வழக்கறிஞர்கள் சங்கம் – ஜனாதிபதி அநுர நேரடிப் பேச்சுவார்த்தை!

55 views

புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் மற்றும் தீர்மானங்களை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்து, நாட்டுக்கு உகந்த சரியான முடிவிற்கு வரும் எனத் தாம் முழுமையாக நம்புவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு திருத்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தமது சங்கம் பேச்சுவார்த்தை நடத்திய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இத்திருத்தத்திற்கு சட்டத்தரணிகளும் நீதிபதிகளும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான வலுவான காரணங்களை மிகத் தெளிவாக ஜனாதிபதிக்கு எடுத்துரைத்ததாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட 20 பேர் கொண்ட குழுவினர் இந்த விசேட சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இச்சந்திப்பின் போது ஜனாதிபதியும் தனது நிலைப்பாட்டைத் தமக்குத் தெளிவுபடுத்தியதாக சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் உச்ச சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும்போது விரிவான, ஆழமான நிபுணத்துவக் கலந்துரையாடல்களுக்குப் பின்னரே அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தாம் சுட்டிக்காட்டியதாகக் குறிப்பிட்ட ரஜீவ் அமரசூரிய, “இது ஒருவருக்கு எதிராக மற்றவர் நடத்தும் மோதல் அல்ல” என்பதையும் மிகத் தீர்க்கமாக எடுத்துரைத்தார்.