Tuesday, June 9, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 8

மட்டக்களப்பில் புதிய நூலகக் கட்டிடத்தை திறந்த ஜனாதிபதி!

0

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. 

தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் காண்பதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். 

இதற்கு இணையாக, பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

இந்தப் புதிய நூலகக் கட்டிடத்தில், சிறுவர்களுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காகத் தனியானதொரு பிரிவு நிறுவப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். 

நாட்டில் வாசிப்பு கலாசாரம் குறைந்து வரும் இவ்வேளையில், தமிழ் மக்கள் இன்னமும் வாசிப்பதில் காட்டி வரும் ஆர்வம் பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நூலகம் ஒன்றைத் திறப்பது என்பது சிறைச்சாலையின் தேவையை இல்லாமல் செய்வதாகும் என்றும், இந்த பொது நூலகத்தின் புதிய கட்டிடத்தைத் திறப்பதன் மூலம் தமிழ் மக்களின் புத்தக வாசிப்பு கலாசாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்றும் தெரிவித்தார். 

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, மாநகர சபை ஊழியர்களுடன் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். 

இதன் போது மட்டக்களப்பு மாநகர சபையின் நகரபிதா கே. சிவம் பாக்கியநாதன், ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார். 

இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதியினால் நூலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.

87 போன்களுடன் இலங்கை வந்த 3 சீனர்கள் அதிரடி கைது!

0

இணையவழி (சைபர்) குற்றங்களை அரங்கேற்றும் நோக்கில், இலங்கைக்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகை கைபேசிகளுடன் சீன நாட்டவர்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 5,140,000 ரூபாய் (51 இலட்சத்து 40 ஆயிரம்) பெறுமதியான அதிநவீன கைபேசிகள் மற்றும் அவற்றுக்கான மின்கலங்கள் (Batteries) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விமான நிலையத்தின் எவ்வித பொருட்களும் இல்லை என்பதைக் குறிக்கும் ‘பசுமை வழித்தடம்’ (Green Channel) ஊடாக மிகவும் சாதாரணமாக தப்பிச் செல்ல முயன்ற போதே, இவர்களின் பதற்றமான நடமாட்டத்தைக் கண்டு சுங்க அதிகாரிகள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 34 வயதுடைய சீனப் பெண் ஒருவரும், 35 வயதுடைய இரு சீன ஆண்களும் அடங்குவர்.

மறைக்கப்பட்ட விசித்திர முறைகள்: மிட்டாய் முதல் ஜாக்கெட் வரை!

அதிகாரிகள் இவர்களின் உடமைகளைச் சோதனையிட்ட போது, திரைப்பட பாணியில் கைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த விதம் அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட சீன ஆண்களில் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான பையை சோதித்த போது, மிட்டாய்கள் மற்றும் சாக்கலேட்டுகளுக்கு நடுவே கைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி, அவர் அணிந்திருந்த ஆடைக்கு அடியில் பிரத்தியேகமாக தைக்கப்பட்டிருந்த இரகசிய ஜாக்கெட் ஒன்றிற்குள் பல கைபேசிகளை அவர் மறைத்து வைத்திருந்ததும் அம்பலமானது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சீனப் பெண் அணிந்திருந்த காலணியின் உள்பகுதியிலும் (Insoles), மற்றைய சீனப் பயணியின் பயணப் பையிலிருந்தும் ஒட்டுமொத்தமாக 87 கைபேசிகளும், அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் 140 மின்கலங்களும் சுங்கத்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

முக்கிய சந்தேகம்: சாதாரண வர்த்தக நோக்கத்திற்காக அன்றி, இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பெருமளவிலான இணையவழி (Cyber Crimes) நிதி மோசடிப் பணிகளுக்கு பயன்படுத்துவதற்காகவே இவ்வளவு கைபேசிகளும் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் பலமாக சந்தேகிக்கின்றனர்.

தற்போது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளின் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த மூன்று சீனப் பிரஜைகளும், மேலதிக விரிவான விசாரணைகளுக்காக விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிரடியாக உயர்ந்த டொலர்: 342 ரூபாயைக் கடந்து புதிய உச்சம்!

0

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று (20) 342 ரூபாயைத் தாண்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீத அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.08 ரூபாயாகவும், விற்பனை விலை 342.70 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நேற்று (19) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.23 ரூபாயாகவும், விற்பனை விலை 338.07 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது.

இதேவேளை, இன்றைய தினம் அரச வங்கி ஒன்றில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 345.20 ரூபாயாகப் பதிவாகியுள்ளதுடன், அதன் கொள்வனவு விலை 335.65 ரூபாயாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வரிச் சட்டத்தால் நடுத்தர மக்களை நசுக்கப் பார்க்கிறது அரசு!

0

இறைவரிச் சட்டத் திருத்தங்கள் மூலம் பொதுமக்களைச் சிறையிலடைக்க முயற்சி – பைசர் முஸ்தபா எச்சரிக்கை

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் “மிகவும் கடுமையானவை” (Draconian) எனவும், முன்னர் சிவில் விவகாரங்களாகக் கருதப்பட்ட நிர்வாகத் தவறுகளை குற்றவியல் குற்றங்களாக மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிர்வாகத் தவறுகளுக்கு சிறைத்தண்டனை, ஆண்டு வருமான அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறுதல், வரிப் பதிவு செய்யத் தவறுதல் அல்லது ஆணையாளர் நாயகம் முன்னிலையில் முன்னிலையாகத் தவறுதல், போன்ற விடயங்களுக்காக ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் 4 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் புதிய திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பெரிய நிறுவனங்களுக்கு இவற்றைக் கையாள தணிக்கையாளர்கள் (Auditors) உள்ளனர், ஆனால் ஒவ்வொரு குடிமகனும் வரி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், இத்தகைய சட்டங்களால் சாதாரண மக்களே பாதிக்கப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வரி ஏய்ப்புக்கும் சாதாரண நிர்வாகத் தவறுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும், இத்தகைய சிறு தவறுகளுக்காக ஒருவரை நீதவான் நீதிமன்றத்திற்கு இழுப்பது முறையற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு ரீதியான சிக்கல்கள், வரி மேன்முறையீடுகள் நிலுவையில் இருக்கும் போதே நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஆணையாளருக்கு அதிகாரம் வழங்க அரசாங்கம் ஏற்கனவே முயன்றதை அவர் நினைவு கூர்ந்தார். அத்தகைய நடவடிக்கை அரசியலமைப்பிற்கு முரணானது என்றும், அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் தீர்ப்பு அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

சிறு வணிகர்கள் மீதான வற் (VAT) வரிப் சுமை வற் வரிப்பிற்கான வரம்பை மாதத்திற்கு 5 மில்லியன் ரூபாவிலிருந்து 3 மில்லியன் ரூபாவாகக் குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவையும் முஸ்தபா கடுமையாக விமர்சித்தார். வற் வரி லாபத்தில் அல்லாமல் மொத்த வருமானத்திலேயே (Turnover) கணக்கிடப்படுவதால், இது சிறிய சில்லறை கடை உரிமையாளர்களைப் பெருமளவில் பாதிக்கும் என அவர் விளக்கினார்.

மொத்த வரிச்சுமை தற்போது 20.5% வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், வரிச் சுமையைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றியுள்ளதாகக் கூறி, இந்தத் தண்டனை நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

பாங்கொக்கிலிருந்து ‘கிரீன் செனல்’ ஊடாக வந்த ‘குஷ்’ போதைப்பொருள்

0

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ‘கிரீன் செனல்’ (Green Channel) ஊடாக இலங்கைக்குள் கடத்த முயன்ற 14 கிலோவிற்கும் அதிக எடையுடைய ‘குஷ்’ (Kush) போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகையின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 140.56 மில்லியன் ரூபா (14 கோடி ரூபாவிற்கும் அதிகம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

திட்டமிட்ட கடத்தல் முறியடிப்பு

தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து வருகை தந்த இரு இலங்கை பயணிகள், விமான நிலையத்தின் சுங்க சோதனைகள் ஏதுமற்ற ‘கிரீன் செனல்’ பகுதியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்த போதைப்பொருள் பொதிகளைக் கடத்த முயன்றுள்ளனர். எனினும், அங்கு கடமையில் இருந்த அதிகாரிகளின் துரித மற்றும் சாதுரியமான சோதனையின் போது இந்த பெரும் போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதன்போது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளின் மொத்த எடை 14.562 கிலோகிராம் என சுங்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, அவர்கள் இருவரும் கொழும்பு, தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் மீதும், கைப்பற்றப்பட்ட 14 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீதும் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அவர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில் விமான நிலையப் பாதுகாப்பு மற்றும் சுங்க சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் இக்கடத்தல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதுகாப்பை உறுதி செய்து புதிய சட்டமூலம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

0

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை (திருத்த) சட்டமூலமானது, நாட்டின் அரசியலமைப்பிற்கு முழுமையாக இணங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) காலை பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். 

அரசியலமைப்பின் 121 (1) ஆம் பிரிவின் கீழ் முன்வைக்கப்பட்ட சவாலொன்றைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். 

இந்தச் சட்டமூலம் ஒட்டுமொத்தமாகவும், அதேபோன்று அதில் உள்ள ஒவ்வொரு விதிகளும் அரசியலமைப்பின் எந்தவொரு பிரிவுக்கும் முரணாக அமையவில்லை என நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இடி,மின்னலுடன் வரும் பருவமழை; மக்களே விழிப்பாக இருங்கள்!

0

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30–40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த அர்ச்சுனா எம்.பி!

0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று தமிழ்நாடு தலைமைச் செயலக அலுவலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து உரையாடினார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் தமிழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

​பரஸ்பர நல்லுறவும் தமிழ் மக்கள் நலனும்​மிகவும் சுமுகமான மற்றும் நட்பு ரீதியிலான சூழலில் நடைபெற்ற இந்த உயர்மட்டச் சந்திப்பில், இந்தியா – இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நல்லுறவை அடுத்த கட்டத்திற்கு எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்து இருவரும் விவாதித்தனர்.

குறிப்பாக, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நல்வாழ்வு, கல்வி மற்றும் பொருளாதார உரிமைகள் குறித்தும், அவர்களது நலன்களைப் பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.​ மீனவர் பாதுகாப்பு மற்றும் ஒன்றுபட்ட வளர்ச்சி ​தமிழக மற்றும் ஈழத்துத் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வரும் மீனவர் பாதுகாப்பு குறித்து இச்சந்திப்பில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.

இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, எல்லையோரப் பதற்றங்களைத் தவிர்ப்பதற்கான சுமூகமான தீர்வுகள் குறித்து பேசப்பட்டது.​ மேலும், பிராந்திய அளவிலான ஒன்றுபட்ட வளர்ச்சி (Inclusive Growth) என்ற இலக்கை அடைவதற்கும், இரு நாட்டுத் தமிழர்களுக்கிடையிலான கலாச்சார மற்றும் பொருளாதாரப் பிணைப்பை வலுப்படுத்துவது அவசியம் என்றும் இருதரப்பிலும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.​

அந்த வகையில் இந்தச் சந்திப்பு ஆரோக்கியமானதொரு தொடக்கமாக அமைந்துள்ளது,” என சந்திப்பின் நிறைவில் பரஸ்பரம் நெகிழ்ச்சியோடு தெரிவிக்கப்பட்டது.​ இருநாட்டுத் தமிழ் மக்களின் உறவுப் பாலத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ள இச்சந்திப்பு, அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிளே-ஆஃப் போக உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? கதறும் ராஜஸ்தான்!

0

வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கிவிட்டு, மைதானத்தில் ‘பள்ளிக்குழந்தைகள்’ போல சொதப்பி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இந்த அவமானகரமான தோல்வியால் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் ரியான் பராக், தனது சொந்த அணி வீரர்களையே ஊடகங்களுக்கு முன்னால் கடுமையாகச் சாடியுள்ளார்.

“இப்படி ஒரு கேவலமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், நாங்கள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவே தகுதியற்றவர்கள்” என்று அவர் ஆவேசமாகப் பேசியிருப்பது ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கை நழுவிய கேட்ச்… கதறிய சங்கக்காரா!

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த முக்கியமான லீக் ஆட்டத்தில், டெல்லி அணி 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. டெல்லி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் பூஜ்ஜிய ரன்னில் இருந்தபோது, முதல் ஓவரிலேயே மிக எளிமையான ஒரு கேட்ச் வாய்ப்பை ராஜஸ்தான் வீரர் யாஷ் ராஜ் புஞ்சா கோட்டைவிட்டார்.

விளையாட்டின் அடிப்படைத் தார்மீகத்தைக் கூட மறந்து கோட்டைவிடப்பட்ட அந்த ஒரு கேட்ச், ஒட்டுமொத்த போட்டியின் தலையெழுத்தையே மாற்றியது. உயிர் பிழைத்த ராகுல், அபிஷேக் போரெல்லுடன் இணைந்து ராஜஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

இந்த ஜோடி 10 ஓவர்களில் 100 ரன்களைக் குவித்து டெல்லியின் வெற்றியை உறுதி செய்தது. மைதானத்தில் வீரர்கள் பந்துகளைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த லாவகத்தைக் கண்ட பயிற்சியாளர் குமார் சங்கக்காரா கோபத்தில் கத்திக் கதறிய காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தன.

முன்னதாக ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தபோது 14 ஓவர்களில் 160 ரன்களுக்கு 2 விக்கெட் என்று இமாலய ஸ்கோரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. ஆனால், டெல்லி அணியின் மிட்செல் ஸ்டார்க், லுங்கி நிகிடி ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், ராஜஸ்தானின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒட்டுமொத்தமாகச் சரணடைந்தனர். 200 ரன்களைத் தாண்டியிருக்க வேண்டிய ஸ்கோர், மிடில் ஆர்டரின் மட்டமான பேட்டிங்கால் சுருங்கியது.

கேப்டனின் விசித்திர முடிவு – விமர்சனத்தில் பராக்!

போட்டியின் 18-வது ஓவரை பகுதிநேரப் பந்துவீச்சாளரான டோனோவன் ஃபெரைராவிடம் கேப்டன் ரியான் பராக் ஒப்படைத்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்த ஓவரைப் பயன்படுத்திய அக்சர் படேல் 16 ரன்களை வெளுத்து வாங்கினார்.

பிளே-ஆஃப் கனவு நனவாகுமா? தொங்கலில் ராஜஸ்தான்!

இந்தக் கேவலமான தோல்வியின் மூலம் ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ரன் ரேட்டும் +0.027 என்று மிக மோசமாக உள்ளதால், அடுத்த 2 போட்டிகளில் லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராகப் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் செல்ல முடியும் என்ற கத்தி மேல் நடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது ராஜஸ்தான்.

திறமையான வீரர்களை வைத்துக் கொண்டு, அலட்சியத்தால் வெற்றியைத் தாரை வார்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!

தமிழினத்தின் வரலாற்றில் ஆறாத வடுவாகவும், என்றுமே மறக்க முடியாத பெருந் துயரமாகவும் பதிந்துபோன மே 18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் இன்றைய தினம் (18.05.2026) தாயகத்திலும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் மத்தியிலும் உணர்வெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது.

கண்ணீர் மழையில் நனைந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

கடந்த 2009ஆம் ஆண்டு இதே போன்றதொரு மே மாத நன்னாளில், உலகமே வேடிக்கை பார்க்க, கொடிய யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்குண்டு பல்லாயிரக்கணக்கான எமது தொப்புள்கொடி உறவுகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாக்கப்பட்டனர்; ஆயிரக்கணக்கான உறவுகள் இன்றுவரை என்னவென்றே தெரியாதவாறு பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டனர்.

அவ்வாறு அநியாயமாகப் பறிபோன எமது சொந்தங்களின் ஆத்ம சாந்திக்காகவும், அவர்களின் நீதிக்காகவும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பல்லாயிரக்கணக்கான உறவுகள் ஒன்றுகூடினர். தாயகத்தின் நாலா திசைகளில் இருந்தும், பல தடைகளையும் கடந்து வருகை தந்திருந்த மக்களின் கண்ணீர் மழையினால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நனைந்தது.

இவ் அஞ்சலி நிகழ்வில் மதக் குருமார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சுடரேற்றியும், மலரஞ்சலி செலுத்தியும் தமது நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்தினர்.

தர்மபுரத்தில் உணர்வுப்பூர்வமான நினைவேந்தல்

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் இளந்தாரகை விளையாட்டுக்கழகம் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து உணர்வுப்பூர்வமான அஞ்சலி நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் திரளாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் கலந்துகொண்டு, முள்ளிவாய்க்காலில் மடிந்த எமது உறவுகளுக்குத் தனது அஞ்சலியைச் செலுத்தியதோடு, மக்களின் துயரிலும் பங்கெடுத்துக் கொண்டார்.

முள்ளிவாய்க்கால் என்பது வெறும் மண் அல்ல; அது தமிழ் மக்களின் கூட்டுத்துயரத்தின் சின்னம். எத்தனையோ ஆண்டுகள் கடந்தாலும், காலங்கள் மாறினாலும் எமது உறவுகளின் இழப்பால் ஏற்பட்ட வடுவும், அவர்களுக்கான நீதிக்கான தாகமும் தமிழர்களின் நெஞ்சங்களை விட்டு ஒருபோதும் அகலாது என்பதை இன்றைய நினைவேந்தல் நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளன.