Tuesday, June 9, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 7

அவசர எச்சரிக்கை: கொட்டும் மழையால் அதிரும் 6 மாவட்டங்கள்!

0

நாடு முழுவதும் வெளுத்து வாங்கி வரும் கனமழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, இலங்கையின் மிக முக்கிய 6 மாவட்டங்களுக்குப் பாரிய நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இந்த அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த நிலச்சரிவுக்கான ஆரம்பக்கட்ட எச்சரிக்கையானது நாளை (மே 23) இரவு 9:00 மணி வரை அமலில் இருக்கும் என NBRO அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

🛑 உயிரைக் காக்க உடனே நகருங்கள்: 7 பிரதேசங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ (Level 3)!

நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதால், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மிக ஆபத்தான ‘நிலை 3’ (Level 3 Red Warning) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • கேகாலை மாவட்டம்: தெரணியகல, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட.
  • இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹெலியகொட.

முக்கிய குறிப்பு: சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போர், நிலச்சரிவுக்கான அறிகுறிகள் (மண்ணில் வெடிப்பு, மரங்கள் சாய்வது, திடீர் நீரூற்றுகள்) தென்பட்டால் கணப்பொழுதும் தாமதிக்காமல் பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

⚠️ தீவிரக் கண்காணிப்பில் இருக்கும் ஏனைய பகுதிகள் (Level 2 எச்சரிக்கை):

மேலும் 6 மாவட்டங்களைச் சேர்ந்த பல பிரதேசங்களுக்கு ‘நிலை 2’ (Level 2) எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில்

மாவட்டம்அபாயப் பகுதிகள் (Level 2)
கொழும்புசீதாவக்க, படுகா
கம்பஹாமீரிகம, திவுலபிட்டிய, அத்தனகல்ல
களுத்துறைஅகலவத்த, மத்துகம, ஹொரண, புலத்சிங்கள, இங்கிரிய, பாலிந்தநுவர
கேகாலைபுலத்கோஹுபிட்டிய, யாட்டியாந்தோட்டை
நுவரெலியாஅம்பகமுவ
இரத்தினபுரிபெல்மதுல்ல, கிரியெல்ல, எலபாத்த, கலவானை, நிவித்திகல
🌧️ செய்திப் பிரிவு வழங்கும் அவசர வேண்டுகோள்:

மழை தொடர்ந்து நீடிப்பதால், மலைப்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இரவு வேளைகளில் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்தியாவசியத் தேவையின்றி ஆபத்தான மலைப் பாதைகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் மக்கள் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

உங்கள் உயிரும், உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பும் உங்கள் கைகளில்தான் உள்ளது! வானிலை மாற்றங்களை உடனுக்குடன் அவதானியுங்கள்!

9 ஆண்டு கால முடக்கம்? மாகாண சபை தேர்தலுக்கு விழுந்தது இடி!

0

கொழும்பு, மே 22 (டெய்லி மிரர்) – நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டிற்குள் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) முதன்மைக் கூட்டணிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ‘டெய்லி மிரர்’ நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அடுத்த ஆண்டே (2027) ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

9 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் மாகாண சபைகள்!

அதிகாரப் பகிர்வு, அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஆகியவற்றுக்குத் தேசிய மக்கள் சக்தி (NPP) தனது தேர்தல் கொள்கைப் பிரகடனத்தில் முக்கியத்துவம் அளித்திருந்தது. இருப்பினும், கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் மாகாண சபைகள் அனைத்தும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி முடங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.

தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணைக்குழுவிற்குப் பெரும் சவாலாக இருப்பது தற்போதைய அரசியல் சூழல் மட்டுமல்ல; தேர்தல் முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு “சட்டச் சிக்கல்” தான் இதற்குக் பிரதான காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

தேர்தலை முடக்கிய ‘விகிதாசார முறை’ மாற்றம்

மாகாண சபை தேர்தல் முறையை மாற்றுவதற்காக 2017 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் (திருத்தச்) சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ‘கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவ முறை’ இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

  • 50% பிரதிநிதிகள்: வட்டார ரீதியாக (Wards) நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • 50% பிரதிநிதிகள்: விகிதாசாரப் பட்டியலின் (Proportional lists) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த புதிய முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்குத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு தனது அறிக்கையை 2018 இல் சமர்ப்பித்தது. ஆனால், அரசியல் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான முரண்பாடுகள் காரணமாக, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட அந்த அறிக்கை பெரும்பான்மை ஆதரவின்றி தோற்கடிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் நாடாளுமன்றக் குழுவின் முடிவும்

புதிய முறையின் கீழ் எல்லைகளை மறுநிர்ணயம் செய்வது சட்டரீதியாகவும், கால அவகாசத்தின் அடிப்படையிலும் பெரும் சவாலாக உள்ளது. எனவே, தேர்தலை மேலும் தாமதப்படுத்தாமல், “பழைய தேர்தல் முறையிலேயே” உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும், எந்த தேர்தல் முறையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்தலாம் என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவும் தற்போது நாடாளுமன்ற விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் சட்டத் திருத்தங்களைத் தொடர்ந்தே, 9 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் மாகாண சபைகளுக்குப் புதிய உயிர் கிடைக்குமா என்பது தெரியவரும். அதுவரை மக்கள் பிரதிநிதிகள் இல்லாத மாகாண நிர்வாகமே தொடரும் எனத் தெரிகிறது.

பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டது வெள்ள அபாய எச்சரிக்கை!

0

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சில நீர்நிலைகளை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி களனி மற்றும் களு கங்கையை அண்மித்த சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, களனி கங்கையை அண்மித்த ருவன்வெல்ல, சீத்தாவக்க, தொம்பே, தெஹியோவிட்ட, எஹெலியகொட, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கோபிட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், அதனை அண்மித்த சில தாழ்நிலப்பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபத்தா, கிரியெல்ல ஆகிய தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்குரிய அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பு ஆமர் வீதி பகுதியில் ஜெயத்தவனாராமய விஹாரையை அண்மித்த வீதியில், வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளாதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அத்துடன் கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின், ரன்வல பஹன பகுதி, நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளத்தால் மூழ்கிய சிலாபம் வைத்தியசாலை!

0

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக அந்த சிகிச்சை அறைகளில் இருந்த நோயாளர்களை வேறு சிகிச்சை அறைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தினேஷ் கொக்கல தெரிவித்தார். 

இதேவேளை அண்மையில் நாட்டை உலுக்கிய டித்வா புயலினால் சிலாபம் வைத்தியசாலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதுடன், பல கோடி பெறுமதியான வைத்திய உபகரணங்களும் சேதமடைந்திருந்தன.

டித்வா புயலிலிருந்து சிலாபம் வைத்தியசாலை தற்போது மெல்ல மெல்ல மீண்டு வரும் இவ்வேளை, மீண்டுமொரு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது நோயாளர்களையும், பொதுமக்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை, நேற்று இரவு முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக புத்தளம் பகுதியின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சில வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

புத்தளம் – மாதம்பை, கலகிட்டியாவ வீதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் அவ்வீதியின் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. 

இதன் காரணமாக அவ்வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு மாதம்பை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இலங்கையின் அந்நிய செலாவணி சந்தை பாரிய நெருக்கடியில்: ஹர்ஷ!

0

இலங்கையின் அந்நிய செலாவணி சந்தை தற்போது ஒரு அபாயகரமான “நச்சுச் சுழற்சியில்” (Vicious Cycle) சிக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவதைத் தடுக்கவேண்டுமானால், சந்தையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிக அவசரமானத் தேவை என அவர் வலியுறுத்தினார்.

வேகமாக வீழ்ச்சியடையும் ரூபாயின் மதிப்பு

சந்தையானது முழுக்க முழுக்க “நம்பிக்கை” என்பதன் அடிப்படையிலேயே இயங்குகிறது என்று குறிப்பிட்ட அவர், அந்த நம்பிக்கை உடையும் போது ஒட்டுமொத்த சந்தையும் வீழ்ச்சியடையும் என எச்சரித்தார். இலங்கை வங்கியின் தரவுகளின்படி, ஒரு அமெரிக்க டாலரின் விற்பனை விலை 354 ரூபாயைக் கடந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த வீழ்ச்சி எங்கு போய் நிற்கும் என்ற கேள்வி எழுந்துள்ளதாகக் கூறினார்.

சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த நிச்சயமற்ற தன்மையால் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.

ஏற்றுமதியாளர்கள் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பில், தங்களிடமுள்ள டாலர்களை ரூபாயாக மாற்றாமல் காலம் தாழ்த்துகின்றனர்.

இதேபோல இறக்குமதியாளர்கள் எதிர்காலத்தில் டாலரின் விலை இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், தற்போதே டாலர்களைக் கொள்வனவு செய்ய முற்படுகின்றனர்.

இதன் காரணமாக சந்தையில் டாலருக்கான தட்டுப்பாடு அதிகரிப்பதுடன், முறையான கேள்வி மற்றும் வழங்கல் (Bid and Offer) இல்லாத நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

சந்தையில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளதால், அதனை ஈடுசெய்ய அடுத்த வாரமளவில் வட்டி விகிதங்கள் 50 முதல் 100 புள்ளிகள் (0.5% – 1%) வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார். அவ்வாறு வட்டி விகிதம் அதிகரித்தால்:

  1. அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் வட்டி அதிகரிக்கும்.
  2. மக்கள் மீது சுமத்தப்படும் வரி அளவு மேலும் அதிகரிக்கக்கூடும்.
அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பு

“நாடு வீழ்ச்சியடைய நான் விடமாட்டேன்” என ஜனாதிபதி கூறுவது மட்டும் சந்தைக்குப் போதுமானதல்ல என்று குறிப்பிட்ட அவர், சந்தை அரசியல் ரீதியானது அல்ல என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். நிதி அமைச்சு, திறைசேரி மற்றும் மத்திய வங்கி ஆகியவை இணைந்து சந்தையில் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பத் தேவையான முறையான பொறிமுறையை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தவறும் பட்சத்தில், இந்த பொருளாதார நச்சுச் சுழற்சி நாட்டை மேலும் பாரிய விபரீதத்திற்கு இட்டுச் செல்லும் என அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

உலகின் மிகச்சிறந்த நாடுகளின் வரிசையில் இலங்கை 4-வது இடம்!

0
குடும்பங்கள் குடியேறச் சிறந்த நாடுகள்: உலகளவில் இலங்கை 4-வது இடம்!

புதிய நாடு ஒன்றிற்கு இடம்பெயரும் போது கவனிக்க வேண்டிய மிக முக்கிய காரணிகளான சுகாதாரத் தரம், வாழ்க்கைச் செலவு, வேலைவாய்ப்புகள் மற்றும் குடும்பங்களுக்கான உகந்த சூழல் உள்ளிட்ட 34 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, உலகளவில் பிரபலமான 82 நாடுகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் இலங்கை மிக முக்கிய இடத்தை பிடித்துளளது.

இந்த ஆய்வின் முடிவில், குடும்பங்களுடன் குடியேறுவதற்கு மிகச்சிறந்த நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்தையும், சீனா இரண்டாம் இடத்தையும், அமெரிக்கா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. இவற்றைத் தொடர்ந்து இலங்கை 4-வது இடத்தைக் கைப்பற்றி ஆசிய பிராந்தியத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தரவரிசையை தீர்மானித்த முக்கிய காரணிகள்

கடந்த 2025-ஆம் ஆண்டின் அறிக்கையோடு ஒப்பிடுகையில், இந்த 2026-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கூடுதல் காரணிகளும் விரிவான அளவீடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குழந்தைகளுடன் இடம்பெயரும் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கும் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் குறித்து இந்த ஆய்வு தீவிரமாக ஆராய்ந்துள்ளது.

  • கல்வியின் தரம்
  • மலிவான குழந்தை பராமரிப்புச் செலவுகள் (Childcare Affordability)
  • மகப்பேறு மற்றும் பிரசவ விடுப்புக் கொள்கைகள் (Maternity & Paternity Leave)
  • சர்வதேசப் பள்ளிகளுக்கான வாய்ப்புகள் (International Schooling) போன்ற முக்கிய விடயங்கள் இதில் உற்றுநோக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் முன்னேற்றத்திற்கு வழியமைத்த காரணங்கள்

கடந்த ஆண்டு (2025) இதே தரவரிசையில் இலங்கை முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் புதிய மற்றும் விரிவுபடுத்தப்பட்ட அளவீடுகளுக்கு மத்தியிலும் இலங்கை முன்னணியில் திகழ்கிறது.

இலங்கையின் தரமான கல்வி முறை மற்றும் மிகவும் மலிவான குழந்தை பராமரிப்புச் செலவுகள் ஆகியவையே இலங்கை 4-வது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

மேலும், குடியேறும் குடும்பங்களுக்கு அத்தியாவசியத் தேவையாகக் கருதப்படும் “சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு” கொண்ட நாடுகளின் வரிசையிலும் இலங்கை 5-வது இடத்தைப் பிடித்து மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு (முதல் 3 இடங்கள்)

தரவரிசைநாடுமுக்கிய சிறப்பம்சங்கள்
01ஸ்பெயின்மலிவான குழந்தை பராமரிப்பு, தாராளமான பெற்றோர் விடுமுறைக் கொள்கைகள் (2026 முதல் கூடுதல் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அமலாகிறது) மற்றும் வலுவான பொதுக் கல்வி முறை.
02சீனாவிரிவான கல்வி உள்கட்டமைப்பு, முக்கிய நகரங்களில் அதிகரித்து வரும் சர்வதேசப் பள்ளிகளின் தேர்வுகள் மற்றும் மேம்பட்டு வரும் பெற்றோர் விடுமுறை வசதிகள்.
03அமெரிக்காசில மாநிலங்களில் குழந்தை பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருந்தபோதிலும், சர்வதேசப் பள்ளிகளின் தரம் மற்றும் பலதரப்பட்ட கல்விப் பாதைகள்.

இலங்கைக்கு அடுத்தபடியாக, சிறந்த சர்வதேசப் பள்ளிகள் மற்றும் கவர்ச்சிகரமான பெற்றோர் நலன்புரிச் சலுகைகள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும் முக்கிய நாடாகத் தொடர்ந்து நீடிக்கிறது.

வெளிநாடுகளுக்கு இடம்பெயர நினைக்கும் குடும்பங்களுக்கு, வெறும் கனவுகளை விட அன்றாட நடைமுறைச் சாத்தியக்கூறுகளே மிக முக்கியம்” என ரெமிட்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய அளவீடுகளின் சேர்க்கை காரணமாக கடந்த ஆண்டு பின்வரிசையில் இருந்த பல நாடுகள் இம்முறை முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ள நிலையில், இலங்கை தொடர்ந்து தனது வலுவான நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

வாகன இறக்குமதி வரி விவகாரம்: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு!

0

வாகன இறக்குமதி மீதான மேலதிக வரி (Surcharge) விதிக்கப்படுவதற்கு முதல் நாள், 4,000 வாகனங்களுக்காக கடன் கடிதங்கள் (Letters of Credit – LC) திறக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது என பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் விளக்கமளிக்கையில், 4,000 வாகனங்களுக்கு கடன் கடிதங்கள் திறக்கப்பட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யான தகவலாகும் என்று குறிப்பிட்டார்.

உண்மை நிலவரம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில்

  • திறக்கப்பட்ட கடன் கடிதங்களின் எண்ணிக்கை: 380 (கடந்த மே 15ஆம் திகதி மட்டும்)
  • இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை: 1,782 வாகனங்கள்
  • இதன் மொத்தப் பெறுமதி: 23.71 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் புள்ளிவிவரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டவை என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“நாட்டில் ஏதோ ஒரு பாரிய பிரச்சனை இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி, பொதுமக்களைத் திசைதிருப்பவே இவ்வாறான பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இத்தகைய ஆதாரமற்ற செய்திகளை நம்பி, பொதுமக்கள் தேவையற்ற கொள்வனவுகளில் ஈடுபட்டு நஷ்டமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை மக்கள் நம்பவேண்டாம் எனவும் பிரதி அமைச்சர் இதன்போது பொதுமக்களிடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் இலவச சட்ட உதவி முகாம்கள்!

0

பொதுமக்களின் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும், சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் புத்தளம் மாவட்டத்தில் விசேட சட்ட உதவி முகாம்கள் நடைபெறவுள்ளன.

“சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் – புத்தளம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் இந்நிகழ்வு, நீதி அமைச்சின் வழிகாட்டலில் பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாருக்காக இந்த முகாம்?

தினசரி வாழ்வில் நீங்கள் ஏதேனும் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்கிறீர்களா? அவற்றுக்குச் சட்டபூர்வமான தீர்வு என்னவென்று தெரியாமல் தவிக்கிறீர்களா? அத்தகையவர்களுக்காகவே இந்த முகாம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு வருகை தரும் பொதுமக்கள் சிரேஷ்ட சட்டத்தரணிகளிடம் இருந்து இலவச ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஊடாகப் பெறவேண்டிய சட்ட உதவிகளுக்கான வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, தமது உரிமைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

முகாம்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் திகதிகள்

இந்த நடமாடும் சேவை இரண்டு நாட்களாக மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது:

திகதிநேரம்இடங்கள்
மே 23காலை 10:00 – மாலை 4:001. தம்மிஸ்ஸர கல்லூரி – நாத்தாண்டிய
2. ஆனந்த கல்லூரி – சிலாபம்
மே 24காலை 10:00 – மாலை 4:001. கண்ணங்கர ஆரம்பப் பாடசாலை – ஆனமடுவ
2. அனகாரிக தர்மபால ஆரம்பப் பாடசாலை – புத்தளம்
பதிவு செய்வது எப்படி?

அதிகப்படியான நெரிசலைத் தவிர்க்கவும், சிறந்த சேவையை உறுதிப்படுத்தவும் முன்கூட்டியே பதிவு செய்துகொள்வது அவசியமாகும்.

  • இணையவழிப் பதிவு: https://ee.kobotoolbox.org/x/izkeIBkm என்ற இணைப்பின் மூலம் உங்கள் விபரங்களை வழங்கலாம்.குறிப்பு: படிவத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள “மொழியைத் தேர்ந்தெடுக்கவும்” (Select Language) என்ற தெரிவைப் பயன்படுத்தி தமிழ் மொழியில் விபரங்களை நிரப்ப முடியும்.
  • மேலதிக விசாரணைகளுக்கு: பதிவு செய்தல் அல்லது மேலதிக விபரங்களுக்கு நிஷாதி பிரமோத்யா – 0759066774 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்ளவும்.

இந்த மாபெரும் மனிதாபிமானப் பணியினை இலங்கை நீதி அமைச்சுடன் இணைந்து, ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), யுனிசெப் (UNICEF), மற்றும் சர்வோதய அமைப்பு ஆகியன JURE (Support to Justice Sector Project) திட்டத்தின் கீழ் முன்னெடுக்கின்றன.

சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண இது ஒரு அரிய வாய்ப்பாகும். எனவே, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த இலவச சேவையினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மட்டக்களப்பில் புதிய நூலகக் கட்டிடத்தை திறந்த ஜனாதிபதி!

0

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. 

தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் காண்பதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். 

இதற்கு இணையாக, பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

இந்தப் புதிய நூலகக் கட்டிடத்தில், சிறுவர்களுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காகத் தனியானதொரு பிரிவு நிறுவப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். 

நாட்டில் வாசிப்பு கலாசாரம் குறைந்து வரும் இவ்வேளையில், தமிழ் மக்கள் இன்னமும் வாசிப்பதில் காட்டி வரும் ஆர்வம் பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நூலகம் ஒன்றைத் திறப்பது என்பது சிறைச்சாலையின் தேவையை இல்லாமல் செய்வதாகும் என்றும், இந்த பொது நூலகத்தின் புதிய கட்டிடத்தைத் திறப்பதன் மூலம் தமிழ் மக்களின் புத்தக வாசிப்பு கலாசாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்றும் தெரிவித்தார். 

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, மாநகர சபை ஊழியர்களுடன் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். 

இதன் போது மட்டக்களப்பு மாநகர சபையின் நகரபிதா கே. சிவம் பாக்கியநாதன், ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார். 

இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதியினால் நூலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.

87 போன்களுடன் இலங்கை வந்த 3 சீனர்கள் அதிரடி கைது!

0

இணையவழி (சைபர்) குற்றங்களை அரங்கேற்றும் நோக்கில், இலங்கைக்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகை கைபேசிகளுடன் சீன நாட்டவர்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 5,140,000 ரூபாய் (51 இலட்சத்து 40 ஆயிரம்) பெறுமதியான அதிநவீன கைபேசிகள் மற்றும் அவற்றுக்கான மின்கலங்கள் (Batteries) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விமான நிலையத்தின் எவ்வித பொருட்களும் இல்லை என்பதைக் குறிக்கும் ‘பசுமை வழித்தடம்’ (Green Channel) ஊடாக மிகவும் சாதாரணமாக தப்பிச் செல்ல முயன்ற போதே, இவர்களின் பதற்றமான நடமாட்டத்தைக் கண்டு சுங்க அதிகாரிகள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 34 வயதுடைய சீனப் பெண் ஒருவரும், 35 வயதுடைய இரு சீன ஆண்களும் அடங்குவர்.

மறைக்கப்பட்ட விசித்திர முறைகள்: மிட்டாய் முதல் ஜாக்கெட் வரை!

அதிகாரிகள் இவர்களின் உடமைகளைச் சோதனையிட்ட போது, திரைப்பட பாணியில் கைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த விதம் அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட சீன ஆண்களில் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான பையை சோதித்த போது, மிட்டாய்கள் மற்றும் சாக்கலேட்டுகளுக்கு நடுவே கைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி, அவர் அணிந்திருந்த ஆடைக்கு அடியில் பிரத்தியேகமாக தைக்கப்பட்டிருந்த இரகசிய ஜாக்கெட் ஒன்றிற்குள் பல கைபேசிகளை அவர் மறைத்து வைத்திருந்ததும் அம்பலமானது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சீனப் பெண் அணிந்திருந்த காலணியின் உள்பகுதியிலும் (Insoles), மற்றைய சீனப் பயணியின் பயணப் பையிலிருந்தும் ஒட்டுமொத்தமாக 87 கைபேசிகளும், அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் 140 மின்கலங்களும் சுங்கத்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

முக்கிய சந்தேகம்: சாதாரண வர்த்தக நோக்கத்திற்காக அன்றி, இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பெருமளவிலான இணையவழி (Cyber Crimes) நிதி மோசடிப் பணிகளுக்கு பயன்படுத்துவதற்காகவே இவ்வளவு கைபேசிகளும் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் பலமாக சந்தேகிக்கின்றனர்.

தற்போது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளின் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த மூன்று சீனப் பிரஜைகளும், மேலதிக விரிவான விசாரணைகளுக்காக விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.