வவுனியா மேயர் தொடர்பில் ஆளுநரின் உத்தரவுக்கு நீதிமன்றம் போட்ட முட்டுக்கட்டை!

97 views

வவுனியா மாநகர சபை முதல்வர் காண்டீபனை அப்பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதற்கு வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை வவுனியா மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது.

மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய, சபை நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து ஜூன் மாதம் ஆளுநரால் இந்த அதிரடி நீக்க வர்த்தமானி வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து முதல்வர் காண்டீபன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த முக்கிய கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த காண்டீபன் தரப்பு வழக்கறிஞரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்தே அன்றைய முழுநேர விசாரணைகளும் அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டார். இதற்கு முன்னதாக பிரதிவாதிகள் தரப்பால் தடையை நீக்கக் கோரி ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்குரிய பதில் மனு காண்டீபனின் சட்டக் குழுவினால் முந்தைய நாளே தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கருத்திற்கொண்ட நீதிமன்றம், தமது இறுதி வாதங்களை ஆகஸ்ட் 28 ஆம் திகதிக்குள் எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளதுடன், இடைக்காலத் தடை தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது. அதுவரை ஆளுநரின் பதவி நீக்க வர்த்தமானி இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன், புதிய முதல்வரை நியமிக்கவோ அல்லது தேர்தல் நடத்தவோ விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்து அமுலில் இருக்கும்.

இந்த இடைக்கால உத்தரவு தொடர்பான முடிவு எட்டப்பட்ட பின்னரே பிரதான வழக்கின் முழுமையான விசாரணை ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஓர் அதிகாரியான வட மாகாண ஆளுநர், மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை வர்த்தமானி மூலம் பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் வடகிழக்கு அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. சாவகச்சேரி ஹர்த்தால் உட்பட பல தொடர் போராட்டங்கள் வெடித்த பின்னணியில், “மக்களால் தெரிவு செய்யப்படாத ஆளுநர்கள் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை மாற்றியமைக்க முடியாது” எனத் தமிழ் அரசியல் தரப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

குறிப்பாக, கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்து, தேர்தல்களும் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் ஒரேயொரு தேர்தல் ரீதியான பிரதிநிதித்துவமாக விளங்கும் உள்ளூராட்சி மன்றங்களையே குறிவைத்து இத்தகைய அதிகாரப் பிரயோகங்கள் முன்னெடுக்கப்படுவது பலத்த சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.