தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பரவி வரும் அரசியல் வதந்திகளுக்கு, நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடி விளக்கமளித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து, விஜய் முதலமைச்சராவதைத் தடுக்க அதிமுக – திமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க ரஜினிகாந்த் பேச்சுவார்த்தை நடத்தியதாகப் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த ரஜினிகாந்த், “விமர்சனங்களுக்கு நான் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தால், அதுவே உண்மையாகிவிடும் என்பதால் தான் இந்த விளக்கம். மு.க.ஸ்டாலினுடன் எனக்கு இருக்கும் நட்பு, கொள்கை மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டது; அது 40 ஆண்டுகால நட்பு. அந்த ரீதியிலேயே அவரைச் சந்தித்தேன்.
விஜய் முதலமைச்சராவதைத் தடுக்க நான் இரு பெரிய கட்சிகளுடன் தூது சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட தரங்கெட்ட செயல்களைச் செய்யும் ஆள் இந்த ரஜினி கிடையாது. விஜய் முதலமைச்சராவதில் எனக்கு என்ன பொறாமை? நான் அரசியலிலேயே இல்லை. அவருக்கும் எனக்கும் 28 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது. அவர் வெற்றி பெற்றவுடனேயே எக்ஸ் (X) தளத்தில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டேன்” என்று கூறினார்.
விஜய் சாதனைக்குப் பாராட்டு:
விஜய்யின் அரசியல் வெற்றியைப் பாராட்டிய ரஜினிகாந்த், “மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பிய சமயத்தில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் தனியாகப் போட்டியிட்டு, எம்.ஜி.ஆர், என்.டி.ஆரை விடப் பெரிய அளவில் வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பெற்றுள்ளார். இது எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தைத் தருகிறது.
நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் வென்றிருப்பேன். ஆனால், நான் ஏன் வரவில்லை என்பது குறித்து ஏற்கனவே 3 பக்க அறிக்கையில் விளக்கியுள்ளேன். விஜய்யைச் சம்பிரதாயத்திற்காகச் சந்திக்க எனக்கு விருப்பமில்லை” என்றும் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.


