Home Blog Page 247

இந்தியாவில் அதிகரித்துவரும் கொவிட் தொற்று!

இந்தியாவில் இதுவரை 6,491 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் புதிய கொரோனா வகை தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. தினமும் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 6,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதித்து யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 1950 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியா முழுவதும் நேற்று 624 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மாஸ்க் அணியும் படி மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் பாரிய நிதி மோசடி!

கூட்டுறவுத் துறைகள் மற்றும் சங்கங்களில் நடந்த மில்லியன் கணக்கான ரூபாய் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து முறையான விசாரணைகள் தொடங்கப்படும் என்றும், அவை காலத்தின் மணலில் மூழ்க அனுமதிக்கப்படாது என்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநரின் கேட்போர் கூடத்தில் சமீபத்தில் நடைபெற்ற மத்திய மாகாண கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

தற்போது இயங்கும் கூட்டுறவு சங்கங்களை தற்போதைய சமூகத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றுவது மற்றும் பொது தொழில்முனைவோரின் கீழ் நாட்டிற்குள் நாட்டிற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்வது மற்றும் மதிப்பு கூட்டல் மற்றும் விநியோகம் குறித்து கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுக்குக் கல்வி கற்பிப்பதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என குறிப்பிட்டார்.

இதற்காக, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட எதிர்கால வேலைத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, ​​சங்கங்களின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகள் மற்றும் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த கூட்டுறவு இயக்கம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

தற்போதைய கூட்டுறவு இயக்கம் எதிர்கொள்ளும் சவால்களை துணை அமைச்சர் சுட்டிக்காட்டி கூறினார்:

“இதுவரை, ஒரு கூட்டுறவு சங்கம் அல்லது வங்கி சரிந்தால் யாரும் பொறுப்பேற்கவில்லை. அவர்கள் அதற்கான ஒரு வகையான அறிக்கையை மட்டுமே வழங்குகிறார்கள். எதிர்காலத்தில் அது நடக்காது. ஒரு சங்கம் அல்லது கிராமப்புற வங்கி சரிந்தால், தலைவர் அல்லது இயக்குநர்கள் குழு கூட்டாகவோ அல்லது தனிப்பட்ட முறையில்வோ பொறுப்பேற்கப்படும் ஒரு அமைப்பு உருவாக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். சங்கங்கள் தனித்தனியாக சரிந்து விழும் வீணான அமைப்பு முடிவுக்கு வர வேண்டும்.

இதேபோல், கூட்டுறவுகளின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களை தவறாக வழிநடத்தும் பல்வேறு கூட்டுறவு மற்றும் நிதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகளும் தடுக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் பிராந்திய கிளைகளை நிறுவுவதன் மூலம், அதிக வட்டி வழங்குவதாக விளம்பரப்படுத்துவதன் மூலம் வட்டி கடைகள் வடிவில் மேற்கொள்ளப்படும் இந்த மோசடி நிதி பரிவர்த்தனை முறைகளை உடனடியாக நிறுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்காக, இந்த நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் செயல்பாடுகளை நேரடியாகக் கண்காணிக்கவும், தேவையான ஒழுங்குமுறை மற்றும் தணிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் தேசிய மற்றும் மாகாண கூட்டுறவு ஆணையர்கள் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மற்ற துறைகளைப் போலவே, கூட்டுறவுத் துறைகளிலும், ஏதேனும் அதிகாரி, அமைப்பு அல்லது ஏதேனும் இருந்தால் வரலாற்றில் எந்தவொரு துஷ்பிரயோகம், வீண்விரயம், ஊழல் அல்லது மோசடியையும் குழு செய்திருந்தாலும், அவர்கள் வெறுமனே மறக்கப்படுவதில்லை. மக்களும் நிறுவனங்களும் அவர்களைப் பற்றி எங்களுக்குத் தகவல் அளித்து புகார் அளித்துள்ளனர். எனவே, கூட்டுறவுத் துறை குறித்து தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் முறையான விசாரணைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அவர்கள் காலத்தின் மணலில் மூழ்க அனுமதிக்கப்பட மாட்டார்கள், ஆனால் உண்மை தேடப்படும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.

இந்தக் கூட்டத்தில் முக்கிய உரையை வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் ஆலோசகர் டாக்டர் சாந்த ஜெயரத்ன நிகழ்த்தினார். மத்திய மாகாண ஆளுநர் சரத் அபயகோன், மத்திய மாகாண தலைமைச் செயலாளர் அஜித் பிரேமசிங்க ஆகியோரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர், மேலும் மத்திய மாகாண கூட்டுறவுத் துறை ஆணையர், மாகாணத்தில் உள்ள பல கூட்டுறவுத் தலைவர்கள் மற்றும் கூட்டுறவுகளின் பிரதிநிதிகளுடன் கலந்து கொண்டனர்.

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

வவுனியா மற்றும் கிளிநொச்சி அரச கால்நடை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அரச கால்நடை வைத்தியர்களுக்காக தனியான பணி யாப்பு உருவாக்கப்பட்ட போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கத்தினர், அந்த யாப்பினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அரச கால்நடை வைத்தியர்களுக்கான தனியான யாப்பை அரசாங்கம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட அதனை தடுக்கும் முயற்சியில் விவசாய அமைச்சர் ஈடுபடுவதாக தெரிவித்து, அரச கால்நடை வைத்தியர்கள் இன்று காலை 6.00மணி முதல் 24மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும்  முகமாக வவுனியா அரச கால்நடை வைத்திய அலுவலகங்களிலும் கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி ,கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி, கண்டாவளை நான்கு கால்நடை வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் கால்நடை வைத்தியர்கள் சமூகம் அளிக்காமையால் கால் நடை வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பொதுமக்கள், தங்கள் கால்நடைகளுக்கான மருத்துவ சேவையை பெற்றுக்கொள்வதற்காக கால்நடை வைத்தியசாலைகளுக்குச் சென்று, வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 10 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (11) புதன்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

இதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையான 10 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

குறித்த காலப்பகுதியில் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்பின் திருத்தம் மற்றும் பிரதான அமைப்புகளுடனான அபிவிருத்திப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

இதனால் பாவனையாளர்கள் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.

காங்கேசந்துறை ரயில் நிலையம் விரிவுபடுத்தப்படும்!

காங்கேசந்துறை ரயில் நிலையம் மேலும் விரிவுபடுத்தப்படும்.

முப்பது ஆண்டுகால யுத்தத்தால் அழிக்கப்பட்ட காங்கேசந்துறை ரயில் நிலையம் அதன் முன்னைய நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது, மேலும் ரயில் சேவைகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன, மேலும் விரிவாக்கப்பட்ட சேவைகளை வழங்க போக்குவரத்து அமைச்சு மற்றும் ரயில்வே திணைக்களம் என்பன இணைந்து செயல்பட்டு வருகின்றன.

அதன்படி, நேற்று (08) காங்கசந்துறை ரயில் நிலையத்தை ஆய்வு செய்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் சேவைகளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த ரயில் பாதையை, காங்கசந்துறையில் கட்டப்பட்டு வரும் தொழில்துறை வலயம் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இது பயணிகள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கு அதிக வசதிகளை வழங்கும் என்றும், ரயில் பாதையை புனரமைப்பதன் மூலம் பொருட்களை கொண்டு செல்வதற்கு அதிக இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த ரயில் நிலையத்தில் இதுவரை பொருட்களைப் பெறுவதற்கும் சேமிப்பதற்கும் எந்த வசதிகளும் இல்லை என்றும் அவர் கூறினார். நேற்று தொடங்கிய சரக்கு போக்குவரத்து சேவைகள் பொதுமக்களுக்கு மிகுந்த வசதியையும் இலாபகரமான சேவையையும் வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்து!

புத்தளம் கொழும்பு பிரதான வீதியில், புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு அண்மித்த புத்தளம் பெளத்த மத்திய நிலையத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

புத்தளம் நகரை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் தனியார் பஸ் ஒன்று மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகவும் புத்தளம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கரம்பை உலுக்காப்பள்ளத்தை வசிப்பிடமாக கொண்ட 56 வயது மதிக்கத்தக்க முஹம்மது இஸ்மாயீல் ஜெமீல் என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவரின் உடல் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புத்தளம் போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெடித்தது ட்ரம்ப்-மஸ்க் யுத்தம்!

அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக எதிர்க்க துவங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், ‘தி அமெரிக்கா பார்ட்டி’ என்ற பெயரில் கட்சி துவங்க இருப்பதாக நேற்று அறிவித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, டிரம்பின் குடியரசு கட்சிக்கு 2,500 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

டிரம்ப் நிர்வாகம் தன் தொழில்களுக்கு சாதகமாக இருக்கும் என எண்ணிய நிலையில், சமீபத்தில் புதிய சட்ட மசோதாவை டிரம்ப் அரசு கொண்டு வந்தது. அதில் மின்சார வாகனங்களுக்கான வரிச்சலுகை ரத்து, அரசின் விண்வெளி நிறுவனமான நாசாவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் இருந்தன.

தன் தொழில்களை பாதிக்கும் இந்த மசோதாவை எலான் மஸ்க் கடுமையாக எதிர்த்தார். மேலும், டிரம்ப் அரசை நேரடியாக விமர்சிக்க துவங்கினார்.

பதிலுக்கு டிரம்பும், மஸ்க் நிறுவனத்துக்கான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு ஒப்பந்தங்கள், மானியங்களை நிறுத்துவேன் என மிரட்டல் விடுத்தார்.

அதன் பின், தன் சமூக வலைதள பக்கத்தில் ’80 சதவீத நடுநிலை மக்களை பிரதிநிதித்துவப்படுத்த புதிய கட்சி தேவையா?’ என கருத்து கணிப்பு நடத்தினார்.

இதில், 56.30 லட்சம் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதிலும் சரியாக 80 சதவீதம் பேர் புதிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த முடிவுகளை பார்த்து ஆச்சரியப்பட்ட எலான் மஸ்க், ‘மக்கள் கருத்துக்களை கூறிவிட்டனர். இது தான் விதி’ என கூறியவர், கட்சிக்கு ‘தி அமெரிக்கா பார்ட்டி’ என்ற பெயரை சமூக வலைதளத்தில் நேற்று அறிவித்தார்.

மிருகக்காட்சிசாலையில் ஆட்டை போடப்பட்ட கிளி!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுள்ள நீல மஞ்சள் நிறம் கொண்ட பஞ்சவர்ணக் கிளியொன்று கடந்த 4 ஆம் திகதி இரவு திருடப்பட்டதாகக் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தெரியவந்துள்ளது. 

அந்த கூண்டில் 30 பஞ்சவர்ணக் கிளிகள் இருந்த நிலையில், அதிலிருந்து ஒரு கிளி காணாமற்போயுள்ளதாகக் கடமையிலிருந்த கூண்டின் பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மிருகக்காட்சிசாலையின் நிர்வாகம் பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலமாக தெஹிவளை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மிருகக்காட்சிசாலையில் விலங்கொன்று காணாமற்போனால் உயர் அதிகாரியே காவல்துறையில் முறைப்பாடு செய்யவேண்டும். 

ஆனால் கிளி காணாமல் போனமை தொடர்பில் விலங்குகள் குறித்த அனுபவமற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலமாக முறைப்பாடு செய்யப்பட்டிருப்பது கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆற்றில் மூழ்கி நான்கு பேர் பலி!

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 

பாலஎல்ல ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அவர்கள் இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அடுத்தடுத்து சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைவாக கடற்படை மற்றும் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இன்று (6) காலை நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நான்கு(4) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் மதுவரி ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கடற்படையினர் மற்றும் மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி டி.பி.அலவத்தகம தலைமையிலான மது வரிஅதிகாரிகள் இணைந்து மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா கடற்கரை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

இதன் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு படகுகளில் காணப்பட்ட பொதிகளை சோதனை செய்த போது குறித்த படகுகளில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 40 மூடைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 1250 கிலோ பீடி இலைகள் இவ்வாறு மீட்கப்பட்டது. 

மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இலங்கை கடற்படையினர், நேற்று (2025 ஜூன் 05) கல்பிட்டி மோத்துவாரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இரண்டாயிரத்து நூற்று இருபத்து மூன்று (2,123) கிலோகிராம் பீடி இலைகளை அப்பகுதியில் உள்ள புதரில் மறைத்து வைத்திருந்த நிலையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, கல்பிட்டி ஆலங்குடா கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவுடன் இணைக்கப்பட்ட கடற்படையினர் குழுவினால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மோத்துவாரம் கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 64 பைகள் சோதனை செய்யப்பட்டன. அங்கு, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு கடத்தல்காரர்களால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இரண்டாயிரத்து நூற்று இருபத்து மூன்று (2,123) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பத்தொன்பதாயிரம் (19,000) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன.