Home Blog Page 245

பூநகரி பிரதேச சபையின் கன்னியமர்வு இன்று!

பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வு இன்று சமய வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் கன்னியமர்வானது சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது.

இருபது உறுப்பினர்களைக்கொண்ட பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக பத்து உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக மூன்று உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக மூன்று உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக ஒரு உறுப்பினரும், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக ஒரு உறுப்பினரும், சுயேட்சைக்குழு 01-ஒரு உறுப்பினரும், சுயேட்சைக்குழு 02 -ஒரு உறுப்பினரும் என இருபது உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து அதிர்ச்சி தகவல்!

தற்போதைய குழந்தைகள் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர் இது சம்பந்தமாக, பெற்றோர்களும் சமூகமும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போதைய இளைய தலைமுறையினர் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதிலிருந்து வேகமாக தவிர்த்து வருகின்றனர். சுற்றுச்சூழலில் சத்தான மற்றும் சிறந்த பொருட்கள் காணப்பட்டாலும், பள்ளிகளில் அவை குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், குழந்தைகள் காய்கறிகள் மற்றும் பழங்களை விரும்புவதில்லை என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்திற்காக இன்று (11) காலை பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக அறிவித்துள்ளது. ஊட்டச்சத்து விஷயத்தில் வெகுஜன ஊடகங்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன என்றும், ஊடக நிறுவனங்கள் ஒளிபரப்பும் செய்திகள் மற்றும் அறிவார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், அனைத்து அரசு மற்றும் தனியார் ஊடகங்களும் ஊட்டச்சத்து தொடர்பான சரியான செய்தியை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அதற்கான முறையான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஊட்டச்சத்து என்பது சுகாதாரத் துறையுடன் மட்டும் தொடர்புடைய ஒரு விடயம் அல்ல மாறாக பல அமைச்சகங்களின் தலையீட்டின் மூலம் வெற்றிகரமாக அடைய வேண்டிய ஒரு விடயம் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து மாதம் “காய்கறிகள் மற்றும் பழங்கள் என்ற தலைப்பு கருப்பொருளின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பொருளின் கீழ் நான்கு முக்கிய விடயங்களை அடையாளம் கண்டு சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தினமும் குறைந்தது இரண்டு வகையான காய்கறிகள், ஒரு வகை இலை கீரைகள் மற்றும் இரண்டு வகையான பழங்களை உட்கொள்ளுதல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய விடயம் ஆகும்.

முடிந்தவரை ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுதல், குறைந்த விலையில் உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களைத் தேர்வு செய்தல் என்பன முக்கிய விடயங்களாக அமைந்தன.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, யுனிசெஃப் நாட்டு பிரதிநிதி திரு. கிறிஸ்டியன் ஸ்கூக், சுகாதார அமைச்சின் செயலாளர்கள், துணை இயக்குநர்கள், மாகாண சுகாதார சேவை இயக்குநர்கள், பிராந்திய சுகாதார சேவை இயக்குநர்கள், மருத்துவமனை இயக்குநர்கள், சிறப்பு மருத்துவர்கள், மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மின்சாரக் கட்டண உயர்வுக்கு சஜித் சாட்டையடி!

இன்று நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணத்தை 15% ஆல் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையும், அரசாங்கமும் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு மக்கள் ஆணையை மீறும் செயலாகும். மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத போக்காகும். இது இந்நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தலின் போது, ​​ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மின்சாரக் கட்டணத்தை ரூ.9000 இல் இருந்து ரூ.6000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ.2000 ஆகவும் குறைப்போம் என்றார். மின்சார கட்டணத்தை 33% ஆல் குறைப்போம் என்றும் மேடைக்கு மேடை பிரஸ்தாபித்தார். பின்னர், பொதுத் தேர்தலில் அக்கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டி 159 ஆசனங்களை தனதாக்கிய சந்தர்ப்பத்திலும் கூட ​​மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறி, ஜனாதிபதியே தான் வெளியிட்ட அறிக்கைகளை பொய்களாக மாற்றும் வகையில், மின்சாரக் கட்டணத்தை 15% ஆல் அதிகரிக்க தற்போது இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, இந்த நாட்டின் மின்சார நுகர்வோரின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாக அமைந்து காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக இன்று (11) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அடுத்த கட்ட தவணையைப் பெறுவதற்காக மின்சாரக் கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன. நீட்டிக்கப்பட்ட கடன் வசதியை பெற வேண்டுமானால் மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ளது. 

திசைகாட்டி தலைமையிலான ஜே.வி.பி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தமொன்றையும் இணக்கப்பாடொன்றையும் எட்டுவோம் என வாக்குறுதியளித்திருந்தது. என்றாலும் ஆட்சிக்கு வந்தவுடன் தனது ஆணையை மீறியுள்ளதுடன், முந்தைய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை அவ்வாறே முன்கொண்டு செல்கிறது. இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி செயல்பட்டு வருகிறது. மக்கள் ஆணையை காட்டிக் கொடுத்து பொதுமக்களின் கருத்தை கிடப்பில் போட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் இணக்கப்பாட்டை இவர்கள் அதே முறையில் செயல்படுத்தியதன் விளைவாக, நாடும் மக்களும் இன்று இவ்வாறான நிலைமைகளுக்கு ஆளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

ஐக்கிய மக்கள் சக்தியும் கூட சர்வதேச நாணய நிதியத்துடன் இனங்கி செயல்படும். என்றாலும் IMF பிரதிநிதிகளை சந்தித்தபோது நாம் புதியதொரு இணக்கப்பாட்டுக்கு வருவோம் என தெரிவித்திருந்தோம். ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்றும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. தற்போதைய அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் பொய்யாக்கி, மின்சார கட்டணத்தை 15% ஆல் அதிகரித்துள்ளது. அரசாங்கம் எடுத்துள்எ இந்த நடவடிக்கையால் ஏழைகள், சாதாரண மக்கள், உழைக்கும் மக்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டு வருவோரை கடுமையான சிக்கலுக்குள் தள்ளும். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி, வழங்கப்பட்ட மக்கள் ஆணையை காட்டிக் கொடுக்க இடமளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். 

மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிப்பதற்கு பகரமாக மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைக்கும் நடவடிக்கையையே இந்த அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும். வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை மின்சார நுகர்வோருடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி குரல் எழுப்பும். ஐக்கிய மக்கள் சக்தி ஜனநாயக ரீதியிலான போராட்டத்திலும் ஈடுபடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

ஒரு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறிச் சென்றுள்ளார். 

சுமார் ஒரு மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று (11) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்.

நாட்டிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்திருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக, முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 

மன்னாரில் இடம்பெற்ற சத்தியப்பிரமான நிகழ்வு!

உள்ளூராட்சித் தேர்தலில் வன்னியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் சத்தியப்பிரமான நிகழ்வு நேற்று மன்னாரில் இடம்பெற்றது.

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தலில், வன்னி மாவட்டத்தில், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் நேற்று (10), கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

மன்னார் நகரில் நடைபெற்ற இந் நிகழ்வில் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் இஸ்மாயில் இஸ்ஸதீன்,உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்குபற்றிச் சிறப்பித்தனர்.

களை கட்டிய எருக்கலம்பிட்டி 15ஆவது ஹஜ் விழா!

வன்னியின் மைந்தனும், முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் நூர்தீன் மஷூரின் எழில் கொஞ்சும் எருக்கலம் பிட்டியில் 15 ஆவது ஹஜ் விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.

முன்னாள் மன்னார் பிரதேச சபை தலைவர் இஸ்மாயில் இஸ்ஸதீனின் ஏற்பாட்டில், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சட்டத்தரணி லுக்மான் சஹாப்தீன் தலைமையில், ஆயிரக்கணக்கானோரின் பங்குபற்றலுடன் வெகு விமர்சையாக நடைபெற்ற குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மக்கள் வெள்ளத்தில் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பளிக்கப்பட்டதுடன், அவர் உதைப்பந்தாட்டப் போட்டியையும் மிகுந்த ஆவலுடன் கண்டுகளித்தார்.

விறுவிறுப்பாக இடம்பெற்ற உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் எருக்கலம்பிட்டி யூத் அணியினரை எருக்கலம்பிட்டி எப்.சீ அணியினர் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டனர்.

குறித்த நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் பெருந்திரளாகப் பங்குபற்றினர்.

ஆளும் கட்சி வசம் சென்ற மாநகர சபை!

பண்டாரவளை மாநகர சபையின் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 

அதன்படி, அந்த மாநகர சபையின்  மேயராக தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ரத்நாயக்க முதியன்செலாகே சாகர தீர விஸ்வவிக்ரம தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

​மேயர் பதவிக்காக இன்று நடைபெற்ற தேர்தலில் 04 மேலதிக வாக்குகளால் வெற்றுப்பெற்று அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பண்டாரவளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி 06 உறுப்பினர்களை கொண்டுள்ள அதேநேரத்தில் சுயேச்சை குழு எண்1, 05 உறுப்புனர்களை கொண்டுள்ளது. 

அதே மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி 03 உறுப்பினர்களை கொண்டுள்ளது. 

அத்துடன் சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் 02 சுயேச்சை குழுக்கள் தலா ஒரு உறுப்பினர்களை கொண்டுள்ளன.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

“பௌத்த தர்மத்தால் முழு உலகமும் ஒளிரட்டும்”

பௌத்த மதத்தால் பெறப்பட்ட நாகரிக பாரம்பரியத்துடன், சிறந்த சமூக மாற்றத்திற்காக ஒன்றிணைவோம் – ஜனாதிபதி

பௌத்த மதத்துடன் ஏற்பட்ட மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று (10) நடைபெற்ற தேசிய பொசொன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

“பௌத்த தர்மத்தால் முழு உலகமும் ஒளிரட்டும்” என்ற தொனிப்பொருளின் கீழ், இம்முறை, தேசிய பொசொன் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை தேசத்தை நாகரிக மாற்றத்திற்கு இட்டுச் சென்ற மகிந்த தேரரின் வருகை மற்றும் மிஹிந்தலையை மறந்துவிட்டு, தேசிய பொசொன் நிகழ்வை கொண்டாட முடியாது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

எனவே, இவ்வாறான ஆன்மீக விழுமியங்களைக் கொண்ட நிலத்தைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பது ஒரு அரசின் பொறுப்பாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தப் பொறுப்பை பூமியுடன் உணர்வுபூர்வமான தொடர்புடைய பிரஜைகளால் மாத்திரமே நிறைவேற்ற முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அநுராதபுர நகரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மஹிந்த தேரரின் இலங்கை வருகையுடன் நமது நாடு தேரவாத பௌத்த தத்துவம் மற்றும் பாரம்பரியத்தின் மையமாக மாறியது. சமூக மாற்றத்திற்கும் ஆன்மீக விழிப்புணர்வுக்கும் வழிவகுத்த இந்த அற்புதமான நிகழ்வு, வெறும் மத அர்த்தத்தைத் தாண்டி, கலாசாரம், சமூகம் மற்றும் அரசியல் உட்பட நமது நாட்டின் அனைத்து அம்சங்களிலும் மிகவும் மேம்பட்ட கட்டமைப்பை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அந்த சமூகத்தை மீண்டும் இந்த பூமியில் நிலைநிறுத்துவதன் மூலம் நாட்டிற்கு அவசியமான சமூக மற்றும் சுற்றாடல் நெறிமுறை சார்ந்த புதிய மனப்பான்மையுடன் கூடிய நவீன நாகரீக அரசை கட்டியெழுப்புவதற்கான கைவிட முடியாத பொறுப்பை நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இலங்கையின் முதல் நகரம், முதல் குளம், முதல் அறுவை சிகிச்சைத் தளம் மற்றும் யோத கால்வாய் போன்ற பாரம்பரியங்களைக் கொண்ட அநுராதபுரத்தை அதன் பண்டைய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்திய உதவியின் கீழ் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

எந்த தேசமும் நிலைத்து நிற்க வலுவான அடித்தளம் தேவை. புத்தரின் தத்துவத்தின் மூலம் இலங்கை மக்கள் அத்தகைய வலுவான அடித்தளத்தைப் பெற்றுள்ளனர். கல்வியில் பின்னடைந்த சமுதாயத்தில் வலிமையான பிரஜைகளை எதிர்பார்க்க முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பௌத்தம் இந்நாட்டில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. விகாரைகளைப் பிரிவெனாக்களாக மாற்றுவதன் மூலம், இந்நாட்டு மக்களுக்கு ஆன்மீகத்தையும் அறிவையும் வழங்கும் சமூக நோக்கத்தை நிறைவேற்றுவதில் பௌத்தம் பெரும் பங்காற்றியது. இது ஒரு நாகரீக சமூக பொறிமுறையின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. அதற்காக 2500 ஆண்டுகால வரலாற்றில் இந்நாட்டில் செயற்பட்ட தேரர்கள் அனைவருக்கும் நாம் நன்றியுடன் இருக்க வேண்டும்.

ஆனால் இப்போது அந்தச் சமூகப் பொறிமுறை வீழ்ச்சியடைந்து விட்டது. சில பொலிஸார் குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலையில் உள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் சட்டவிரோத கடவுச்சீட்டுகளை வழங்கும் நிலை தோன்றியுள்ளது.

பாதாள உலகத் தலைவர்களுக்கு விமானப் பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களத்தில் உள்ள சிலர் சட்டவிரோதமாக கைதிகளை விடுவித்துள்ளனர். போக்குவரத்துத் திணைக்களத்தில் உள்ள சில அதிகாரிகள் சட்டவிரோத செயல்களைச் செய்துள்ளனர். இந்த நிறுவனங்கள் குறித்து பிரஜைகள் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை. எனவே, பிரஜைகளின் பிரஜைப் பொறுப்பை உருவாக்க நெறிமுறை சார் திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை இந்தப் பௌத்த தத்துவத்தின் மூலம் பெறலாம்.

ஒரு நெறிமுறை சார்ந்த தேசமாக, இந்த அரச நிறுவனங்களின் பின்னடைவை மீண்டும் மீட்டெடுக்க நாம் செயற்பட்டு வருகிறோம். இந்த பணியை கைவிடாமல் நிறைவேற்ற, சாதாரண குடிமக்களின் ஆதரவும் நமக்கு அவசியம். இந்த வீழ்ச்சியடைந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து, பௌதிக மற்றும் ஆன்மீக ரீதியாக மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கு இந்த நாட்டை மாற்றும் பொறுப்பைக் கைவிடாமல் நிறைவேற்ற, சாதாரண மக்களும் ஒன்றுபட வேண்டும்.

இரண்டு வருடங்களாக அரச அனுசரணையுடன் தேசிய பொசொன் நிகழ்வை நடத்த முடியாமல் இருந்த நிலையில், இது தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுத்து மிஹிந்தலையில் தேசிய பொசொன் நிகழ்வை நடத்தியதற்காக மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர், ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

மிஹிந்தலை விகாரவாசி வண, சுருக்குளமே இந்திரரதன தேரரால் வரவேற்பும், நோக்கம் தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது.

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, அமைச்சர் வசந்த சமரசிங்க, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சேன நாணாயக்கார, திலின தாருக சமரகோன், பாக்ய ஸ்ரீ ஹேரத், அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய மற்றும் பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.