Tuesday, June 30, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 304

இலங்கையில் பட்டங்கள் மூலம் மின்சாரம்!

0

வீட்டு உபயோகத்திற்குத் தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். 

அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

திருவிழாவின் போது நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது பொதுவானது என்றாலும், நுவரெலியாவில் இந்த நோக்கத்திற்காகப் பட்டங்களைப் பயன்படுத்துவது ஒரு புதிய முயற்சியாகும். 

இந்த யோசனை இலங்கைக்கு புதியது. 

எனினும் இது ஏற்கனவே அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

அங்கு உயரப்பறக்கும் ஒரு பட்டத்தின் மூலம் குறைந்தது 4 வீடுகளுக்கான மின்சாரம் பெறப்படுகிறது. 

இலங்கையில் இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கு, இலங்கை முழுவதும் உள்ள பட்டம் பறக்கவிடும் சங்கங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும். 

இந்த திட்டத்தின் ஊடாக 500 மீட்டருக்கு மேல் உயரத்தில் பறக்கும் பட்டங்களின் மூலம்  1,800 டெராவொட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

இதன்படி, எதிர்காலத்தில் மின்சார உற்பத்திக்கான புதிய முறைகளை அறிமுகப்படுத்தக் கொழும்பு பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகப் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

வெளியானது ஜனாதிபதி ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம்

0

வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு மாதம் 25,000 ரூபாய்

*குறைந்தபட்ச ஊதியம் 24% உயர்வு
* கற்கை நெறிகளுக்கு சம்பளத்துடன் விடுறை
* புதிய வீடுகள்
* வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி
*ஓய்வூதியம் பெறுபவர்களின் சம்பள பிரச்சினையை தீர்த்தல்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனம் அடங்கிய www.ranil2024.lk இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் மகா சங்கத்தினர் முன்னிலையில் “ஐந்தாண்டு பணி இயலும் சிறிலங்கா” என்ற கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.

https://www.ranil2024.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி இந்த விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.

அரச சேவை

2025ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி, அனைத்து அரச ஊழியர்களுக்கும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக மாதாந்தம் 25,000 ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவையின் குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் 24% ஆகவும், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் மொத்த சம்பளம் 55,000 ரூபாவாகவும்  ஏனைய அனைத்து பதவிகளுக்கான அடிப்படைச் சம்பளமும் மாற்றியமைக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*40 வயதுக்குட்பட்ட அரசு ஊழியர்களுக்கு சேவைத் திறனை மேம்படுத்த உதவும் கற்கை நெறிகளுக்காக சம்பளத்துடன் கூடிய விடுமுறை.

* பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகத்தை நிறுவுதல்.

* ஒரு மேம்பட்ட திறன் அடிப்படையிலான உயர் முறை.

* அரசு ஊழியர்களுக்கு மடிக்கணினிகள், டேப்கள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றை சலுகை அடிப்படையில் வழங்குவதன் மூலம் பொதுச் சேவையை திறமையான மற்றும் சீரான நிலைக்கு உயர்த்துதல்.

*அரசின் புதிய வீட்டுத் திட்டத்தில் வீட்டு உரிமை இல்லாத அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்தல்.

* அனர்த்த கடன் தொகையை அதிகரிக்கவும், சொத்து மற்றும் வீட்டுக் கடன்களை மீண்டும் வழங்கவும் செயற்படுவோம்.

* வீட்டிலிருந்து செய்யக்கூடிய சேவைகளை வீட்டிலிருந்து செய்ய அனுமதிக்கப்படுகிறது.

*குறிப்பிட்ட மற்றும் முறையான இடமாற்றத்தை அறிமுகம் செய்தல்.

*ஓய்வூதியம் பெறுபவர்களின் சம்பள பிரச்சினைகளை தீர்த்தல்

சிரேஸ்ட பிரஜைகள்

* நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய சிரேஸ்ட பிரஜைகள் பராமரிப்பு மையங்களை நிர்மாணித்தல்.

* சிரேஸ்ட பிரஜைகளுக்கான தேசியக் கொள்கையை 2025 இல் திருத்துதல்.

*சிரேஸ்ட பிரஜைகளின் சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கையை வளர்ப்பதற்காக பிராந்திய செயலகங்கள் மற்றும் சமூக மன்றங்களால் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல்.

சிறப்புத் தேவைகள் கொண்ட சமூகம்

* மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் 4 வது பிரிவுக்கு இணங்க, அத்தகைய நபர்களின் அனைத்து மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை முழுமையாக உத்தரவாதம் செய்ய 2025 இல் பாராளுமன்றத்திற்கு ஒரு புதிய சட்டம்.

*சைகை மொழி சட்டமூலத்தை நிறைவேற்றி, சிறப்புத் தேவையுடையவர்களுக்கான தேசியக் கொள்கையை உருவாக்குதல்.

*அவர்களுக்கான கட்டிட அணுகல் கொள்கையை அவ்வப்போது திருத்துதல்.

*ஒரு சிறப்பு வேலைவாய்ப்பு ஒதுக்கீடு.

வாழ்க்கைச் சுமையைக் குறைத்தல், தொழில் வாய்ப்புகளை வழங்குதல், வரி நிவாரணம் வழங்குதல், பொருளாதார மேம்பாடு மற்றும் ‘உறுமய’ மற்றும் ‘அஸ்வெசும’ வேலைத் திட்டங்களை செயல்படுத்தல், முதல் கட்டமாக, 100,000 தொழில் வாய்ப்பு, வருமான மூலங்களை வழங்க நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றுக்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு தெரிவித்தார்.

பாடசாலைக் கல்வியை முடித்து வெளியேறும் 50,000  பிள்ளைகளுக்கு கைத்தொழில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவுள்ளது.

ரணிலுடன்  நாட்டை வெற்றிகொள்ளும்’ ஐந்தாண்டுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கம், உயர் சம்பளம், வரிச் சுமைக் குறைப்பு, பொருளாதாரத்திற்கான திட்டம் மற்றும் ‘உறுமய’, ‘அஸ்வெசும’ வேலைத் திட்டங்களை விரிவுபடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆபாச படம் காட்டிய அதிபர். காட்டியது யாருக்கு தெரியுமா?

0

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 ஆம் ஆண்டில் கல்விகற்றுவரும் சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் காட்டி வந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று (21) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 ஆம் ஆண்டில் 3 சிறுமிகள், 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கல்விகற்று வருகின்றனர். இந்நிலையில் குறித்த மாணவர்கள் 5 ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அந்த மாணவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலையில் அதிபர் கற்பித்து வந்துள்ளார்

இதன் போது குறித்த அதிபர் மாணவர்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் இருந்து ஆபாச படங்களை காட்டிவந்துள்ள நிலையில் ஒரு மாணவி மாலை நேர வகுப்பிற்கு போகமுடியாது என பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அதற்கான காரணத்தை கேட்டபோது சிறுமி அதிபரின் இந்த செயல் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவதினமான நேற்று இரவு பெற்றோர்பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் பாதிக்கப்பட்ட 3 மாணவிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் 57 வயதுடைய அதிபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அதிபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீ.மு காங்கிரஸ் தலைவருக்கு எதிராக தடை உத்தரவு

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். அலி சாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதைத் தடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் செயலாளர் நாயகத்திற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (28) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அலி சாஹிர் மௌலானாவினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டினை ஆராய்ந்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோருக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு வரும் 11ம் திகதி வரை அமுலில் இருக்கும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கடந்த ஓகஸ்ட்மாதம்  4ஆம் திகதி கூடி தீர்மானித்தது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானித்திருந்த உயர்பீடக் கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என்றும், ஆனால் அந்த முடிவு தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், தாம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம் சுமத்தி,  எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் இன்றி தமது கட்சி உறுப்புரிமையைப் பறிக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1.2 பில்லியன்-1.3 பில்லியன் டொலர் வரை இந்நாடு இழக்கும்

0

சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான செயல்மட்டுமன்றி அது வெற்றிகரமான செயல் அல்ல என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் எதிர்வரும் டிசம்பரில் சர்வதேச நாணய நிதியம் வழங்கவிருக்கும் அடுத்த தவணை மற்றும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) வழங்கவுள்ள தவணைகளை இழக்க நேரிடும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி 2024 டிசம்பர் முதல் 2025 ஜனவரி வரை நாடு 1.2 பில்லியன் முதல் 1.3 பில்லியன் டொலர் வரை இந்நாடு இழக்கும் எனவும், அதன் காரணமாக நாடு மீண்டும் ஸ்திரமற்ற நிலைக்கு மாறுவதை யாராளும் தடுக்க முடியாது எனவும் அமைச்சர் அலி சப்ரி மேலும் சுட்டிக்காட்டினார்.

இன்று (28) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனைக் குறிப்பிட்டார்.

கழிவு குப்பைகளை திருப்பி அனுப்பிய அலிசப்ரி எம்.பி

0

புத்தளம் அறுவாக்காடு பிரதேசத்தில் கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட கழிவு குப்பைகள் மீண்டும் கொட்டப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அதிகாலை எதுவித முன்னறிவித்தலுமின்றி கொள்கலன்களில் நிரப்பப்பட்ட குப்பைகள் புகையிரதம் மூலமாக கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்டு அறுவாக்காடு பிரதேசத்தில் கொட்டப்பட்ட நிகழ்வு புத்தளத்தில் மீண்டும் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

சீன செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக கொண்டுவரப்பட்ட சுமார் 20 கொள்கலன்களில் நிரப்பப்பட்ட கழிவு குப்பைகள் ரயில் மூலம் புத்தளம் அறுவாக்காடு பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.

முதல் கட்டமாக 20 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட கழிவு குப்பைகளில் சுமார் 9 கொள்கலன் குப்பைகள் குறித்த பகுதியில் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல கழிவு கொள்கலன்கள் அடுத்த சில நாட்களில் கொண்டுவரப்பட இருந்ததாகவும் அறிய முடிகிறது.

புத்தளம் அருவாக்காடு பகுதிக்கு கழிவு குப்பைகள் கொண்டுவரப்பட்டதை அறிந்த மக்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்ததுடன், குறித்த விடயம் குறித்து புத்தளம் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.

குறித்த பிரச்சினையை ஆராய்ந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள், மேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனும், விடயத்திற்கு பொறுப்பான கெளரவ அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க அவர்களுடனும் கலந்துரையாடி உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த கழிவு குப்பைகள் கொண்டு வருவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் நாட்களில் புத்தளம் பகுதிக்கு மீண்டும் பல கொள்கலன்களில் கொண்டுவரப்பட இருந்த கழிவு குப்பைகள், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டதுடன், நேற்று கொண்டுவரப்பட்ட 20 கொள்கலன் குப்பைகளில் 11 கொள்கலன்கள் இன்று திருப்பி அனுப்படுவதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

குறித்த கழிவு குப்பைகளை மீண்டும் கொழும்புக்கு எடுத்துச் செல்ல கொழும்பிலிருந்து கொள்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது.

உயிரிழந்த வேட்பாளருக்கு பதிலாக வேறொருவருக்கு சந்தர்ப்பம்

0

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த நிலையில் உயிரிழந்த வைத்தியர் ஹைதுருஸ் மொஹமட் இல்யாஸுக்குப் (Mohammad Ilyas) பதிலாக வேறொரு வேட்பாளரை முன்நிறுத்த சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) தெரிவித்துள்ளது.

ஹைதுருஸ் மொஹம்மட் இல்யாஸின் மரணச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் அவர் சார்பில் வேட்புமனுவில் கையொப்பமிட்டவருக்கு வேறொரு வேட்பாளரை பரிந்துரைக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L Rathnayake) குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச்சீட்டில் மாற்றம் இல்லை 

இதற்கு 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் வாக்குச்சீட்டில் மொஹமட் இல்யாஸின் வாக்காளர் சின்னமும் பெயரும் அச்சிடப்பட்டுள்ளதால் அவற்றில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறமாட்டாது என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு பதிலாக வேறொருவருக்கு சந்தர்ப்பம் : வெளியான அறிவிப்பு | A Chance Another Candidate To Replace For Ilyas

ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த புத்தளத்தைச் (Puttalam) சேர்ந்த வைத்தியர் மொஹமட் இல்யாஸ் கடந்த வியாழக்கிழமை (22) உயிரிழந்தார்.

மாரடைப்பால் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் தனது 79 ஆவது வயதில் இயற்கை எய்தியமை குறிப்பிடத்தக்கது.

ரணில் ஜனாதிபதி ஆனது எவ்வாறு? இதோ ஓர் பார்வை!

0

அரகல போராட்டம் தீவிரமடைந்த நிலையில் 2022 மே 09 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்கிறார்.

பிரதமர் பதவி வெற்றிடமானால், ஜனாதிபதி அவரது அபிப்பிராயப்படி எந்த பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தின் அதிக நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிக சாத்தியம் கொண்டவராக இருக்கின்றாரோ அந்த பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற நிலை உருவாகிறது. (அரசியலமைப்பின் உறுப்புரை 43(4))

அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டில் நிலவிய கொந்தளிப்பான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிக சாத்தியம் கொண்டவராக இருப்பார் என்ற அதீத நம்பிக்கையில் பிரதமர் பதவியை ஏற்கும்படி அவருக்கு பல தடவை அழைப்பு விடுக்கிறார்.

அதற்கு சஜித் பிரேமதாசவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. மாறாக, கட்சியின் உறுப்பினர்கள் சிலரின் வழிகாட்டுதலில் பல இழுத்தடிப்புக்கள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு கோட்டாபய ராஜபக்ச வழங்கியிருந்த அவகாசம் முடிவடைகின்ற நிலையில், குறித்த பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதமர் பதவியை ஏற்கும்படி கோட்டாபய அழைப்பு விடுத்ததும் பிரதமர் பதவியை ஏற்கிறார் ரணில் விக்கிரமசிங்க.

2022 மே 12 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக பதவி ஏற்கிறார் ரணில்.

ரணில் பிரதமரான பின்னரும் “கோட்டா கோ ஹோம்” கோஷம் உக்கிரமடைய, 2022 ஜூலை 14 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறார்.

ஒரு ஜனாதிபதியின் பதவி அவரது பதவிக்காலம் முடிவடைய முன்னர் வெற்றிடமானால், அரசியலமைப்பின் படி, எஞ்சியுள்ள காலத்துக்கு பதவி வகிப்பதற்கென பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களுள் இருந்து ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது நியதி (உறுப்புரை 40(1)(a))

அவ்வாறு தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஜனாதிபதி பதவி வெற்றிடமானதிலிருந்து ஒரு மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். (உறுப்புரை 40(1)(b))

ஜனாதிபதி பதவி வெற்றிடமான திகதியிலிருந்து புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வரையான இடைப்பட்ட காலத்தில், நாட்டின் பிரதமரே பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டும். (உறுப்புரை 40(1)(c))

இந்த 40(1)(c) எனும் உறுப்புரைக்கமைய 2022 ஜூலை 14 ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாகின்றார்.

2022 ஜூலை 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது. வங்குரோத்து அடைந்த நாட்டை பொறுப்பேற்பதற்காக புதிய ஜனாதிபதி பதவிக்கு மூவர் தைரியமாக போட்டியிட்டனர்.

1) ரணில் விக்கிரமசிங்க
2) டளஸ் அழகப்பெரும
3) அநுர குமார திசாநாயக்க

வாக்கெடுப்பு முடிவில், ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டளஸ் அழகப்பெருமவிற்கு 82 வாக்குகளும், அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைக்க, புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அதிக வாக்குகளை பெற்று நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகின்றார்.

இதுதான்ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகுவதற்காக நாட்டில் பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறை. இதுவே பின்பற்றப்படவும் வேண்டும்.

பிரதமர் பதிவியை ஏற்பதற்கு சஜித் பிரேமதாசவுக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் விடுக்கப்பட்ட அழைப்பைப் போல், அனுர குமரா திஸ்ஸநாயக்கவுக்கோ அல்லது டலஸ் அலகப்பெருமவுக்கோ பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறான அழைப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸ் குறித்து ஹரீஸ் எம்.பி சொன்ன அந்த விடயம்

0

ஒரு சில சமூக வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆதரவளிப்பதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பான செய்திகள் என முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

அந்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் ஊடகப்பிரிவு குறித்த மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை, கட்சி தீர்மானங்களை மீறி எவ்வித முடிவுகளையும் எடுக்காதவராக தொடர்ந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பயணிப்பார் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் குறித்து வெளியான செய்தி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹரீஸ் எம்.பி மீது சரமாரியாக தாக்கிய ரவூப் ஹக்கீம்!

0

முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட தீர்மானத்துக்கு அமைய, சஜித் பிரேதமாசவை ஆதரிக்கும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்களுக்கு எதிராக கட்சித் தலைமை கடுமையான முடிவை எடுக்கும் என, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று (19) ஓட்டமாவடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கைகளை பிடித்துக் கொண்டிருப்பதை இன்னும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிசை குறிப்பிட்டே மு.கா தலைவர் இதனைப் பேசியதாக கட்சி போராளிகள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சஜித் பிரேதமதாசவை ஆதரிப்பதென முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்ததை அடுத்து, குருணாகலில் சஜித்தை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் மாதிரம் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில்தான் ஜனாதிபதியைச் சந்தித்து மு.காங்கிரஸின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.

“இவர்கள் ஜனாதிபதியின் கையைப் பிடித்துக்கொண்பிருப்பதை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, கட்சியின் உயர் பீடம் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான தேர்தல் வேலைகளில் ஈடுபடாது விட்டால், அவருக்கு எதிரான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்” என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஓட்டமாவடியிலுள்ள முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களை கட்சித் தலைவர் ஹக்கீம் சந்தித்த போதே இவ்விடயங்களை தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து அபிவிருத்தி வேலைகளுக்காக சுமார் 860 மில்லியன் ரூபா பணத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார் என்ற விடயமும் பேசப்பட்டது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.