத்தனை அராஜகங்களை செய்த போதிலும், கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி எந்தவொரு சண்டைக்கும் செல்லாமல், அர்ஜென்டினா வீரர்களுக்கு கைகொடுத்து தங்களின் நிதானத்தையும் நாகரீகத்தையும் வெளிப்படுத்தினர்.

லியோனல் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை கனவை உடைத்து, முரட்டுத்தனத்தை தனது பொறுமையான ஆட்டத்தால் வீழ்த்தி, 2010க்கு பின் தங்களின் இரண்டாவது உலகக்கோப்பை மகுடத்தை சூடியுள்ளது ஸ்பெயின்!

கால்பந்து உலகில் ‘கிளாஸ்’ எப்போதும் ‘மாஸ்’ என்பதை ஸ்பெயின் மீண்டும் நிரூபித்துள்ளது.

EAST RUTHERFORD, NEW JERSEY – JULY 19: Rodri #16 of Spain lifts the FIFA World Cup Winner’s Trophy after the team’s victory following the FIFA World Cup 2026 Final match between Spain and Argentina at New York New Jersey Stadium on July 19, 2026 in East Rutherford, New Jersey. (Photo by David Ramos/Getty Images)