Friday, March 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 222

புதிதாக திறக்கப்பட்ட சுற்றுலாப் பகுதி!

0

நுவரெலியாவில் உள்ள சாந்திபுர கழுகு காட்சி முனை (Eagle’s View Point) உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 6182 அடி உயரத்தில் அமைந்துள்ள இலங்கையின் மிக உயரமான கிராமமான சாந்திபுர கிராமத்தைச் சுற்றி இந்த கண்காணிப்பு தளம் கட்டப்பட்டுள்ளது.

Eagle’s View Point இன்று (26) வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜிதஹெரத் தலைமையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.

சுற்றுலாத் துறையின் வளர்ச்சியின் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்காக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கையை ஒரு முக்கிய மற்றும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் முதன்மை நோக்கத்துடன் 2024 ஜூலை 31ஆம் திகதியன்று தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள், இலங்கை விமானப்படையின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கான நிதி பங்களிப்பை சுற்றுலா அபிவருத்தி அதிகாரசபை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி நிதியத்தின் அசத்தல் திட்டம்!

0

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

புதிய தொழிநுட்பம் மற்றும் வலையமைப்பு மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவை மக்களுக்கு சமீபமாக வழங்கப்படும்மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதி நிதிய அலுவலகத்தின் சேவைகளை நாடளாவிய ரீதியில் உள்ள 361 பிரதேச செயலக அலுவலகங்களிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐந்து பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டு இது தொடர்பில் முன்னோடித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் இத் திட்டத்தை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கும் வகையில் இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இணையம் மூலமான கலந்துரையாடலின் போதே இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி நிதியத்திற்கு புதிய டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வலையமைப்பு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் ஊடாக மக்களுக்கு மிகவும் வினைத்திறன் மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்காக செயலாற்றி வருவதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே தெரிவித்தார்.

இதனூடாக எவராயினும் தமது பிரதேச செயலகத்தின் ஊடாக நோய்க்கு அமைவான கொடுப்பனவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

மேலும், அது தொடர்பான ஆவணங்களை பிரதேச செயலகத்தினால் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.நோயாளர்களை தெரிவு செய்யும் முறை, அவர்களின் ஆவணங்களை தயாரிக்கும் முறை, ஜனாதிபதி நிதியத்தின் பொறுப்பு என்பன தொடர்பில் இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

இன்று ஒரு காட்டு காட்டவுள்ள மழை!

0

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் குறித்து அதிர்ச்சி தகவல்!

0

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பில் ஏற்பாடுகள் உள்ளது என எண்ணிக்கொண்டே முன்னாள் ஜனாதிபதிகள் சிலர் உத்தியோகபூர்வ இல்லங்களில் வசித்து வருகின்றனர்.

நாம் அறிந்தவகையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இல்லங்கள் வழங்கப்பட வேண்டும் என எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பான சட்டத்திலும், அவர்களுக்கு பொருத்தமான இல்லமொன்று வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, விசாலமான அல்லது நவீன வசதிகொண்ட வீடு வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை.

தேவையேற்படின் இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ போன்ற சட்டத்தரணிகளை கொண்டு ஆராய முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான இல்லம் என்பது அரசியலமைப்பினால் வழங்கப்பட்டதொரு வரப்பிரசாதம் அல்லவெனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

காற்றாலை மின் திட்டம் – எது உண்மை?

0

காற்றாலை மின் திட்டம் தொடர்பாக அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தை இரத்து செய்ய அமைச்சரவை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், குறித்த திட்டத்தால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டணங்களை மட்டுமே மறுஆய்வு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், திட்டம் இரத்து செய்யப்பட்டதாக அர்த்தமல்ல என்று அமைச்சர் கூறினார்.

இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக தற்போது நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்தும் தாம் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

நாகவில்லுவில் விபத்து – பெண்ணொருவர் பலி!

0

புத்தளம் கொழும்பு பிரதான வீதியில், நாகவில்லு பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

புத்தளம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருடன் மோதியதிலே குறித்து விபத்து இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்ததுடன், பின்னாலிருந்து பயணித்த பெண்ணொருவரே தனது வீட்டுக்கு அருகில் விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்த மற்றைய நபர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கி இரு பஸ்கள் போட்டி போட்டு ஒன்றை ஒன்று முந்திக்கொள்ள வேகமாக சென்றதாகவும், எதிரே வந்த பொலரோ வாகனம் கட்டுப்பாட்டை மீறி முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலம் புத்தளம் தல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய சாரதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் மதுரங்குளி போலீசார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர்

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மதுரங்குளி போலீசார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை!

0

அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

அமெரிக்க அதிபராக கடந்த திங்கள்கிழமை பதவியேற்ற டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தார்.

இந்த உத்தரவு பிப்.19 முதல் அமலுக்கு வரும் என்பதால் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அறுவை சிகிச்சை வழியாக குழந்தை பெற்றுக்கொண்டு அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காக முயற்சி செய்கிறார்கள். 7 மாத கர்ப்பிணிகள் கூட அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையை நாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் பிப்.20ம் திகதி முதல் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்.

அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சியாட்டல் மாகாண நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜான் கோக்னார்,’டிரம்ப்பின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது’ எனக் கூறி அந்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தார். இதன் மூலம் டிரம்ப் உத்தரவு அமலாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் டிரம்ப்பிடம் தடை உத்தரவு குறித்து தெரிவிக்கப்பட்டபோது, ‘நிச்சயம் மேல்முறையீடு செய்வோம்’ என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற வந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில்,’ அமெரிக்க அதிகாரிகள் 538 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளனர். அவர்களை இராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளனர்.

இதில் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி ட்ரென் டி அராகுவா கும்பலைச் சேர்ந்த 4 பேர் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பல சட்டவிரோத குற்றவாளிகள் இருந்தனர். அவர்களை கைது செய்த டிரம்ப் நிர்வாகம் இராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடு கடத்தல் நடவடிக்கை சிறப்பாக நடந்து வருகிறது. அதிபர் டிரம்ப் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன’ என்று தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப் கூறுகையில்,’உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த கச்சா எண்ணெய் விலையை குறைத்தால் போதும். ரஷ்யா உடனே போரை நிறுத்தி விடும். இந்த போரை நிறுத்த ரஷ்யா ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இதற்காக புடின் என்னைப் பார்க்க விரும்புவார் என்று நான் நினைக்கிறேன். ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால் பொருளாதாரத் தடைகளை விதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’ என்றார்.

எண்ணெய் விலை குறைவது உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர உதவும் என்று டிரம்ப் கூறியதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில்,’ ரஷ்ய பாதுகாப்பு நலன்களை மேற்கு நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுத்ததால் உக்ரைன் போர் ஏற்பட்டது. இந்த போர் எண்ணெய் விலையை சார்ந்தது அல்ல. ரஷ்யாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தொடர்பானது. டிரம்புடன் தொடர்பு கொண்டு பேச ரஷ்ய அதிபர் புடின் தயாராக இருக்கிறார்’ என்றார்.

மஹிந்தவின் மகன் யோஷித்த அதிரடி கைது!

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

தற்போது தொடரப்பட்டுள்ள இந்த காணி வழக்கின் பிரதான சந்தேகநபர், யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண் ஆவார்.

இந்நிலையில், பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

வாகன பேர்மிட் குறித்து திடீர் அறிவிப்பு!

0

வாகன அனுமதிப் பத்திர (பேர்மிட்) சலுகைகளை இரத்து செய்வதற்கு எவ்வித கொள்கைத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை – பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

அரசாங்க சேவையில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகன அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் எவ்வித கொள்கைத் தீர்மானங்களையும் எடுக்கவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க முன்வைத்த  கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

வாகன அனுமதிப் பத்திரத்திற்காக தற்போது சந்தர்ப்பம் வழங்காவிட்டால் எதிர்பார்த்த பொருளாதார இலக்குகளை அண்மிப்பதற்கு அசௌகரியம் ஏற்படும் என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க சேவையின் உயர் அதிகாரிகளுக்கு தற்போது 15,000 , முதல் 20,000 இடையிலான தொகையில் இவ் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது முன்னுரிமை தொடர்பான சிக்கல் அன்றி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு எவ்வித கொள்கைத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

2025இல் 340,000 பேருக்கு வேலை வாய்ப்பு!

0

2024ஆம் ஆண்டில் 311,000 ஆக இருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் 2025ஆம் ஆண்டில் நூற்றுக்கு 12வீதத்தால் அதிகரித்து 340,000 இலங்கையர்களை இவ்வருடத்தில் வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டுக்கு அனுப்புவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிதாக அனுமதிப் பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நேற்று (23) நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒழுங்கு விதிகளுடன் சரியாக தொழிலுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்றும், பணியகத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தொடர்ந்தும் பணியகத்தின் பெயரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அவ்வாறே வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அனுமதிப்பத்திரம் பெற்று சில முகவர் நிறுவனங்கள் ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தனக்கு தகவல் கிடைப்பதுடன் அவ்வாறான நபர்களுக்கு எதிராக எவ்வித தரங்களையும் பார்க்காது தண்டனை வழங்குவதாகவும், பணத்திற்கு அன்றி மனிதாபிமானத்துக்கு முதலிடம் வழங்கிய ஒரு அமைப்பாக தொடர்ந்து செயற்படுவதாகவும் இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புத் துறையில் முன்னேற்றத்தைப் பெறுவதற்காக பாரிய செல்வாக்குச் செலுத்தி உள்ளதாகவும் தலைவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.

புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் சந்தர்ப்பங்களை தேடும் போது வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டிய தலைவர், அவர்களின் பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்காக பணியகம் பாரிய பங்களிப்பை வழங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது பணியகத்தின் செயற்பாடு தொடர்பாக, பணியகத்தின் ஊடாக வழங்கப்பட்ட அனுமதி, வழங்கப்படும் பயிற்சி மற்றும் பணியகத்தின் சட்டம் போன்ற விடயங்கள் தொடர்பாக தொழில் பெறுநர்கள் அறிந்திருக்க வேண்டும்.

இந்நிகழ்வில் நாடு முழுவதும் பல்வேறு பிரதேசங்களில் இருந்து தகைமை பெற்ற புதிய தொழில் பிரதிநிதிகள் 30 பேர் கலந்து கொண்டனர்.