Thursday, April 23, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 5

வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவா? டிரம்ப்பின் இலக்கு!

0

சர்வதேச அரசியல் சூழலில் நிலவும் அசாதாரண நிலையில், பல நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் சிக்கலாக்கி வருகிறது. குறிப்பாக பொருளாதார தடைகள், எரிசக்தி விநியோக கட்டுப்பாடுகள் மற்றும் ஆட்சி மாற்றம் இணைந்து சில புதிய பதற்றங்களை உருவாக்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கா மற்றும் கியூபா இடைய மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

அமெரிக்கா வெனிசுலா நாட்டில் தாக்குதல் நடத்தி அந்நாட்டின் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து நாடு கடத்திய பின்பு, டிரம்ப் அடுத்த தாக்குதல் கியூபா மீது தான் பேசினார். ஆனால் அதன் பின்பு டிரம்ப்-ன் முக்கிய இலக்காக ஈரான் மாறியது. இந்த நிலையில் டிரம்ப் மீண்டும் கியூபா மீது கவனத்தை திருப்பியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை பென்டகன், கியூபாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

USA TODAY வெளியிட்ட அறிக்கையின் படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டால் உடனடி தாக்குதலுக்கு தயாராக இருக்கும் வகையில் பல்வேறு சாத்தியமான சூழ்நிலைகளில் எப்படி தாக்குதல்களை மேற்கொள்ள முடியும் என்பது குறித்து ஆய்வுகளை பென்டகன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக, பாதுகாப்புத் துறை வெளியிட்ட விளக்கத்தில் “அனைத்து வகையான அவசர நிலைகளுக்கும் திட்டமிடுவது வழக்கமான செயல்முறை” என்று தெரிவித்துள்ளது. எனினும், கியூபா மீதான ராணுவ நடவடிக்கை திட்டங்கள் குறித்து வெளிப்படையான விபரங்களை கொடுக்கவில்லை. 2026 தொடக்கத்திலிருந்து அமெரிக்கா கியூபாவிற்கு செல்லும் எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்தியதன் மூலம் இருநாடுகளுக்கிடையேயான உறவு மோசமடைந்தது.

மேலும், கியூபாவில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. அதே சமயம், பொருளாதார ஒப்பந்தங்கள் மூலம் பதற்றத்தை குறைக்க முயற்சிகளும் நடைபெறுகின்றன. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகள் எவ்வாறு முடியும் என்பது தெளிவாக இல்லை.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கியூபாவை குறித்து வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தேவையானால் கியூபாவை கைப்பற்றலாம் அல்லது விடுவிக்கலாம் என்ற அவரது கருத்து, அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து சந்தேகங்களை அதிகரித்துள்ளது.

இதற்கு கியூபா அதிபர் மிகல் டியாஸ்-கானெல், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார். நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க போராடுவோம் என்று மிகல் டியாஸ் கூறியது இருநாடுகளுக்கிடையேயான பதற்றம் தீவிரமடைந்துள்ளதைக் காட்டுகிறது.

மேலும், கியூபா ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற அமெரிக்க குற்றச்சாட்டுகளும் ராணுவ தாக்குதலை சிக்கலாக்குகின்றன. அமெரிக்கா-கியூபா உறவில் தற்போது உருவாகியுள்ள இந்த பதற்றம், உலக அரசியல் சமநிலைக்கு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக தென் அமெரிக்காவில் உருவாகியுள்ள இந்த பதற்றம் மூலம் உலகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாக்கியுள்ளதை காட்டுகிறது.

மழையா? வெயிலா? இலங்கை மக்களை வாட்டி எடுக்கும் வானிலை!

0

இன்றையதினம் (16) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென், வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யக் கூடும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும் சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, வவுனியா, குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எச்சரிக்கை
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் மொணராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பக் குறிகாட்டி, அதாவது மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே தேவையின்றி வெளியில் நடமாடுவதைக் குறைப்தோடு, போதியளவில் நீரை உள்ளெடுத்தல் உள்ளிட்ட போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பகுதிகளில் மழை நிலைமை:
கொழும்பிலிருந்து காலி, அம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பலகோடி பெறுமதியான சிகரெட், மின்னணு பொருட்களுடன் சிக்கிய கும்பல்!

0

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, சட்டவிரோதமாகப் பொருட்களைக் கடத்தி வர முயன்ற 15 சீனப் பிரஜைகள் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்கப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் வர்த்தகர்கள் என அடையாளப்படுத்தியுள்ளதுடன், வெவ்வேறு விமானங்களின் ஊடாக இலங்கையை வந்தடைந்த போதே விமான நிலைய Green Channel பாதையில் வைத்து சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

முதலாவது சம்பவத்தில், 9 சீன வர்த்தகர்கள் தமது உடல், உடைகள் மற்றும் பயணப்பொதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து 383 கையடக்கத் தொலைபேசிகள், 101 டெப்லட்டுகள் (Tabs), 6 வைபை ரவுட்டர்கள், GPS கருவிகளைக் கடத்தி வந்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் பொருட்களின் மொத்தப் பெறுமதி ரூ. 2 கோடி 40 இலட்சத்து 20 ஆயிரம் (ரூ. 24,020,000) என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவை அனைத்தும் சுங்கத் திணைக்களத்தினால் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

அதே தினத்தில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு நடவடிக்கையில், 75,900 சிகரெட்டுகளை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த மேலும் 6 சீன வர்த்தகர்கள் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமது முதுகுப்பைகள் (Backpacks) மற்றும் பயணப்பொதிகளில் இந்த சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்தமை சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்தச் சிகரெட்டுகளின் சந்தைப் பெறுமதி சுமார் ரூ. 1 கோடி 38 இலட்சத்து 50 ஆயிரம் (ரூ. 11,385,000) என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

சிகிச்சைக்கு வந்த இடத்தில் சில்மிஷம்!

0

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கு பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தே நபர் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவராவார். 

பெண் வைத்தியர் சந்தேக நபரின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கச் சென்றபோது, அவர் வைத்தியரின் மார்புப் பகுதியைத் தொட்டுள்ளார். 

அந்த நேரத்தில் வைத்தியர் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்போவதாகத் எச்சரித்துள்ளார். 

எனினும், மீண்டும் பரிசோதனை மேற்கொண்டபோது இரண்டாவது முறையும் அந்த வைத்தியருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் குறித்து முறைப்பாடு கிடைத்ததையடுத்து, பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

எனினும், அவருக்குச் சிகிச்சை தேவைப்படுவதால் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையிலேயே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சந்தேக நபர் இன்றைய தினம் (15) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் பரிசோதகர் நாலக குணசேகரவின் ஆலோசனையின் பேரில், உப பொலிஸ் பரிசோதகர் வன்னியாரச்சி உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தோல்வி என முத்திரை குத்தும் இஸ்ரேல் மக்கள்!

0

ஈரானுக்கு எதிரான போர் தொடங்கி ஆறு வாரங்களுக்கு மேலாகியும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் தனது ராணுவ பலத்தை ஒரு நிலையான அரசியல் வெற்றியாக மாற்ற முடியவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

தெஹ்ரான் மீது ஒரு தீர்க்கமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறுவதையே நோக்கமாகக் கொண்டு இந்தப் போர் தொடங்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழல் நெதன்யாகுவிற்கு சாதகமாக இல்லை என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த மோதல் குறித்து இஸ்ரேலில் நடத்தப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்புகள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. பெரும்பாலான இஸ்ரேலியர்கள் இந்த ஈரானியப் போரை ஒரு ‘தோல்வி’ என்றே பார்க்கின்றனர்.

மேலும் போர்க்களத்தில் இஸ்ரேல் தனது ராணுவ வலிமையைக் காட்டினாலும், அது நெதன்யாகுவின் அரசியல் நிலையை வலுப்படுத்தவோ அல்லது நாட்டுக்குத் தேவையான நீண்டகாலப் பாதுகாப்புத் தீர்வை வழங்கவோ தவறிவிட்டதாக கடுமையாக கண்டித்துள்ளனர்.

போரின் கால நீட்டிப்பு மற்றும் அதன் விளைவுகள் குறித்து இஸ்ரேலிய மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வருவது நெதன்யாகுவின் தலைமைத்துவத்திற்குப் பெரும் சவாலாக தற்போது உருவெடுத்துள்ளது.

“தெஹ்ரானை வீழ்த்தி ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்வோம் என்ற நெதன்யாகுவின் வாக்குறுதி, போர்க்கள யதார்த்தத்தில் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.”

ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மற்றும் பிராந்திய ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இஸ்ரேல் இந்தப் போரைத் தீவிரப்படுத்தியது. ஆனால், ஆறு வாரங்கள் கடந்த நிலையிலும் ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படாதது, சர்வதேச அளவிலும் இஸ்ரேலுக்கு அழுத்தங்களை உருவாக்கி வருகிறது.

ராணுவ ரீதியாக சில இலக்குகளை எட்டியிருந்தாலும், போரை ஒரு முழுமையான வெற்றியாக மாற்றி, அதன் மூலம் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்த நெதன்யாகு போராடி வருகிறார் என்பதே தற்போதைய களநிலவரம்.

விடுமுறை தொடர்பில் வௌியான தகவல்!

0

இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17) அனைத்து அரச நிறுவனங்களும், அலுவலகங்களும் வழமைப்போல் திறந்திருக்கும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.​ 

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, அரச ஊழியர்களுக்கு கடந்த திங்கட்கிழமை மற்றும் நேற்று (14) ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று முதல் அரச நிறுவனங்கள் மற்றும் அலுவலங்களின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது். 

அதேநேரம் சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு, இன்று (15) முதல் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதன் போக்குவரத்துப் பணிப்பாளர் ஷெரின் அதுகோரள குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, இன்று ஒரு சாதாரண அலுவலக நாள் என்பதால் அலுவலக ரயில்களை வழக்கம் போல் இயக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பயணிகளின் தேவைக்கேற்ப உரிய ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் பிற்பகலில் மழைக்கு வாய்ப்பு!

0

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. 

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை வவுனியா மாவட்டங்களிலும் மற்றும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வு காரணமாக, நாளை (15) வரையில் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. 

அதற்கிணங்க இன்று நண்பகல் 12.10 அளவில் நாவலடி, பரந்தன், முரசுமோட்டை, வெள்ளிக்கண்டல், உடபத்துக்கண்டல், புளியம்பொக்கணைஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

ஜனாதிபதியின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

0

எழுந்துள்ள சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, வளமான நாடு – அழகான வாழ்க்கை எனும் இலக்கை அனைவருக்கும் உரித்தாக்குவதற்குச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். 

மலர்ந்துள்ள பராபவ சித்திரை புத்தாண்டுக்கான தமது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

பௌதிக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் புதுமைபெறும் எதிர்பார்ப்பை அடையாளப்படுத்தும் சித்திரை புத்தாண்டு, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும். 

பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சடங்குகளுக்கும் சமயக் கிரியைகளுக்கும் முன்னுரிமை அளித்து, அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சுபவேளையில் செயற்படுவது இப்புத்தாண்டின் சிறப்பம்சமாகும். 

இவ்வாறு பகிர்ந்துகொள்ளப்படும் கலாசாரம் உலகிற்கு முன்னால் எமது நாட்டின் தனித்துவத்தையும், எமது சமூகங்களுக்கு இடையே நிலவும் சமூக-கலாசார பிணைப்பையும் மிகச்சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது. 

நாட்டின் எதிர்கால அபிவிருத்திப் பாதையை இந்த பெறுமதிமிக்க கலாசாரத்துடனும், சிறந்த வரலாற்று மரபுரிமையுடனும் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்று நாம் திடமாக நம்புகின்றோம். 

அதற்கமைய, எமது அனைத்து எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களும் அந்த பெறுமதிமிக்க மரபுரிமை மற்றும் கலாசாரத்தின் மீது வலுவாகக் காலூன்றித் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை இங்கு நினைவுகூர வேண்டும். 

அதேபோல், சூரியப் பெயர்ச்சிக்கு இணையாக மேற்கொள்ளப்படும் அனைத்துச் சடங்குகளினதும் பொதுவான எதிர்பார்ப்பு, கூட்டுமுயற்சியை மதிக்கின்ற, மற்றவர்களினதும் இயற்கையினதும் இருப்புக்கு மதிப்பளிக்கின்ற ஒரு மனிதாபிமானமுள்ள புதிய மனிதனை உருவாக்குவதாகும். 

புத்தாண்டின் சடங்குகள் மூலம் வெளிப்படும் அந்த ஒற்றுமையின் பண்புகளும் விழுமியங்களும் அந்த சில நாட்களுக்கு மாத்திரமன்றி, வருடம் முழுவதும் எமது நடத்தையில் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். 

கடந்த வருடம் நாம் எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை அனர்த்த சவால்களின் போது உலகிற்கு வெளிப்படுத்திய எமது உள்வாங்கும் திறன் மற்றும் சகிப்புத்தன்மையைப் போலவே, மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்களையும் திட்டமிட்ட முறையான முகாமைத்துவத்துடன் வெற்றிகொள்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. 

ஒரு நாடாக ஒன்றிணைந்து இந்தச் சவால்களை வென்றெடுக்கும்போது, சித்திரை புத்தாண்டு காலத்தில் வெளிப்படுத்தப்படும் ஒற்றுமை மற்றும் பகிர்தல் போன்ற பண்புகளால் எமது வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். 

பெற்றுக்கொண்ட வெற்றிகளை மேலும் உறுதிப்படுத்துவதுடன், எழுந்துள்ள சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, வளமான நாடு – அழகான வாழ்க்கை எனும் இலக்கை அனைவருக்கும் உரித்தாக்குவதற்குச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என அழைப்பு விடுத்து, பிறந்துள்ள இச்சித்திரை புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

100 கோடி டாலர், அழகான பெண் – துருக்கிக்கு உகண்டா தளபதி மிரட்டல்!

0

சோமாலியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உகாண்டா ராணுவம் உதவியதற்காக, 100 கோடி அமெரிக்க டாலர் நிதி மற்றும் அழகான பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என உகாண்டா ராணுவ தளபதி, துருக்கிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

உகாண்டா அருகே உள்ள நாடு சோமாலியா. இங்கு அல் – ஷபாப் பயங்கரவாதிகள் பல பகுதிகளை கட்டுப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக, 20 ஆண்டுகளாக உகாண்டா ராணுவம் போர் புரிந்து வருகிறது. ஆப்ரிக்க யூனியன் திட்டத்தின் ஒரு பகுதியாக உகாண்டா படையினர் சோமாலியாவில் சட்டம் – ஒழுங்கை ஏற்படுத்தினர்.

அதன்பின் சோமாலியாவில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களில் துருக்கி முதலீடு செய்தது. இதற்கு உகாண்டா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ‘எங்கள் படை வீரர்கள் ரத்தம் சிந்தி அமைதியை ஏற்படுத்தினால், அதை வைத்து துருக்கி லாபமடைகிறது’ என உகாண்டா ராணுவ தளபதியும், உகாண்டா அதிபர் முசவேனியின் மகனுமான முஹூஸி கைனெருகபா கூறி வருகிறார்.

இந்நிலையில், முஹூசி கைனெருகபா விநோதமான ஒன்றை கேட்டு உள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், சோமாலியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உகாண்டா ராணுவம் பயன்படுத்தப்பட்டதற்காக 100 கோடி அமெரிக்க டாலர் பணம் பாதுகாப்பு லாப பங்காகவும் மற்றும் துருக்கியின் மிகவும் அழகான பெண்ணை தனக்கு மனைவியாக்க வேண்டும். இதனை செய்ய தவறினால், துருக்கி விமானங்கள், எங்கள் வான் எல்லையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

இங்குள்ள தூதரகத்தை மூடுவோம். அந்நாட்டில் உள்ள எங்கள் தூதரகத்தை மூடினாலும் எங்களுக்கு கவலையில்லை. உகாண்டா மக்கள் பாதுகாப்பு கருதி துருக்கி செல்வதை தவிர்க்க வேண்டும்.

1 லட்சம் உகாண்டா ராணுவ வீரர்களுடன் எனது தலைமையில் இஸ்ரேல் சென்று, இயேசு பிறந்த நிலத்தை பாதுகாக்க தயாராக இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த மிரட்டல், இருநாட்டு உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது.

பழைய வரலாறு

உகாண்டா ராணுவ தளபதி இவ்வாறு கேட்பது இது முதல்முறை அல்ல. கடந்த 2022 ம் ஆண்டு உலகின் மிகவும் அழகான 100 அங்கோல் பசுக்களை தருவதாகவும், அதற்கு பதிலாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் எனவும், இதனை நிராகரித்தால், இத்தாலியை நாங்கள் கைப்பற்றுவோம் எனக்கூறினார்.

இது அப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவரது தந்தையும் உகாண்டாவின் அதிபருமான யோவேரி முசவேனி மன்னிப்பு கோரினார். சகோதரத்துவ நாடுகளின் விஷயங்களில் தலையிடுவதற்கு மகனை கண்டித்தார்.

2022ல் கென்யா மீது படையெடுக்கப்போவதாகவும் முஹூசி, மிரட்டல் விடுத்து இருந்தார். இதனால், மகனது பதவியை தற்காலிகமாக பறித்த அதிபர், கென்யாவிடமும் மன்னிப்பு கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்த கப்பலையும் அனுமதிக்க மாட்டோம்!

0

எல்லா கப்பல்களும் செல்வதற்கு ஈரான் அனுமதிக்கும் வரை, ஹார்முஸ் நீரிணை வழியாக எந்த ஒரு கப்பலும் செல்ல அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமைதி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. பெரும்பாலான விஷயங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால் கவலைக்குரிய விஷயமான அணுஆயுதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

உலகின் மிச்சிறந்த அமெரிக்க கடற்படை , ஹார்முஸ் நீரிணைக்குள் நுழையவோ அல்லது அதில் இருந்து வெளியேறவோ முயற்சி செய்யும் அனைத்து கப்பல்களையும் தடுக்கும் வேலையை உடனடியாக துவங்கும். எல்லா கப்பல்களுக்கும் ஈரான் அனுமதிக்கும் வரையும் இது தொடரும்.

ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை செல்ல அனுமதிக்காத ஈரான், அங்கு கண்ணி வெடி வைக்கப்பட்டுள்ளது. எங்கிருக்கிறது தெரியவில்லை எனக்கூறி வருகிறது. இது உலகளவில் மிரட்டி பணம் பறித்தல் ஆகும். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட தலைவர்கள் யாரும் பயப்பட மாட்டார்கள்.

சர்வதேச கடல் பரப்பில் ஈரானுக்கு கப்பம் செலுத்திய கப்பல்களை தேடி கண்டறிந்து தடுத்து நிறுத்தும்படி அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டு உள்ளேன். சட்டவிரோதமாக கப்பம் கட்டிய எவருக்கும், பாதுகாப்பான பயணம் சாத்தியமாகாது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் புதைத்து வைத்துள்ள கண்ணி வெடிகளை அழிக்கும் பணியையும் துவங்கி உள்ளோம். எங்கள் மீதோ அல்லது அமைதியான முறையில் பயணிக்கும் கப்பல்கள் மீதோ துப்பாக்கிச்சூடு நடத்தும் எவரேனும் நரகத்துக்கு அனுப்பப்படுவார்கள்.

மற்றவர்களை விட ஈரானுக்கு இது நன்றாக தெரியும். ஏற்கனவே அழிவை சந்தித்துள்ள ஈரானுக்கு எப்படி இந்த சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வருவது என்பது பற்றி தெரியும். அவர்களின் கடற்படை, விமானப்படை அழிந்துவிட்டது. ரேடார் பயனற்றதாகிவிட்டது. அணு ஆயுதக் கொள்கையால் கமேனி உள்ளிட்ட பல தலைவர்கள் இறந்துவிட்டனர்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களை தடுக்கும் பணி விரைவில் துவங்கும். மற்ற நாடுகளும் இந்தப் பணியில் ஈடுபடும். சட்டவிரோதமாக மிரட்டி பணம் பறித்து லாபம் பார்க்கும் ஈரானின் செயலை அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு பணம் தேவைப்படுகிறது. குறிப்பாக அணுஆயுதம் தேவைப்படுகிறது. ஈரானில் மிச்சமிருப்பதையும் ராணுவம் அழித்துவிடும். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.