கொழும்புத் தலைமுறையை ஆட்டிப்படைக்கும் திரைகள்: தடைக்கு அஞ்சும் சிறார்கள்!
பெரியவர்கள் பலரும் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் சமூக வலைத்தளங்களில் என்ன செய்கிறார்கள் என்பதைத் தாங்கள் முழுமையாக அறிந்து வைத்துள்ளதாகவே நம்புகிறார்கள். ஆனால் கள யதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது. 17 வயதான நதியா நாக்பால், கொழும்பிலுள்ள சர்வதேச மற்றும் முன்னணிப் பாடசாலை மாணவர்களிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு பல அதிர வைக்கும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
“எல்லாரிடமும் TikTok, Instagram, YouTube இருக்கு. இது எதுவுமே இல்லாவிட்டால் நாம் ஒன்றுமில்லாதவர்களாக (Loser) மாறிவிடுவோம்; அதை எப்படிச் சமாளிப்பது என்றே தெரியாது” என 11 வயது மாணவி அனியேலா வெளிப்படையாகக் கூறுகிறார். கொழும்பு இன்டர்நேஷனல், லைசியம், ஏசியன் இன்டர்நேஷனல், லேடீஸ் கல்லூரி மற்றும் எலிசபெத் மொய்ர் போன்ற முன்னணிப் பாடசாலைகளில் கற்கும் 8 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களிடம், “நாளை விடியும்போது சமூக வலைத்தளங்களே இல்லை என்றால் என்ன செய்வீர்கள்?” எனக் கேட்டபோதே இந்த அச்சம் பகிரங்கமானது.
இன்றைய சிறுவர் தலைமுறையின் தெரிவுகளில் Facebook என்ற பெயரே அடிபடவில்லை. அதற்குப் பதிலாக Instagram-இன் தற்காலிக 24 மணி நேர ‘Story’ அம்சங்கள், குறிப்பிட்ட நண்பர்கள் மட்டுமே உள்ள TikTok கணக்குகள் மற்றும் Roblox போன்ற கேமிங் தளங்களே இவர்களின் உலகமாக மாறியுள்ளன. “போர்டு கேம்ஸ் எல்லாம் வயசானவங்களுக்கு” என 12 வயது சிறுவன் ஒருவர் அலட்சியமாகச் சொல்லும் அளவுக்கு, பாரம்பரிய விளையாட்டுகள் கைவிடப்பட்டு அந்த இடத்தை TikTok ட்ரெண்டுகள் ஆக்கிரமித்துள்ளன.
பாடசாலை நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளுக்குத் தடை இருந்தாலும், பாடசாலை முடிந்ததும் வைரல் சவால்களைச் செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர். பாடசாலைக் கூட்டங்களில் கூட மாணவர்கள் இவ்வாறான அர்த்தமற்ற வைரல் வார்த்தைகளைப் பேசியதால் சில ட்ரெண்டுகளுக்கு நிர்வாகங்கள் தடை விதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. “13 வயதுக்குட்பட்டவர்களுக்கும் டீனேஜர்களுக்கும் இப்போது எந்த வித்தியாசமும் இல்லை, எல்லோரும் ஆப்களுக்குள் மூழ்கிக் கிடக்கிறார்கள்” என ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மறுபுறம், “எப்போதும் கோபமான முகம், குனிந்த தலை, குடும்பத்துடன் பேச நேரமின்மை” எனப் பெற்றோர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் தொடங்கிய இந்த அதிகரித்த திரை நேரம், தற்போது ஒரு நாளுக்கு 6 முதல் 7 மணித்தியாலங்கள் வரை நீண்டு முழுமையான அடிமைத்தனமாக மாறியுள்ளது.
ஒருவேளை 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரசு தடை விதித்தாலும், “ஆன்லைன் கேம்களுக்குள் இருக்கும் மெசேஜிங் ஆப்கள் மூலம் நாங்கள் மீண்டும் இணைவோம்” என மாணவர்கள் மாற்று வழிகளையும் திட்டமிட்டு வைத்துள்ளனர். ஒருபுறம் உலகளவில் சிறார்களுக்கான சமூக வலைத்தளக் கட்டுப்பாடுகளுக்குப் பெற்றோர் ஆதரவளித்து வரும் நிலையில், கொழும்பு சிறார்களின் இந்த டிஜிட்டல் பிணைப்பு எதிர்காலம் குறித்த பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.



