Wednesday, May 6, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 75

சத்தியப்பிரமாணம் செய்ததோடு களத்தில் இறங்கிய தாஹிர் எம்.பி!

0

தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றுள்ள புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் NTM. தாஹிர் மரைக்கார், முதலாவது பாராளுமன்ற அமர்வை முடித்துக் கொண்டு ஆரவாரமாக ஊர்வலம் எதுவும் செல்லாது தனது மாவட்ட மக்களின் சோகத்தில் பங்கெடுத்தவிடயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கொற்றாமுல்லை, தும்மோதர, நாத்தான்டிய, மாதம்ப போன்ற பிரதேசங்களுக்கு நேற்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களோடு புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் NTM.தாஹிர் அவர்கள் விஜயம் மேற்கொண்டு அந்த மக்களுடைய தேவைகளை கேட்டறிந்ததுகொண்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தி விரைந்து செயற்படுவதாக உறுதியளித்தார்.

இதேவேளை குறித்த அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளதுடன், மக்களுக்கான நிவாரண உதவித் திட்டங்களை விரைவாக வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரச அதிகாரிளுடன் இணைந்து மேற்கொள்வது தொடர்பாகவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அவசரமாக மாநாட்டைக் கூட்ட வேண்டும்!

ஜனாதிபதி அவசரமாக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட வேண்டும், அல்லது விரைவில் கவனம் வேறெங்கோ திரும்பி விடும்.

தொகுப்பு: எம்.என்.எம். யஸீர் அறபாத் (BA) ஓட்டமாவடி

இந்த நேரம் மிகவும் முக்கியமானது. இன்னும் இரண்டு வாரங்கள் சென்றால், சர்வதேசத்தின் கவனம் நம்மைவிட்டு வேறெங்கோ திரும்பி விடும். இந்த வேளையில், உடனடியாக ஜனாதிபதி ஒரு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டுவதற்காக உலக அரச தலைவர்களுடன் பேச முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட எம்.பியுமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (05) சபையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

இன்று அரசாங்கம் வழங்கியுள்ள இந்த அனர்த்த தரவுகளை குறிப்பாக சுனாமிப் பேரழிவோடு நான் ஒப்பிடுகிறேன்.

சுனாமிப் பேரழிவால் ஏற்பட்ட இழப்பையும், இந்த அனர்த்தத்தால் ஏற்படப்போகும் இழப்பையும் ஒப்பிட்டு, சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை மற்றும் துணை அறிக்கை குறித்து நான் பேசுகிறேன்.

இன்று நமக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் தகவலின்படி, சுனாமி பேரழிவின் போது ஏற்பட்ட சொத்து இழப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும். ஆனால், தற்போதைய காலநிலை அனர்த்தத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பு 6 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது சுனாமியின் தாக்கத்தை விட ஆறு மடங்கு அதிகமாகும். சொத்து இழப்பிற்காக, மேலும், நிலத்தின் உட்கட்டமைப்பை மீட்டெடுக்கத் தேவைப்படும் தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட அதே அளவு, அதாவது 4.5% முதல் 5% ஆக இருக்கும். இந்தக் காலநிலை பேரழிவால் ஏற்படும் அழிவுக்காக GDPயில் 3% முதல் 5% தேவைப்படும்.

எனவே, எதிர்க்கட்சியின் சார்பாக நாங்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைக்கும்போது, முடிந்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், எங்களை விமர்சிக்காமல் விட்டுவிடுங்கள். இரண்டு தரப்புகளிலும் ஒரு சேற்றை வாரி இறைக்கும் போர் நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், நாம் அந்த நிலைக்குச் செல்ல மாட்டோம்.

இந்த வேளையில், உடனடியாக ஜனாதிபதி ஒரு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டுவதற்காக உலக நாடுகளின் அரச தலைவர்களுடன் பேச முன்வர வேண்டும்.

குறிப்பாக, இந்தியப் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர், அத்துடன் ஜேர்மனி ஜனாதிபதி, ஐக்கிய அரபு அமீரக (UAE) ஆட்சியாளர் மற்றும் சிலரை அழைத்து அவர்களுக்குத் தொலைபேசியில் பேசி, சர்வதேச நன்கொடை மாநாட்டின் ஊடாக நமக்கு இந்த வேளையில் இரண்டு முதல் மூன்று பில்லியன் டொலர்கள் திரட்டியாக வேண்டும். அதற்கான முயற்சியை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி, ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதிகள் நம் மத்தியில் உள்ளனர். அனுபவம் வாய்ந்த ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகிய அனைவரையும் ஒன்று கூட்டுங்கள். இந்தத் தேசிய விவகாரம் குறித்து அனைவரும் ஒன்றிணைந்து பேசுங்கள். இது ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் நான் முன்வைக்கும் வேண்டுகோள்.

ஏனென்றால், இந்த அனர்த்தத்தின்போது வழக்குகளை பற்றி யோசிக்காதீர்கள். வழக்குகளை நிறுத்த வேண்டியதில்லை. ஆனால், அதற்கு மத்தியில், இந்த அனர்த்தத்தின்போது எதிர்க்கட்சியையும், நாட்டில் உள்ள அனைத்துத் தலைவர்களையும் ஒன்றிணைக்குமாறு நான் ஜனாதிபதியிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால், எந்தவொரு அரசாங்கத்தாலும் இந்தச் சுமையைத் தாங்க முடியாது. எந்தவொரு அரசாங்கத்தாலும் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டவும் முடியாது. அதுமட்டுமின்றி, குறைந்தபட்சம் நாம் சர்வதேச நாணய நிதியத்தினரை (IMF) அழைத்து, அவர்களிடம் பேசி, குறிப்பாக கடனை மீளச் செலுத்துவதை மேலும் மூன்று ஆண்டுகளுக்குத் தள்ளிப் போடுவது குறித்துப் பேச வேண்டும். எனவே, இந்த இரண்டு மாற்று வழிகளில் ஒன்றையாவது நாம் செய்தேயாக வேண்டும்.

நான் வலியுறுத்துவததெல்லாம் இந்த பேரிடரின் போது சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்பதைத்தான்.

நிச்சயமாக, முன்பு அமைதிப் பேச்சுவார்த்தை செயல்முறை இருந்தது, அப்போது நன்கொடையாளர் மாநாடும் கூட்டப்பட்டது. நான் சமாதான பேச்சுவார்த்தையாளராக நன்கொடையாளர் மாநாடுகளிலும் பங்கேற்றேன். ஒஸ்லோவிலும் நியூயோர்க்கிலும் நடந்த நன்கொடையாளர் மாநாட்டின் போது 4.5 பில்லியன் டொலர்களைத் திரட்ட இலக்கு வைத்தோம், கிட்டத்தட்ட 3 பில்லியன் உறுதியளிக்கப்பட்டது.

எனவே, இங்கு கொழும்பில் நாம் நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டியே ஆக வேண்டும்.

ஜனாதிபதி மீது சர்வதேசத்தின் நல்லெண்ணம் உள்ளது என்று நான் நம்புகிறேன். அவர் தொலைபேசியை எடுத்து, குறிப்பாக சமீபத்தில் அவர் விஜயம் செய்த நாடுகளின் சர்வதேசத் தலைவர்களுடன் பேசினால், அவர் மீதுள்ள அந்த நல்லெண்ணத்தைப் பயன்படுத்தி அவர்களுடன் பேசி, விரைவில் கொழும்பில் ஒரு நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட வேண்டும்.

ஓய்வுபெற்ற அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளையும் ஒன்றிணையுங்கள். ஏனென்றால், இது ஒரு தேசியப் பேரழிவு. இதை அரசியல் கோணத்தில் அணுகாதீர்கள். வேறு வழியில்லாமல் இந்தக் கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன்.

மேலும், நிச்சயமாக, தற்போதைய ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்ற அதிகாரிகளும் உள்ளனர் என்பதை நான் தயக்கத்துடன் கூறியேயாகவேண்டும்.

எனவே, ஓய்வுபெற்ற அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் சிலர் மீது நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாம், ஆனால் அனுபவம் வாய்ந்த அவர்களை அழையுங்கள். நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர், ஓய்வுபெற்ற திறைசேரியின் துணைச் செயலாளர் பாயிஸ் மொஹிதீன் போன்ற மற்றும் அனுபவம் வாய்ந்த பலரை அழையுங்கள். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வந்து, அரசாங்கத்திற்குத் தேவைப்படும் இந்த பெரும் தொகைப் பணத்தை திரட்ட உதவுவார்கள்.

நான் இந்தியா மற்றும் ஜப்பானை பரிந்துரைக்கக் காரணம் என்னவென்றால், அவை பல புவிசார் அரசியல் விவகாரங்களில் ஒன்றாகச் செயல்படுகின்றன. நிச்சயமாக, சீனா அவற்றுடன் ஈடுபடாது. எனவே, ஜனாதிபதி சீன அதிபர் ஜின்பிங்குடன் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும். ஜனாதிபதி புடினுடனும் தனிப்பட்ட முறையில் பேசுங்கள். காரியங்கள் நடக்கும். நாம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை எதிர்கொண்டுள்ள இந்தக் கடுமையான பின்னடைவிலிருந்து திருப்ப வேண்டிய நேரம் இது. இந்த நாடு எதிர்கொண்டுள்ள இந்தச் சூழ்நிலை, அதன் அளவு மற்றும் வீச்சு,பாரதூரம் என்பன முன்னெப்போதும் இல்லாதது.

எனவே, அரசாங்கம் உடனடியாகச் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஐரோப்பாவின் கவனம் உக்ரைன் மீதும் மற்ற இடங்களிலும் இருப்பதால், அவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அரபு நாடுகளின் கவனம் காஸா மீதில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம்(UAE), இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை ஒன்றிணைந்து நமக்கு உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நிச்சயமாக, கத்தார் மற்றும் சவுதி அரேபியாவையும் அழைத்து, நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டச் சொல்லலாம். அது நிச்சயமாக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கொழும்பில் நடக்க வேண்டும்.

ஜனாதிபதி அக்கறையுடன் முயற்சித்தால், அது நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும், நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று நான் குறிப்பிட வேண்டும்.

வெள்ளம் நாடெங்கிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, மூதூர் மற்றும் கிண்ணியா நீரில் மூழ்கின. கன்னத்தோட்டையிலும், மல்வானையிலும் வேறு இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது.

ஆனால், கண்டியில் நடந்தது முன்னெப்போதும் இல்லாதது. முழு கண்டி மாவட்டத்தையும், குறிப்பாக கம்பளை நகர்ப் பகுதியையும் மீண்டும் கட்டியெழுப்ப ஒரு சிறப்புத் திட்டம் தேவை. அனைத்தும் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன, மக்கள் மிகவும் வறுமையில் வாடுகின்றனர்.

எனவே, உடனடியாகச் சில சீர்திருத்த நடவடிக்கைகள் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும். நிலச்சரிவுகளை மட்டும் பார்த்தால், கண்டியின் ரம்புக்எல, விலானகம அக்குரணை பிரதேச செயலாளார் பிரிவில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 11 சடலங்கள் (ஜனாஸாக்கள்) மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சடலங்களை சேற்றுக்கு அடியில் அப்படியே புதையுண்டிருக்க குடும்பத்தினர் இணங்கியுள்ளதாக கூறப்பட்டது.

கம்பளை உடபலாத்த பகுதியிலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டது, அங்கேயும் பல சடலங்கள் மீட்கப்படவில்லை, 15க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாக வெள்ளம் மற்றும் மண்சரிவில் புதையுண்டுவிட்டன. கம்பளை உடபலாத்த ஹந்தபிம பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டது, நான் கண்டியில் வசிக்கும் இடத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் தான் அது உள்ளது. அந்த நிலச்சரிவில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் பல சடலங்கள் மீட்கப்பட வேண்டியுள்ளன.

எனவே, இதுதான் உடபலாத்த ஹதபிம, மாவத்துற உடகம மற்றும் ரம்புக்எல ,விலான என்பவற்றின் நிலைமை. முழு கிராமமுமே அழிந்துவிட்டது. மக்கள் மீண்டும் வாழத் திரும்பிச் செல்ல முடியாது, எனவே மாற்று இடங்கள் அவர்களுக்குக் கண்டறியப்பட வேண்டும். இந்த மாற்று நிலங்களைத் தேடும்போது, காணிச் சீர்திருத்த ஆணைக்குழு(LRC) ஜனவசம, மற்றும் பெருந் தோட்டங்களில் உள்ள நிலங்களைப் பற்றிப் பார்க்க வேண்டும்.

ஆனால், எல்லாவற்றுக்கும் தேசியக் கட்டட ஆய்வு நிறுவனத்திடமிருந்து (NBRO) சான்றிதழ் தேவை. கட்டட ஆய்வு நிறுவனத்தில் போதிய அதிகாரிகள் இல்லை.

எனவே, அரசாங்கம் உடனடியாகச் செயல்பட்டு, நம்முடைய பொறியியல் பீடங்களில் உள்ள, குறிப்பாக பேராதனை, மொறட்டுவ, களனி, ருஹுணு ஆகிய பொறியியல் பீடங்களில் உள்ள நிபுணர்களை அழைத்து, அனைவரும் ஒன்றிணைந்து இந்த பணியில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் இதைச் செய்ய முடியாது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் அனாதைகளாகிவிட்டனர், அவர்களால் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாது. வீடுகளுக்குச் செல்வதற்கு முன், ஒரு சில ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். இப்போதிருக்கும் தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின்(NBRO) அதிகாரிகளால் அந்த அறிக்கையை தயாரித்துக் கொடுக்க முடியாது.

நான் தெல்தோட்டைப் பகுதிக்குச் சென்றேன். அங்கே பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தெல்தோட்டை நகருக்கு அருகில் உள்ள பியசேனபுரவில் மேலிருந்து மண்மேடு சரிந்து, தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. அனுர டேனியல் மருத்துவமனைக்கு அருகில் உள்ள வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், பெரிய அளவில் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், மக்களால் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாது. மக்கள் இன்னும் அந்த வீடுகளில் தான் இருக்கிறார்கள், வெளியேறிச் செல்ல வேறு இடமில்லை.

எனவே, குறிப்பாக, நாரங்ஹேன பட்டியகம எஸ்டேட்டிலும் கூட, அந்த லயன் அறைகளுக்குச் செல்லவே முடியாது. எனவே, மக்களின் அவல ஓலத்தைக் கேட்டுவிட்டு வந்தோம். அவர்களுக்கு ஒரு முடிவை, ஒரு பதிலைக் கொடுக்க நாம் உடனடியாக மாற்று இடங்களைத் தேட வேண்டும், அதற்கான பணிகளை விரைந்து செய்ய வேண்டும்.

இப்போது கண்டிக்குச் செல்ல கலகெதரை வழியாக மட்டுமே வாய்ப்பு உள்ளது. கடுகண்ணாவ வீதி மூடப்பட்டுள்ளது. கலகெதரை வீதியிலும் பல இடங்களில் பாதை பெரிய அளவில் இடிந்து விழுந்துள்ளது. இப்போது ஒரே வழித் தடம் மட்டுமே உள்ளது.

எனவே, அந்தப் பாதையையும் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். அதைச் செய்யச் சிறப்பு அறிவுள்ளவர்கள் தேவை. இந்த பொறியியல் பீடங்களில் உள்ள அனைவரையும் ஒன்றிணைத்து, ஒரு மாநாட்டை நடத்தி, இதைப் பற்றிப் பேசி, அவர்களின் சிறப்பு அறிவைப் பயன்படுத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, அறிவுள்ளவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி, ஆளும் கட்சியில் இருந்தாலும் சரி, அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டிய ஒரு பெரிய பணி இது. எனவே, நிதி திரட்ட நாம் சர்வதேச நன்கொடை மாநாட்டை உடனடியாகக் கூட்ட வேண்டும். இதில் ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன் என்றார்.

மீட்பு நடவடிக்கையில் அதிரடியாக இறங்கிய அமீரகத்தின் குழு!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான ஒருங்கிணைந்த உதவி மற்றும் மீட்புப் பணிகள்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)-ஓட்டமாவடி.

அண்மையில் இலங்கையைத் தாக்கிய டிட்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் வெள்ளம், மிக மோசமான நிலச்சரிவுகள் ஆகியவை நாட்டின் பல பகுதிகளில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த இயற்கை பேரழிவின் தாக்கத்தைக் குறைக்கவும், மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உடனடியாக அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கத் தொடங்கியுள்ளது.

களத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேடல் மற்றும் மீட்புக் குழு:

ஐக்கிய அரபு அமீரகத்தின் அவசர நடவடிக்கையின் முக்கிய பகுதியாக, அபுதாபி குடிமைத் தற்காப்புப் பிரிவைச் சேர்ந்த நகர்ப்புற தேடல் மற்றும் மீட்புக் (USAR) குழுக்கள் அடங்கிய குழு, மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

நிபுணத்துவம்: இந்தக் குழு அதிநவீன உபகரணங்கள், நீர் மீட்பில் நிபுணத்துவம் பெற்ற பிரிவுகள், மீட்புப் படகுகள், பயிற்சி பெற்ற K9 பிரிவுகள் (நாய்கள்) மற்றும் சவாலான சூழல்களுக்கு ஏற்ற நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தக் குழுவின் திறன்கள், மிகக் கடினமான பகுதிகளில் விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகின்றன.

  • ஆரம்ப நடவடிக்கைகள்: வந்தவுடன், குழுவினர் உடனடியாக கள நடவடிக்கைகளைத் தொடங்கி, நில அளவை செய்தல், சேதத்தை மதிப்பிடுதல், காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு அவசர ஆதரவை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொண்டனர்.

    கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேச செயலகப் பகுதியில் உள்ள ரம்புக்-எல/விலனாகம என்ற பிரதேசத்திற்கு இந்தக் குழு சென்றடைந்தது. இது கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இடத்தில், மலை உச்சியில் அமைந்திருந்த வீடுகள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு, 16-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து பள்ளத்தாக்குக்குள் அடித்துச் செல்லப்பட்டன.
  • மீட்பு நடவடிக்கை: நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ரம்புக்-எல/விலனாகம போன்ற பகுதிகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம், இந்தக் குழு இடிபாடுகளுக்கு அடியிலிருந்தும் பள்ளத்தாக்கிலிருந்தும் 10 உடல்களை வெற்றிகரமாக மீட்டுள்ளது. இந்த முயற்சிகள், இலங்கையில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விமானப் போக்குவரத்து மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்:

இந்த அவசர உதவி, ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான நிவாரணக் குழுவால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

  • அவசர விநியோகம்: உலகிலேயே மிகப்பெரிய இராணுவ சரக்கு விமானமான ஐக்கிய அரபு அமீரக விமானப்படையின் C-17A விமானங்கள் மூலமாக இதுவரை நான்கு தடவைகள் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மொத்தமாக 20 டன்களுக்கும் அதிகமான அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

    முக்கிய நிவாரணப் பொருட்கள்: நிவாரணப் பொருட்களில் பின்வருவன அடங்கும்:
  • தங்குமிடங்கள்: 48 தற்காலிக வீடுகள் மற்றும் கூடாரங்கள்.
  • உணவுப் பாதுகாப்பு: ஒரு குடும்பத்திற்கு 14 நாட்களுக்குப் போதுமான 2,592 உணவுப் பொதிகள்.
  • உபகரணங்கள்: மீட்புக் குழுவினருக்கான வாகனங்கள், மீட்புப் படகுகள் மற்றும் சவாலான நிலப்பரப்பில் பயணிக்க மோட்டார் சைக்கிள்கள் (motorbikes) போன்ற பயன்பாட்டு வாகனங்கள்.
  • பிற பொருட்கள்: மருந்துப் பொருட்கள், உடைகள், போர்வைகள் மற்றும் பாய்கள் (mattresses) உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமானப் பொருட்கள்.

இந்தச் சூழ்நிலைக்கு ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் வழங்கிய விரைவான மற்றும் அதிகளவிலான உதவிகளுக்காக பொதுமக்கள் சார்பில் ஆழமான பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சமூகத்தினரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய ஒன்றிணைந்துள்ளனர்.

நெருக்கடிகளின்போது நட்பு நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுள்ள உறுதியான மற்றும் நீடித்த அர்ப்பணிப்பை இந்தத் தலையீடு மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. இந்த உதவிகள் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தைக் குறைக்கவும், மீட்பு மற்றும் ஸ்திரப்படுத்துதல் முயற்சிகளை விரைவுபடுத்தவும் உதவுகின்றன.

இலங்கை சுனாமி அனர்தத்தினால் பாதிக்கப்பட்டபோதும் ஐக்கிய அரபு அமீரகம் ஓடோடிவந்து உதவியது போன்று, இம்முறையும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறது. இலங்கை மக்களாக ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர்களுக்கும், குடி மக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளும், பிரார்த்தனைகளும்.

பாலத்தினை புனரமைக்கும் பணியை ஆரம்பித்த இந்திய இராணுவம்!

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவ பல நாடுகளும் முன்வந்துள்ளது.

வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட நாளிலிருந்து பாகிஸ்தான் மற்றும் இந்திய இராணுவங்கள் தொடர்ச்சியாக மீட்பு பணிகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கிவருகிறது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடைப்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் உள்ள பாலம் ஒன்று தாழ் இறங்கிதன் காரணமாக, முல்லைத்தீவு – கிளிநொச்சி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.

இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு A-35 வீதியின் பதினொராவது கிலோமீற்றரில் உள்ள குறித்த பாலத்தினை புனரமைக்கும் பணியை இன்று ஆரம்பித்துள்ளனர்.

இன்று பிற்கல் கிளிநொச்சிக்கு வருகை தந்த இந்திய இராணுவ பொறியியல் குழு, புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு!

0

வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) விடுத்திருந்த அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளது. 

சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய, அனைத்து நபர்களும் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளை 2025 நவம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தது. 

எவ்வாறாயினும், ‘டித்வா’ புயலின் தாக்கம் மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, பல வரி செலுத்துவோர் மற்றும் அவர்களது முகவர்களால் குறிப்பிட்ட கால எல்லைக்குள் வருமான அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது. 

இந்நிலையை கருத்தில் கொண்டு, வரி செலுத்துவோர் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளை 2025 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பித்தால், தாமதமாக சமர்ப்பிப்பதற்கான அபராதம், மதிப்பீடுகளை வெளியிடுதல் அல்லது குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகாமல் அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும். 

அதற்கமைய, இதுவரை அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியாத அனைத்து வரி செலுத்துவோரும் வருமான அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள இந்த சலுகைக் காலத்தை பயன்படுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவில் சிக்கிய போதைப்பொருட்கள்!

0

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போதே, 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இதன்போது, 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் 14 கிலோ 802 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

குறித்த படகின் உரிமையாளர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் முன்னெடுத்து வருகிறது.

அரச உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் ரத்து!

0

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

நவம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக்க பண்டார அறிவித்துள்ளார். 

அதற்கமைய புதிய விடுமுறை விண்ணப்பங்கள் அல்லது விடுமுறை நீடிப்பு விண்ணப்பங்களை பொறுப்பேற்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த வேண்டும் என அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு குறித்த சுற்றறிக்கையின் மூலம் அறிவித்துள்ளார். 

சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சம் 5 வருடங்களுக்கு உட்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பொது நிர்வாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும் அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு விடுமுறையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்டுள்ள கால எல்லைக்கு அமைவாக மாத்திரம் அந்த விடுமுறையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுவரையில் விடுமுறைக்கான அனுமதியைப் பெற்று, அந்த விடுமுறையைக் கழிக்கத் தயாராக இருக்கும் உத்தியோகத்தர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்கு அமைய விடுமுறையைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியம் உள்ளதாக பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் வெளிநாட்டு விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள, அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்த புதிய விடுமுறை விண்ணப்பங்கள் மற்றும் விடுமுறை நீடிப்பு விண்ணப்பங்களுக்குப் புதிய சுற்றறிக்கையினால் பாதிப்பு ஏற்படாது. அதேவேளை தேவைகளைப் பூர்த்தி செய்யாத மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில் குறைபாடுகள் உள்ள விடுமுறை விண்ணப்பங்கள் மீள்பரிசீலனை இன்றி நிராகரிக்கப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் உள்நாட்டு விடுமுறைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடுமுறை விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607 ஆக உயர்வு!

0

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (05) மாலை 06.00 மணிக்கு வெளியிட்டுள்ளது. 

குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளதுடன், 214 பேர் காணாமல் போயுள்ளனர். 

இதில் அதிகளவாக கண்டி மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 232 பேர் உயிரிழந்துள்ளதுடன், நுவரெலியா மாவட்டத்தில் 89 பேரும், பதுளை மாவட்டத்தில் 83 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 61 பேரும் குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 25 மாவட்டங்களிலும் 5 லட்சத்து 86ஆயிரத்து 464 குடும்பங்களைச் சேர்ந்த 20 லட்சத்து 82ஆயிரத்து 195 பேர் குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் 1,211 இடைத்தங்கல் முகாம்களில் சுமார் 43ஆயிரத்து 715 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 52ஆயிரத்து 537 பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

சொத்து சேதங்களைப் பொறுத்தவரையில், 4ஆயிரத்து 164 வீடுகள் முழுமையாகவும், 67ஆயிரத்து 505 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தளவில வீதியில் வெள்ள நீரை அகற்றுமாறு மக்கள் போராட்டம்!

0

சஜாத் – பிராந்திய செய்தியாளர்

ஏற்பட்ட டித்வா சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் கல்பிட்டி – ஏத்தாளை பகுதியும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

நாட்டின் எல்லா பாகங்களிலும் வெள்ள நீர் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் கல்பிட்டி – ஏத்தாளை பகுதியில் உள்ள தளவில பிரதான வீதியில் சுமார் 500 மீட்டருக்கும் அதிக தூரத்திற்கு குறித்த வெள்ள நீர் தேங்கி நிற்பதால், குறித்த வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்களும் பெரும் அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குறித்த விடயம் அறியத்தந்தும் பாராமுகமாக செயற்படுவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதுடன், வெள்ள நீரை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

முறையான வடிகான் வசதி இல்லாததால் மழை காலங்களில் குறித்த பகுதியில் இவ்வாறு அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படுவதாகவும், வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான முறையான பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டு, வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

பல போராட்டங்களுக்கு மத்தியில் மின்சார வாரியத்தின் பவுசர் மூலம் நீரை அகற்றுவதற்கு தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், இதற்கான நிரந்தர தீர்வை கோரி பிரதேச மக்கள் போராட்டம் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பமாகும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி!

0

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

அதேநேரம் மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.