2026-27 கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறைகளில் சிபிஎஸ்இ பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, 9ம் வகுப்பில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் வகையில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது.
சிபிஎஸ்இ புதிய நடைமுறையின் கீழ் ஒவ்வொரு பருவத்திலும் முக்கிய பாடங்களான மொழிப்பாடம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படும்.
2026-27 கல்வியாண்டில் 9ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான ஒப்புதலை சிபிஎஸ்இ வாரியத்தில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் நிர்வாக குழு அளித்துள்ளது.
இத்திட்டம், திறன் அடிப்படையிலான கற்றல் மற்றும் அதனை ஊக்குவிப்பது, மனப்பாடம் செய்வதை குறைப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்டில் இளைஞர் சங்கத்தை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர் சங்கங்த்தை அரசியல்மயமாக்குவது மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.
முன்னாள் அதிகாரிகள் மற்றும் தற்போதைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இரு தரப்பினருக்கும் திருப்திகரமான தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அமைச்சரிடம் இதன்போது யோசனை முன்வைத்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கை இளைஞர்களின் வேண்டுகோளின் பேரில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் இளைஞர் சங்கங்களைத் தொடங்கினேன்.
கிராமத்தின் இளைஞர்களும் ஒன்று கூடும் இடமாக பொழுதுபோக்குகள், கலைகள் மற்றும் பிற செயல்பாடுகளுக்காக அந்த இளைஞர் சங்கங்கள் மூலம் இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.
அந்த இலக்கு மிகவும் வெற்றிகரமாக உள்ளது. இளைஞர்கள் தற்போது சமூகத்தின் பல்வேறு துறைகளில் பங்கேற்கின்றனர்.
இந்த நாற்பது ஆண்டுகளில், இளைஞர் சங்கங்கள் இந்த நாட்டின் முக்கிய இளைஞர் இயக்கமாக மாறியுள்ளன.
இளைஞர் சங்கங்களிலிருந்து முன்னேறிய சிலர் அரசியலில் நுழைந்துள்ளனர்.
சிலர் வணிகங்களில் உள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னேறுவதற்கான திட்டத்தை ஆதரிக்கின்றனர்.
அரசியலமைப்பில் அமைச்சரால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து ஒரு பெரிய கேள்வி எழுந்துள்ளது. எல்லா இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தற்போது தேசிய மாநாடு நடைபெறுகிறது. எனது தகவலின்படி, அதன் பிறகும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இது தொடர்ந்தால், இளைஞர் சமூக இயக்கம் குறையும்.
இளைஞர் சமூக இயக்கத்தை அரசியலாக்க குறித்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
அதை மிகைப்படுத்தாமல். இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
போராட்டம் நடத்தும் முன்னாள் அதிகாரிகள் குழுவுடனும், தற்போதைய மாவட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி, அனைவரையும் திருப்திப்படுத்தும் தீர்வை வழங்குங்கள்.
இந்த நாட்டில் இளைஞர் சமூக இயக்கம் அரசியலுக்குப் பயன்படுத்தப்படாது என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
அது அமைச்சரும் இந்த இரண்டு குழுக்களும் இணைந்து செய்யக்கூடிய ஒரு பணியாகும்.
அந்தப் பணி செய்யப்படாவிட்டால், இந்தப் போராட்டங்கள் ஒரு அரசியல் பிரச்சினையாக மாறும்.
பின்னர் அரசியல் கட்சிகளும் இவற்றில் ஈடுபடலாம். அது நடந்தால், இந்த இளைஞர் சமூக இயக்கம் மறைந்துவிடும்.
இந்த இளைஞர் சமூக இயக்கத்தைப் பாதுகாக்க விரும்புகிறேன். அதனால்தான் இந்த சிறு தகவலை உங்களுக்கு வழங்க முடிவு செய்தேன்.” என்றார்.
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொடை கூட்டு நீர் விநியோக அமைப்பின் நிட்டம்புவவிலிருந்து மினுவங்கொடை வரையிலான குழாய் சுத்திகரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று அந்த சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 10 மணி நேரத்திற்கு ரன்பொகுணகம, பட்டலிய, அத்தனகல்ல, பஸ்யால மற்றும் நிட்டம்புவ ஆகிய வலயங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
இதற்கமைய நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கொங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்தை, கொலவத்தை, கொரக்கதெனிய, ரன்பொகுணகம, ரன்பொகுணகம வீடமைப்புத் திட்டம், படலிய, அத்தனகல்ல, பஸ்யால, ஊராபொல, திக்கந்த, மவிட்டிகம்மன மாஇம்புல, மாதலான, ஹக்கல்ல, அலவல, கலல்பிட்டி, எல்லமுல்ல ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (10) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இளைஞர் சமூகங்கள் தொடர்பான தற்போதைய நெருக்கடி நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி இதன்போது கருத்து வௌியிடவுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை நிறுவுவதில் முன்னோடியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, அதன் ஆரம்பகால நோக்கங்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் சங்கங்களின் செயல்பாடுகள் தனது பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து கருத்து தெரிவிக்க உள்ளார்.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
கல்பிட்டியிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்பிட்டியிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பை வன்மையாக கண்டிக்கும் சவூதி அரேபியா..!
எஸ். சினீஸ் கான்
காசா பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சவூதி அரேபியா மிக வன்மையாக கண்டித்துள்ளது. ஆகஸ்ட் 8, 2025 அன்று வெளியிட்ட விசேட அறிக்கையில், “இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகள் காசா பகுதியை ஆக்கிரமிக்க எடுத்த முடிவை சவூதி அரேபியா வன்மையாக கண்டிக்கிறோம்” என்று சவூதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அறிக்கை மேலும், “பட்டிணி, கொடூரமான செயற்பாடுகள், மற்றும் இன அழிப்பு போன்ற குற்றங்களை பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ச்சியாகச் செய்வதை இராச்சியம் தெளிவாகவும் உறுதியான முறையிலும் கண்டிக்கிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் எடுத்த முடிவுகள், பாலஸ்தீன மக்களின் உணர்ச்சி, வரலாறு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டதாகவும், சர்வதேச சட்டங்களும் மனிதாபிமானக் கொள்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வலியுறுத்துகிறது.
சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை உடனடியாக இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்தாதது, “சர்வதேச ஒழுங்கையும் சட்டபூர்வத்தன்மையையும் பாதிப்பதுடன், பிராந்திய மற்றும் உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும்; இன அழிப்பு மற்றும் கட்டாய இடம்பெயர்வு போன்ற விளைவுகளை உருவாக்கும்” என்று சவூதி அரேபியா எச்சரித்துள்ளது.
மேலும், “இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களை நிறுத்த, சர்வதேச சமூகம் வலுவான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் பாலஸ்தீன மக்களைச் சூழ்ந்துள்ள மனிதாபிமான பேரழிவை முடிவுக்கு கொண்டு வரலாம்” என்றும், “1967 எல்லைகளுக்குள் கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு சுயாட்சி பாலஸ்தீன அரசை உருவாக்கும் இரு நாடு தீர்வே நீடித்த அமைதிக்கான ஒரே வழி” என்றும் அவ் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, குறித்த இளைஞனின் உடலை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, உடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
முத்தையன்கட்டுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிற்கு தகரம் தருவதாக அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் நேற்று இராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் அதில் நால்வர் தப்பியதாகவும் ஒருவரைக் காணவில்லை எனவும் ஊர் மக்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று காலை காணாமல் போயிருந்த இளைஞசர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த இராணுவ முகாமிற்கு சென்ற ஐவரில் மற்றுமொரு நபருக்கு முதுகு பகுதிகளில் பலத்த அடிகாயங்கள் இருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 907 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனைகளின் போது குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 343 பேரும் இந்த சோதனை நடவடிக்கையின் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்காக பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை உறுப்பினர்கள் உட்பட 6,129இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பங்கேற்றுள்ளனர்.
சோதனை நடவடிக்கையின் போது, 27,388 பேர் சோதனை செய்யப்பட்டனர். மேலும் 7,509 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 9,758 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த சோதனை நடவடிக்கையின் போது இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 58 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதோடு, கவனக் குறைவாக வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து குற்றச்சாட்டுக்களின் கீழ் 2,992 நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், பூஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது, 11 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதற்கமைய, நேற்றைய (8) நாளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 1 கிலோ 547 கிராம் ஹெரோயின், 726 கிராம் 107 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டன.
2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள் அளவுக்கு மேலதிகமாக ரூ. 77 இலட்சத்து 30 ஆயிரத்து 262 (ரூ.7,730,262) செலுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய கோபா குழு (CoPA) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் அண்மையில் (05) கூடி, சப்ரகமுவ மாகாணசபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும்போதே இந்தத் தகவல்கள் தெரியவந்தன.
2010ஆம் ஆண்டின் அரசாங்க செலவு முகாமைத்துவ சுற்றுநிருபத்தின் படி சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரின் 3 வாகனங்களுக்கான 1,700 லீற்றர் எரிபொருள்களுக்காக 2014ஆம் ஆண்டு முதல் ரூ. 9,850,170 வழங்கப்பட்டிருந்த நிலையில், சப்ரகமுவ மாகாண சபையின் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய அபிவிருத்தி வடிவமைப்பு மற்றும் இயந்திரவியல் அதிகாரசபை மற்றும் சப்ரகமுவ வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையிடமிருந்து மாதாந்தம் 1500 லீற்றர் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதியைப் பெற்று 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு இயந்திரவியல் அதிகாரசபையில் 2,695,000 ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 2014 முதல் 2017 வரை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையிடமிருந்து ரூ.5,035,262 செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் எல்லையை விட ரூ. 7,730,262 அதிகமாக செலுத்தப்பட்டுள்ளமை இங்கு தெரியவந்தது. இந்த நிலையில் ஒரு மாதகாலத்திற்குள் இது குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும், வரையறையை மீறிப் பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அறிவுறுத்தல் வழங்கியது.
அத்துடன், மாகாண ஆளுநர் வெளிநாட்டில் இருக்கும்போது அவருக்குரிய எரிபொருள் கொடுப்பனவை அவரது பிரத்தியேக செயலாளர் பெற்றுக் கொண்டமையும் இங்கு புலப்பட்டது. அதன்படி, 2022 ஆம் ஆண்டில், இவ்வாறு ரூ. 725,000 தொகை செலுத்தப்பட்டதாகத் தெரியவந்ததுடன், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 12ஆம் திகதியிடப்பட்ட ஜனாதிபதி செயலக சுற்றறிக்கையின்படி ஒருவருக்குச் சொந்தமான எரிபொருள் கொடுப்பனவை மற்றொருவருக்கு வழங்குவதற்கான ஏற்பாடு இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, குறித்த தொகையை முன்னாள் ஆளுநரிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியது. முன்னாள் ஆளுநர் எதிர்காலத்தில் கோபா குழுவிற்கு அழைக்கப்படுவார் என்றும் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
மாகாண சபைக்குச் சொந்தமான காணிகளுக்கான வரிகளை வசூலிப்பதில் சிக்கல் நிறைந்த சூழ்நிலை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய குழு, இதனுடன் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய அறிக்கையை இரண்டு மாத காலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியது.
மேலும், விநியோகஸ்தர்களினால் 2024ஆம் ஆண்டு விநியோகிக்கப்படவிருந்த சூரிய சக்தியில் இயங்கும் 90W வலுவைக் கொண்ட 1,500 வீதி விளக்குகளுக்காகப் பணம் செலுத்தப்படாமை குறித்து அதிகாரிகளிடம் குழு கேள்வியெழுப்பியது. குறித்த விநியோக நிறுவனம் 90W வீதி விளக்குகள் எனக் கூறி 30W வலுவைக் கொண்ட வீதி விளக்குகளையே விநியோகித்திருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதன் காரணமாக உரிய வீதி விளக்குகளை வழங்குமாறு கோரியபோதும் அதனை வழங்காது கண்டியில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதில் மோசடி இடம்பெற்றிருப்பது தெளிவாகத் தெரிவதால், கொள்முதல் செயற்பாடு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோபா குழு அறிவுறுத்தியது.
இக்கூட்டத்தில், கோபா குழுவின் உறுப்பினர்களான பிரதியமைச்சர்களான நளின் ஹேவகே, சுகத் திலகரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆராச்சி, ஒஷானி உமங்க, டி.கே. ஜயசுந்தர, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சுசந்த குமார நவரத்ன, சானக மதுகொட, சட்டத்தரணி சாகரிகா அத்தாவுட, மஞ்சுள சுரவீர ஆராச்சி, (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, கே.இளங்குமரன், சுனில் ரத்னசிறி மற்றும் லால் பிரேமநாத் ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
வடக்கில் உள்ள இராணுவத்தை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை கணக்கில் எடுக்காமல் இருப்பதன் விளைவுதான் முல்லைத்தீவு முத்தையன் கட்டு சம்பவம் என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
முல்லைத்தீவில் உள்ள முத்தையன்கட்டுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிற்கு தகரம் தருவதாக அழைக்கப்பட்ட நான்கு இளைஞர்கள் நேற்று இராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளானதாக செய்திகள் வந்தன. பின்னர் அதில் நால்வர் தப்பியதாகவும் ஒருவரைக் காணவில்லை எனவும் ஊர் மக்கள் தெரிவித்தனர்.
அதில் காணாமலாகியிருந்த ஒருவர் இன்று சடலமாக மீட்க்கப்பட்டிருக்கின்றார் என ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
இந்த கொலையை இராணுவம் செய்துள்ளதாக மக்கள் தெரிவிப்பதாகவும், தமிழ் மக்களை ஆண்டாண்டு காலமாக கொன்ற இராணுவத்தின் கொலை வெறி இன்னும் அடங்குவதாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் இனப்படுகொலை இராணுவத்தை அகற்று என்ற எம் கோரிக்கையை கணக்கில் எடுக்காமல் இருப்பதன் விளைவு தான் இவை. இது ஒரு பாரதூரமான விடயம், அந்த இடத்து இளைஞர்களுக்கான பாதுகாப்பை உடனடியாக அரசு உறுத்திப்படுத்துவதுடன் கொலைகாரர் எனக் கூறப்படும் இராணுவத்தை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை அகற்றப்படுகின்ற இராணுவ முகாமின் தகரங்களை பெற்றுக்கொள்ளுவதற்காக மரணித்த இளைஞரும் ஏனைய மூன்று இளைஞர்களும் முகாமிற்குள் சென்றார்கள் என்றும் அங்கு கைகலப்பு இடம்பெற்றது என்றும் சொல்லப்படுகிறது.