Home Blog Page 270

விமான நிலையத்தில் சிக்கிய மூன்று பெண்கள்!

பெங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர்களிடமிருந்து 5 கிலோ 248 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. 

சந்தேக நபர்கள் 25, 48 மற்றும் 50 வயதான மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை செலுத்திய டிப்பரில் சிக்கி குழந்தை பலி!

கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ள உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாள் குளம் பகுதியிலுள்ள வீடொன்றில், தந்தை செலுத்திய டிப்பர் வாகன பின் சில்லுக்குள் சிக்கி ஒன்றரை வயதுடைய குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று (18-04-2025) பிற்பகல் 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தவக்குமார் சிந்துஜன் எனும் ஒன்றரை வயது நிரம்பிய பச்சிளம் பாலகன் தந்தை பின்புறம் கவனிக்காத டிப்பர் வாகனத்தை பின்புறம் செலுத்தியபொழுது டிப்பரின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது டிப்பர் வாகன மோதியதன் காரணமாக சிறுவர் உடல் நசுங்கி பலியானார்.

சம்பவ இடத்தை சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்ரமணியம் உடற்கூற்று விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏமன் மீது அமெரிக்கா தாக்குதல் – 38 பேர் பலி!

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், 38 பேர் உயிரிழந்தனர். 102 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

ஹமாஸ் படையினருக்கு, அண்டை நாடான ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகிறது. செங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில், அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால், ஏமனில், ஹவுதி பயங்கரவாத அமைப்பு வலுவாக உள்ள பகுதிகளில், அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், 38 பேர் உயிரிழந்தனர். 102 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எரிபொருள் சப்ளையை துண்டிப்பதற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும், அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற பெரும் சோகம்!

புத்தளம் – வன்னாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலா ஓயா ஆற்றில் நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்ற இளைஞன் ஒருவர் நேற்று (17) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

மதுரங்குளி – கணமூலையைச் சேர்ந்த அபுதாஹிர் முஹம்மது அப்ராஜ் (அப்ரான்) எனும் 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கலாஓயா ஆற்றில் நீராடுவதற்காக குறித்த இளைஞன் உட்பட நான்கு பேர் முச்சக்கர வண்டியொன்றில் சென்று தனது சக நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த போது குறித்த இளைஞன் 8 அடி ஆழமுள்ள குழி ஒன்றுக்குள் சிக்குண்டு, காணாமல் போயுள்ள நிலையிலேயே குறித்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் முப்பது நிமிடங்களின் பின்னரே குறித்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

பிரேத பரிசோதனையின் பின்னர் இளைஞனின் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் வன்னாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

குறித்த இளைஞனின் திடீர் மரணம் மதுரங்குளி – கணமூலை பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இஸ்ரேலில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (18) காலை ஏமனில் ஹவுத்தி பயங்கரவாத அமைப்பால் ஏவப்பட்ட பல ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததால், ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (19) முதல் 26 ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இது தொடர்பாக இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

66 பேரை தெரிவிற்காக 659 பேர் போட்டி!

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் 66 பேரை தெரிவு செய்வதற்காக 659 பேர் போட்டி – மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராஜா தெரிவிப்பு.

இன்றைய தினம் கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில் இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் 102387பேர் இந்த உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.கரைச்சி பிரதேச சபையில் 35உறுப்பினர்களளை தெரிவு செய்வதற்காக 342பேர் போட்டியிடுவதாகவும் பச்சிலைபள்ளி பிரததேச சபையில் 13பேரை தெரிவு செய்வதற்காக 128.பேர் போட்டியிடுவதாகவும் பூநகரி பிரதேச சபையில் 18பேரை தெரிவு செய்வதற்காக 189பேர் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு!

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா முப்படைத் தளபதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுடன் ஒருங்கிணைந்து நாட்டில் தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார். 

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை 2025.04.18 மற்றும் 2025.04.20 ஆகிய திகதிகளில் நடைபெறுவதால், அந்த நாட்களில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விசே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தபால் மூல வாக்களிப்பு தினத்தில் திருத்தம்!

2025 மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான திகதிகள் திருத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதற்கான திகதிகள் ஏப்ரல் மாதம் 24, 25, 28 மற்றும் 29 என திருத்தப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

“அதன்படி அனைத்து அரச நிறுவனங்கள், பொலிஸார், முப்படையினர், பாடசாலைகள், கூட்டுத்தாபனங்கள், அரசியலமைப்பு சபை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்காக ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய 4 தினங்கள் தபால் மூல வாக்குகளை அளிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. 

“எந்த மாற்றங்களும் இல்லாமல், அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் பிற அனைத்து நிறுவனங்களிலும் உள்ள தபால் மூல வாக்காளர்கள் இந்த 4 நாட்களில் தங்கள் அலுவலகங்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.” 

“மேலும், கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்காக விசேட பணிகளில் ஈடுபடும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் கண்டி பெண்கள் உயர்நிலைப் பாடசாலையில் ஒரு விசேட தபால் மூல வாக்களிப்பு நிலையம் நிறுவப்படும்.” 

அதேபோன்று முப்படையினருக்காக அந்தந்த இராணுவ முகாம்களில் நியமிக்கப்பட்ட சான்றளிக்கும் அதிகாரி முன்னிலையில் இந்த 4 நாட்களுக்குள் தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.” என்றார். 

தேர்தல்கள் நடைபெற உள்ள 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான அனைத்து வாக்காளர்களுக்கும் விநியோகிக்கப்பட வேண்டிய அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகள் நேற்று (16) சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன. 

அதன்படி, அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளன. 

அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் ஏப்ரல் 29 வரை தொடரவுள்ளது. 

ஏப்ரல் மாதம் 29 திகதிக்கு பிறகு எவரேனுக்கும் அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தில் அது குறித்து விசாரிக்கலாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

படகில் பற்றி தீ: 50 பேர் உயிரிழந்த சோகம்!

காங்கோவில் படகில் தீ விபத்து ஏற்பட்டதில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் உள்ள ஆறுகளில் படகு போக்குவரத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் படகு போக்குவரத்தை விரும்புகின்றனர். இந்நிலையில், வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகில் 400க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.

பன்டாக்கா பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. படகில் பயணம் செய்தவர்கள் தீ விபத்தில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தனர். இதில் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி 100க்கும் மேற்பட்டவர்களை லேசான காயத்துடன் மீட்டனர்.

இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. படகில் பெண் ஒருவர் சமையல் செய்த போது தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

ஈஸ்டர் தாக்குதலில் திடீர் திருப்பம்!

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர் இருப்பது தெரியவந்துள்ளதாக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரொஹான் சில்வா தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். 

நாட்டின் புலனாய்வுத்துறையினர் ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் இருக்கின்றார்கள், தாக்குதல்களை மேற்கொண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார்கள் என்பது விசாரணை அறிக்கைகள் ஊடாக எமக்குத் தெரியவந்துள்ளது. 

தாக்குதலின் பின்னணியிலிருந்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை அடையாளம் காண முடியாதளவிலேயே நாட்டின் பாதுகாப்புத்துறை காணப்படுவதாக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.