Tuesday, March 17, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 150

கங்காரு கட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

0

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, ஆகிய மாவட்டங்களில் தெரிவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (15) கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள பிரின்சஸ் ரோஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின் போது ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள 26 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

எலான் மஸ்க் செயலால் ஈரான் அதிர்ச்சி!

இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு வரும் ஈரானில் இன்டர்நெட் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்லிங்கின் இன்டர்நெட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது ஈரானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 3வது நாளாக போர் நீடித்து வருகிறது. ராணுவ தலைமையகம் மற்றும் அணுசக்தி நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல, இஸ்ரேலின் எரிசக்தி உள்கட்டமைப்புகள், போர் விமானங்களுக்கு எரிபொருள் தயாரிப்பு நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், தங்களின் முழு ராணுவ பலத்தின் மூலம் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே, இஸ்ரேலுக்கு எதிராக போர் நடத்தி வரும் ஈரான் அரசு குறித்து சமூக வலதளங்களில் அவதூறு பரப்புவதை தடுக்கும் விதமாக, அந்நாட்டில் இன்டர்நெட் சேவைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடையும் போது, மீண்டும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று ஈரான் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஈரானில் அரசின் தடையை மீறி இன்டர்நெட் சேவையை வழங்கும் விதமாக, தொழிலதிபர் எலான் மஸ்க், தனது ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். சாட்டிலைட் மூலம் வழங்கப்படும் இந்த இன்டர்நெட் சேவையை அரசின் தடையை மீறி ஈரான் நாட்டு மக்களால் பயன்படுத்த முடியும். எலான் மஸ்க்கின் இந்த செயலால் ஈரான் அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

வவுனியா மாநகர சபை இவர்கள் வசம்!

0

வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கிடையில் தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இன்று (15) காலை இடம்பெற்றது. 

கலந்துரையாடலில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவற்றின் பிரநிதிகளுக்கிடையில் பொது நோக்கம் ஒன்றை அடிப்படையாக கொண்டு வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் இணைந்து ஒரு நிர்வாகத்தை உருவாக்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

அந்த வகையில், வவுனியா மாநகர சபையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு மாநகர முதல்வர் பதவியும், பிரதி முதல்வர் பதவி ஜனநாயக தேசிய கூட்டணிக்கு முதல் இரண்டு வருடங்களுக்கும், தமிழரசுக் கட்சிக்கு அடுத்த இரு வருடங்களுக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தவிசாளர் பதவி தமிழரசுக் கட்சிக்கும், உபதவிசாளர் பதவி ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

உபதவிசாளர் பதவியை இரண்டு வருடங்களுக்கு பகிர்வது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும், ஐக்கிய மக்கள் சக்தியும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழரசுக் கட்சிக்கு தவிசாளர் பதவியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு உபதவிசாளர் பதவியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தவிசாளர் பதவியும், தமிழரசுக் கட்சிக்கு உப தவிசாளர் பதவியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியூதீன், முத்து முகமது, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் சிறி ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இஸ்ரேல் விடுத்த சிவப்பு எச்சரிக்கை!

ஊடக அறிக்கைகளின்படி, ஈரான் ஹைஃபா மற்றும் டெல் அவிவ் அருகே உள்ள இஸ்ரேலின் முக்கிய இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை வீசியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஈரான் முழுவதும் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளை குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடந்துள்ளது. இது தெஹ்ரானில் உள்ள ஷாஹ்ரான் எண்ணெய் ஆலை தாக்கியுள்ளதுடன் “ஈரானிய ஆட்சியின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய” இடங்களை குறிவைத்ததாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதாகவும், 800 பேர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்களில் 20 குழந்தைகள் அடங்குவர்.

“ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் காசாவிலும் உள்ள பாலஸ்தீனியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் தங்குமிடங்கள் இல்லை, அவசர சேவைகள் இல்லை. அவர்கள் துண்டிக்கப்பட்டு பூட்டப்பட்ட நிலையில் உள்ளனர், மேலும் பொருட்கள் தீர்ந்து போகின்றன. எனவே ஈரானிய மற்றும் இஸ்ரேலிய மக்களுக்கு மட்டுமல்ல, இங்கு வேறு நிறைய ஆபத்து உள்ளதாக” ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காசாவில் உணவுக்காகக் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக உயர்ந்துள்ளது.

மேலும் ஈரானின் இராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அவற்றின் ஆதரவு நிறுவனங்களைச் சுற்றி தற்போது வசிக்கும் அனைத்து மக்களும் உடனடியாக இந்தப் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை திரும்பி வரக்கூடாது” என்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனைவியை சுட்டுப்பொசுக்கிய கணவன்!

0

குடும்ப தகராறு காரணமாக கணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மனைவி உயிரிழந்துள்ளார். 

மெதகம பொலிஸ் பிரிவின் பலகஸ்சார பகுதியில் நேற்று (14) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

பலகஸ்சார வீதிக்கு அருகில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. 

அதன்படி, பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

இறந்தவர் மெகதம மக்கெந்தவின்ன பகுதியை சேர்ந்த 38 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

இந்த துப்பாக்கிச் சூடு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் நடத்தப்பட்டுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சடலம் மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைக்குப் பிறகு சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார். 

சந்தேக நபரைக் கைது செய்ய மேதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது நாட்டுக்கு பெரும் வெட்கக்கேடு!

0

காசா மக்களின் பாதுகாப்பு, நிவாரண உதவிக்கென கொண்டு வரப்பட்ட ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா வாக்களிக்காதது, வெட்கக்கேடான விஷயம் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

ஒரு மொத்த நாட்டையும் நெதன்யாகு அழித்துக் கொண்டிருப்பதை, அமைதியாக வேடிக்கை பார்ப்பது மட்டுமின்றி, ஈரானை தாக்குவதையும் ஆதரித்துக் கொண்டிருக்கிறோம். நீதியைக் கோருவதற்கான வீரத்தை கொண்டிருப்பதுதான் உண்மையான தலைமை பண்பு என்றும் சீறியுள்ளார்.

உலகம் துண்டாடப்படும் காலத்தில், மனிதத்துக்கு குரல் கொடுத்து, நீதியின் பக்கம் தைரியத்துடன் நாம் நிற்க வேண்டும் என்றும் காசா மக்களுக்காக பிரியங்கா காந்தி குரல் கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் அதிரடி அறிவிப்பு!

பாகிஸ்தான் ஈரானுக்கு முழு ஆதரவையும் தெரிவித்ததுடன், தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பிறகு “இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் ஒற்றுமைக்கு” அழைப்பு விடுத்தது.

“நாங்கள் ஈரானுடன் நிற்கிறோம், அவர்களின் நலன்களைப் பாதுகாக்க ஒவ்வொரு சர்வதேச மன்றத்திலும் அவர்களுக்கு ஆதரவளிப்போம்” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தேசிய சட்டமன்றத்தில் தனது உரையின் போது கூறினார்.

இஸ்ரேல் ஈரான், ஏமன் மற்றும் பாலஸ்தீனத்தை குறிவைத்துள்ளது. முஸ்லிம் நாடுகள் இப்போது ஒன்றுபடவில்லை என்றால் அவை ஒவ்வொன்றும் ஒரே விதியை எதிர்கொள்ளும்.

அனைத்து முஸ்லிம் நாடுகளும் “இஸ்ரேலுடனான உறவுகளை உடனடியாகத் துண்டிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். மேலும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஒரு கூட்டு உத்தியை வகுக்க அவசர அமர்வைக் கூட்ட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

வரலாற்று வெற்றியை பெற்றது தென் ஆபிரிக்க அணி!

0

தென் ஆப்ரிக்க அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று வரலாறு படைத்தது. பைனலில், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான பைனல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் விளையாடின. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212, தென் ஆப்ரிக்கா 138 ரன் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 207 ரன் எடுத்தது.

பின், 282 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுக்கு 213 ரன் எடுத்திருந்தது. மார்க்ரம் (102), கேப்டன் பவுமா (65) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் கைவசம் வைத்திருந்த தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 69 ரன் தேவைப்பட்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு 147 ரன் சேர்த்த போது கம்மின்ஸ் ‘வேகத்தில்’ பவுமா (66) வெளியேறினார். ஸ்டார்க் பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (8) போல்டானார். பொறுப்பாக ஆடிய மார்க்ரம், வெற்றிக்கு கைகொடுத்தார். ஹேசல்வுட் ‘வேகத்தில்’ மார்க்ரம் (136) அவுட்டானார்.

தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பெடிங்ஹாம் (21), வெர்ரேன் (4) அவுட்டாகாமல் இருந்தனர். இதன்மூலம் ஐ.சி.சி., தொடர்களின் ‘நாக்-அவுட்’ போட்டியில் கண்ட தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தென் ஆப்ரிக்கா, டெஸ்ட் அரங்கில் புதிய உலக சாம்பியன் ஆனது.

தென் ஆப்ரிக்க அணி 27 ஆண்டுகளுக்கு பின், ஐ.சி.சி., நடத்தும் மிகப் பெரிய தொடரில் கோப்பை வென்றது. கடைசியாக, 1998ல் சாம்பியன்ஸ் டிராபி வென்றிருந்தது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை!

0

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

இன்று (14) பிற்பகல் 02.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (15) பிற்பகல் 02.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது சில நேரங்களில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கும் என்பதுடன், அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கக்கூடும். 

அந்தப் பகுதிகளில் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

இதற்கிடையில், கடல்சார் மற்றும் மீனவ சமூகங்கள் மேற்கூறிய கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை வெல்லும் தென் ஆபிரிக்க அணி?

0

தென் ஆப்ரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைக்க காத்திருக்கிறது. பைனலில் மார்க்ரம் சதம் கைகொடுக்க, வெற்றியை நெருங்குகிறது. ஆஸ்திரேலிய பவுலர்கள் ஏமாற்றினர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான பைனல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

இதில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212, தென் ஆப்ரிக்கா 138 ரன் எடுத்தன.

இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்திருந்தது. ஸ்டார்க் (16), லியான் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஸ்டார்க் அரைசதம்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரபாடா ‘வேகத்தில்’ நாதன் லியான் (2) வெளியேறினார். ஸ்டார்க், டெஸ்ட் அரங்கில் தனது 11வது அரைசதத்தை பதிவு செய்தார். பத்தாவது விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்த போது மார்க்ரம் பந்தில் ஹேசல்வுட் (17) அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஸ்டார்க் (58) அவுட்டாகாமல் இருந்தார்.

தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா 4, லுங்கிடி 3 விக்கெட் சாய்த்தனர்.
மார்க்ரம் அபாரம்: பின், 282 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ரிக்கிள்டன் (6) ஏமாற்றினார். ஸ்டார்க் ‘வேகத்தில்’ முல்டர் (27) வெளியேறினார். பவுமா, டெஸ்ட் அரங்கில் தனது 25வது அரைசதத்தை பதிவு செய்தார்.

ஹேசல்வுட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மார்க்ரம், தனது 8வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 213 ரன் எடுத்திருந்தது. மார்க்ரம் (102), பவுமா (65) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்காவுக்கு இன்னும் 69 ரன் மட்டும் தேவைப்படுவதால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.