Tuesday, June 9, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 6

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு: வரலாற்றுப் பரீட்சை நேற்று நிறைவு!

0

இலங்கை ஆசிரியர் சேவை 2023 (2026)-க்கு பட்டதாரிகளை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு நேற்று (24) நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் ஒட்டுமொத்த ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வுகாண்பதை நோக்கமாகக் கொண்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையிலேயே இம்முறை இந்த பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

இம்முறை நாடு முழுவதிலும் உள்ள 1,048 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்பட்டன.

அரச சேவையில் உள்ள 66,991 பட்டதாரிகளும், ஏனைய 96,442 பட்டதாரிகளும் இம்முறை பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர்.

விசேட தேவையுடைய 323 விண்ணப்பதாரிகள் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விசேட வசதிகளையும் தேர்வுகள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

அரசாங்க சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் ஆட்சேர்ப்பதற்காக இந்த போட்டிப் பரீட்சையை நடத்த 2023 ஆம் ஆண்டிலேயே திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த ஒரு வழக்கு காரணமாக இப்பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அனைத்து சட்ட நடைமுறைகளும் பூர்த்தியானதைத் தொடர்ந்து, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மட்டுமன்றி, ஏனைய வெளிவாரி பட்டதாரிகளும் தோற்றக் கூடிய வகையில் இம்முறை பரீட்சை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது!

0

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை அவர் தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இந்தநிலையிலே அவர் கைது செய்யப்பட்டு கடுவலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை: திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

0

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அனுராதபுர மாவட்டத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

டித்வா கொடுப்பனவு 20 லட்சம் ரூபாயில் பாதியை கேட்ட அதிகாரிகள் கைது!

0

டித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணத் தொகையில், பெருந்தொகையை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்ட கிராம உத்தியோகத்தர் மற்றும் அவரது உதவியாளர் ஒருவரை இலஞ்ச ஒழிப்புப் பிரிவினர் கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர்.

💰 20 லட்சம் ரூபாயில் பாதியை கேட்ட “அதிகார துஷ்பிரயோகம்”

‘திட்வா’ புயலினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளரின் வீட்டை புனரமைக்க, அரசாங்கத்தினால் 50 இலட்சம் ரூபாய் நிதி உதவி அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிதியின் முதல் தவணையாக வழங்கப்பட்ட 20 இலட்சம் ரூபாயில், 10 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக வழங்குமாறு சந்தேகநபர்கள் பயனாளியிடம் கோரியுள்ளனர்.

அதுமட்டுமன்றி, அடுத்தடுத்த தவணைக் கொடுப்பனவுகளின் போதும் தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் நிபந்தனை விதித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை முறைப்பாட்டாளர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று (2026.05.22) பிற்பகல் 2.45 மணியளவில் மொணராகலை தலைமையகக் காவல் நிலையத்தில் வைத்து இந்த அதிரடி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மொணராகலை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம உத்தியோகத்தரான வெலலியத்த கெதர நிமல் மற்றும் பெலவத்தை சீனி தொழிற்சாலையில் பணியாற்றும் குரூஸ் வின்சென்ட் ஆகியோரே இவ்வாறு இலஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் மொணராகலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர்களை எதிர்வரும் 2026 மே 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய குறிப்பு: உங்கள் உரிமைகளைப் பறிக்கும் வகையில் எவரேனும் இலஞ்சம் கோரினால், உடனடியாக 1954 என்ற இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆதாரம்: இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (ஊடக அறிக்கை இலக்கம்: 2026/059).

இலங்கை திறைசேரியில் மில்லியன் டாலர் சைபர் கொள்ளை: களமிறங்கியது FBI!

0

இலங்கை வரலாற்றில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்ட சைபர் கொள்ளை சம்பவம் தொடர்பில், உள்நாட்டு அதிகாரிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI இன் விசேட நிபுணர்கள் குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அண்மையில் இலங்கை திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களும், அமெரிக்க அஞ்சல் அதிகாரிகளுக்கு செலுத்தப்படவிருந்த 625,000 டாலர்களும் மர்மமான முறையில் இணையவழியாகக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம், அமெரிக்காவின் நிதியியல் கட்டமைப்பு ஊடாகப் பரிமாற்றப்பட்டிருப்பதும், அங்குள்ள இரண்டு வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பல வங்கிக் கணக்குகளுக்கு அது சென்றடைந்திருப்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதால் இந்த விசாரணை சர்வதேசப் பரிமாணத்தைப் பெற்றுள்ளது.

தற்போது இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் FBI பிரதிநிதிகளுடன் பல கட்டங்களாக விரிவான மற்றும் தீவிரமான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். களமிறங்கியுள்ள அமெரிக்க மத்திய குழு, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ‘டிஜிட்டல் தடம்’ எங்கு முடிகிறது என்பதைக் கண்டறிய CID அதிகாரிகளுடன் இணைந்து தற்போது தீவிரமாகச் செயலாற்றி வருகிறது.

ஹேக்கர்களின் தந்திரமும், போலி நிறுவனமும்!

2.5 மில்லியன் டாலர் காணாமல் போன சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஹேக்கர்களை மறைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு போலி நிறுவனம் தற்போது விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

விசாரணையாளர்களின் கூற்றுப்படி, இந்த நிதி “Biz Solutions” என்ற மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் ஊடாகப் பரிமாற்றப்பட்டுள்ளது. ஆன்லைன் வணிகப் பதிவுச் சேவைகளில் ஈடுபடும் இந்த நிறுவனம், நெகிழ்வான வணிக விதிமுறைகளைக் கொண்ட அமெரிக்காவின் டெலவெயர் (Delaware) மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டிய கடன் பணம்: நடந்தது என்ன?

இந்த அதிநவீன சைபர் தாக்குதலானது, இலங்கையின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தை (ERD) இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் தொடர்பு வழிகளை சட்டவிரோதமாக ஊடுருவிய ஹேக்கர்கள், ஆஸ்திரேலியாவுக்கு செலுத்தப்படவிருந்த 22.9 மில்லியன் டாலர் இருதரப்புக் கடன் மறுசெலுத்துகை நிதியை இடைமறித்து, திசைதிருப்பியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பொலிஸ் விசாரணைகளின்படி, ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படவிருந்த 6 கொடுப்பனவு சான்றிதழ்களில் (Payment Vouchers) 4 சான்றிதழ்களை ஹேக்கர்கள் தங்கள் வசம் திருப்பியுள்ளனர்.

எளிமையான விதிமுறைகள் காரணமாக ‘டெலவெயர்’ மாநிலத்தில் நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இறுதிக் கொடுக்கல் வாங்கல் சான்றிதழ்களில் ஒன்று, மிகவும் கடுமையான வங்கி விதிமுறைகளைக் கொண்ட மற்றொரு அமெரிக்க மாநிலத்துடன் தொடர்புடையது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிரடி உறுதி; தொடரும் மர்மம்!

இந்த மோசடியில் ஈடுபட்டு அமெரிக்காவில் வசித்து வரும் சந்தேகநபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அத்துடன், CID அதிகாரிகளுக்குத் தேவையான அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க FBI ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும், இவ்வளவு தீவிரமான கூட்டு முயற்சிகளுக்கு மத்தியிலும், கொள்ளையடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்கள் இறுதியாக எந்த வங்கிக் கணக்குகளைச் சென்றடைந்தன அல்லது அது எவ்வாறு மாற்றப்பட்டது என்பதை விசாரணை அதிகாரிகளால் இன்னும் திட்டவட்டமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இலங்கைப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ள இந்த டிஜிட்டல் கொள்ளையின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யார்? நிதியை முழுமையாக மீட்க முடியுமா? போன்ற கேள்விகளுக்கான விடைகள் FBI மற்றும் CID இன் கூட்டு விசாரணையின் முடிவிலேயே தெரியவரும்.

டெங்கு நோயினால் நாட்டில் இதுவரை 15 பேர் உயிரிழப்பு!

0

இலங்கையில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயின் பரவல் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தீவிரமடைந்துள்ளதுடன் நாடு தழுவிய ரீதியில் 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுளள்து.

தற்போதைய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, நடப்பு ஆண்டில் இதுவரை 29,589 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

வழக்கமாக வீடுகளைச் சுற்றியே கண்டறியப்படும் டெங்கு நுளம்புக் குடம்பிகள், தற்போது பாடசாலைகள், அரச நிறுவனங்கள், தனியார் பணியிடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் முன்னெப்போதையும் விட மிக அதிகளவில் பெருகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பொது இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகம் என்பதால், தொற்று பரவும் வேகம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் பிரஷீலா சமரவீர எச்சரித்துள்ளார்.

இந்த ஆண்டின் (2026) டெங்கு பரவல் விபரம்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே டெங்கு பரவலின் வேகம் அதிகரித்துக் காணப்படுகிறது. நாடு முழுவதும் 39 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அதிவேக டெங்கு ஆபத்துள்ள வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் மேல் மாகாணம் முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் 25 மாவட்டங்களிலும் நோயாளர்கள் பதிவாகி வரும் போதிலும், கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே மிக அதிகப்படியான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு (2025) இதே காலப்பகுதியில் (மே நடுப்பகுதி வரை) சுமார் 22,500 நோயாளர்களே பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 29,000 ஐத் தாண்டியுள்ளது பரவலின் தீவிரத்தை உணர்த்துகிறது.

கடந்த ஆண்டின் (2025) முழுமையான டெங்கு தரவுகள்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 51,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த அதேவேளை, கடந்த ஆண்டில் ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களிலே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உச்சமடைந்திருந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடி இனி ஒருபோதும் வராது!

0

“நாட்டில் 2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் ஏற்படாது” என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் யுத்தச் சூழல் ஒரு வெளிப்புற சவாலாக இருந்தாலும், அதனைத் திறம்படக் கையாள்வதற்கான ஆளுமையும் பலமும் தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.

12 ஆண்டு காலமாக முடங்கிக் கிடந்த நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை இன்று (22) முற்பகல் மீண்டும் ஆரம்பித்து வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

“அன்று 50 மில்லியன் டொலர்… இன்று 7,000 மில்லியன் டொலர்!”

மத்திய கிழக்கு யுத்த சூழலால் டொலரின் மதிப்பு உயர்ந்து, இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய நிலையை 2022 உடன் ஒப்பிடுபவர்களுக்குப் பதிலடி கொடுத்தார்:

“சிலர் இது 2022 போன்ற நிலை என்று வதந்திகளைப் பரப்பப் பார்க்கிறார்கள். ஆனால், 2022 இல் நம்மிடம் ரூபாயும் இருக்கவில்லை, மத்திய வங்கியில் டொலரும் இருக்கவில்லை. அன்று மத்திய வங்கியில் வெறும் 50 மில்லியன் டொலர்களே இருந்தது. ஆனால் இன்று சந்தையில் டொலர் தட்டுப்பாடு நிலவினாலும், மத்திய வங்கியிடம் கிட்டத்தட்ட 7,000 மில்லியன் டொலர் கையிருப்பு உள்ளது. இன்னும் சில தினங்களில் மேலும் 700 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளன.”

அன்று ஏற்பட்டது போல எரிபொருள், எரிவாயு, பால்மா அல்லது உரத் தட்டுப்பாடு நாட்டில் மீண்டும் ஏற்படுவதற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் நாட்டு மக்களுக்குப் பொறுப்புடன் உறுதியளித்தார்.

மக்கள் ஆணையின் பலம்: “ஒன்றரை வருடங்களில் சாதித்தது என்ன?”

சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களின் பேராதரவுடன் இந்த ஆட்சி மலர்ந்து ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்துள்ளதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, மக்கள் தமக்கு வழங்கிய ஆணையின் எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்:

  • இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி: கடந்த காலத்தில் நிலவிய அச்சமும் அவநம்பிக்கையும் ஒழிக்கப்பட்டு, கடந்த ஒன்றரை வருடங்களாக அனைத்து இன மக்களும் எவ்வித அச்சமும் இன்றி ஒற்றுமையாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகள் ரத்து: 5 வருடங்கள் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச செலவில் வழங்கப்பட்ட வீடு, வாகனம், மின் மற்றும் நீர்க்கட்டண சலுகைகளும் நிறுத்தப்பட்டு, அவர்கள் சத்தமின்றி வெளியேறியுள்ளனர்.
  • ஊழலுக்கு எதிரான சவுக்கடி: “நானோ, எனது அமைச்சரவையோ அல்லது எம்.பிக்களோ மக்களின் ஒரு சதத்தைக் கூட திருடவோ வீண்விரயம் செய்யவோ மாட்டோம். அவ்வாறு செய்பவர்களுக்கு இந்த அரசில் இடமில்லை” என ஜனாதிபதி முழங்கினார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்: “முன்னாள் ஜனாதிபதிகளும் விதிவிலக்கல்ல”

“அதிகாரம், செல்வம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றைப் பார்க்காமல் இன்று சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையின் வரலாற்றிலேயே முதல் முறையாக முன்னாள் ஜனாதிபதிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும், நீதிமன்றத்திற்கும் அழைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். பஸ்களில் ஆட்களைத் திரட்டி வந்து வீதியில் கோஷமிடுவதற்காக அரசாங்கம் தனது சட்ட நடவடிக்கைகளை மாற்றப்போவதில்லை என்றும் அவர் எச்சரித்தார்.

12 ஆண்டுகளின் பின் உயிர் பெற்ற நிந்தவூர் கலாசார நிலையம்!

1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு முதல் முழுமையாகக் கைவிடப்பட்டிருந்த நிந்தவூர் கலாசார நிலையத்தின் பணிகள், இப்பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  • மொத்த திட்ட மதிப்பு: 945.04 மில்லியன் ரூபா.
  • தற்போதைய ஒதுக்கீடு: 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இறுதி இலக்கு: எஞ்சிய நிதியும் தேவைக்கேற்ப ஒதுக்கப்பட்டு, 2027 திசம்பர் 31 ஆம் திகதிக்குள் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படும்.
முக்கிய பிரமுகர்களின் கருத்துக்கள்:
  • நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா: “கடந்த தேர்தல் காலத்தில் இப்பிரதேச மக்களின் மிக முக்கிய கோரிக்கையாக இந்த கலாசார நிலையமே இருந்தது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கி, இன்று பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதிக்கு நிந்தவூர் மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
  • கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர: “30 வருட யுத்தத்தினால் கிழக்கு மாகாண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த அரசாங்கம் இன, மத பேதமின்றிச் செயற்படுகிறது. இந்த கலாசார மண்டபம் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான அடித்தளமாக அமையும்.”

இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நாகவில்லுவில் ஒளிரும் வீதிகள்; வெள்ளத் தடுப்புப் பணிகளும் தீவிரம்!

புத்தளம் பிரதேச சபைக்குட்பட்ட நாகவில்லு, எருக்கலம்பிட்டி கிராம மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு மிகத் துரிதமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஷாஹின் ரீஷா அவர்களின் நேரடி வழிகாட்டலில், அப்பகுதியில் பழுதடைந்திருந்த வீதி மின்விளக்குகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், வடிகான் துப்பரவுப் பணிகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருளை விரட்டிய 35 மின்விளக்குகள்!

எருக்கலம்பிட்டி கிராமத்தின் குறுக்கு வீதிகளில் உள்ள சுமார் 35 வீதி மின்விளக்குகள் பழுதடைந்திருந்ததன் காரணமாக, இரவு வேளைகளில் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். குறிப்பாக, இப்பகுதிகளில் இருளைப் பயன்படுத்தி சில இளைஞர்கள் தவறான நடத்தைகளில் ஈடுபடுவதாக மக்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். அத்துடன், பொதுமக்கள் இரவு வேளையில் பாதுகாப்பாகப் பயணிக்க முடியாத நிலையும் காணப்பட்டது.

பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையையும் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு, கடந்த இரண்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட தீவிர திருத்தப்பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் தியாகத் திருநாளான ஈதுல் அழ்ஹா (ஹஜ் பெருநாள்) தினத்தை முன்னிட்டு, மக்கள் அச்சமின்றி நடமாடும் வகையில் இத்திருத்தப்பணி மிகவும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதாக பிரதேச சபை உறுப்பினர் ஷாஹின் ரீஷா எமது ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகத்திற்கு தெரிவித்தார்.

இதேபோன்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பதாகவும், ஜனாப் ஷாஹீன் ரீஸாவின் வழிகாட்டலில் இப்பகுதியின் குறுக்கு வீதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் திருத்தப்பட்டு மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

பருவமழைக்கு முன் அதிரடி: பெகோ இயந்திரம் மூலம் வடிகான்கள் துப்பரவு!

இதேவேளை தற்போது ஆரம்பமாகியுள்ள பருவப்பெயர்ச்சி மழையினை அடுத்து, கிராமத்தில் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மற்றொரு பாரிய வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸா அவர்கள் புத்தளம் பிரதேச சபை தலைவரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, பிரதேச சபைத் தலைவரின் நேரடி கண்காணிப்பில் வடிகான்களைத் துப்பரவு செய்யும் பணிகள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மருங்கில் உள்ள வீதியோர வடிகான்கள் மற்றும் கிராமத்தின் குறுக்கு வீதிகளில் உள்ள வடிகான்கள் ‘பெகோ’ இயந்திரங்கள் மூலம் வடிகான்களில் தேங்கியிருந்த கழிவுகள் மற்றும் மண் திட்டுக்கள் அகற்றப்பட்டு துப்பரவு செய்யப்பட்டன.

மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியும் நன்றியும்!

எருக்கலம்பிட்டி கிராமத்தின் ‘C’ பகுதியில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறானதொரு முறையான வடிகான் துப்பரவுப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதனால் இப்பகுதியில் வழக்கமாக ஏற்படும் வெள்ள அபாயம் நீங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்களின் தேவைகளை உணர்ந்து, பண்டிகைக் காலத்திலும், மழைக்காலத்திலும் மிகத் துரிதமாகச் செயற்பட்ட பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸாவிற்கு எருக்கலம்பிட்டி கிராம மக்கள் தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

நுரைச்சோலை மின்நிலையம் குறித்து ஆராய அவசர உப குழு நியமனம்!

0

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு உப குழு

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத் அவர்கள் தலைமையில் உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் கூடிய போதே இந்த உபகுழு நியமிக்கப்பட்டது.

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து கலந்துரையாடுவதற்கு சுற்றாடல் அமைச்சு, வலுசக்தி அமைச்சு, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்கள் சிலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இதில் பங்கெடுத்திருந்தனர்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாட்டினால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் குறித்தும், அதற்குப் பொறுப்பான தரப்பினர் மற்றும் நிறுவனங்களால் ஏதேனும் குறைபாடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் பின்னரே குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக உப குழுவொன்றை நியமிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள ஜேர்மன், ஜப்பான் மற்றும் சீன தூதுரகங்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் போன்றவற்றுடன் கலந்துரையாடி அந்தந்த நாடுகளில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள சூழல்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வது தொடர்பில் அதிகாரிகளுக்கு பயிற்சித் திட்டமொன்றை வழங்குவது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கவிருப்பதாக குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் NTM. தாஹிர்
புத்தளம் மாவட்ட செயலாளர் திரு. சிந்திக்க சில்வா
பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி

புத்தளத்தில் ரத்மல்யாய, தம்மன்னகம பகுதிகளில் இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

0

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எளிய மக்களின் ஆகப்பெரிய கனவு, தமக்கென ஒரு நிரந்தரமான ஒரு வீட்டை அமைத்துக் கொள்வதாகும். அந்தக் கனவை நனவாக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான மற்றுமொரு உன்னதப் படிநிலை இன்று புத்தளத்தில் அரங்கேறியுள்ளது.

புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இரண்டு வெவ்வேறான கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வந்த இரு குடும்பங்களுக்கு, அரசாங்க நிதியுதவியுடன் கூடிய நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (22) மிகச் சிறப்பாக நடைபெற்றன.

ரத்மல்யாய கிராமத்தில் புதிய விடியல்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்காகக் கொண்டு இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, புத்தளம் பிரதேச செயலகப் பிரிவின் ரத்மல்யாய கிராம உத்தியோகத்தர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஒரு வறிய குடும்பத்திற்கான புதிய வீட்டின் அடிக்கல் இன்று காலை நாட்டி வைக்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.J.M. பைசல் அவர்களின் கரங்களால் இந்த அடிக்கல் உத்தியோகபூர்வமாக நாட்டி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்:

  • புத்தளம் பிரதேச சபை உறுப்பினரும் பிரஜா சக்தி தலைவருமான சகோதரர் கியாஸ்,
  • தேசிய மக்கள் சக்தியின் (NPP) முக்கிய கட்சி உறுப்பினர்கள்,
  • அரச அதிகாரிகள் மற்றும் வீடமைப்புத் திட்ட உத்தியோகத்தர்கள்,
  • பயனாளி குடும்பத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தம்மன்னகம கிராமத்திலும் தொடர்ந்த மக்கள் சேவை

இதனைத் தொடர்ந்து, புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தம்மன்னகம கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் மற்றுமொரு வறிய குடும்பத்திற்கான நிரந்தர வீட்டுக்காக பாராளுமன்ற உறுப்பினர் M.J.M. பைசல் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன.

உரிய தகுதியின் அடிப்படையில், மிகவும் கஷ்டப்படும் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, இந்த வீடுகள் வழங்கப்படுவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தம்மன்னகமவில் நடைபெற்ற நிகழ்வில்:

  • பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் முகமது பைசல்,
  • புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரஜிதா,
  • பிரஜா சக்தி தலைவர் சகோதரர் நிமேஸ்,
  • தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் வீட்டுத்திட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

“சொந்தமாக ஒரு வீடு என்பது எட்டாக்கனியாக இருந்த நிலையில், அரசாங்கத்தின் இந்த நிதியுதவி எமது வாழ்நாளின் ஆகச்சிறந்த பரிசாகும்” என வீடுகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் இதன்போது நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் மக்கள் நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக, அடிமட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த வீடமைப்புப் பணிகள் தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.