Home Blog Page 319

குற்றம் நடந்தது என்ன – அர்ச்சுனா எம்.பியின் புதிய அப்டேட்!

போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று (21) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்தானது, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

WHO இருந்து அதிரடியாக வெளியேறும் அமெரிக்கா!

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

பதவியேற்ற பின், அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் நாள் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:

*அமெரிக்கா பார்லிமென்ட் கலவர வழக்கில், தொடர்புடைய 1,500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் ட்ரம்ப் ஆதரவாளர்கள்.

* உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. கோவிட் தொற்று உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவிய போது, உலக சுகாதார அமைப்பு தனது கடமையை செய்யவில்லை.

* கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் பயன்படுத்தும் தகவல் தொடர்புத் தளத்தை திடீரென நிறுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பேன். டிக் டாக் செயலி மீதான தடையை 75 நாட்களுக்கு தாமதப்படுத்தும் நிர்வாக நடவடிக்கை எடுப்பேன்.

* அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் அவசரநிலை பிரகடனம்.

* சட்ட விரோத அகதிகளின் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும்.

* பனாமா கால்வாயில், அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனால், அந்த கால்வாய் அமெரிக்காவோடு மீண்டும் இணைக்கப்படும்; அதை சீனா நிர்வகிக்க தேவையில்லை.

* மின் வாகனம் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ்; விரும்பிய வாகனங்களை பயன்படுத்தலாம் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் உறுதி செய்யப்படும்.

* துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டப்படும்.

* கொரோனா தடுப்பூசி போட மறுத்ததற்காக ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களை, ஊதியத்துடன் மீண்டும் பணியில் அமர்த்துவேன். இவ்வாறு டிரம்ப் அறிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் படையணிக்கு புதிய பணிப்பாளர்!

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நேற்று (20) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேயிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை திட்டமிடல் சேவையில் விசேட தர அதிகாரியாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட இவர், முன்னர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளராகவும், சுகததாச உள்ளக விளையாட்டரங்க அதிகாரசபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன், அவர் சிறிது காலம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதித் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

தேசிய இளைஞர் படையணியின் புதிய பணிப்பாளர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இன்று புரட்டிப்போடவுள்ள காலநிலை!

கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வவுனியா, பாவற்கு வான் கதவுகள் திறப்பு!

வவுனியா, பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதனால் அதன் 4 வான் கதவுகளும் 2 அடிக்கு மேல் திறக்கப்பட்டுள்ளதால் நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மத்திய நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதுடன் பாவற்குளத்தின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளளவான 19.4 அடியை அடைந்துள்ளதால், அதன் ஒரு வான் கதவுகள் இரண்டரை அடியும், மூன்று வான் கதவுகள் இரண்டு அடியும் திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் வான் கதவுகள் ஊடாக நீர்பாயும் வீதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் குளத்து நீர் நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அவ் வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அத்துடன் பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் எனவும் மத்திய நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று உள்ளே, ஆனால் இன்று?

கைதான முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியை பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) காலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீண்ட 30 நிமிட சமர்ப்பணங்களுக்கு பின்னர் நீதவான் அவரை 200,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன், வழக்கை அடுத்த மாதம் 6 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு உத்தரவிட்டார்.

ராஜாங்கனையில் 17000 கன அடி வேகத்தில் பாயும் நீர்!

கலா ஓயா ஆற்றுப் படுகையில் உயர் மற்றும் மத்திய பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக கலா ஓயா நீர்மட்டம் வெள்ள எச்சரிக்கையை நெருங்கியுள்ளது. மேலும் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேறும் வான் கதவுகள் திறக்கப்பட்டு தற்போது 17000 கன அடி வேகத்தில் நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. தற்போது நீர்த் தேக்கத்திற்கு கிடைக்கும் நீர் கொள்ளளவுக்கு இணங்க எதிர்காலத்தில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்பட வேண்டியேற்படலாம்.

இந்நிலை காரணமாக ஆற்றுப்படைகையை அண்மித்துள்ள ராஜாங்கனை, நொச்சியாகம, வனாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வெவ போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட வெள்ளப்பெருக்கின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலை குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அப்பிரதேச மக்களையும் அந்தப் பிரதேசங்களுக்கு ஊடாக பயணிக்கும் வாகன ஓட்டுனர்களிடமும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இது குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதிக்கு பூட்டு!

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதிப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி நேற்று (19) மாலை 5.00 மணிக்குப் பிறகு கல்லேல்லயிலிருந்து மன்னம்பிட்டி வரையிலான பகுதியில் அனைத்து வாகனங்களுக்கும் முழுமையாக மூடப்பட்டுள்ளது என பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, வெலிகந்த – திம்புலாகலை மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக ரயில் சேவை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

வீதியின் நிலையை இன்று காலை பரிசீலனை செய்த பின்னர், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவில்லாத அரசாங்கம் – சஜித்

மக்களின் நலனுக்கான ஆட்சியை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துக்கு போதிய தெளிவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குருநாகல், கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விவசாயிகளுக்கான 25,000 ரூபாய் உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை.

இன்னும் இதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 40சதவீதம் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

25,000 ரூபாய் முழுமையான மானியம் முறையாக வழங்கப்படவில்லை.

தற்போது, நெல்லை விதைக்கும் காலம் என்பதால் உர மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

தேர்தல் காலங்களில் அழகான வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவிக்கப்பட்ட விடயங்கள் இன்று சாத்தியமில்லாது போயுள்ளன.

பேச்சுக்கும் செயலுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

1,731 கோடி செலவில் அதிபர் பதவியேற்பு விழா!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளார்.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவின் முதல் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சரவை வேட்பாளர்கள் உள்பட 500 நட்சத்திர உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியும், அவரது மனைவி நீடா அம்பானியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும், இன்றிரவு நடக்கவிருக்கும் இரவு விருந்திலும் டிரம்ப் கலந்து கொள்ளவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இசை நிகழ்ச்சிகளுடன் நாளை நடைபெறவுள்ள டிரம்ப்பின் அதிபர் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், முன்னாள் அதிபர்களான ஜோ பைடன், பில் கிளின்டன், ஜார்ஜ் டபுள்யூ புஷ், பராக் ஒபாமா உள்பட ஹிலாரி கிளிண்டன், கமலா ஹாரிஸும் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், அமெரிக்காவில் டிக் டாக் செயலி ஞாயிற்றுக்கிழமை முதல் தடை செய்யப்பட்ட நிலையில், நாளை நடைபெறவுள்ள அதிபர் பதவியேற்பு விழாவில் டிக் டாக் தலைமை நிர்வாக அதிகாரி ஷோ செவ் கலந்துகொள்ள உள்ளார். டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பின்னர், டிக் டாக் சேவைகளை அமெரிக்காவில் தடையின்றி பயன்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுமென டிரம்ப் குறிப்பிட்டுள்ளதாக டிக் டாக் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள்தவிர, ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன், அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலேய், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்பதில் உறுதியில்லை.

அதிபர் பதவியேற்பு விழா, இந்திய நேரப்படி இரவு 10.30 மணியளவில் நடைபெறும். அமெரிக்க அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு அதிபரின் பதவிக்காலமும் ஜனவரி 20 ஆம் தேதியில்தான் தொடங்கப்படும். ஒருவேளை ஞாயிற்றுக்கிழமைகளில் ஜனவரி 20 ஆம் தேதி வருவதாயிருந்தால், அதற்கு மறுநாள்முதல் பதவிக்காலம் தொடங்கும்.

அதிபராகப் பதவியேற்பவரின் சத்தியப்பிரமாணம், அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையின்கீழ் மேற்கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து, அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் குறித்து, அதிபர் தனது முதல் உரை ஆற்றுவார்.

பதவியேற்பு விழாவின் தொடக்கவிழாவையடுத்து, மதிய விருந்துக்கு அழைத்து செல்லப்படுவர். மேலும், அதிபராக பதவியேற்ற நாளில், தனது முதல் பணியாக நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடுவது பாரம்பரியம்.

டிரம்ப் கையெழுத்திடப்போகும் முதல் உத்தரவுகள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், முன்னாள் அதிபர் ஜோ பைடன் ரத்து செய்த சில நிர்வாக உத்தரவுகளை மீண்டும் நிலைநிறுத்தும் உத்தரவுகளில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கையெழுத்திடும் பணியைத் தொடர்ந்து, 3 கண்காட்சிகள், அதற்கு அடுத்ததாக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் டிரம்ப் கலந்துகொள்ள உள்ளார்.

டிரம்ப்பின் பதவியேற்பு விழாவுக்கு நன்கொடையாக 200 மில்லியன் டாலர் (ரூ. 1,731.5 கோடி) பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் நிலவும் கடும் குளிரால், பதவியேற்பு விழாவை பொதுவெளியில் நடத்த இயலாது என்று கூறிய டிரம்ப், 40 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக மூடப்பட்ட திடலுக்குள் அதிபர் பதவியேற்பு விழா நடக்கவிருப்பதாக தெரிவித்தார்.