ஜுட் சமந்த
லுணுவளை, ஹால்தடுவன பகுதியிலுள்ள தென்னந்தோப்பொன்றில் இருந்து அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கொஸ்வத்த பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி மீட்கப்பட்ட இச்சடலம், சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் வெள்ளை நிற அரைக்காற்சட்டையும் (Shorts), கறுப்பு நிற நீண்ட கைச்சட்டையும் (Long-sleeve shirt) அணிந்திருந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடலின் தன்மையை வைத்துப் பார்க்கும்போது, இம்மரணம் பல நாட்களுக்கு முன்னரே நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாரவில பதில் நீதவான் ஜயசிங்க ஹேரத் குறித்த தென்னந்தோப்பிற்கு நேரடியாகச் சென்று முதற்கட்ட களப் பரிசோதனைகளை மேற்கொண்டார். தொடர்ந்து, சடலத்தை அடையாளம் காணும் பொருட்டும், மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகவும் சடலத்தை சிலாபம் பொது வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்குமாறு கொஸ்வத்த பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இது ஒரு இயற்கையான மரணமா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது தொடர்பில் இதுவரை எந்தவித உறுதியான தகவல்களும் வெளிவரவில்லை. கொஸ்வத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சனத் வர்ணசூரிய தலைமையிலான பொலிஸ் குழுவினர் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



