Sunday, May 3, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 145

உலகின் சுகாதார வளர்ச்சியில் சவூதி அரேபியா!

உலகின் சுகாதார வளர்ச்சிக்கு வழிகாட்டும் சவூதி அரேபியா..!

எஸ். சினீஸ் கான்

உலக நாடுகள் தற்போது சுகாதார துறையை முன்னேற்றுவதை நோக்கி பயணிக்கின்றன. இந்நிலையில், சவூதி அரேபியா தனது பாரம்பரிய செயற்பாடுகள் மற்றும் பண்பாடுகளுக்கு இணையாக, நவீன மருத்துவ வசதிகள், ஆராய்ச்சித் தளங்கள் மற்றும் மருத்துவக் கல்வி வளங்களை மேம்படுத்தி, உலக சுகாதார மேடையில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளது.

சவூதி அரேபியா, தனது Vision 2030 எனும் தூர நோக்குத் திட்டத்தின் கீழ் பல்துறை முன்னேற்றங்களை அடைந்து வரும் முன்னோடி நாடாக திகழ்கிறது. சமூக, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ற பல மாற்றங்களை இது நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு முக்கிய அங்கமாக, இவ்வருடம் ஒக்டோபர் 27 முதல் 30 வரை, ரியாத்தில் உள்ள Exhibition and Convention Center-இல் 8வது Global Health Exhibition நடைபெறயிருக்கிறது.

“Invest in Health” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாபெரும் கண்காட்சி, உலகளாவிய சுகாதாரத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர்கள், உலகத் தர மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் என அனைத்துத் துறைகளையும் ஒரே மேடையில் ஒன்று சேர்க்கும் சிறப்பான வாய்ப்பு இதுவாகும்.

இந்தக் கண்காட்சியில், டெலிமெடிசின், டிஜிட்டல் ஹெல்த், தடுப்பு மருத்துவம், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த சிகிச்சை முறைகள், மருந்துத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல புதிய முன்னேற்றங்கள் விரிவாக வெளிப்படுத்தப்பட உள்ளன. உலக மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையை மேம்படுத்தும் புதிய தீர்வுகள் இங்கே உருவாகும்.

இந்நிகழ்வு, அரசு மற்றும் தனியார் துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, மருத்துவ முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதன் மூலம், சவூதி அரேபியாவின் சுகாதாரத் துறையில் தன்னிறைவு பெறும் இலக்கிற்கு இது வலுவான அடித்தளமாக அமையும்.

இத்தகைய முயற்சிகள், மக்களின் நலனுக்காக சேவையாற்றும் சவூதி அரசின் வினைத்திறனை பிரதிபலிக்கின்றன. கட்டமைப்புப் புரட்சி, அறிவியல் முன்னேற்றம், மற்றும் மனிதநேயம் சார்ந்த அணுகுமுறை ஆகியவற்றின் மேன்மைதான், இன்று சவூதி அரேபியாவை உலக சுகாதார மேடையில் ஒரு முன்னணி இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

பேரணியில் இணையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்!

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட மத்திய குழுவின் கூட்டமொன்று,கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று(12) கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் நடைபெற்றது. கொழும்பு மற்றும் ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபைகளின் உறுப்பினர்கள் உட்பட மத்திய குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது வியாழக்கிழமை (14) பிற்பகல் 2:30 மணி அளவில், கொழும்பு, தும்முல்லையில் ஐ.நா. அலுவலகத்துக்கு முன்பாக நடைபெற உள்ள கூட்டு எதிர்க்கட்சிகளின் பலஸ்தீன ஆதரவு ஒன்று கூடலில் முஸ்லிம் காங்கிரஸும் பங்குபற்றுவதுடன், மறுநாள் வெள்ளிக்கிழமை(15) பிற்பகல் 3 மணியளவில் பொரளை கனத்தை சந்தியில் ஆரம்பித்து கெம்பல் பார்க் வரை நடைபெற உள்ள பாலஸ்தீனத்துக்கான ஒன்றிணையும் இலங்கையர்களின் நடைபவணிப் பேரணியிலும் கட்சியினர் பங்குபற்றி ஒத்துழைப்பது பற்றியும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் ,கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் கட்சிப் புனரமைப்பு மற்றும் வட்டார அமைப்பாளர்களை நியமிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .

மேலும், இலங்கையில் கொழும்பில் இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது பற்றியும், அதற்கான போட்டி நிகழ்ச்சிகளை இலங்கைக் கவிஞர்கள் மத்தியில் நடத்துவது பற்றியும், அந்த விழாவின் போது சிறந்த இந்திய இலங்கைப் பாடகர்களை பங்குபற்ற வைப்பது பற்றியும் உரையாடப்பட்டது.

முல்லைத்தீவு சென்ற அமைச்சர் வசந்த சமரசிங்க!

முல்லைத்தீவு, வள்ளூவர்புரம் பகுதியில் உள்ள விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் நவீன அரிசி ஆலையை வர்த்தகம் வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று பார்வையிட்டார்.

அமைச்சருடன் கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க ,பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

குறித்த அரிசி ஆலையின் தேவைகள் தொடர்பாக அமைச்சர் கேட்டறிந்து கொண்ட அமைச்சர், முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மாவட்டத்தின் கூட்டுறவுத்துறை எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான மகஜரையும் கையளித்திருந்தனர்.

நேற்றைய அதிரடி சோதனையில் 917 பேர் கைது!

0

பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் மேற்பார்வையின் கீழ், போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை அடக்கும் நோக்கத்துடன், 2025-08-11 அன்று இலங்கை காவல்துறை, காவல்துறை சிறப்புப் படை மற்றும் முப்படைகள் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருளுடன் தொடர்புடைய ஏராளமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2025-08-11 முழுவதும் இலங்கை காவல்துறை, காவல்துறை சிறப்புப் படை மற்றும் முப்படைகளைச் சேர்ந்த 6,106 பணியாளர்கள் இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்றைய குறித்த விஷேட சோதனை நடவடிக்கையில் 24,175 பேர் சோதனை செய்யப்பட்டதுடன், 9,578 வாகனங்கள் மற்றும் 7,630 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன.

மேலும் குறித்த சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 917 பேர் கைது செய்யப்பட்டதுடன், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 25 பேர் மற்றும் 375 பிடியானை வைத்திருப்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளின் போது 03 சட்டவிரோத துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.

அதன்படி, நாட்டில் போதைப்பொருட்களை ஒழிக்கவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் நடவடிக்கைகளை அடக்கவும், நாட்டில் சாலை விபத்துகளைக் குறைக்கவும், பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் திரு. ஆனந்த விஜேபாலவின் மேற்பார்வையின் கீழ், இலங்கை காவல்துறை மற்றும் முப்படைகளின் பங்கேற்புடன் தொடர்ச்சியாக பாரிய அளவில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.உயர்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0

2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் உயர்தரப் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள், இன்று நள்ளிரவு வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இணையத்தின் ஊடாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னேறிய பகுதியில் அதிகாலை கோர விபத்து!

0

கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (12) அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்ற டிப்பர் லொரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்து தொடர்பாக மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற திகில் கொலை!

கிளிநொச்சியில் 68 வயதான வயோதிப பெண் இனந்தெரியாத நபர்களினால் இன்று மாலை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட 1/2 ஏக்கர் திட்டம், ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68 வயதுடைய பெண்னே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் வீட்டில் தனிமையில் இருந்தபோதே இன்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகவில்லுவில் இன்றும் இலவச நுளம்பு வலைகள் விநியோகம்!

புத்தளம் எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் அமைப்பின் அனுசரணையில் இயங்கிவரும், எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் மாதர் சங்கத்தினால் இன்றைய தினமும் புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் இலவச நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டது.

புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான இலவச நுளம்பு வலைகளே இவ்வாறு இன்று வழங்கிவைக்கப்பட்டது.

புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் 150 நுளம்பு வலைகள் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று இடம்பெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு புத்தளம் எருக்கலம்பிட்டியில் வசிக்கும் மந்தக்காடு பகுதி மக்களுக்கான 30 இலவச நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டிருந்த நிலையில், புத்தளம் எருக்கலம்பிட்டி B பகுதியில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்களுக்கு எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் மாதர் சங்கத்தினால் இன்றைய தினம் இலவச நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் வருமானம் குறைந்த புத்தளம் எருக்கலம்பிட்டியில் வசிக்கும் மந்தக்காடு பகுதி மற்றும் B பகுதி தவிர்ந்த ஏனைய குடும்பங்களுக்கான நுளம்பு வலைகள் எதிர்வரும் தினங்களில் வழங்கப்பட உள்ளதாக புத்தளம் எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் அமைப்பின் தலைவர் M.J.M. சிராஜ் எமது ஊடகத்துக்கு தெரிவித்தார்.

வேலையற்ற பட்டதாரிகள் பெலவத்தையில் ஆர்ப்பாட்டம்!

0

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர், பெலவத்தையில் உள்ள கல்வி அமைச்சின் முன்பாக இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். 

சுமார் அரை மணி நேரம் கல்வி அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகள் பின்னர் பேரணியாக சென்று பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. 

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொண்டிருந்த கொள்கையினையும், வாக்குறுதிகளையும் தற்போது மீறியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். 

தற்போது நாடு முழுவதும் சுமார் 35,000 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாகவும், கொள்கை பிரகடன அறிக்கை மூலம் இந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம் அதனை மீறியுள்ளதாக அவர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.

நாகவில்லுவில் மின்கம்ப விளக்குகள் திருத்தும் பணி தீவிரம்!

புத்தளம் எருக்கலம்பிட்டியின் உள்ளக வீதியில் உள்ள மினகம்ப விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டு, புதிய வீதி மின் விளக்குகள் பொருத்தும் பணி இன்று புத்தளம் பிரதேசபையினால் மேற்கொள்ளப்பட்டது.

புத்தளம் பிரதேச சபையின் பொத்துவில்லு வாட்டார உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், வழிகாட்டுதலிலும் குறித்த வீதி மின்கம்ப விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

இன்றைய தினம் புத்தளம் எருக்கலம்பிட்டியின் A பகுதியில் உள்ள சுமார் 26 மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டு, இவ்வாறு மின் விளக்குகள் ஒளிரச்செய்யப்பட்டன.

மேலும் எதிர்வரும் நாட்களில் புத்தளம் எருக்கலம்பிட்டியின் B,C மற்றும் மந்தக்காடு பகுதிகளின் உள்ளக வீதிகளில் உள்ள மின்கம்ப விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டு, தேவைப்படும் பட்சத்தில் புதிய மின்கம்ப விளக்குகள் பொருத்தப்படும் என புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸா தெரிவித்தார்.

இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் புத்தளம் எருக்கலம்பிட்டியின் பொத்துவிலுக்கான பிரதான வீதியில் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.