Monday, May 4, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 209

அரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சஜித்!

0

எமது நாட்டின் ஏற்றுமதித் துறை பாரிய சவால்களை எதிர்நோக்கி வரும் இவ்வேளையில், பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் எனது கருத்துக்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்காதிருக்கின்றனர். ஏப்ரல் 9 ஆம் திகதிக்குள் நமது நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% பரஸ்பர வரி விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை உலகமே அறிந்திருந்தும், நமது அரசு அறியாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமாகும். அமெரிக்காவை முதன்மையாக முன்னிறுத்துவதே ஜனாதிபதி டிரம்பின் தேர்தல் மேடைகளில் முக்கிய கருப்பொருளாக அமைந்து காணப்பட்டன. அந்த வாக்குறுதியின் பிரகாரம் இந்த வரிகளை விதித்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

ஜனாதிபதி டிரம்ப் தனது கொள்கை (தேர்தல் விஞ்ஞாபனத்தில்) அறிக்கையில் இதனை குறிப்பிட்டிருந்தார். நமது அரசாங்கமானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை மறந்தாலும், டொனால்ட் டிரம்ப் தனது விஞ்ஞாபனத்தை அமுலுக்கு கொண்டு வந்துள்ளார். இந்த வரிகளினால் எமது நாட்டுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்படும் என பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தூதுக்குழுவை அனுப்பியுள்ளதாக பதிலளித்தனர். இன்று இது தொடர்பான கேள்விகளை எழுப்பிய போது, ​​அரசாங்கத்திடம் பதில் இல்லை. பின்பற்ற வேண்டிய மூலோபாயங்கள் குறித்து யோசனைகளையும் நான் இன்று முன்வைத்தேன். அரசாங்கம் அன்று போலவே தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தி வருகிறது. 44% பரஸ்பர வரி விதிப்பை விட அரசாங்கத்திற்கு நிலையியற் கட்டளை பெரியதாகிப்போயுள்ளது. இந்த நிலையியற் கட்டளை புத்தகத்தைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சியினரை வலுக்கட்டாயமாக வாயடைக்க முயற்சிக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

நமது நாட்டின் மொத்த ஏற்றுமதி 12.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் பெரும் பங்கு அதாவது 22.8% ஏற்றுமதிகள் ஐக்கிய அமெரிக்காவிற்கே செல்கின்றன. இது 2911 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையாகும். இந்த ஏற்றுமதியில், ஆடைத் துறை மட்டும் 1885 பில்லியன் மதிப்பைக் கொண்டுள்ளன. இது 64% உள்ளடிக்கியுள்ளன. இதற்கிடையில், இரப்பர் அமெரிக்க டொலர் 328 மில்லியனையும், தேங்காய் அமெரிக்க டொலர் 73 மில்லியனையும், எக்டிவேடட் கார்பன் அமெரிக்க டொலர் 49 மில்லியனையும், தேயிலை அமெரிக்க டொலர் 48 மில்லியனையும், இரும்பு அமெரிக்க டொலர் 48 மில்லியனையும், மற்றும் இலவங்கப்பட்டை அமெரிக்க டொலர் 29 மில்லியனையும் கொண்டுள்ளதோடு, ஆடை ஏற்றுமதியில் 38-40% அமெரிக்காவிற்கே ஏற்றுமதியாகின்றன. இந்தத் தரவுகள் குறித்து அரசாங்கத்திற்கு புரிதல் காணப்படுகின்றதா என்பதில் பிரச்சினை காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

பெறுமதி சேர் வரி திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (09) இடம்பெற்ற விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்கு அமெரிக்க வர்த்தகக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தும் சந்தர்ப்பம் காணப்படுகின்றன. இந்த அதிகாரம் அமெரிக்க அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ளன. சட்டங்களை உருவாக்குவதற்கும் வர்த்தக உடன்படிக்கைகளை அங்கீகரிப்பதற்கும் கூட அதிகாரங்கள் இவற்றுக்கு அதிகாரம் காணப்படுகின்றன. ஒருதலைப்பட்சமாக வரி விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்பட்டாலும், இந்த சபைகளினது உறுப்பினர்களுக்கு இதில் செல்வாக்கு செலுத்தக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதால் அரசாங்கம் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். செனட் சபையிலும், பிரதிநிதிகள் சபையிலும் இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருக்கிறார்களா என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். 

விரைவில் ஒரு தூதுக்குழுவை அனுப்புங்கள். 

தூதுக்குழுவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அனுப்பாது, பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் விதமாக அனுப்ப வேண்டும். தற்போது, ​​செனட்டில் உள்ள குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ஒன்றிணைந்து, இந்த வர்த்தகக் கொள்கை தொடர்பாக புதிய சட்டமொன்றை கொண்டு வர தயாராகி வருகின்றன. இதன் மூலம், ஜனாதிபதி தன்னிச்சையாக விதிக்க வரும் வரிகளை காங்கிரஸில் அனுமதியைப் பெற வேண்டும். எனவே இவ்விரு சபைகளினது பிரதிநிதிகளுடனும் எமது நாட்டில் இருந்து செல்லும் தூதுக்குழுவினர் கலந்துரையாட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். 

2033 ஆம் ஆண்டு முதல் செலுத்த முடியுமாக இருந்த கடன் காலக்கெடுவை 2028 ஆம் ஆண்டில் இருந்து செலுத்துவதற்கான இணக்கப்பாட்டிற்கு முந்தைய அரசாங்கம் வந்தது. 

ஒரு நாடாக, நாம் அமெரிக்கப் பிரதிநிதிகளை இராஜதந்திர ரீதியாக நேரடியாக சந்திக்க வேண்டும். கடிதம் அனுப்பினால் மட்டும் போதாது. 44% தீர்வை வரி விதிப்பு நமது நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு விழுந்த பெரும் அடியாகும். சகல தொழிற்துறைக்கும் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வரிகளால் தொழில்கள் வீழ்ச்சியடையும். வேலைகள் இழக்கப்படும். வருமானம் குறையும். பொருளாதாரம் வீழ்ச்சியடையும் இதனால் 2028 இல் கடனைத் திருப்பிச் செலுத்துவது கூட கடினமாக மாறும். சர்வதேச நாணய நிதியம் 2033 ஆம் ஆண்டிலிருந்து கடனைத் திருப்பிச் செலுத்த முன்வந்த போதிலும், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அவதானத்தைப் பெறுவதற்கு முந்தைய அரசாங்கம் 2028 இல் இருந்து திருப்பிச் செலுத்தும் விதமாக கால அவகாசத்தைக் குறைத்தது. இதற்கு துரித பொருளாதார வளர்ச்சி விகிதம் காணப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

உடனடியாக சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டுங்கள். 

ஆடைத் துறை மற்றும் இதர ஏற்றுமதி துறைகளுக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறு இந்தியப் பிரதமருடனான சந்திப்பின் போது நான் யோசனை முன்வைத்தேன். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, இனம், மதம், சாதி, வர்க்கம், அந்தஸ்து என்ற வேறுபாடின்றி இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும். சகல கட்சிகளையும் கூட்டி பொதுவான வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும். கடுமையான பொருளாதாரப் பேரழி ஏற்பட முன்னதாக நாம் ஒற்றுமையாகவும், பொதுவான ஒருமித்த நிலைப்பாட்டின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

வடக்கில் சிக்கிய பெருந்தொகை கேரள கஞ்சா!

0
121 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சியில் கடற்படையினரால் கைது.

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி-உடுத்துறை கடல் பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

சுமார் முன்னூற்று நான்கு (304) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் (ஈரமான எடையுடன்) கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் சந்தேக நபர் ஒருவரை நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்தனர்.

சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகை அவதானித்து சோதனை செய்தபோது, குறிப்பிட்ட டிங்கி படகில் இருந்து முந்நூற்று நான்கு (304) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கேரள கஞ்சாவை (ஈரமான எடையுடைய) ஏற்றிச் சென்ற ஒரு (01) டிங்கி படகுடன் சந்தேக நபர் ஒருவரையும் (01) கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது, இதன் மதிப்பு நூற்று இருபத்தொரு (121) மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லியான் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபர், கேரள கஞ்சா பொதி மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மரதன்கேனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தேசபந்துவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

0

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நேற்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று பிற்பகல் 5.45 மணிக்கு இடம்பெற்றதுடன், இதில் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 151வாக்குகள் அளிக்கப்பட்டன. இதற்கு எதிராக எந்த வாக்கும் அளிக்கப்படவில்லை.

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை முன்வைப்பதற்கான தீர்மானம் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் 115 பேரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் 25ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தின் பின்னர் குழு நிலையில் சட்டமூலம் ஆராயப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டையடுத்து வாக்கெடுப்பு இன்றி இச்சட்டமூலம் நேற்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நிவாரண பணிகளை ஆரம்பித்த இலங்கைப் படை!

0

மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அனர்த்த நிவாரண மீட்புப் பணிகளுக்கு உதவ அனுப்பப்பட்ட, முப்படைப் வீரர்களைக் கொண்ட சிறப்பு மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு, மியான்மரில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதேயன்று யங்கோன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை குழுவினர், யங்கோனிலிருந்து 450 கி.மீ தொலைவிலுள்ள பாதிக்கப்பட்ட பகுதியான Nay Pyi Taw மாகாணத்தில் நிலைகொண்டு அங்கிருந்து திங்கட்கிழமை (ஏப்ரல் 7), அந்நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் இரண்டு நடமாடும் மருத்துவ முகாம்களை நடத்துவதற்காக அவர்கள் Pobba Thiri நகரத்திற்கு அனுப்பப்பட்டனர்.

Pobba Thiri யில், அவசர மருத்துவத் தேவைகளைக் கண்டறிய சூழ்நிலை மதிப்பீட்டை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. பிரதானமாக அத்தியாவசிய சுகாதாரப் தேவைகளை வழங்குதல், காயங்களுக்கு சிகிச்சை அளித்தல் மற்றும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்றவற்றில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் நிவாரண குழுவினரின் தொழில்முறை மற்றும் மனிதாபிமான சேவைக்கான அர்ப்பணிப்பு மற்றும் சேவை பாராட்டுக்குட்பட்டுள்ளதுடன் அவசர காலங்களில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமைக்கான இலங்கையின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் அமையும்.

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு இந்தப் குழுவினரின் நிவாரண பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் தேவைப்படுபவர்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள உதவிகளை வழங்குவதற்கான படைப்பிரிவின் திறனில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, அதன் முழு ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

13 வேட்பாளர்கள் கைது!

0

2025 உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 

அதன்படி, இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டார். 

இதற்கிடையில், மார்ச் 3 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 13 ஆகும். 

அதனுடன், 42 கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11 வாகனங்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

நேற்று (08) காலை 6.00 மணி முதல் இன்று (06) காலை 6.00 மணி வரை தேர்தல் தொடர்பான குற்ற முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது. அத்துடன் தேர்தல் சட்டங்களை மீறியதாக 12 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மார்ச் 3 முதல் இன்றுவரை பதிவான மொத்த குற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 24 ஆகும். அந்தக் காலகட்டத்தில், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 99 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

பிள்ளையான் அதிரடி கைது!

0

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக மட்டக்களப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாமர சம்பத் எம்.பிக்கு பிணை!

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு  நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (08) முற்படுத்தப்பட்ட போது நீதவான் பிணை வழங்கிய உத்தரவிட்டுள்ளார்.

இன்று (08) இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபரான சாமர சம்பத் தசநாயக்கவை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐந்து சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.

மேலும், சந்தேக நபரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும் உத்தரவிடப்பட்டது.

2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் முதலமைச்சராகப் பணியாற்றிய சாமர சம்பத் தசநாயக்க, அம்மாகாணத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு பைகள் வழங்குவதற்காக ஒரு அரச வங்கியிடம் நிதி உதவி கோரினார். ஆனால், அந்த வங்கி அவரது கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து, ஊவா மாகாண சபைக்கு சொந்தமான 06 நிரந்தர வைப்பு கணக்குகளை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவந்து, அந்தப் பணத்தை எடுத்தார். இதன் காரணமாக, மாகாண சபைக்கு 17.3 மில்லியன் ரூபாய்க்கு (173 லட்சம் ரூபாய்) மேல் நட்டம் ஏற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

30 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!

0

அரச சேவையில் அத்தியவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்தல்.

அரசியல் அழுத்தங்களின்றி தகைமைகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் அரச துறைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும், தற்போதுள்ள அரச நிதி நிலைமையையும் கருத்தில் கொண்டு, அரச சேவையில் அத்தியவசிய வெற்றிடங்கள் 30,000 ஆட்சேர்ப்பு செய்வதற்காக 2025 வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்திற்கு பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அரச சேவையில் பல்வேறு 5 நிறுவனங்களில் பணிக்குழாமினரை மீண்டும் மீளாய்வு செய்து, அத்தியவசிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் தற்போது அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்புக்கள் 18,853 இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கிணங்க, பொது நிருவாக, உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு “2025 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் 30,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம்” கீழ் நியமமான ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளுக்கமைய விண்ணப்பங்களைக் கோரி குறித்த ஆட்சேர்ப்புக்களை செய்வதற்கான ஏற்புடைய அமைச்சுக்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இலங்கை பொலிஸில் மாற்றம் அவசியம்!

0

விசேட அதிரடிப்படையணியின் 82 ஆவது குழுவின்  பயிற்சி நிறைவு விழாவில் ஜனாதிபதி  தெரிவிப்பு

சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை  பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை  பொலிஸ் மீது குடிமக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

களுத்துறை, கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில் இன்று (07) நடைபெற்ற 82 ஆவது அடிப்படைப் பயிற்சி பாடநெறியை நிறைவு செய்தோர் வெளியேறும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

தமது தொழிற்துறைக்கு ஒருவர் எந்தளவு நியாயத்தை நிலைநாட்டியுள்ளார், கௌரவமளித்துள்ளார் என்பது அவரின்  தொழில் வாழ்க்கையின் ஊடாகப் பிரதிபலிக்கிறது எனவும் அந்த தொழில் முறையை அடைந்து இந்த நாட்டுக்கு அவசியமான மாற்றத்தை ஏற்படுத்த பங்களிக்குமாறு பயிற்சி பெறும் இளம்  பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

பல துறைகள் வீழ்ச்சியடைந்துள்ள தருணத்தில், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி  அரசியல் அதிகாரத்தை மாற்ற பிரஜைகள் நடவடிக்கை எடுத்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் அதிகாரத்தை மாற்றுவதன் மூலமாக மாத்திரம், ஒரு நாடு வெற்றிபெறாது என்றும், அனைத்து துறைகளிலும் சாதகமான மாற்றம் தேவை என்றும் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு புதிய பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும்,  அதனைப் பாதுகாக்கும் அதே வேளையில், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருட்களுக்கு இந்த நாடு பலியாக இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இளைய தலைமுறையினர்,  தாய்நாட்டின் பொறுப்பை  தங்கள் தோள்களில் ஏற்று, தங்கள் எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் சாதகமான திசையில் கொண்டு செல்ல பாடுபட வேண்டும் என்றும், இன்று இலங்கை பொலிஸ் நிரந்தர சேவையில் இணைவது வலுவான முன்னெடுப்பாகும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அவசர நிலைமைகளில் பிரஜைகளுக்கு  விசேட அதிரடிப்படை வழங்கி வரும் சேவை மிகவும் பாராட்டத்தக்கது என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த அணிவகுப்பில் 118 உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 231 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தங்கள் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக   நிறைவு செய்து  வெளியேறினர்.

பயிற்சி நெறியின் போது விசேட  திறமையை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கினார்.

பயிற்சி பெற்று வெளியேறும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கப்பட்டது.

போர் களத்தில் மேற்கொள்ளப்படும்  நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அதிரடிப்  படை அதிகாரிகளால் கண்காட்சியொன்றும் இங்கு காண்பிக்கப்பட்டது.

1983 ஆம் ஆண்டு “நியதை ஜய” (வெற்றி நிச்சயம்) என்ற தொனிப்பொருளுடன் நிறுவப்பட்ட இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை  தற்போது பிரபுக்கள் பாதுகாப்பு, குற்றங்கள், திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுத்தல் மற்றும் போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்குதல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்பவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கீர்த்திமிக்க பிரிவாகும்.

பொதுமக்கள்  பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வா, பொலிஸ் அதிகாரிகள், பயிற்சி பெற்று வெளியேறும் பொலிஸ் அதிகாரிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர்  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025-04-07

நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை!

நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை, தமிழ் மக்களின் ஒரு வாக்கு கூட உள்ளூராட்சி சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு போகக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் -சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எங்கள் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு காரணமாக இவர்களுக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். அந்த பரிசோதனையை மக்கள் இந்த உள்ளூராட்சியிலும் செய்வதற்கு நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை. ஒருவாக்கு கூட தேசிய மக்கள் சக்தி இந்த தேர்தலில் போடக்கூடாது என தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் சில வேளைகளில் சபைகளை கைப்பற்றினால் சபைகளின் கீழுள்ள சந்தைகளின் கடைகளைக்கூட தேசிய ரீதியில் கேள்வி கோரலை மேற்கொள்ளுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகள் என்பது எமது அடிமட்ட அரசியலை கொள்கை ரீதியான அரசியல் பயணமாக மேற்கொள்வதே எனவும், ஆனையிறவு உப்பை ஆனையிறவின் பெயரை மாற்றி இன்று ரஜ லுணு என மாற்றியுள்ளனர். சபைகள் எமது கைகளில் இருக்கும் போது இந்த விடயங்கள் எல்லாம் நடைபெறாது என அவர் சுட்டிக்காட்டினார்.

வடபகுதி மக்கள் தமிழ்த்தேசியத்தை கைவிட்டுள்ளனர். ஏன் பிரித்தானியா நான்கு பேர் மீதும் தடை கொண்டு வருகின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கூறியுள்ளார் என்பதை சிந்திக்க வேண்டும்.

நாங்கள் விட்ட மிகப்பெரிய தவறு, பொது வேட்பாளருக்கு ஒட்டு மொத்த மக்களும் ஆதரவளித்து ஐந்து இலட்சத்திற்கும் மேலான வாக்குகளை அளித்திருந்தால் பிரித்தானியா போன்ற நாடுகள் தமிழர்கள் தனித்துவமாக உள்ளார்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். நான்கு பேரை தடை செய்ததை விட பெரிய வெற்றியை தவறை விட்டுள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ் -சிறீதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.