தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கெதிரான குற்றப்பிரேரணை தென்கொரிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த இரண்டாவது குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றில் நேற்றும் இடம்பெற்றது.
குற்றப்பிரேரணைக்கு ஆதரவாக 204 வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி நீக்கப்படுவதாக அந்த நாட்டு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவாரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி நியமிக்கப்பட்டு 60 நாட்களில் தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பிரேரரணை முடிவுகள் தொடர்பில் கருத்து வௌியிட்ட யூன் சுக் யோல், தனது பயணம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகவும், நாட்டுக்கான தமது பயணம் எதிர்காலத்திலும் தொடருமென தெரிவித்துள்ளார்.
யூன் சுக் யோல், தென்கொரியாவில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியமைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டது.
முதலாவது குற்றப்பிரேரணை தோற்கடிக்கப்பட்டதுடன் இரண்டாவது குற்றப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்ததது.
அத்துடன், நாட்டில் பெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
தென்கொரிய பாராளுமன்றத்திற்கு முன்னால் இன்றும்(14) பெருமளவானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்ததுடன், ஜனாதிபதி பதவிநீக்கப்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மக்களே நாட்டில் அதிகார பலத்தை கொண்டவர்கள் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய எதிர்க்கட்சி தலைவர் Lee Jae-myung தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் பெரும் சவால்கள் காணப்படுவதாகவும், அதனை வெற்றிக்காெள்ளும் பயணத்தை நோக்கி செல்லுமாறும் அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் நாட்டில் அரசாங்கத்தின் நிலையான செயற்பாடுகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக தென்கொரியாவின் பதில் ஜனாதிபதியாக பொறுப்பெற்கவுள்ள Han Duck-soo தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற இனையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி கௌரவ ஹர்ஷன நானாயக்கார அவர்களின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஊடக அறிக்கையொன்றின் மூலம் பின்வரும் விடயங்களை வலியுறுத்துகிறார்.
அமைச்சரினால் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட தனது தகவல்கள் அடங்கிய படிவத்தில் கலாநிதிப் பட்டம் உள்ளடங்கப்படவில்லை என்பதுடன், பாராளுமன்ற இணையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் தகவல்களை உள்ளீடு செய்யும் போது ஏற்பட்ட தவறுதல் காரணமாக அமைச்சர் சட்டத்தரணி கௌரவ ஹர்ஷன நானாயக்கார அவர்களின் பெயருக்கு முன்னால் கலாநிதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி கௌரவ ஹர்ஷன நானாயக்கார அவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாராளுமன்ற இணையத்தளத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களினதும் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு, புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜயலத் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் 200 இற்கும் மேற்பட்ட மாணவர் பாராளுமன்றங்களை நடாத்தி பாராளுமன்றத்தை மக்களிடம் நெருக்கமாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன – பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர
கடந்த இரண்டு வருடங்களில் 200 இற்கும் மேற்பட்ட மாணவர் பாராளுமன்றங்களை நடாத்தி பாராளுமன்றத்தை மக்களிடம் நெருக்கமாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் வகையில், பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் நேற்று (11) நடைபெற்ற மேல்மாகாண மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், பாராளுமன்றச் செயற்பாடுகள் மற்றும் அதன் பங்கு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்த செயலாளர் நாயகம், பாராளுமன்றம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்தும் முழுமையான விளக்கத்தையும் வழங்கினார்.
மேல்மாகாண மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களுக்குப் பாராளுமன்ற முறைமையின் நடைமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கில் மேல்மாகாணக் கல்வி திணைக்களம் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் மேல்மாகாண பிரதான செயலாளர் தம்மிக்கா கே விஜேசிங்க, மாகாண கல்விப் பணிப்பாளர் பி.ஆர்.தேவபந்து, மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அனுர பிரேமலால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய மேல்மாகாண பிரதான செயலாளர் தம்மிகா கே விஜேசிங்க குறிப்பிடுகையில், மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக சமூகத்தில் நிலவும், மூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து அது தொடர்பான சமூக உரையாடலை உருவாக்குவதன் அவசியத்தை நினைவுபடுத்தினார்.
அதன் பின்னர், மேல்மாகாண மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வை ஆரம்பிக்கும் வகையில் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனையடுத்து, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மற்றும் அங்கத்தவர்களின் பதவியேற்பு இடம்பெற்றது. பின்னர், மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அமைச்சுக்களால் செயல்படுத்த முன்மொழியப்பட்ட திட்டங்கள் குறித்து சபையில் விளக்கினர்.
இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவ, மாணவியருக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் தலைமையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அதனையடுத்து, மேல் மாகாண மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள் பாராளுமன்ற வளாகத்திற்கு அழைக்கப்பட்டு பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பில் மேலும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது பாராளுமன்றக் குழுக்கள் தொடர்பாக சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேராவினால் விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற முறைமை தொடர்பில் மாணவர்களுக்குக் காணப்படும் கேள்விகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, பாராளுமன்ற முறைமை தொடர்பில் மாணவர்களுக்குக் காணப்படும் சந்தேகங்களும் தீர்த்துவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மேல் மாகாண வலயப் பணிப்பளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.
சபாநாயகர் ஆரம்பத்தில் கலாநிதி பட்டம் மற்றும் பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளதாக காட்டி மக்களை ஏமாற்றியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தனது நாடாளுமன்றக் குழுவின் ஊடாக சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு முழு எதிர்க்கட்சியினரும், அரசாங்கத்தின் மனசாட்சியுள்ள உறுப்பினர்களும் பங்களிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக நாட்டில் பேசும்பொருளாக மாறி இருப்பது சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு கிடைக்கப்பெற்ற கலாநிதி பட்டம் பற்றியதாகும்.
சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு இலங்கையின் எந்தவொரு பல்கலைக்கழகமும் கலாநிதி பட்டம் வழங்கவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், சமூகத்தில் எழுந்த விவாதத்துடன், பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தில் இருந்து அவரது பெயருக்கு முன் இடப்பட்டிருந்த கலாநிதி பட்டமும் நீக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்; சபாநாயகர் அசோக ரன்வல ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளதாக தெரிவித்த கருத்து பொய்யானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
அசோக ரன்வல என்ற நபர் தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, திசைகாட்டியில் இருப்போர்கள் உண்மையிலேயே பேராசிரியர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் மக்கள் மத்தியில் எதிர்மறையான நிலைப்பாடு உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலைமை குறித்து சபாநாயகர் அசோக ரன்வல அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளதாக டெய்லி சிலோன் இணையம் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு சபாநாயகர் உரிய நேரத்தில் பதில் அளிப்பார் என அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை அமைச்சரின் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து அமுல்படுத்தவும் அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது.
நட்புறவான சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கடந்துவிட்டன, மேலும் தரவுகளை எளிதாக்கும் புதிய தொழில்நுட்பத்தின்படி, தற்போது உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான பொருத்தத்தை அரசாங்கம் அங்கீகரிக்கும்.
இதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கருத்திற்கொண்டு, இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு நாட்டின் சுகாதார கட்டமைப்பில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான சரியான கொள்முதல் நடைமுறையை பின்பற்றாததன் காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
வழமையாக புதிய வருடமொன்று ஆரம்பமாகும்போது, சுகாதார அமைச்சினால் குறித்த வருடத்துக்கான மருந்துகளுக்கான மதிப்பீட்டறிக்கை தயாரிக்கப்பட்டு கொள்வனவுக்கான வேண்டுகோள் விடுக்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், கடந்த அரசாங்கத்தின் பலவீனம் மற்றும் கடந்த காலங்களில் சுகாதாரத் துறையின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டமையினால் தற்போது, மருந்து ஒழுங்குபடுத்தல், கொள்வனவு மற்றும் விநியோகம் ஆகிய செயற்பாடுகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, மருத்துவ விநியோகப்பிரிவின் தரவுகளுக்கமைய, அடுத்த ஆண்டில் பாரியளவில் மருந்து தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்சுலின், புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் சில உயிர்காப்பு மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.
எனவே, அரசாங்கம் உரிய கொள்வனவு நடைமுறைகளைப் பின்பற்றி பாரிய பற்றாக்குறைகள் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினது செயலாளர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
இலங்கையில் வாகன இறக்குமதி குறித்து மாஃபியா குழு ஒன்று செயற்படுவதாக தான் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார புள்ளி விபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு முதல் கார்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக கூறி, பிரபல கார் இறக்குமதியாளர்கள் கார்களின் விலைகளை காட்டும் விளம்பரங்களையும் காட்சிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது உள்ள வாகனங்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் தந்திரமாக இந்த பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் மக்கள் மத்தியில் வாகன இறக்குமதி செய்யப்படும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
புதிய வாகனங்களை எதிர்பார்க்கும் தனியார் வாகன உரிமையாளர்கள் தாங்கள் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலைக்கு விற்கும் நிலை ஏற்படும் அபாயம் ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை வாகன இறக்குமதிக்கு அரசு அனுமதி அளிக்காத நிலையில், அனுமதி கிடைத்தால் சுங்க வரியை அதிகரித்து வாகன இறக்குமதிக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது நாட்டில் வாகனங்களின் விலை அதிகரிப்பதுடன், குறைந்த விலையில் வாகனங்களை சேகரித்து வைத்திருக்கும் வர்த்தகர்கள் தமது வாகனங்களை அதிக விலைக்கு விற்று பெரும் இலாபம் ஈட்ட வாய்ப்பு ஏற்படும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப வாகன இறக்குமதியை கட்டுப்பாட்டின்றி அனுமதிக்க முடியாது.
பொது வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதித்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதையே அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என பேராசிரியர் வசந்த அத்துகோரல வலியுறுத்தியுள்ளார்.
சிரியா அதிபர் பஷார் அல் அசாத்தின் வாழ்க்கையில் பல முக்கியமான தருணங்கள் உள்ளன. ஆனால் அவற்றுள் அவர் வாழ்ந்த இடத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்த கார் விபத்துதான் அதிமுக்கியமானது.
தனது தந்தையிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்று நாட்டை வழிநடத்துவதற்கு பஷார் அல் அசாத்திற்கு ஆரம்பத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. அவரது மூத்த சகோதரர் பஸாலுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது.
கடந்த 1994ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டமாஸ்கஸ் அருகே நடந்த ஒரு கார் விபத்தில் பஸால் உயிரிழந்தார். அப்போது பஷார் லண்டனில் கண் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார்.
பஸாலின் மரணத்தைத் தொடர்ந்து, சிரியாவின் அதிபராவதற்கு பஷார் தயார்படுத்தப்பட்டார். தற்போது அவர் நூறாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற, லட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்த ஒரு மோசமான அதிபராக பார்க்கப்படுகிறார்.
ஆனால், கண் மருத்துவராக இருந்த பஷார் அல் அசாத், போர்க்குற்றம் சுமத்தப்பட்ட ஒரு சர்வாதிகாரத் தலைவராக எப்படி மாறினார்?
பஷார் அல் அசாத் 1965ஆம் ஆண்டு, ஹபீஸ் அல்-அசாத், அனிசா மக்லூஃப் ஆகியோருக்குப் பிறந்தார்.
அவர் பிறந்தபோது, சிரியா, மத்திய கிழக்கு மற்றும் இதர பிராந்தியங்களில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. அந்த நேரத்தில், அப்பகுதிகளில் உள்ள அரசியலில் அரபு தேசியவாதம் ஆதிக்கம் செலுத்தியது. சிரியாவிலும் அதே நிலைதான்.
பஷார் அல் அசாத்தின் குடும்பம் அலாவைட் எனப்படும் சிரியாவை சேர்ந்த ஒரு பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த பிரிவைச் சேர்ந்த பலர் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டின் ராணுவத்தில் சேர்ந்தனர்.
அப்போது ஹபீஸ் அல் அசாத் ஒரு ராணுவ அதிகாரியாகவும், பாத் கட்சியின் தீவிர ஆதரவாளராகவும் பிரபலமடைந்தார். அவர் 1966ஆம் ஆண்டு சிரியாவின் பாதுகாப்பு அமைச்சரானார்.
தனது அதிகாரத்தைப் பலப்படுத்தி 1971ஆம் ஆண்டு ஹபீஸ் அல் அசாத் சிரியாவின் அதிபரானார். 2000ஆம் ஆண்டு, அவர் இறந்துபோகும் வரை அவர் அதிபராகவே பதவி வகித்தார்.
அவரது ஆட்சிக்காலம் சிரியாவின் சுதந்திரத்திற்குப் பின்பு உள்ள வரலாற்றில் முக்கியமானது. எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, ஜனநாயக தேர்தல்களை நிராகரித்து அவர் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தார்.
டமாஸ்கஸ் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பஷார் அல் அசாத்,1992ஆம் ஆண்டு, லண்டனில் உள்ள வெஸ்டர்ன் ஐ மருத்துவமனையில் கண் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற பிரிட்டன் சென்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான A Dangerous Dynasty: The Assads என்ற பிபிசி ஆவணப்படத்தின்படி, லண்டனில் உள்ள வாழ்க்கையை பஷார் மிகவும் விரும்பினார். லண்டனில்தான் பஷார் தனது வருங்கால மனைவி அஸ்மா அல்-அக்ராஸை சந்தித்தார்.
கடந்த 1994ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தனது மூத்த சகோதரரான பஸல் உயிரிழந்த பிறகு பஷாருடைய வாழ்க்கையின் போக்கு அடியோடு மாறியது. சிரியாவின் அடுத்த தலைவராக அவரைத் தயார் செய்வதற்காக உடனடியாக லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டார்.
அதன் பிறகு, பஷார் ராணுவத்தில் சேர்ந்தார், மக்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவதற்கான பணிகளைத் தொடங்கினார்.
ஹஃபீஸ் அல்-அசாத் 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். அதையடுத்து, 34 வயதான பஷார் சிரியாவின் அதிபராக நியமிக்கப்பட்டார். இதற்காக சிரிய அரசியலமைப்பில் அதிபராவதற்கு குறைந்தபட்ச வயது தேவை 40இல் இருந்து குறைக்கப்பட்டது.
அவர் “வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம், வளர்ச்சி, நவீனமயமாக்கல், பொறுப்புக் கூறல் மற்றும் அரசு சார்ந்த சிந்தனை” போன்றவை குறித்துப் அதிகமாக பேசினார்.
அதிபராகப் பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு, பஷார் அஸ்மா அல்-அக்ராஸை மணந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: ஹபீஸ், ஜீன் மற்றும் கரீம்.
தொடக்கத்தில், அரசியல் சீர்திருத்தம் மற்றும் ஊடக சுதந்திரம் பற்றிய பஷாரின் சொல்லாட்சி பல்வேறு சிரிய மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவரது தலைமை, மேற்கத்திய நாட்டில் கல்வி பயின்றது ஆகியன மாற்றத்துக்கான புதிய சகாப்தத்தைக் உருவாக்கியது.
சிரியாவில் சிறிது காலத்திற்கு சிவில் விவாதம் மற்றும் “டமாஸ்கஸ் ஸ்பிரிங்” எனப்படும் கருத்து சுதந்திரத்தைப் பற்றிய விவாதமும் நடைபெற்றது. ஆனால் 2001ஆம் ஆண்டின்போது, பாதுகாப்புப் படையினர் மீண்டும் தங்களது ஒடுக்குமுறையைத் தொடங்கி, அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களைக் கைது செய்தனர்.
அதிபராகப் பொறுப்பேற்ற தொடக்கத்தில் தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை பஷார் அறிமுகப்படுத்திய அதே வேளையில், அவரது உறவினரான ராமி மக்லூப்ஃபின் எழுச்சியும் காணப்பட்டது. மக்லூஃப் ஒரு பரந்த பொருளாதார சாம்ராஜ்யத்தை நிறுவினார், இது செல்வமும், அதிகாரமும் இணைந்து செயல்படுவதைக் குறிப்பதாக விமர்சகர்கள் கூறினர்.
பஷார் அல் அசாத் ஆட்சியின் முதல் பத்தாண்டு காலத்தில் இரானுடனான சிரியாவின் உறவு வலுப்பெற்றது. மேலும் கத்தார், துருக்கி ஆகிய இரு நாடுகளுடனும் சிரியா உறவுகளை வளர்க்கத் தொடங்கியது.
ஆரம்பத்தில், பஷாருக்கு ரியாத்தின் ஆதரவு இருந்தபோதிலும், சௌதி அரேபியாவுடனான உறவுகள் ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தன.
ஒட்டுமொத்தமாக, வெளியுறவுக் கொள்கையில் பஷார் அல்-அசாத் தனது தந்தையின் வழியையே பின்பற்றினார். நேரடி ராணுவ மோதல்களைத் தவிர்த்து கவனமாக உத்திகளைக் கையாண்டார்.
கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அவரது மனைவி அஸ்மா அல்-அசாத் வோக் பத்திரிக்கைக்கு அளித்த ஒரு நேர்காணலில், அவர்களது நாடு “ஜனநாயக முறையில்” வழிநடத்தப்படுவதாக அவர் கூறினார்.
அதே நாளில், துனிசியாவை சேர்ந்த காய்கறி வியாபாரியான முகமது பௌசிஸி ஒரு பெண் காவலர் தன்னை அறைந்ததால் தீக்குளித்தார். இது துனிசியா மக்கள் மத்தியில் ஒரு கடும் எதிர்ப்பைத் தூண்டியது, இதனால் அந்நாட்டின் அதிபர் ஜைன் எல் அபிடின் பென் அலியின் ஆட்சி கவிழ்ந்தது.
இந்த எழுச்சியால் எதிர்பாராதவிதமாக எகிப்து, லிபியா, ஏமன், பஹ்ரைன், சிரியா போன்ற அரபு உலக நாடுகள் முழுவதும் புரட்சிகர இயக்கங்கள் ஏற்பட்டது.
கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சிரியாவில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதை அடுத்து சில நாட்களுக்குப் பிறகு தெற்கு நகரமான தாராவிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. சுவர்களில் அதிபர் அசாத்தை எதிர்த்து வாசகங்களை எழுதியதற்காக குழந்தைகள் கைது செய்யப்பட்டனர்.
இதற்குப் பிறகு, சிரிய மக்களிடம் உரையாற்றுவதற்கு அசாத் இரண்டு வாரங்கள் காத்திருந்தார். நாடாளுமன்றத்தில், சிரியாவை குறிவைத்து நடத்தப்படும் “சதி” திட்டங்களை முறியடிப்பதாக உறுதியளித்தார், மேலும் பல்வேறு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார்.
தராவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டினால், ஆர்ப்பாட்டம் அதிகரித்து, சிரியாவின் பல்வேறு நகரங்களில் அசாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்தன.
சில மாதங்களுக்குள், நாடு முழுவதும் அரசாங்கத்திற்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
சிரியாவில் மோதல் தீவிரமடைந்ததால், சர்வதேச சக்திகளின் தலையீட்டுக்கு மத்தியிலும், உயிரிழப்புகள் பல்லாயிரக்கணக்கில் இருந்து லட்சங்களாக உயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா, இரான் மற்றும் இரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் அசாத்தின் படைகளுடன் இணைந்து செயல்பட்டன. மற்றொருபுறம் துருக்கி மற்றும் வளைகுடா நாடுகள் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களை ஆதரித்தன.
தொடக்கத்தில், அசாத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயகம் மற்றும் அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தாலும், விரைவில் அதில் மதம் சார்ந்த கோஷங்களும் எழத் தொடங்கின. மேலும் சன்னி முஸ்லிம்களின் பெரும்பான்மையைவிட அலாவைட் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் சாதகமாக இருப்பதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
பிராந்திய அளவிலான தலையீடு சமூக பிரிவினைவாதத்தை ஆழமாக்கியது. இஸ்லாமிய பிரிவுகள் அலாவைட் பிரிவுகளுக்கு எதிராக விரோதப் பேச்சுகளைத் தொடுத்தனர். ஹெஸ்பொலா தலைமையில் இயங்கும் இரானுக்கு விசுவாசமான ஷியா போராளிகள் அசாத்தின் அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக சிரியாவில் குவிந்தனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு, அசாத்தின் அரசாங்கம் சரிவின் விளிம்பில் இருப்பது போலத் தோன்றியது, அது நாட்டின் பல்வேறு பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. இருப்பினும், ரஷ்யாவின் ராணுவத் தலையீட்டால் நிலைமை தலைகீழாக மாறியது, அசாத் முக்கியப் பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடு பெற முடிந்தது.
அசாத் ஆட்சியின் மூன்றாவது தசாப்தத்தில் சிரியாவில் மோசமான பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும், இந்த மிகப்பெரிய சவாலில் இருந்து அதிபர் தப்பியதாகத் தோன்றியது.
இருப்பினும், 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதலைத் தொடங்கியது, இதனால் காஸா போர் ஏற்பட்டது. அதன் விளைவுகளை லெபனானும் சந்திக்க வேண்டியதாக இருந்தது. குறிப்பாக அசாத்தின் கூட்டாளியான ஹெஸ்பொலாவை இது பெரிதும் பாதித்தது.
இந்தப் போர்ச் சூழல் ஹெஸ்பொலாவுக்கு அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் உட்படப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது.
லெபனானில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த அதே நாளில், இஸ்லாமிய குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிப் படைகள் சிரியாவில் திடீர் தாக்குதலைத் தொடங்கி, நாட்டின் இரண்டாவது நகரமான அலெப்போவை கைப்பற்றினர்.
தெற்குப் பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவியதை அடுத்து அவர்கள் ஹமா மற்றும் பிற நகரங்களையும் தற்போது கைப்பற்றியுள்ளனர் .
இதேவேளை ‘இனி எதிர்காலம் நம்முடையதுதான்” என்று கூறியுள்ள `ஹயத் தஹ்ரிர் அல் ஷாம்’ தலைவர், இனி பின்வாங்குவதற்கு “இடமில்லை” என்று கூறியுள்ளார்.
ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பின் தலைவர் அபு முகமது அல்-ஜவ்லானி சிரியாவின் அரசுத் தொலைக்காட்சியில் இதைக் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
‘மோசமான ஆட்சியாளர்’ அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் எனக் கூறியுள்ள கிளர்ச்சிப் படைகள், நாடு ‘விடுவிக்கப்பட்டது’ எனவும் அறிவித்துள்ளன.
சிரியாவில் அசாத் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாகவும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் கிளர்ச்சிக் குழுவின் தலைவர்கள் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் மற்றும் வானொலியில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துவிட்டு ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அது முடியாது. சம்பளம் கணிசமான அளவு உயர்த்தப்பட்டு ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டால் அதுவே சாத்தியமானது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம், ஊழலை கடுமையாக எதிர்க்கும் ஒரு அரசாங்கமாக இருப்பதால், இவ்வாறு கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்கி ஊழலை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் போது அது சாத்தியமாகலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் வாக்குகளால் 159 ஆசனங்களைப் பெற முடியாது என்பது கடந்த காலங்களில் தெளிவாக தெரிந்த விடயம். ஆனால் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்ற இந்த வெற்றி என்பது வழமைக்கு மாறான ஒன்று.
குறிப்பாக கடந்த கால ஆட்சிகளின் மீது இருந்த வெறுப்பை மக்கள் இதில் வெளிக்காட்டியிருக்கின்றார்கள். இதை உள்நாட்டு மக்கள் உட்பட வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோர் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.
பலமான ஒரு அரசாங்கத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அமைத்துள்ள நிலையில், ஒரு ஊழலற்ற, வீண் விரயமற்ற மற்றும் அதிகார துஷ்பிரயோகம் இல்லாத ஒரு அரசாங்கமாக இது நகரப் போகின்றது என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.
குறிப்பாக அமைச்சர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், செலவுகளை கடுமையாக குறைப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவ்வாறான செலவுக் குறைப்புக்களைச் செய்வதன் மூலம் எங்களுடைய வரவு செலவுத் திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறைகளை குறைக்க முடியும்.
அதேசமயம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச ஊழியர்கள் ஆகியோருக்கு சம்பளத்தை குறைவாகக் கொடுத்து ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அது சாத்தியமில்லாதது. சம்பளத்தை கணிசமாக அதிகரித்து அதன் பின்னர் ஊழலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது என குறிப்பிட்டுள்ளார்.