Home Blog Page 316

இலங்கை திருமண சட்டம் தொடர்பில் பகீர் தகவல்!

“பிள்ளை” என்பதற்கு சரியான வரைவிலக்கணம் வழங்குவது பற்றி பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கவனத்திற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் நேற்றுமுன்தினம் (21) பாராளுமன்றத்தில் கூடியது.

இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பத்தாவது பாராளுமன்றத்திற்கான பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயற்திட்டத்தை தயாரிப்பது குறித்து ஒன்றியத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், இலங்கையில் திருமண வயது எல்லையை திருத்துவது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

இலங்கையில் தற்பொழுது காணப்படும் பல்வேறு திருமண சட்டங்களுக்கு அமைய காணப்படும் திருமண வயது எல்லையை பொது எல்லையாகக் கொண்டுவருவதற்குத் தேவையான திருத்தத்தை மேற்கொள்ள சிவில் சமூகம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அதன் ஊடாக ஒன்றியத்தின் மூலம் இறுதிப் பரிந்துரையை வழங்குவதற்கும் இதன்போது முன்மொழியப்பட்டது. அத்துடன், “பிள்ளை” என்பதை சரியான முறையில் வரைவிலக்கணம் செய்வதற்குத் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கும் பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், பெண்களின் மேம்பாடு மற்றும் வலுப்படுத்தல் தொடர்பில் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி விஜேரத்ன முன்வைத்த திருத்தப்பட வேண்டிய விடயங்கள் அடங்கிய சட்டமூலத்தை மீண்டும் முன்வைக்கவும் இங்கு முன்மொழியப்பட்டது.

அத்துடன், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் கௌரவ சுதர்ஷினி பர்னாந்துரபுள்ளே முன்வைத்த தனிநபர் சட்டமூலத்துக்கான திருத்தங்களை மேலும் ஆராய்ந்து, அதற்குப் புதிய முன்மொழிவுகளை உள்வாங்கி மீண்டும் பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் திருத்தங்களுக்கு ஒன்றியத்தின் உறுப்பினர்களினதும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைக்குமாறும் ஒன்றியத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், பெண்களை வலுப்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ள பத்தாவது பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியத்தின் தலைவர் இதன்போது தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தீப்தி வாசலகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, ஒஷானி உமங்கா, (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) கீதா ஹேரத், (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுத, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, அம்பிகா சாமிவெல், (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

மியான்மர் அகதிகள் குறித்து வாய் திறந்த சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (23) பாராளுமன்றத்தில் ரோஹின்யா மக்களின் உரிமைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் மேற்கொண்ட உரை பின்வருமாறு,

ரோஹின்யா சமூகம் அகதிகளாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போது, குறிப்பாக நாங்கள் எதிர்பார்க்கின்றோம் ரோஹின்யா மக்கள் உட்பட அகதி சமூகத்திற்கு சர்வதேச கொள்கைகளின் மற்றும் புரிந்துணர்வுகளின் மூலம் உருவாக்கப்பட்ட சர்வதேச சட்டம் ஒன்று உள்ளது.

1951 refugee convention , 1967 protocol to the refugee convention ஆகியவற்றில் நாடு என்ற வகையில் நாம் கையெழுத்திடாவிட்டாலும், மனிதாபிமான நிலைப்பாட்டை மையமாகக் கொண்ட நாடாக,  சில அகதிக் குழுக்கள் உருவாகும் போது சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றி அந்த செயலை மேற்கொள்ளும் பொறுப்பு நமக்கு உள்ளது.

1969 OAU Convention , 1984 declaration on refugee european refugees, 1954 convention related of people , global impact on refugees போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு தீர்மானங்களைப் பார்க்கும்போது, குறிப்பாக ரோஹின்யா சமூகம் மியன்மார் ரகெக் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட சமூகமாகும். 

2014 ஆம் ஆண்டு மியன்மாரில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பிலிருந்தும் நீக்கப்பட்ட கடுமையாக வறுமைக்குள்ளான சமூகப் பிரிவு. இந்த மக்கள் பிரிவு அடைந்திருக்கும் வறுமை நிலையில் அந்த அகதிகளுக்கு மனிதாபிமான கொள்கைகள் மூலம் நமது செயல்முறைகளை மேற்கொள்வது மனிதத்தன்மை கொண்ட அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும். 

2024 டிசம்பர் 19 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்கரைக்கு அருகில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்துக்கு 116 பேர்கள் கொண்ட அகதிகள் குழு கடல் வழியாக இலங்கைக்கு வந்த சந்தர்ப்பத்தில் அந்த அகதிகளுக்காக நாம் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை சர்வதேச சட்டத்திற்கும் சர்வதேச நடைமுறைகளுக்கும் ஏற்ப பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரோஹின்யா சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். அந்த அகதிகளுக்காக நாம் நிறைவேற்ற வேண்டிய கடமையை நியாயமாக நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வருகின்றது என்றும் நாம் நம்புகிறோம். மீண்டும் மியன்மாருக்கு அந்த அகதிகளை அனுப்புவது தீர்வாகப் பார்க்கவில்லை. 

நாம் மனிதாபிமானத்தை முன்நிறுத்தியும் நியாயத்தை முன்நிறுத்தியும் அந்த அகதிகளுக்காக நிறைவேற்ற வேண்டிய கடமைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம். சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க, அந்த அகதி சமூகத்திற்கு ஒரு நியாயமான மனிதாபிமான மையம் கொண்ட கொள்கையொன்றை இந்த அரசாங்கம் செயற்படுத்தினால், அந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக இருக்கிறோம் என தனது உரையில் தெரிவித்தார்.

வெளியாகியது பெண்கள் திருமணச்சட்டம்!

ஈராக்கில் குழந்தைகள் திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இனி 9 வயது முதல் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேற்காசிய நாடான ஈராக் பார்லிமென்டில், ஷியா முஸ்லிம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ளார். இந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு, 18 ஆக உள்ளது. கடந்த 1950ல் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டாலும், 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக, 2023 ஐ.நா., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சமீபத்தில், ஈராக் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 9 ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு பார்லிமென்ட் முடிவு செய்தது. ஆனாலும், பெண்கள், மனித உரிமை குழுக்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இளம் பெண்கள் மீதான பாலியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகரிக்கும். அவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்நிலையில், குழந்தைகள் திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இனி 9 வயது முதல் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 18 வயதில் இருந்து, 9 வயதாக குறைக்கப்பட்டுள்ளது.

நீதியை மேம்படுத்துவதற்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒழுங்குப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கை தான் இந்த சட்டம் என ஈராக் பார்லிமென்ட் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த சட்டத்துக்கு பெண் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பல நாடுகளில் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குழந்தை திருமண சட்டத்திற்கு ஈராக் ஒப்புதல் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ரணிலுக்கு மிக்க நன்றி சொன்ன ஜனாதிபதி அனுர!

அரசாங்கம் வழங்கிய இல்லத்தினை ஏற்க மறுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க நன்றியை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களினால் அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அரசாங்கம் வழங்கிய வீட்டிலேயே வசிப்பதாகவும், அந்த வீட்டின் மாதாந்த வாடகை பெறுமதி 2 மில்லியன் ரூபாய் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ள வீட்டிற்கு 0.9 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிக்கும் வீட்டின் வாடகை பெறுமதி மாதம் 4.6 மில்லியன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சில தலைவர்கள் தங்களிற்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை மீள ஒப்படைத்துள்ளதாக அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை சமீபத்தில் மீள கையளித்துள்ளார் எனவும் ,ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவும் தனக்கு வழங்கப்பட்ட வீட்டை சில காலத்திற்கு முன்னர் திருப்பி ஒப்படைத்துள்ளார் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியல் பிரமுகர்களிற்கான தேவையற்ற செலவீனங்களை குறைப்பது குறித்து அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கன்டென்ட் கிரியேட்டர்’களுக்கு கோல்டன் விசா!

டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்’களுக்கு கோல்டன் விசா திட்டம் வழங்கும் நடைமுறையை, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், வெளிநாட்டினரை கவர பல்வேறு திட்டங்களை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வகையில், திரை பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் உள்ளிட்டோருக்கு அந்நாடு கோல்டன் விசா வழங்கி வருகிறது. இதன்படி, டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும் கோல்டன் விசா திட்டத்தை, அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது.

சர்வதேச அளவில் டிஜிட்டல் உலகில் கன்டென்ட் கிரியேட்டர்கள் சாதனை படைக்க ஏதுவாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு சார்பில் கோல்டன் விசா திட்டம் கடந்த 13ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு, 337 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோல்டன் விசா பெறுவதன் வாயிலாக, பணியாற்றுவதற்கான சான்று உட்பட எவ்வித ஆவணங்களும் இன்றி, 10 ஆண்டுகள் வரை அந்நாட்டில் தங்க முடியும். அதன்பின், அந்த விசாவை புதுப்பித்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, முழு வரி விலக்குடன், மேம்பட்ட மருத்துவ வசதிகளையும் பெற முடியும்.

இந்த விசா பெற குறைந்தபட்ச வயது 25 ஆக இருக்க வேண்டும் எனவும், பாஸ்போர்ட், முந்தைய பணி அனுபவங்கள் தொடர்பான சான்றுகள் உள்ளிட்டவையும் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களாக தனித்துவ சாதனைகள் படைத்திருப்பது அவசியம் எனவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு குறிப்பிட்டுள்ளது.

‘ஆன்லைன்’ ஊடகங்களான, ‘பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யுடியூப்’ உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களில் சொந்தமாக உள்ளடக்கங்களை தயாரித்து பதிவேற்றுபவர்கள், டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

ஆதிவாசிகளை சந்தித்த பிரதமர்!

பழங்குடி மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட பாராளுமன்ற சட்டமூலத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக மற்றும் பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து காணப்படும் சட்ட சிக்கல்களை தீர்ப்பதற்கு சுற்றாடல் அமைச்சு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நேற்று  (22)  பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

பழங்குடி மக்களின் வரலாற்றுப் பெறுமதி தொடர்பாக தெளிவுபடுத்திய இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலெத்தன், தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பிரதமரின் கவனத்திற்கு முன் வைத்தார். ஐக்கிய நாடுகள் பிரகடனத்திற்கு இணங்க தயாரிக்கப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான சட்டம் குறித்தும், பழங்குடியினரின் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்திய ஆதிவாசி மக்களின் தலைவர், இதுவரை காலமும் இருந்த அரசாங்கங்கள் ஒவ்வொரு நடவடிக்கைகளை எடுத்தாலும் அப்பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, பழங்குடி மக்கள் நாட்டின் வரலாற்றுச் சொத்து என்றும், அவர்களைப் பாதுகாத்து, அவர்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொடுப்பது அத்தியாவசியமானது என்றும் கலாசார அமைச்சர் சுனில் செனவி வலியுறுத்தினார்.

சுற்றாடல் அமைச்சின் ஊடாக ஆதிவாசிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவசியமான சட்ட விதிகளை அங்கீகரித்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதாகவும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி சுட்டிக்காட்டினார்.

அதற்காக காணப்படும் சட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக சுற்றாடல் அமைச்சு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் தெளிவுபடுத்தினர். 

சிறை சென்ற மற்றுமொரு அரச உயரதிகாரி!

500,000 ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர் வடக்குப் பகுதியை சேர்ந்த நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்ட முறைப்பாட்டாளர், வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு மையத்திலிருந்து விடுவிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக சந்தேகநபர் இந்த இலஞ்சத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது. 

சந்தேகநபர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெலிசறை தடுப்பு மையத்தில் பணிபுரியும்  குடிவரவு அதிகாரி ஆவார்.

சந்தேகநபர் 20 ஆம் திகதி மதியம் வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தடுப்பு மையத்தில் வைத்து இலஞ்ச  ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு COPD என்ற நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருப்பதாக சுவாச வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதாது தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் குறித்து சமூகத்தில் சரியான புரிதல் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“உலகில் நிகழும் இறப்புக்களுக்கான காரணங்களில் இந்த நோய் 7வது இடத்தில் உள்ளது.”

உங்களுக்கு ஆஸ்துமா நோய் இருந்தாலும், நீங்கள் மருந்து எடுத்துக்கொள்வதில்லை. இதனால் 20 அல்லது 30 வருடங்களில், நீங்கள் ஒரு COPD நோயாளியாக என்னிடம் வருவீர்கள். சிகரெட் புகை பயன்படுத்துகிறீர்கள். இதனால் உங்கள் நுரையீரல் காலப்போக்கில் சேதமடைகிறது என்பது உங்களுக்குத் தெரியாது.

உங்களுக்கு 45 வயது ஆகும்போது, ​​நீங்கள் மருத்துவர்களைத் தேடத் தொடங்குவீர்கள். அப்போது மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது போல் உணர்வீர்கள். மலை பங்கான பகுதியில் ஏறும் போது அது உணரப்படும்.

2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இலங்கையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10% பேருக்கு இது உள்ளது.

“இது முதலில் கண்டுபிடிக்கப்படாததற்குக் காரணம், அதைப் பற்றிய புரிதல் இல்லாததே.” என்றார்.

இந்த நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து மேலும் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதாது,

“இதைத் தடுக்க வேண்டுமானால் நாம் எங்கு வேலை செய்தாலும் சரி, எங்கு வாழ்ந்தாலும் சரி, தேவையற்ற காற்று மாசுபாட்டிற்கு ஆளாகாமல் இருப்பதன் மூலமும், முகக்கவசங்களை அணிவதன் மூலமும் இந்த நோயைத் தடுக்கலாம்.”

பெற்றோருக்கு இந்த COPD நோய் இருப்பது கண்டறியப்படாமலேயே உள்ளது. நடக்கவே கஷ்டமா இருக்கும். பின்னர் முச்சு விடுவதில் சிரமம்  ஏற்படும். லேசான தடிமன் ஏற்பட்டாலும் அவர்களுக்கு கடினமாக இருக்கும்.

ஒரே சிகிச்சை இன்ஹேலர் மட்டுமே. வேறொன்றுமில்லை.

COPD என்பது ஆஸ்துமாவிலிருந்து வேறுபட்ட ஒரு நாள்பட்ட நோயாகும். “அதனால்தான் இன்ஹேலரை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.” என்றார்.

சின்னமும் தலைமைத்துவமும் பிரச்சினை அல்ல!

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் ஏதேனுமொரு வகையில் அரசியல் இணக்கப்பாட்டினை எட்ட வேண்டும் என்று இரு கட்சிகளினதும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே தலைமைத்துவம் மற்றும் சின்னம் தொடர்பில் முரண்பட்டுக் கொள்ளாது இணைந்து பயணிப்பதே எமது இலக்காகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் புதன்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் ஏதேனுமொரு வகையில் அரசியல் இணக்கப்பாட்டினை எட்ட வேண்டும் என்று இரு கட்சிகளினதும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நாம் நம்புகின்றோம். இதன் பிரதான இலக்கு இணக்கப்பாட்டுடன் இணைந்து செயற்படுவதாகும்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்த தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை. எதிர்கால பேச்சுவார்த்தைகள் ஊடாக இது குறித்த இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கு எதிர்பார்க்கின்றோம். கூட்டணியொன்றை அமைப்பதற்கு இணக்கப்பாட்டை எட்ட முடியும்.

ஐக்கிய மக்கள் கூட்டணியை மேலும் விரிவுபடுத்தி அதில் ஏனைய பல கட்சிகளையும் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். எவ்வாறிருப்பினும் இது இறுதி தீர்மானம் அல்ல. சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இறுதி கட்டத்திலேயே தீர்மானிக்கப்படும். அதேவேளை தலைமைத்துவம் தொடர்பில் விவாதித்துக் கொண்டு ஒன்றிணைவதற்கான சந்தர்ப்பத்தை நழுவ விடுவதற்கும் நாம் தயாராக இல்லை.

தேசிய தேர்தலொன்று வரும் போது அவை தொடர்பில் சிந்திக்கலாம். அதுவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

அஸ்வெசுமைக்கு அர்த்தம் கேட்ட வன்னி எம்.பி

அரசாங்கத்தின் செயற்திட்டங்களின் பலவற்றின் சொற்கள் மக்களுக்கு புரியவதில்லை. திட்டத்தின் தலைப்பு புரியாத சந்தர்ப்பத்தில் அந்தத் திட்டம் எவ்வாறு வெற்றியளிக்கும் என்பது சந்தேகத்திற்குரியது. அஸ்வெசும என்பதன் அதன் தமிழாக்கம் என்ன, 16ஆம் திருத்தச் சட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆட்சி மொழி தமிழாகும். புதிய சொற்பதங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்குரிய தமிழ் பதங்களை அறிமுகம் செய்யுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22)  நடைபெற்ற கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் நாட்டுக்கு தேவையானதொரு செயற்திட்டமாகும். இதனூடாக பல விடயங்கள் இந்த நாட்டில் கிளீன் செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூக கட்டமைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் ஊடாக இந்த திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்தின் நல்ல விடயங்களுக்கு இந்த அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இந்த செயற்திட்டத்தின் நோக்கமாக நீண்டகாலமாக நிலைத்திருக்க சமூக கலாச்சார மாற்றங்களை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். . இது ஒரு இனத்திற்காக அன்றி அனைத்து இன மக்களுக்குமான வேலைத்திட்டமாக உங்களுடன் பணியாற்ற நாங்கள் விரும்புகின்றோம். நல்ல நடத்தை மாற்றத்தை செய்யாது இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது.

இதனை நாங்கள் முதலில் செய்ய வேண்டும். இந்த வேலைத்திட்டம் தொடர்பான விளக்கமளிக்கும் நிகழ்ச்சியொன்றை பார்க்க முடியுமாக இருந்தது. அது இரண்டு மொழியில் மட்டுமே செய்யப்பட்டது. தமிழ் மொழியில் அது இருக்கவில்லை. இதனால் நடத்தை மாற்றத்தை எங்களிடம் இருந்து ஆரம்பித்து தமிழையும் அதில் சேருங்கள் என்று கோருகின்றோம்.

இதேவேளை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பலவற்றின் சொற்கள் மக்களுக்கு புரியவதில்லை. வேலைத்திட்டத்தின் தலைப்பு புரியாது அந்தத் திட்டம் எவ்வாறு வெற்றியளிக்கும் என்பது சந்தேகத்திற்குரியதே.

அஸ்வெசும என்றால் அதன் தமிழாக்கம் என்ன? 16ஆம் திருத்தச் சட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆட்சி மொழி தமிழாகும். புதிய சொற்பதங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்குரிய தமிழ் பதங்களையும் கொண்டு வாருங்கள். உறுமய போன்ற திட்டங்களின் தமிழ் பொருளையும் வெளிப்படுத்த வேண்டும்.

அத்துடன் மத நல்லிணக்க அமைச்சின் பௌத்த சாசன அமைச்சு மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. முன்னைய அரசாங்கங்களில் மூன்று மதங்களுக்கும் தனித்தனி அமைச்சுகள் இருந்தன. இந்நிலையில் கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்தில் அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கக்கூடிய வகையில் திட்டத்தை முன்னெடுப்பீர்கள் என நம்புகின்றோம் என்றார்.