Thursday, May 7, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 250

நாகவில்லுவில் விபத்து – பெண்ணொருவர் பலி!

0

புத்தளம் கொழும்பு பிரதான வீதியில், நாகவில்லு பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

புத்தளம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருடன் மோதியதிலே குறித்து விபத்து இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்ததுடன், பின்னாலிருந்து பயணித்த பெண்ணொருவரே தனது வீட்டுக்கு அருகில் விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்த மற்றைய நபர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கி இரு பஸ்கள் போட்டி போட்டு ஒன்றை ஒன்று முந்திக்கொள்ள வேகமாக சென்றதாகவும், எதிரே வந்த பொலரோ வாகனம் கட்டுப்பாட்டை மீறி முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலம் புத்தளம் தல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய சாரதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் மதுரங்குளி போலீசார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர்

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மதுரங்குளி போலீசார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை!

0

அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

அமெரிக்க அதிபராக கடந்த திங்கள்கிழமை பதவியேற்ற டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தார்.

இந்த உத்தரவு பிப்.19 முதல் அமலுக்கு வரும் என்பதால் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அறுவை சிகிச்சை வழியாக குழந்தை பெற்றுக்கொண்டு அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காக முயற்சி செய்கிறார்கள். 7 மாத கர்ப்பிணிகள் கூட அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையை நாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் பிப்.20ம் திகதி முதல் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்.

அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சியாட்டல் மாகாண நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜான் கோக்னார்,’டிரம்ப்பின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது’ எனக் கூறி அந்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தார். இதன் மூலம் டிரம்ப் உத்தரவு அமலாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் டிரம்ப்பிடம் தடை உத்தரவு குறித்து தெரிவிக்கப்பட்டபோது, ‘நிச்சயம் மேல்முறையீடு செய்வோம்’ என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற வந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில்,’ அமெரிக்க அதிகாரிகள் 538 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளனர். அவர்களை இராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளனர்.

இதில் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி ட்ரென் டி அராகுவா கும்பலைச் சேர்ந்த 4 பேர் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பல சட்டவிரோத குற்றவாளிகள் இருந்தனர். அவர்களை கைது செய்த டிரம்ப் நிர்வாகம் இராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடு கடத்தல் நடவடிக்கை சிறப்பாக நடந்து வருகிறது. அதிபர் டிரம்ப் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன’ என்று தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப் கூறுகையில்,’உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த கச்சா எண்ணெய் விலையை குறைத்தால் போதும். ரஷ்யா உடனே போரை நிறுத்தி விடும். இந்த போரை நிறுத்த ரஷ்யா ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இதற்காக புடின் என்னைப் பார்க்க விரும்புவார் என்று நான் நினைக்கிறேன். ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால் பொருளாதாரத் தடைகளை விதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’ என்றார்.

எண்ணெய் விலை குறைவது உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர உதவும் என்று டிரம்ப் கூறியதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில்,’ ரஷ்ய பாதுகாப்பு நலன்களை மேற்கு நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுத்ததால் உக்ரைன் போர் ஏற்பட்டது. இந்த போர் எண்ணெய் விலையை சார்ந்தது அல்ல. ரஷ்யாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தொடர்பானது. டிரம்புடன் தொடர்பு கொண்டு பேச ரஷ்ய அதிபர் புடின் தயாராக இருக்கிறார்’ என்றார்.

மஹிந்தவின் மகன் யோஷித்த அதிரடி கைது!

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

தற்போது தொடரப்பட்டுள்ள இந்த காணி வழக்கின் பிரதான சந்தேகநபர், யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண் ஆவார்.

இந்நிலையில், பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

வாகன பேர்மிட் குறித்து திடீர் அறிவிப்பு!

0

வாகன அனுமதிப் பத்திர (பேர்மிட்) சலுகைகளை இரத்து செய்வதற்கு எவ்வித கொள்கைத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை – பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

அரசாங்க சேவையில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகன அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் எவ்வித கொள்கைத் தீர்மானங்களையும் எடுக்கவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க முன்வைத்த  கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

வாகன அனுமதிப் பத்திரத்திற்காக தற்போது சந்தர்ப்பம் வழங்காவிட்டால் எதிர்பார்த்த பொருளாதார இலக்குகளை அண்மிப்பதற்கு அசௌகரியம் ஏற்படும் என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க சேவையின் உயர் அதிகாரிகளுக்கு தற்போது 15,000 , முதல் 20,000 இடையிலான தொகையில் இவ் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது முன்னுரிமை தொடர்பான சிக்கல் அன்றி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு எவ்வித கொள்கைத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

2025இல் 340,000 பேருக்கு வேலை வாய்ப்பு!

0

2024ஆம் ஆண்டில் 311,000 ஆக இருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் 2025ஆம் ஆண்டில் நூற்றுக்கு 12வீதத்தால் அதிகரித்து 340,000 இலங்கையர்களை இவ்வருடத்தில் வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டுக்கு அனுப்புவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிதாக அனுமதிப் பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நேற்று (23) நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒழுங்கு விதிகளுடன் சரியாக தொழிலுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்றும், பணியகத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தொடர்ந்தும் பணியகத்தின் பெயரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அவ்வாறே வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அனுமதிப்பத்திரம் பெற்று சில முகவர் நிறுவனங்கள் ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தனக்கு தகவல் கிடைப்பதுடன் அவ்வாறான நபர்களுக்கு எதிராக எவ்வித தரங்களையும் பார்க்காது தண்டனை வழங்குவதாகவும், பணத்திற்கு அன்றி மனிதாபிமானத்துக்கு முதலிடம் வழங்கிய ஒரு அமைப்பாக தொடர்ந்து செயற்படுவதாகவும் இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புத் துறையில் முன்னேற்றத்தைப் பெறுவதற்காக பாரிய செல்வாக்குச் செலுத்தி உள்ளதாகவும் தலைவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.

புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் சந்தர்ப்பங்களை தேடும் போது வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டிய தலைவர், அவர்களின் பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்காக பணியகம் பாரிய பங்களிப்பை வழங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது பணியகத்தின் செயற்பாடு தொடர்பாக, பணியகத்தின் ஊடாக வழங்கப்பட்ட அனுமதி, வழங்கப்படும் பயிற்சி மற்றும் பணியகத்தின் சட்டம் போன்ற விடயங்கள் தொடர்பாக தொழில் பெறுநர்கள் அறிந்திருக்க வேண்டும்.

இந்நிகழ்வில் நாடு முழுவதும் பல்வேறு பிரதேசங்களில் இருந்து தகைமை பெற்ற புதிய தொழில் பிரதிநிதிகள் 30 பேர் கலந்து கொண்டனர்.

மறைந்த டாக்டர். இல்யாஸ் குறித்து பாராளுமன்றில் ரிஷாட்!

0

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஐ.எம்.இல்யாஸ் அவர்கள், அநீதிக்கு எதிராக துணிச்சலோடும் போராட்ட உணர்வோடும் செயற்பட்ட ஒருவர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்.ஐ.எம்.இல்யாஸ், ருக்மன் சேனாநாயக்க, ரெஜினால்ட் பெரேரா,  சிறினால் டி மெல் ஆகியோர் தொடர்பில் இன்று (24) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அனுதாபப் பிரேரணைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில்,

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் உருவாக்கத்துக்கு பாடுபட்டவர்களின் பரம்பரையைச் சார்ந்த ஒருவர். நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். 1972இல் இருந்து பாராளுமன்றத்தில் பல வருடங்கள் பணியாற்றியவர். 

நாட்டுக்கு பல நல்ல பணிகளைச் செய்தவர். பல அமைச்சுக்களுக்குப் பொறுப்பாக இருந்து, ஒரு சிறந்த நிர்வாகத் திறமையோடு அவ் அமைச்சுக்களை செயற்படுத்திக் காட்டியவர். எனவே, அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேபோன்று, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறினால் டி மெல், தேசியப் பட்டியல் ஊடாக இந்தப் பாராளுமன்றத்துக்கு வந்தாலும், ஒரு குறுகிய காலம்தான் பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 

அந்தக் காலப் பகுதியில், ஒரு சிறப்பான அரசியல்வாதியாக தன்னை ஆக்கி செயல்பட்ட ஒருவர். எனவே, அவரது இழப்பானது நாட்டுக்கு பேரிழப்பாகும். எனவே, சிறினால் டி மெல் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை இந்த உயர் சபையில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மர்ஹூம் டாக்டர்.ஐ.எம்.இல்யாஸ் அவர்கள், புத்தளத்தில் மட்டுமன்றி, இலங்கையிலேயே ஒரு பிரபலமான அரசியல்வாதியாக, சிறந்த மனிதராக, நல்ல வைத்தியராகத் திகழ்ந்தவர். அவர் ஒரு போராட்ட உணர்வோடு செயல்பட்டவர். 

ஈராக்கில் பிரச்சினையாக இருந்தால் என்ன, பாலஸ்தீனத்தில் பிரச்சினையாக இருந்தால் என்ன, ஈரானாக இருந்தால் என்ன? எங்கு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றதோ, அவ்வாறான அநீதிகளுக்கு எதிராக முன்நின்று போராடிய ஒருவர். எல்லாவிதமான ஆர்ப்பாட்டங்களிலும் தலைமைத்துவத்தை வழங்கி செயல்பட்டவர். யாருக்கும் அஞ்சாமல் அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சியவராக, அவ்வாறான பல போராட்டங்களை முன்னெடுத்தார்.

உப்பு போராட்டம் தொடக்கம், மக்களின் நலனுக்காக நடைபெற்ற அத்தனை போராட்டங்களிலும் அரும்பாடுபட்டு பங்காற்றிய ஒருவர். தான்சார்ந்த புத்தளம் மாவட்ட மக்களுக்காக, மாவட்ட நலனுக்காக தன்னால் செய்யக்கூடிய பல நல்ல பணிகளைச் செய்தவர். அவ்வாறான போராட்டங்களில் குறிப்பாக, கடைசியாக குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கு முயன்றபோது, அந்த மக்களுக்காக பல நாட்களாக நடந்த போராட்டங்களில் பாரிய பங்களிப்புச் செய்தவர்.

அதேபோன்று, அவரது அரசியல் வாழ்க்கையில், ஜனாதிபதி தேர்தலில் கூட ஓரிரு முறை போட்டியிட்டுள்ளார். அதனூடாக, ஒரு வேட்பாளராக இருந்து நாட்டு மக்களுக்கு பல நல்ல செய்திகளைச் சொன்னவர்.
 
1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பலவந்தமாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது, புத்தளம் மண்ணை நோக்கி வந்த அந்த மக்களுக்காக அளப்பரிய சேவை செய்த ஒருவர். புத்தளம் வாழ் மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்களால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்திருக்கிறார்கள். 

அப்போதிருந்த அரசியல்வாதிகளும் செய்திருக்கிறார்கள். என்றாலும், டாக்டர்.இல்யாஸ் அவர்கள் ஒரு வித்தியாசமானவர். அவர் ஒரு வைத்தியராக மற்றும் அவரது மனைவி ஆகியோர், எத்தனையோ இடம்பெயர்ந்த மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் இலவசமாக வைத்திய சேவை செய்தவர்கள். அதேபோன்று, அவர்களுடைய தேவைகளை உணர்ந்து தங்களுடைய சொந்தப் பணத்தில் ஏழைகளுக்காக செலவு செய்தவர்கள். அவ்வாறான நல்ல பண்புள்ள ஒருவராக அவரை நாங்கள் கண்டோம்.

இடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்துக்கு வந்து பாடசாலைகளிலும் தோட்டங்களிலும் தங்கியிருந்தபோது, அவர்களைக் குடியேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், அன்று அவர் சார்ந்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, அந்தக் கட்சியின் தலைவராக இருந்த பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களோடு இணைந்து பல பணிகளைச் செய்தவர்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக அவர் ஆற்றிய சேவையின் வழியாகத்தான், புத்தளத்தில் இருந்துகொண்டு, அவர் ஒரு வேட்பாளராக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டபோது, யாழ்ப்பாணம் மக்கள் குறிப்பாக, யாழ் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து வந்தவர்கள், புத்தளத்தில் முகாம்களில் இருந்தவர்கள் அவரை வெல்ல வைப்பதற்காக வாக்களித்தனர். 

யாழ்ப்பாண மக்களின் வாக்குகளால் அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட போதும், புத்தளம், யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி, நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு நடந்த அநீதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல்கொடுத்தவர்.

அத்துடன், உலக நாடுகளில் சிறுபான்மை மக்களுக்கு நடக்கின்ற அக்கிரமங்களுக்கு எதிராக, இந்த பாராளுமன்றத்திலே குரல்கொடுத்த ஒருவர்தான் மர்ஹூம் டாக்டர்.ஐ.எம்.இல்யாஸ் அவர்கள். அதேபோன்று, புத்தளம் மாவட்டத்தின் கல்விக்காக, சுகாதாரத் துறைக்காக பாரிய பங்காற்றியவர். புத்தளத்தின் இதயம் போன்றிருக்கும் உப்பு உற்பத்தித் துறைக்காக, அதற்கான விலையை பெற்றுக் கொடுப்பது போன்ற விடயங்களில் பெரும் பங்காற்றிய ஒருவர். புத்தளத்தில் தன்னால் முடிந்த அபிவிருத்திகளை செய்து காட்டியவர்.

மேலும், அவருடைய பாராளுமன்ற காலத்திலே, ஈரான் – இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவராக இருந்து, ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு நல்லுறவை ஏற்படுத்துவதிலும், கலாச்சார ரீதியான, பொருளாதார ரீதியான பல நல்ல விடயங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கும் பெரும் பங்காற்றியிருக்கிறார்.

எனவே, அவருடைய இழப்பு அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல, புத்தளம் மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும்.

எனவே, அவர் மறைந்தாலும் அவரது பிள்ளைகளான எனது நண்பர் டாக்டர். இந்திகாப் மற்றும் ஜமீனா ஒரு உற்சாகமான நகரசபை உறுப்பினராக இருந்து, பல நல்ல பணிகளை தந்தை வழியில் செய்து வருகின்றனர். அவருடைய மகள் பஸ்மியா போன்றவர்களை அவர் விட்டுச் சென்றிருக்கிறார். தந்தையின் வழியில், ஊருக்கும் மக்களுக்கும் பல நல்ல பணிகளை இவர்கள் செய்து வருகின்றார்கள். அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதேவேளை, ஈரான் தூதரகத்திலிருந்து இங்கு வருகைதந்து, ஒரு பார்வையாளராக கலந்துகொண்டிருக்கும் டாக்டர்.பி.முஸானி குறாசி அவர்களுக்கு இத் தருணத்தில், அவரது குடும்பத்தினர் சார்பாக, எனது கட்சி சார்பாக நன்றியை கூறிக்கொண்டு, மர்ஹூம் டாக்டர்.ஐ.எம்.இல்யாஸ் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை இறைவன் வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்து விடைபெறுகிறேன் ​என தெரிவித்தார்.

மீண்டும் களத்தில் குதித்த மஹிந்த ராஜபக்ஷ!

0

தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவொன்று பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

முறையான பாதுகாப்பு மதிப்பீடு இல்லாமல், தனது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட மெய்ப்பாதுகாவலர்கள் குழுவிலிருந்து 60 அதிகாரிகள் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும், மற்ற அனைவரும் நீக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகள் ஊடாக  தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தனது பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை என்றும், தனது பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் மூன்று தசாப்தங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர தலைமை தாங்கி தான் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் ஒருவர் எனவும், மேலும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் தனது பாதுகாப்பை தன்னிச்சையாக நீக்கியதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

மேலதிகமாக, தனக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மதிப்பீடு செய்ய பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அதேபோல், தனக்கு வழங்கப்பட்ட முழு பாதுகாப்புப் படையையும் திருப்பித் தருமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும்  மனுதாரர் மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

மீண்டும் மூடப்பட்ட கண்டிக்கான பாதை!

0

கண்டி மற்றும் மஹியங்கனை வீதியின் சில வீதிகளை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

தென்னேகும்புர-ரிகில்லகஸ்கட்ட-ராகல வீதி மற்றும் கண்டி-மஹியங்கனை-பதியதலாவ வீதிகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளன. 

சீரற்ற வானிலை காரணமாக வீதியில் பாறைகள் விழுந்ததால் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதன்படி, வீதிகளுக்கு மேலே உள்ள பாறைகளின் பகுதி அகற்றப்படும் வரை, வீதி மேற்பரப்பில் இருந்து பாறைகளை அகற்றுவது ஆபத்தானது என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி வைக்க அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் காரணமாக, குறித்த வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள்  மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி  அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை திருமண சட்டம் தொடர்பில் பகீர் தகவல்!

0

“பிள்ளை” என்பதற்கு சரியான வரைவிலக்கணம் வழங்குவது பற்றி பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கவனத்திற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் நேற்றுமுன்தினம் (21) பாராளுமன்றத்தில் கூடியது.

இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பத்தாவது பாராளுமன்றத்திற்கான பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயற்திட்டத்தை தயாரிப்பது குறித்து ஒன்றியத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், இலங்கையில் திருமண வயது எல்லையை திருத்துவது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

இலங்கையில் தற்பொழுது காணப்படும் பல்வேறு திருமண சட்டங்களுக்கு அமைய காணப்படும் திருமண வயது எல்லையை பொது எல்லையாகக் கொண்டுவருவதற்குத் தேவையான திருத்தத்தை மேற்கொள்ள சிவில் சமூகம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அதன் ஊடாக ஒன்றியத்தின் மூலம் இறுதிப் பரிந்துரையை வழங்குவதற்கும் இதன்போது முன்மொழியப்பட்டது. அத்துடன், “பிள்ளை” என்பதை சரியான முறையில் வரைவிலக்கணம் செய்வதற்குத் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கும் பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், பெண்களின் மேம்பாடு மற்றும் வலுப்படுத்தல் தொடர்பில் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி விஜேரத்ன முன்வைத்த திருத்தப்பட வேண்டிய விடயங்கள் அடங்கிய சட்டமூலத்தை மீண்டும் முன்வைக்கவும் இங்கு முன்மொழியப்பட்டது.

அத்துடன், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் கௌரவ சுதர்ஷினி பர்னாந்துரபுள்ளே முன்வைத்த தனிநபர் சட்டமூலத்துக்கான திருத்தங்களை மேலும் ஆராய்ந்து, அதற்குப் புதிய முன்மொழிவுகளை உள்வாங்கி மீண்டும் பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் திருத்தங்களுக்கு ஒன்றியத்தின் உறுப்பினர்களினதும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைக்குமாறும் ஒன்றியத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், பெண்களை வலுப்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ள பத்தாவது பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியத்தின் தலைவர் இதன்போது தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தீப்தி வாசலகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, ஒஷானி உமங்கா, (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) கீதா ஹேரத், (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுத, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, அம்பிகா சாமிவெல், (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

மியான்மர் அகதிகள் குறித்து வாய் திறந்த சஜித்!

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (23) பாராளுமன்றத்தில் ரோஹின்யா மக்களின் உரிமைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் மேற்கொண்ட உரை பின்வருமாறு,

ரோஹின்யா சமூகம் அகதிகளாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போது, குறிப்பாக நாங்கள் எதிர்பார்க்கின்றோம் ரோஹின்யா மக்கள் உட்பட அகதி சமூகத்திற்கு சர்வதேச கொள்கைகளின் மற்றும் புரிந்துணர்வுகளின் மூலம் உருவாக்கப்பட்ட சர்வதேச சட்டம் ஒன்று உள்ளது.

1951 refugee convention , 1967 protocol to the refugee convention ஆகியவற்றில் நாடு என்ற வகையில் நாம் கையெழுத்திடாவிட்டாலும், மனிதாபிமான நிலைப்பாட்டை மையமாகக் கொண்ட நாடாக,  சில அகதிக் குழுக்கள் உருவாகும் போது சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றி அந்த செயலை மேற்கொள்ளும் பொறுப்பு நமக்கு உள்ளது.

1969 OAU Convention , 1984 declaration on refugee european refugees, 1954 convention related of people , global impact on refugees போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு தீர்மானங்களைப் பார்க்கும்போது, குறிப்பாக ரோஹின்யா சமூகம் மியன்மார் ரகெக் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட சமூகமாகும். 

2014 ஆம் ஆண்டு மியன்மாரில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பிலிருந்தும் நீக்கப்பட்ட கடுமையாக வறுமைக்குள்ளான சமூகப் பிரிவு. இந்த மக்கள் பிரிவு அடைந்திருக்கும் வறுமை நிலையில் அந்த அகதிகளுக்கு மனிதாபிமான கொள்கைகள் மூலம் நமது செயல்முறைகளை மேற்கொள்வது மனிதத்தன்மை கொண்ட அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும். 

2024 டிசம்பர் 19 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்கரைக்கு அருகில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்துக்கு 116 பேர்கள் கொண்ட அகதிகள் குழு கடல் வழியாக இலங்கைக்கு வந்த சந்தர்ப்பத்தில் அந்த அகதிகளுக்காக நாம் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை சர்வதேச சட்டத்திற்கும் சர்வதேச நடைமுறைகளுக்கும் ஏற்ப பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரோஹின்யா சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். அந்த அகதிகளுக்காக நாம் நிறைவேற்ற வேண்டிய கடமையை நியாயமாக நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வருகின்றது என்றும் நாம் நம்புகிறோம். மீண்டும் மியன்மாருக்கு அந்த அகதிகளை அனுப்புவது தீர்வாகப் பார்க்கவில்லை. 

நாம் மனிதாபிமானத்தை முன்நிறுத்தியும் நியாயத்தை முன்நிறுத்தியும் அந்த அகதிகளுக்காக நிறைவேற்ற வேண்டிய கடமைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம். சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க, அந்த அகதி சமூகத்திற்கு ஒரு நியாயமான மனிதாபிமான மையம் கொண்ட கொள்கையொன்றை இந்த அரசாங்கம் செயற்படுத்தினால், அந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக இருக்கிறோம் என தனது உரையில் தெரிவித்தார்.