Thursday, April 23, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 6

இலங்கையின் புதிய அரசியல் மாற்றமும் முரண்பாடுகளும்!

0

விசேட அரசியல் ஆய்வு அறிக்கை

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளமையானது, பாரம்பரிய அரசியல் ஆய்வாளர்களிடையே ஒரு புதிய விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக, அரசியல் தத்துவார்த்த ரீதியாக முழுமையான ஒரு அரசியல் வகையினமாக கருதப்படாத “ஊழல் எதிர்ப்பு” எனும் கோஷம், எவ்வாறு ஒரு மக்கள் சக்தியைத் திரட்டி அரச அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு வலுப்பெற்றது என்பது இங்குள்ள முக்கிய கேள்வியாகும்.

நெருக்கடியின் மத்தியில் ஊழல் எதிர்ப்பு: ஒரு “வெற்று அடையாளமாக” (Empty Signifier)

அரசியல் கோட்பாட்டாளர் எர்னஸ்டோ லாக்லோ (Ernesto Laclau) குறிப்பிடுவது போல, ஊழல் எதிர்ப்பு என்பது ஒரு “வெற்று அடையாளமாக” இங்கு தொழிற்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சி, நிர்வாகத் தோல்வி, குடும்ப ஆட்சி மற்றும் அரச நிறுவனங்களின் பலவீனம் என அனைத்துப் பிரச்சினைகளும் “ஊழல்” என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கப்பட்டன.

இந்தச் சூழலில், பிரச்சினைகளுக்கான ஆழமான கட்டமைப்பு ரீதியான காரணங்கள் புறந்தள்ளப்பட்டு, “அனைவரும் திருடர்கள், அவர்களைத் தண்டிக்க வேண்டும்” என்ற மிக எளிமையான, பொதுவான மற்றும் உணர்ச்சிகரமான கோஷம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது ஒரு மாற்றுக் கொள்கையை முன்வைப்பதை விட, நிலவும் முறையை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் ஒரு மொழியாகவே பயன்படுத்தப்பட்டது.

அரசியல் மாற்றத்தின் வரலாற்றுப் பின்னணி

NPP இன் வெற்றி என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; இது தசாப்தங்களாக வேரூன்றியிருந்த ஒரு அரசியல் கலாசாரத்தை மக்கள் நிராகரித்த ஒரு வரலாற்றுத் தருணமாகும்.

  • மக்களின் அவநம்பிக்கை: ஐக்கிய தேசியக் கட்சி (UNP) போன்ற பாரம்பரிய கட்சிகள் மீதான கடும் அதிருப்தி NPP க்கான பாதையைச் செப்பனிட்டது.
  • எதிர்க்கட்சிகளின் பிளவு: எதிர்க்கட்சிகள் பிளவுபட்டிருந்ததும், பழைய அரசியல் முறைமையையே பிரதிநிதித்துவப்படுத்தியதும் NPP க்கான அரசியல் வாய்ப்பை அதிகரித்தது.
ஜே.வி.பி (JVP) முதல் தேசிய மக்கள் சக்தி வரை: ஜனரஞ்சகவாதத்தின் புதிய முகம்

முன்னர் “இடதுசாரி ஜனரஞ்சகவாதத்தை” முன்னிறுத்திய ஜே.வி.பி, இன்று “தேசியவாத ஜனரஞ்சகவாதத்தின்” ஆரம்ப அறிகுறிகளைக் காட்டுவது ஒரு முரண்பாடான உண்மையாகப் பார்க்கப்படுகிறது. ஊழல் எதிர்ப்பு என்ற தார்மீகக் கோஷத்தை முன்னிறுத்தி, முழு அமைப்பையும் விமர்சிக்கும் ஒரு அரசியல் மொழியை NPP உருவாக்கியுள்ளது. “ஊழலை ஒழிப்பதன் மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விமோசனம் கிடைக்கும்” என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.

அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் எழும் சவால்கள்

அதிகாரத்தைப் பெறுவதற்கு ஊழல் எதிர்ப்பு ஒரு சிறந்த ஆயுதமாக இருந்திருக்கலாம், ஆனால் ஆட்சி நடத்துவதற்கு அது போதுமானதல்ல. ஜாக் டெரிடாவின் (Jacques Derrida) “கட்டமைப்புச் சிதைவு” (Deconstruction) எனும் கருதுகோளின் அடிப்படையில் பார்த்தால், தற்போது நிலவும் அதிகார உறவுகள் மற்றும் நிறுவன முறைகள் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.

  • எதிர்ப்பு முதல் கட்டமைப்பு வரை: “எதற்கெதிராக இருக்கிறோம்” என்பதில் இருந்து “எதனை உருவாக்கப் போகிறோம்” என்ற இடத்திற்கு NPP நகர வேண்டியுள்ளது.
  • அரசியல் விலை: கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகள், தியாகங்கள் மற்றும் சகோதரத்துவத்தின் விழுமியங்கள் இந்த அதிகாரப் போட்டியில் நீர்த்துப்போகும் அபாயம் உள்ளது. இந்த அரசியல் விலையைச் செலுத்த ஜே.வி.பி தயாராக உள்ளதா?
ஜனநாயகத்தை மறுசீரமைப்பதற்கான வாய்ப்பு

பழைய அரசியல் முறைமை வீழ்ச்சியடைந்துள்ள இந்த தருணத்தைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தைப் பலப்படுத்த பின்வரும் சீர்திருத்தங்கள் அவசியமானவை:

  1. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மறுபரிசீலனை செய்தல்.
  2. நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துதல்.
  3. மக்கள் பங்கேற்புடனான அரசியல் உரையாடல்களை உருவாக்குதல்.
முடிவுரை

தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி என்பது ஊழல் எதிர்ப்பு எனும் கோஷம் ஒரு சக்திவாய்ந்த அரசியல் கருவியாக இருக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது.

எனினும், ஒரு தார்மீகக் கோஷத்தை மட்டும் வைத்துக் கொண்டு நீண்ட காலத் தீர்வுகளை வழங்க முடியாது. பழைய விமர்சனங்களை நிராகரிக்காமல், புதிய அரசியல் யதார்த்தத்தோடு இணைந்த, இன்னும் ஆழமான ஜனநாயகப் பொறிமுறையை நோக்கி நாம் நகர வேண்டியுள்ளது.

இது தோல்வியடையும் பட்சத்தில், நிராகரிக்கப்பட்ட பழைய பிற்போக்கு சக்திகள் மீண்டும் பலம்பெறும் அபாயம் இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

Digital creator
Lecturer at Open University of Sri Lanka
Former Teaching assistant at University of Colombo

மின் கட்டணத்தில் அதிரடி மாற்றம்: நுகர்வோருக்கு இனி சுமை ஏறாது!

0

மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது மின் உற்பத்தி, கடத்தல் மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மாத்திரமே கருத்திற் கொள்ளவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்குச் சுமையளிக்காத வகையில், மின்சாரக் கட்டணங்களை நிர்ணயிப்பது தொடர்பில் ஆணைக்குழு முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை முன்மொழிந்துள்ளது.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போதும், நிலக்கரி இறக்குமதியின் போது ஏற்பட்ட மேலதிக செலவுகள் அல்லது ஏனைய நியாயமற்ற செலவினங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைகளின் போதும் பின்வரும் விடயங்களை மின்சாரக் கட்டணத்தில் உள்ளடக்காதிருக்க ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது:

  • நிலக்கரி விநியோகச் சிக்கல்கள் அல்லது தரக்குறைபாடுகள் காரணமாக ஏற்படும் மேலதிக செலவுகள்.
  • மின்சார சபையினால் முன்வைக்கப்படும் ஏனைய நியாயமற்ற செலவினங்கள்.

நிலக்கரியின் தரம் மற்றும் ஏனைய நிர்வாக ரீதியான குறைபாடுகளால் ஏற்படும் நட்டங்களை நுகர்வோர் மீது சுமத்த முடியாது என்பதில் ஆணைக்குழு உறுதியாக உள்ளது.

உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் உண்மையான மற்றும் அவசியமான செலவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எதிர்கால மின்சாரக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

லெபனானில் 3 கிராமங்களையே அழித்த இஸ்ரேல்!

லெபனானில், மூன்று கிராமங்களை இஸ்ரேல் ராணுவம் வெடிகுண்டுகளை வீசி தரைமட்டமாக்கியது.

ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் ஹெஸ்பொல்லா அமைப்பினரின் பதுங்கு குழிகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை தகர்ப்பதாக கூறி, வீடுகள் மீது இஸ்ரேல் வெடிகுண்டுகளை வீசுவதாக லெபனான் குற்றச்சாட்டி வருகிறது.

இந்நிலையில், லெபனான் எல்லையில் உள்ள தைய்பே, நகுரா மற்றும் தீர் செர்யான் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகள் ஒட்டுமொத்தமாக வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தெற்கு லெபனானின் லிட்டானி ஆறு வரையிலான பகுதிகளைக் கைப்பற்றி, அங்கு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதனால் லெபனானில் இருந்து வெளியேற்றப்பட்ட, 10 லட்சம் பேர், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த போரில், லெபனானில் மட்டும் இதுவரை, 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான்-அமெரிக்கா 21 மணிநேர பேச்சு தோல்வியில் நிறைவு!

பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தது. உடன்பாடு ஏற்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதலை கடந்த பிப்., 28ல் துவக்கின. இந்த தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இருப்பினும், சண்டையில் இருந்து ஈரான் பின் வாங்கவில்லை; மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கியது.

கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் அப்பிராந்தியத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் பொருளாதார அழுத்தத்தை சந்தித்தன.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி ‘ஈரான் நாகரிகத்தையே அழித்துவிடுவேன்’ என அதிபர் டிரம்ப் கொக்கரித்தார்; அதற்காக கெடு விதித்திருந்தார். இதனால், ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படுமோ என்ற பதற்றம் எழுந்தது.

கெடு முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் மத்தியஸ்த முயற்சியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இரு வார தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. இதையடுத்து, அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பை இஸ்லாமாபாதில் பேச்சு நடத்த, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார். இதை இரு தரப்பும் ஏற்றன.

ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழு நேற்று முன்தினமே இதற்காக இஸ்லாமாபாத் வந்தது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான அமெரிக்க குழுவினர் நேற்று காலை இஸ்லாமாபாத் வந்தனர். ஈரான் மற்றும் அமெரிக்கா தரப்பினர் தனித் தனியே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர்.

இதில், ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட முன்வைப்புகளில் சிலவற்றை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவுடன் நேரடியாக பேசுவதற்கு ஈரான் ஒப்புக் கொண்டது. இவ்வாறு மாறி மாறி கூட்டங்கள் நடந்தன. இதனால், அமைதி பேச்சுக்கான கூட்டம் ஐந்து மணி நேரம் தாமதமாகி மாலை துவங்கி 20 மணி நேரமாக நடந்தது.

எனினும் இதில் முடிவு எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் குழுவினர் மறுத்துவிட்டனர். இதையடுத்து அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தது. பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்தார்.

நிருபர்களிடம் துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறியதாவது: அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பாகிஸ்தானில் 21 மணி நேரமாக நடைபெற்ற அமைதி பேச்சு எவ்வித முடிவும் இன்றி நிறைவு பெற்றது. அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டது. எங்கள் குழு அமெரிக்கா திரும்புகிறது, என்றார்.

பேச்சு தோல்வி அடைந்துள்ளதால் மீண்டும் போர் நடக்கும் சூழல் உருவாகுமா என்ற என்ற அச்சம் உலகை மீண்டும் ஆழ்த்தியுள்ளது!

ஒரு வாரத்தில் 49 பலிகள் – வெளியாகியுள்ள பகீர் தகவல்!

0

கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்துகளில் பெரும்பாலானவை போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் செலுத்தியமையாலேயே ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

பெட்ரோல் வாகனங்களுக்கான QR முறைமை நீக்கம்!

0

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘QR’ முறையைக் கருத்தில் கொள்ளப் போவதில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

இருப்பினும், வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை மற்றும் இரட்டை எண்களைக் கருத்தில் கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் ஹக்கீம் எழுப்பிய அதிரடி கேள்வி!

0

​உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்: இந்த அரசாங்கத்தின் மீது அழுத்தம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது!

சபையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி

​முக்கியமான வழக்குகளில் நிச்சயமாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறான வழக்கில் ஏன் அந்த ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை என்பது ஒரு பெரிய கேள்வி. எனவேதான், இந்த அரசாங்கத்தின் மீதும் ஏதேனும் அழுத்தம் இருக்கிறதா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது என பாராளுமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் பற்றிய விவாதத்தில் உரையாற்றும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09), நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ,முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

“கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே, நான் உரிய விடயதானம் தொடர்பாகப் பேசுவதற்கு முன்னர் , ஆளுங்கட்சி அமைச்சர்கள் இருவர் முன்வரிசையில் அமர்ந்திருப்பதால் அவர்களூடாக அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கையை விடுக்க விரும்புகிறேன்.

இப்போது மத்திய கிழக்கில் போர்ச் சூழல் ஓரளவிற்குத் தணிந்து, போர்நிறுத்தத்திற்குச் சென்றுள்ள சந்தர்ப்பத்தில், ஈரானியக் கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்ட இளம் மாலுமிகள் சிலர் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களை உடனடியாக ஈரானுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

இது குறித்து மீண்டும் ஒருமுறை அமெரிக்காவிடம் போய் கேட்காமல், நீங்கள் நடுநிலையானவர்கள் என்றால், காயமடைந்த மற்றும் காப்பாற்றப்பட்ட அந்த இளம் மாலுமிகளை ஈரானுக்குத் திருப்பி அனுப்ப தயவு செய்து நடவடிக்கை எடுங்கள். அவர்கள் இளம் பயிற்சி மாணவர்கள் (Cadets), எனவே இந்த போர்நிறுத்தக் காலத்திலேயே அவர்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவது நமது கடமையாகும். இரண்டு வாரங்களுக்குப் பிறகு டொனால்ட் ட்ரம்ப் சொன்னால் என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது.

​சில விமானங்களை மத்தளையில் தரையிறக்க அமெரிக்கர்கள் கேட்டதாக ஜனாதிபதி ஒரு பெரிய பொய்யைக் கூறி, நமது துறைமுகங்களுக்கு கப்பல் வருவதைத் தாமதப்படுத்துவதைத் தவிர்த்தார். அதனால் தான் இறுதியாக அந்த கப்பல் அழிக்கப்பட நேர்ந்தது. இறுதியில் அமெரிக்கா அந்த கப்பலைத் தாக்குவதற்கு நாம் வழிவகுத்தோம்.

​நாம் நடுநிலையானவர்கள் என்று உரிமை கோரினோம், ஆனால், உண்மையில் நமது செயல்பாடுகள் உண்மையான நடுநிலையைக் காட்டவில்லை. ஆகையால், குறைந்தபட்சம் இந்த இக்கட்டான தருணத்திலாவது, அந்த இளம் மாணவர்களை இந்த போர்நிறுத்தக் காலத்திலேயே உடனடியாக ஈரானுக்குத் திருப்பி அனுப்புமாறு நான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.

​இப்போது உரிய விடயத்திற்கு வருகிறேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து பேசும்போது நான் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், குறிப்பாக ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகிய உயர் பொலிஸ் அதிகாரிகள் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது.

​அந்த நம்பிக்கையின் அடிப்படையில், இந்த விசாரணையில் புதிய திசையில் செல்லும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த அதிகாரிகள் இருவருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை

இது குறித்து இப்போது அமைச்சர் சில விடயங்களை விளக்கினார். ஆனால், சில நாட்களுக்கு முன்னர் நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வுத் துறை அதிகாரி சுரேஷ் சாலேயின் பிரஸ்தாப பிணை மனுவின் போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து யாரும் அங்கு சமுகமளித்திருக்கவில்லை. அதனால், நீதவான் கேட்ட கேள்விகளுக்கு இந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பதிலளிக்க முடியாமல் போனதை நாம் கண்டோம். நீதியமைச்சரும் இங்கு இருக்கிறீர்கள்.

​இவ்வாறான முக்கியமான வழக்குகளில் நிச்சயமாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் வந்து ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும். ஏன் அந்த ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை என்பது ஒரு பெரிய கேள்வி. எனவேதான் இந்த அரசாங்கத்தின் மீதும் ஏதேனும் அழுத்தம் இருக்கிறதா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது. எனவே அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கிறோம்.

இந்தச் சம்பவம் குறித்து நாங்கள் தொடர்ந்து ஆராயும் போது பல விடயங்களைக் காண்கிறோம். குறிப்பாக, இப்போது ஒரு முக்கியமான சாட்சியாக சஹ்ரானின் மனைவி ஹாதியாவை முன்வைக்க முடியும். ஆனால் அவர் சாட்சியம் அளிக்க முற்பட்டபோது சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. ஏன், இந்த எதிர்ப்பு?

ஆனால் இறுதியில் ஆணைக்குழுவின் தலைவரின் முடிவின்படி அந்த சாட்சியம் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்டது. அது இப்போது அறிக்கையில் உள்ளது.
​ஆனால் அவற்றைப் பார்க்கும்போது, ஹாதியாவை ஒரு குற்றவாளியாகக் கருதி அவர் மீது இப்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்குத் தாக்கலைத் தவிர்த்து அவரை ஒரு சாட்சியாக வைத்திருந்தால், இந்த வழக்கு மூலம் இன்னும் பல விடயங்களை நிரூபித்திருக்க முடியும்.

அது மட்டுமல்ல, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பாக இருந்த காலத்திலேயே தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னாப் ஜஸீம், அஸாத் ஸாலி மற்றும் டொக்டர் ஷாபி தவிர்ந்த ஏனைய அனைத்து வழக்குகளுக்கும் ஷானியின் காலத்தில் பெறப்பட்ட சாட்சியங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதன் பின்னர் ஒன்றும் நடக்கவில்லை. எனவே இந்த விடயத்தை முன்னெடுத்துச் செல்லும்போது இன்னும் பல விடயங்கள் வெளிவருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

​குறிப்பாக, சஹ்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு அருகிலுள்ள அடுத்த அறையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் மூவர், இந்த குண்டுவெடிப்புக்கு பின்னர் ஹோட்டலுக்குச் சொல்லாமல் நேரடியாகத் தமது நாட்டுக்குச் சென்று, அங்கிருந்து ஹோட்டல் முகாமையாளருக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இந்த மூவரும் ஏன் அங்கு இருந்தார்கள்? நாட்டை விட்டு ஏன் அவ்வாறு வெளியேறினார்கள்? அது குறித்து இன்னும் தேடப்படவில்லை. அது குறித்து தேடிப் பார்க்க வேண்டும். அது மட்டுமல்லாது, இன்னும் பல சம்பவங்கள் உள்ளன.

​குறிப்பாக, வவுணதீவு சம்பவம் மற்றும் ஆசாத் மௌலானாவின் அந்த சனல் 4 அலைவரிசைச் சம்பவத்திற்குப் பின்னர், இப்போது ஆசாத் மௌலானாவின் சாட்சியத்தைப் பதிவு செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதற்குத் தேவையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டம் (Protection of Witnesses Act) உள்ளது. எனவே இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்தி ஆசாத் மௌலானாவின் சாட்சியத்தைத் தொலைதூரத்தில் இருந்தேனும் (Remotely) பதிவு செய்ய முடியும்.

​இந்த முழு விசாரணையும் சரியான திசையில் செல்வதற்கு இது மிக விரைவாகச் செய்யப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆகையால்தான் இந்த விடயங்களை நாம் முன்வைக்கிறோம்.

​இதனுடன், இதுவரை கடமையாற்றிய இந்த அதிகாரிகளுக்கு அரசாங்கத்தினால், குறிப்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் இந்த விசாரணையின் ஊடாக இறுதியாக இந்தச் சம்பவத்தின் உண்மையான மூளையாகச் செயற்பட்ட நபரைக் கண்டறிய முடியும். நன்றி” என்றார்.

ஈரான் போரில் இஸ்ரேலை மிகவும் அதிர்ச்சியூட்டிய புள்ளிவிவரம்!

0

ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்பு உலகளவில் பெரிய பதற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்திய போர், அமெரிக்கா – ஈரான் – இஸ்ரேல் மத்தியிலான போரில் இஸ்ரேல் எவ்வளவு செலவு செய்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள கணக்கின் படி, ஈரான் மற்றும் லெபனான் மீதான 40 நாட்கள் போருக்காக ஏற்பட்ட செலவு சுமார் 17.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று முதற்கட்ட மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் சேனல் 12 செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த செலவுகள் அனைத்தும் போரின் நேரடி ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் மீது ஏற்பட்ட பாதிப்புகளை உள்ளடக்கியது என தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கை இன்னும் இறுதியானது அல்ல, போர் சேதத்தை சரி செய்ய புனரமைப்பு செலவுகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளை கணக்கிடும் போது இழப்புகளின் அளவு இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நிதியமைச்சகத்தின் அறிக்கையின்படி, ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கத்துடனான தொடர்ச்சியான மோதலுக்கான நேரடி ராணுவ செலவுகள் சுமார் 40 பில்லியன் இஸ்ரேல் ஷெக்கல் இது தோராயமாக 12.9 பில்லியன் டாலராகும். இதில் ஆயுதங்கள், விமானப் பறக்கும் நேரம், ராணுவ வீரர்களின் பணி நாட்கள் மற்றும் சேதங்கள் ஆகியவை அடங்கும். பொதுமக்கள் தொடர்பான செலவுகள் 13 முதல் 14 பில்லியன் இஸ்ரேல் ஷெக்கல் இது தோராயமாக 4.2 முதல் 4.5 பில்லியன் டாலர் வரை இருக்கும். இவை இரண்டையும் சேர்த்தால் மொத்தம் 54 பில்லியன் ஷெக்கல் அதாவது 17.5 பில்லியன் டாலராகும்.

மேலும் ஈரான் போரால் ஏற்பட்ட சேதங்களுக்காக இஸ்ரேல் மக்கள் இஸ்ரேல் அரசிடம் வியாழக்கிழமை காலை வரை 28,237 இழப்பீட்டு விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர். இதில் 18,408 விண்ணப்பங்கள் கட்டிடங்கள் தொடர்பானவை, 2,594 விண்ணப்பங்கள் உபகரணங்கள் சேதம் சார்ந்தவை, 6,617 விண்ணப்பங்கள் வாகன சேதம் தொடர்பானவை.

மேலும் நகரங்கள் அடிப்படையில் பார்க்கும் போது டெல் அவிவ் நகரில் மட்டும் சுமார் 5,100 இழப்பீடு விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. இதை தொடர்ந்து பீர் ஷெவா (3,600), அராத் (2,350), பெதா திக்வா (2,000), திமோனா (1,500) மற்றும் பெய்த் ஷெமெஷ் (1,400) ஆகிய நகரங்களில் அதிக இழப்பீடு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த போர் மூலம இஸ்ரேல் நாட்டிலும் பெரும் பொருள் மற்றும் நிதி ஆதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதை காட்டுகிறது. சவுதி அரேபியாவின் அரச செய்தி நிறுவனமான SPA இந்த வாரம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக சவுதி அரேபியாவின் தினசரி உற்பத்தித் திறன் சுமார் 6 லட்சம் பேரல்கள் குறைந்துள்ளது. கிழக்கு – மேற்கு பைப்லைன் வழியாக எண்ணெய் கொண்டு செல்லும் அளவும் சுமார் 7 லட்சம் பேரல்கள் குறைந்துள்ளது என அறிவித்துள்ளது.

அமெரிக்க – ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் திருப்பம்!

ஈரான்-அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானில் இரு நாட்டு அதிகாரிகளும் வந்திருக்கும் நிலையில், தற்போது பாகிஸ்தானை முன்னிறுத்தி முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.

பேச்சுவார்த்தை எதிர்பார்த்தபடி ஸ்மூத்தாக போகிறது எனில், ஹார்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் போக்குவரத்து சீராகும். எனவே பேச்சுவார்த்தை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

மாலை 6.45 மணி நிலவரப்படி, அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை நிறைவடைந்திருக்கிறது. இதில், பாகிஸ்தானிடம் ஈரான் வைத்த டிமாண்டுகள் அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில் கத்தார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் பெரிய சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரான் நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் லெபனானில் போர் நிறுத்தம், ஈரானின் சொத்துக்களை விடுவித்தல் இது இரண்டும் நடைமுறைப்படுத்தப்படும்பட்சத்தில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஈரான் கூறியிருந்தது. இதனை பாகிஸ்தான் பிரதிநிதிகள் அமெரிக்காவிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

போரில் ஈரானை பணியவைக்க முயன்ற அமெரிக்கா, எப்படியாவது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தால் போதும் என்ற அளவுக்கு தற்போது பேச்சுவார்தைக்கு இறங்கி உள்ளது. இந்த பேச்சுவார்த்தை அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்து வருகிறது.

இதில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் உள்பட் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் ஒரு அங்கமாக கத்தார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் பெரிய சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, பேச்சுவார்த்தையில் அவர்கள் கொண்டுள்ள “தீவிரத்தன்மையை” காட்டுவதாக ஈரான் தரப்பு கருதுகிறது. இந்த சொத்துக்களை அமெரிக்கா சும்மா ஒன்றும் விடுவிக்கவில்லை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதோடு நேரடித் தொடர்புடையது என்று ஈரான் அதிகாரி கூறியுள்ளார்.

இது இஸ்லாமாபாத்தில் தொடரும் பேச்சுவார்த்தைகளில் மிக முக்கியமான விவாதப் பொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இது குறித்து அமெரிக்க தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பொதுவெளியில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஈரான் தரப்பு மட்டுமே கருத்துக்களை தெரிவித்துள்ளது. அமெரிக்கா தரப்பு தெரிவித்தால் தான் உண்மை நிலவரம் தெரியும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக கபீர் ஹாசிம்!

0

ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்டப் பதவிகளில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய தவிசாளராக , கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாவால் இந்த நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வியூகங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.