Friday, March 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 229

புகையிரத திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு!

0

புகையிரத ஆசன முன்பதிவு மற்றும் முன்பதிவுக் கட்டண மீளளிப்பு தொடர்பான புகையிரத திணைக்கள அறிவித்தல்

புகையிரத ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புகையிரத நிலையத்திற்குள் நுழையும் போதும், புகையிரதத்தில் பயணச்சீட்டு பரிசோதனை செய்யும் போதும், பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை சரிபார்த்து உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதன்படி, 2025.01.01 ஆம் திகதி முதல், முன்பதிவு செய்யப்பட்ட ஆசன பயணச் சீட்டுக்கான பணத்தை மீளளிப்பு செய்யக் கோரும் போது, பயணச் சீட்டில் குறிப்பிடப்பட்ட தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை உறுதி செய்ய, பயணியால் தொடர்புடைய தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டின் பிரதியானது புகையிரத நிலையத்திற்கு சமர்ப்பிக்கப்படுவது கட்டயமானது என்றும் இவ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்தால் குறைந்த உயிரிழப்புக்கள்!

0

கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக பொலிஸார் முன்னெடுத்துள்ள வாகன சோதனை நடவடிக்கைகள் காரணமாக, வாகன விபத்துகளால் ஏற்படும் நாளாந்த உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

‘புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில் பொலிஸின் செயற்பாடுகள் ‘ என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், போக்குவரத்து விபத்துகளால் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவித்தார்.

இது கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் என்றும், வீதி ஒழுக்கத்தைப் பேணுவது மிகவும் முக்கியமானது என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

கடந்த நாட்களில் வீதி விபத்துகளால் தினமும் சுமார் 9 பேர் உயிரிழந்ததாகவும், இந்த எண்ணிக்கை 4 ஆகக் குறைக்கப்பட்டு தற்போது 2 ஆகக் குறைந்துள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் கூறினார்.

மேலும், வீதி விபத்துகளால் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 பேர் வரை நிரந்தர மாற்றுத்திறனாளிகளாக ஆவதாகவும், யுத்தத்தின் போது நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 பேர் வரை உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்ட வாகன சோதனை நடவடிக்கைகள் காரணமாக, கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று எந்தவொரு வாகன விபத்துகளும் பதிவாகவில்லை என்றும், இது ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வு என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு!

0

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) வெளியிட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, வீட்டுப் பிரிவின் கீழ், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம் 6 ரூபாயில் இருந்து 4 ரூபாவாகவும், 31-60க்கு இடையில் 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

பாலியல் சேட்டை செய்த பா.ஊழியர்கள்!

0

பெண் பாராளுமன்ற ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் பரிந்துரைகளின் அடிப்படையில், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன மூன்று ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய கடந்த தினம் ஒப்புதல் அளித்திருந்தார்.

இன்றைய மன்னார் துப்பாக்கி சூடு- வெளியான திரில் சம்பவம்!

0

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்தனர்.

மன்னார் உயிலங்குளம் பகுதியில் நடந்த இரண்டு கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் வந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று காலை 9.20 மணியளவில் நீதிமன்ற முன்றலில் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் 63 வயதான சப்ரயன் அருள் மற்றும் 42 வயதான செல்வகுமார் ஜூட் என்பவர்களே உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் முகத்தை முழுவதுமாக மறைக்கும் வகையிலான தலைக்கவசத்தை அணிந்திருந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதும் தெரியவந்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னார், உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

முதலீடு செய்ய அழைக்கப்பட்ட நிறுவனங்கள் இவைதான்!

0

நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த முதலீட்டு அமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விஜயத்தின் மூன்றாம் நாளுடன் இணைந்ததாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சீனா டியான்யிங் இன்கோபரேசன் (CNTY- China Tianying Inc),சீன ஹார்பர் பொறியியல் நிறுவனம் ( China Harbour Engineering Company Ltd) , சீன தொலைத் தொடர்பு நிர்மாண கம்பெனி லிமிடெட் (China Communications Construction Company Ltd),சீனா பெட்ரோ கெமிக்கல் கூட்டுத்தாபனம் (China Petrochemical Corporation-SINOPEC Group), மெடலர்ஜிகல் கோபரேசன் ஒப் சைனா நிறுவனம் (Metallurgical Corporation of China Ltd), சீன சிவில் பொறியியல் நிர்மாணக் கூட்டுத்தாபனம்(China Civil Engineering Construction Corporation),சீனா எனர்ஜி இன்டர்நெசனல் குழும நிறுவனம் (China Energy International Group Company Ltd),குவாங்சு பொதுப் போக்குவரத்து குழுமம்( The Guangzhou Public Transport Group) உட்பட பல முன்னணி சீன நிறுவனங்கள் இந்த முதலீட்டு அமர்வில் பங்கேற்றன.

அந்த நிறுவனங்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதர் சீ ஜென்ஹோங், சீனாவிற்கான இலங்கைத் தூதர் மஜிந்த ஜெயசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு

பட்டம் தேவையில்லை; விஷயம் தெரிஞ்சா கைல காசு!

0

சாப்ட்வேர் இன்ஜினியரிங் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. பள்ளி படிப்பு, பட்டம் உள்ளிட்டவை தேவையில்லை என எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர். சமூக வலைத்தள நிறுவனமான எக்ஸ் தளத்தையும் நடத்தி வருகிறார். ‘டிக்டாக்’ செயலியை எலான் மஸ்க் வாங்க இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில் வேலைக்கு ஆட்கள் பணியமர்த்தப் போகிறேன் என்று அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: நீங்கள் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து, பல்வேறு விதமான செயலிகளை உருவாக்க விரும்பினால், உங்களின் விவரங்களை, code@x.comக்கு அனுப்புங்கள்.

எங்களது நிறுவனத்தில் இணைந்து விடுங்கள். நீங்கள் பள்ளிக்குச் சென்றீர்களா? நீங்கள் எந்த பெரிய பெயர் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்தீர்களா, பட்டம் படித்தீர்களா என்பது எங்களுக்கு கவலை இல்லை. உங்களது திறமையை காட்டுங்கள். இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.

திறமைசாலிகளுக்கு கை நிறைய சம்பளம் அள்ளித் தருவதில் எலான் மஸ்க் தாராளமாக நடந்து கொள்வார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மஸ்கின் இந்த அறிவிப்பு, அவர் டிக் டாக் சமூக வலைதளத்தை வாங்கி விட்டாரா என்ற சந்தேகத்தை கிளப்புகிறது என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

நடிகர் சைஃப் அலிகானுக்கு சரமாரியாக கத்திக்குத்து!

0

மும்பையில் பிரபல நடிகர் சைஃப் அலிகானை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தார்.

நடிகர் சைஃப் அலி கான் வியாழக்கிழமை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில், மர்மநபர் ஒருவர் அதிகாலை 2.30 மணியளவில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். அதைத் தடுக்கவந்த சைஃப் அலிகானை அந்த மர்ம நபர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில், சைஃப் அலிகான் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

காயமடைந்த நடிகர் சைஃப் அலிகான் தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2012 ஆம் ஆண்டு பிரபல நடிகை கரீனா கபூரை திருமணம் செய்த சைஃப் அலிகான் மும்பையின் பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள சத்குரு ஷரண் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர்களுக்கு தைமூர், ஜெஹ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சைஃப் அலிகான் காயமடைந்தது பற்றி மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சைஃப் அலி கான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கொள்ளையனுடன் ஏற்பட்ட மோதலில் அவர் கத்தியால் குத்தப்பட்டாரா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

லீலாவதி மருத்துவமனையின் டாக்டர் நிரஜ் உத்தாமணி கூறுகையில், “காயமடைந்த சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு 6 கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவர் முதுகில் கத்திக்குத்து விழுத்துள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வருகிறோம். அறுவைசிகிச்சைக்குப் பிறகுதான் பாதிப்பு எவ்வளவு என்பது தெரியவரும்” என்றார்.

ஏற்கனவே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி பாந்த்ராவில் தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை, பிரபல கொள்ளைக் கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.

அதன்பின்னர், நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. அதன் ஒருபகுதியாக இந்தத் தாக்குதல் சம்பவம் இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

2000 ரூபா டிக்கட் 16000 ரூபாவிற்கு விற்பனை!

0

வெளிநாட்டினரின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வரும் மலையக ரயில் மார்க்கத்தின் எல்ல வரை செல்லும் ரயிலுக்கான இணையவழி பயணச்சீட்டுகள் (ஈ-டிக்கட்) இணையத்தில் வௌியிடப்பட்டு 42 வினாடிகளில் தீர்ந்துவிட்டதால், இதில் பாரிய அளவிலான மோசடி நடைபெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், டிக்கட் விற்பனை மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (15) கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அதன் இணைத் தலைவர்களான அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இணையவழி ஊடாக அனைத்து இணையவழி பயணச்சீட்டுகளையும் (ஈ-டிக்கட்) வாங்கி, 2,000 ரூபா பெறுமதியான டிக்கெட்டை வெளிநாட்டினருக்கு 16,000 ரூபாவுக்கு விற்கும் குழுக்கள் பற்றிய தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் எல்ல ரயில் நிலையங்களை மையமாகக் கொண்டு அதிக விலைக்கு ரயில் பயணச்சீட்டுகளை விற்பனை செய்து வருவதாகவும், இந்த செயற்பாட்டிற்காக ரயில் நிலைய வளாகத்தில் முச்சக்கர வண்டிகளை நிறுத்தி வைத்திருப்பவர்களின் உதவி கிடைப்பதாகவும் தகவல்கள் இருப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

ரயில்வே திணைக்களத்தின் ஊடாக தொடர்புடைய திகதிக்கு செல்லுபடியாகும் இணையவழி பயணச்சீட்டுகளை (ஈ-டிக்கட்) ஒரு மாதத்திற்கு முன்பே இணையத்தில் வெளியிடுவதாகவும், அவை வெளியிடப்பட்டு 42 வினாடிகளில் விற்றுத் தீர்ந்துவிடுவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கணினிகள் தொடர்பான சிறப்பு அறிவைக் கொண்ட ஒரு நபர் அல்லது குழுவால் இது மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் இருப்பதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும், அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கையில் முறைப்பாட்டை வழங்கும் நபர் சட்ட நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், அதிக விலைக்கு பயணச்சீட்டுக்களை வாங்குவோர் இது தொடர்பில் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் தெரிவிப்பதாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள்!

0

1,100 கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகள் துறைமுகம் மற்றும் சுங்கத்தில் தேங்கியுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இதனைத் தெரிவித்துள்ளார். 

இதுதவிர, சீ.ஐ.சீ.டீ தளத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் 400 கொள்கலன் தாங்கிகள் தேங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகளை விடுவிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நாட்டிற்கு வந்த சுமார் 25 அல்லது 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.