Home Blog Page 276

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (07.04.2025) ஈடுபட்டனர்.

கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 03ம் திகதி யாழ்ப்பாணத்தில் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டமைக்கு காரணம் குறித்த பிரிவின் பொறியியலாளர் தான் என சில சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்த நிலையில், அவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சம்பவம் உண்மைக்கு புறம்பானது எனவும் திணைக்களத்தை அவமதிக்கும் செயல் என தெரிவித்து, உத்தியோகத்தர்கள் நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்

உலக சுகாதார தினம் இன்று!

உலக சுகாதார தினம் இன்று (07) அனுஷ்டிக்கப்படுகிறது. ‘ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை உலக சுகாதார தினம் நினைவுகூறப்படுகிறது. 

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களின் சுகாதார உரிமைகள் இன்று கேள்விக்குறியாகியுள்ளன. அத்துடன் சுகாதார உரிமைகளை வென்றெடுப்பதிலும் பல சவால்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். 

உயிரிழப்புகள் மற்றும் அங்கவீனம் போன்றவற்றிற்கு நோய்கள் உட்பட இயற்கை அனர்த்தங்களும் காரணமாக அமைந்துள்ளன. உலகின் பல நாடுகளில் இடம்பெற்று வரும் மோதல்கள் வாழ்வியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் உயிரிழப்பு, வலி, பட்டினி, உளவியல் துயரங்களை அதிகரித்துள்ளன. 

அது மாத்திரமன்றி பொருளாதார முன்னேற்றங்கள் கண்டுள்ள நாடுகள் மேற்கொள்ளும் படிம எரிபொருட்களின் பயன்பாட்டில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் காலநிலை அனர்த்தங்களும் உக்கிரமடைந்துள்ளன. 

இதனால் சுத்தமான காற்றை சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் சுவாச ரீதியான பல நோய்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். 

உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கைகோர்த்துள்ள நாடுகள் ஆரோக்கியமான சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளன. எவ்வாறெனினும் சுகாதார உரிமையை உறுதி செய்யும் சட்டங்கள் பல நாடுகளில் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. 

இந்த சவால்களை கவனத்திற்கொண்டு இம்முறை உலக சுகாதார தினம் ‘ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகிறது.

தாயை கொன்ற மகன்?

பெண்ணொருவர் தனது வீட்டு வளவிலே சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

யாசகம் பெற்று வாழ்ந்து வரும் 65 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது தாயுடன் வாழ்ந்து வந்த 46 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதால் குறித்த தாய் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் சந்தேகத்தில் மகனை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் காலமானார் !

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார்.  

திடீர் மாரடைப்பு காரணமாக அவர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உயிரிழக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவுக்கு வயது 38 ஆகும்.

இலங்கையின் சிறப்புக் குழு மியான்மருக்கு!

அனர்த்த நிவாரண பணிகளுக்காக முப்படைகளின் சிறப்புக் குழு மியான்மருக்கு பயணம்!

அண்மையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவ மற்றும் அனர்த்த நிவாரணக் குழு நேற்று (ஏப்ரல் 5) சிறப்பு விமானம் ஒன்றில் மியான்மருக்குப் புறப்பட்டது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய, இந்த அனர்த்த நிவாரணப் பணிகள் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) மேற்பார்வையின் கீழ் மேட்கொள்ளப்படுகின்றன.

பிரிகேடியர் எச்.கே.பி. கருணாதிலக்க இந்தக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். முப்படைத் தளபதிகள் மிகக் குறுகிய காலத்தில் இந்த சிறப்பு நிவாரணக் குழுவை ஒழுங்குபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பௌத் தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு வகித்த பௌத்த நாடான மியான்மார், அனர்த்த மற்றும் மனிதாபிமான உதவிகளை மட்டுமல்லாமல், மருத்துவ உதவி உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் பெற்று வருகிறது.

இந்தப் நிவாரண பொருட்கள், மூன்று பௌத்த பீடங்களின் தலைமைத் தேரர்கள் தலைமையிலான, வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை வாழ் மக்களிடமிருந்து நன்கொடையாக சேகரிக்கப்பட்டு, மியான்மார் அரசாங்கத்திற்கு அனுப்பப்படுகின்றன.

வெளியுறவு அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் தலைமையிலான வெளியுறவு அமைச்சு, இந்த பணிக்கான இராஜதந்திர ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.

இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் விமான சேவையும் இந்த மனிதாபிமான முயற்சிக்கு பங்களித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைகளுடன் சேர்ந்து, பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், நெருக்கடி காலங்களில் நட்பு நாடுகளுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பாரிய போராட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் கோடீஸ்வர வர்த்தகரான எலான் மஸ்க்கிற்கும் எதிராக அமெரிக்காவில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 2-ம் திகதி இலங்கை உள்பட பல்வேறு நாடுகள் மீது மேலதிக வரிகளை விதித்தார். 

அமெரிக்கா மீது ஏனைய நாடுகள் அதிக வரிகளை விதிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். 

இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. 

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இருவருக்கும் எதிராக அமெரிக்கா முழுவதும் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

ஹேன்ட்ஸ் ஓப் (Hands off) என்ற எதிர்ப்பு பேரணி அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டன. 

இந்தப் பேரணியில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களும், உள்ளூர் ஆதரவாளர்களும் பங்கேற்றுள்ளனர். 

அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப் பெரிய பேராட்டங்களில் இதுவும் ஒன்று. இது அமெரிக்கர்களிடையே அதிகரித்து வரும் விரக்தியைக் குறிக்கிறது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அனுராதபுரத்தில் இன்று இந்திய பிரதமர்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (06) அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளார். 

ஸ்ரீ மகா போதியில் வழிபாட்டில் ஈடுப்பட்ட பிறகு, இந்திய அரசாங்கத்தின் பரிசாக நிறுவப்பட்ட மஹாவ – அநுராதபுரம் தொலைபேசி சமிக்ஞை அமைப்பு உத்தியோகபூர்வமாக இந்தியப் பிரதமரால் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

புதுப்பிக்கப்பட்ட மஹாவ-ஓமந்தை ரயில் மார்க்கமும் இன்று காலை திறக்கப்படவுள்ளது. 

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அநுராதபுரம் விஜயத்தை முன்னிட்டு இன்று அனுராதபுரம் நகரில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அனுராதபுரம் விமானப்படை தளத்திலிருந்து ஸ்ரீ மகா போதி, வைத்தியசாலை சுற்றுவட்டம், ஹரிச்சந்திர மாவத்தை, மாகாண சபை சுற்றுவட்டம், மணிக்கூண்டு சுற்றுவட்டம் மற்றும் குருநாகல் சந்திப்பு வரையிலான வீதிகள் காலை 8.30 மணி முதல் மூடப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். 

ஸ்ரீ மகா போதிக்கு அருகிலிருந்து அநுராதபுரம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் வீதிகள் மற்றும் அனுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து விமானப்படை தளத்திற்குச் செல்லும் வீதிகள் இன்று காலை 11 மணி வரை அவ்வப்போது மூடப்படவுள்ளன. 

இந்த வீதிகள் மூடப்படும் போது, ​​மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

இலங்கை குறித்து வாய் திறந்த விஜய்!

“கச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 

3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இலங்கை வந்துள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் இடைக்காலத் தீர்வு பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். 

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு- 

“கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். 

மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை. மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது. 

1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான். 1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது. 

அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை. அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது. 

இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன. குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்? 

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது. எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது. 

கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு. நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். 

மாண்புமிகு ஒன்றிய பிரதமர் திரு.மோடி அவர்கள், கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும். இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு. நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும். தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும். 

போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.இலங்கை செல்லும் நம் மாண்புமிகு ஒன்றிய பிரதமர் அவர்கள், ‘கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்’ என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும். 

தமிழக வெற்றிக் கழகத்தின் வலியுறுத்துகிறேன். சார்பாக, சமரசமின்றி இவை அனைத்தையும் வலியுறுத்துகிறேன்” என தவெக தலைவர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது இளைஞர்களுக்கான வெற்றி!

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தீர்ப்பானது, இளைஞர்களின் அரசியல் இந்த நாட்டிற்கு தேவை என்பதை வலியுறுத்துகின்ற தீர்ப்பாக அமைந்துள்ளது என தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் எஸ்.எம்.இஷாம் மரிக்கார் தெரிவித்தார்.

இந்த நாட்டில் நீதித்துறை மிகவும் சிறப்பாக இயங்குகிறது என்பதை இந்த தீர்ப்பு வெளிப்படுத்துகின்றது அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகளில் போட்டியிவதற்காக விண்ணப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் எஸ். எம் .இஷாம் மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு எங்களுக்கு சந்தோசத்தை தந்திருக்கிறது. இந்த நாட்டில் நீதித்துறை மிகவும் சிறப்பாக இயங்குகிறது என இந்த தீர்ப்பு மிகவும் தெளிவாக எடுத்து காட்டுகிறது.

குறிப்பாக, இளைஞர்களுக்கான ஒரு அரசியல் நியாயம், இந்த காலத்தில் இல்லாத போதும், நீதிமன்றம் இதற்கான சரியான ஒரு நிலைப்பாட்டை இன்று அறிவித்திருக்கிறது.

குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் இதற்கு முன்பாக நடைபெற்ற தேர்தல்களில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுகின்ற போது, அந்த வேட்புமனுக்களில் என்ன தவறுகள் இருக்கிறது என்பதை அந்த கட்சியின் தலைமையோ, செயலாளரோ, மாவட்ட அமைப்பாளரோ கவனிக்காமல், அந்த அரசியல்வாதிகள் ஏதோ தவறு விட்டார்கள் என்று ஊகித்துக் கொண்டு அவற்றை புறம் தள்ளிய வரலாறு தான் இருந்திருக்கிறது.

ஆனால் இந்த முறை எங்களுடைய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை நாங்கள் எதிர்த்தோம்.

எங்களை நம்புவதற்கு யாரும் இல்லை. புத்தளத்தில் பலம் பொருந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் கூறிய ஒரு விடயம் தான். இது சாத்திம் அற்றது; அவர் ஏதோ தவறு விட்டிருக்கிறார். இந்த வேட்புமனுவை மீண்டும் ஏற்க மறுப்பார்கள் என்று.

ஆகவே தோல்வி அடைந்து விட்டார்கள், அடுத்த 05 வருடத்திற்கு இவர்களுக்கு அரசியல் இல்லை என்று எல்லோரும் பேசிய போது, இளைஞர்களாகிய நாங்கள், நம்பிக்கை என்ற விடயத்தில் தெளிவாக இருந்தோம். தன்னம்பிக்கை என்ற வியடம் இளைஞர்களின் இரத்தத்திலே ஓடிக்கொண்டிருக்கிறது என்பதால் நீதிமன்றத்திற்கு வந்து நாங்கள் அந்த வேட்புமனுக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டோம்.

இதனடிப்படையிலே 5 நாட்கள் தொடராக புத்தளம் கொழும்பு என சட்டத்தரணிகளை சந்தித்து தேவையான ஆவணங்களை கொடுத்து நாங்கள் செய்தது பிழை இல்லை என்று கூறி இந்த தீர்ப்பினை வென்று எடுத்திருக்கிறோம்.

ஆகவே, இந்த தீர்ப்பானது இளைஞர்களின் அரசியல் இந்த நாட்டிற்கு தேவை என்பதை வலியுறுத்துகின்ற தீர்ப்பாக அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்ற நீதியரசர்களுக்கும் அவற்றை பெற்றுத் தர உதவிய சட்டத்தரணிகளுக்கும் நாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (4) தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்கள்!

அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன் ஊடாக 16,000 பேருக்கு தொழில்வாய்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில், இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (04.04.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

மூன்று தசாப்தகால போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு தற்போது அதிகளவு முதலீட்டாளர்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கான ஒழுங்குகளைச் செய்துகொடுக்கின்றோம். அரசாங்கமும் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. இந்தக் காலத்திலேயே முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்,

எமது இளையோருக்கு வேலைவாய்ப்பு பிரச்சினையாகவுள்ளது. தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், வனவளத் திணைக்களம், வன உயிரிகள் திணைக்களம் என்பன எமது அபிவிருத்திக்கு தடையாகவுள்ளன, என்று ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் முதலீட்டுச் சபையின் தலைவர் தனது உரையில்,

இவ்வாறான கலந்துரையாடலை ஒழுங்குபடுத்தியமைக்காக ஆளுநருக்கு நன்றிகளைக் கூறுகின்றோம். முதலீடுகளை ஊக்குவிக்கும் அவரது முயற்சியை வரவேற்கின்றோம். எவ்வளவு விரைவாக வடக்கின் மூன்று முதலீட்டு வலயங்களுக்குமான பணிகளை ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதனைச் செய்வதற்கே விரும்புகின்றோம். அடையாளப்படுத்தப்பட்ட மூன்று முதலீட்டு வலயங்களையும் நாங்கள் பார்வையிட்டுள்ளோம், என்றார்.

காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய முதலீட்டு வலயத்துக்கான போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகள் தொடர்பாக தனித்தனியாக விரிவாக ஆராயப்பட்டன.

இதனை முன்னெடுப்பதிலுள்ள உடனடிச் சவால்கள் இனங்காணப்பட்டு அவற்றுக்கு தீர்வுகளும் கண்டறியப்பட்டன.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய காலத்தில் அதற்கான புகையிரதப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை புனரமைத்து மீளமைப்பதுடன் அதனை காங்கேசன்துறை துறைமுகம் வரையில் விரிவாக்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

பரந்தனுக்கு அண்மையாக புகையிரத நிலையம், ஏ–9 பிரதான வீதி உள்ளமை சாதகமாக அம்சம் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் சில இடங்களில் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டது.

மாங்குளத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணி வனவளத் திணைக்களத்துக்குரியது என்பதால் அதனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் மூன்று முதலீட்டு வலயங்களைச் சுற்றியும் வேலிகளை அமைத்து அதனை அடையாளப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் அமைக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் சுற்றுச்சூழல் நேயமிக்கதாக அமையும் என முதலீட்டுச் சபையினர் குறிப்பிட்டனர்.

இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் பங்கேற்ற முதலீட்டாளர்கள், கடந்த காலங்களிலும் பல சந்திப்புக்கள் நடைபெற்றாலும் அடுத்த கட்டத்துக்கு அவை நகர்ந்திருக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அத்துடன் உள்ளூர் அதிகாரிகள் தமது முதலீட்டு முயற்சிக்கான போதிய ஒத்துழைப்புக்களை வழங்கமறுக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டினர்.

தற்போது ஆரம்பித்துள்ள தமது முயற்சியில் இவ்வாறான கசப்பான சம்பவங்கள் நடைபெறாது என்றும், இந்த மூன்று முதலீட்டு வலயங்களும் நிச்சயம் இயங்கும் எனவும் முதலீட்டுச் சபையின் தலைவர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.