ஜுட் சமந்த
வரலாற்றை விழுங்கும் தெதுரு ஓயா: சிலாபத்தில் அழியும் விளிம்பில் துட்டகைமுணு காலத்து புராதன விஹாரை!
இலங்கையின் வரலாற்றுக் களஞ்சியங்களில் ஒன்றான வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சிலாபம் – ஆரியகம புராதன சேத்திய ரஜமகா விஹாரை, தெதுரு ஓயா ஆற்றில் மூழ்கி முற்றாக அழிந்துபோகும் அதியுச்ச ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. பல நூறு ஆண்டுகால பழைமைவாய்ந்த தூபியின் செங்கற்கள் ஒவ்வொன்றாக ஆற்றுக்குள் சரிந்து விழுந்துவரும் காட்சிகள் அங்குள்ள மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
துட்டகைமுணு மன்னனின் காலத்தில் அவரது பிரதான தளபதியான ‘நந்தமித்திர யோதயா’ என்பவரால் சிலாபம் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களில் பல விஹாரைகள் நிர்மாணிக்கப்பட்டன. அவற்றுள் பல்லம நந்தமித்திர விஹாரையும், இந்த ஆரியகம சேத்திய ரஜமகா விஹாரையும் தலையாயவை. பல வரலாற்றுச் சின்னங்களையும், சிதைவடைந்த ஒரு புராதன தூபியையும் தன்னுள் கொண்டுள்ள இந்த புனித பூமி, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டு பொறுப்பேற்கப்பட்டது.
ஆனால், இயற்கையின் திசைமாற்றமும் அதிகாரிகளின் மெத்தனமும் இந்த வரலாற்றுப் பொக்கிஷத்தை தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளன. கடந்த சில வருடங்களாக தெதுரு ஓயா தனது இயற்கையான ஓட்டப் பாதையை மாற்றத் தொடங்கியுள்ளது. ஆற்றின் வடகரையில் பாரிய அளவில் மணல் மேடுகள் குவிந்து வருவதால், நீர் தெற்குக் கரையை நோக்கிப் பாய்ந்து அதிதீவிரமாக கரையை அரித்துச் செல்கிறது. இதனால், தெற்குக் கரையில் நந்தமித்திர தளபதியால் கட்டப்பட்ட புராதன தூபி மெல்ல மெல்ல சரிந்து ஆற்றுக்குள் பலியாகி வருகிறது.
ஊடகங்கள் மூலம் இது வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, நீர்ப்பாசன திணைக்களமும் தொல்பொருள் திணைக்களமும் இணைந்து பாறாங்கற்கள் மற்றும் மணல் மூடைகளை அடுக்கி பாதுகாப்பு வேலிகளை அமைத்த போதிலும், அந்தப் பாதுகாப்புத் தடுப்புகளையும் தாண்டி தூபியின் பாரிய செங்கற்கள் தொடர்ந்தும் ஆற்றுக்குள் சரிந்து விழுந்து கொண்டிருக்கின்றன.
இது தொடர்பில் தீவிர கவலை வெளியிட்டுள்ள விஹாராதிபதி வணக்கத்துக்குரிய நல்லூருவே சுமனசார தேரர், “நான் இங்கு வந்து 30 வருடங்களுக்கும் மேலாகிறது. தெதுரு ஓயா அன்று ஓடிய வழியில் இன்று ஓடவில்லை. வடகரையில் சேர்ந்துள்ள மணல் மேடுகளால் தெற்குக் கரையை உடைத்துக்கொண்டு ஆறு பாய்கிறது. புராதன தூபியின் ஒரு பகுதி ஏற்கனவே ஆற்றுக்குள் போய்விட்டது. இந்த நிலம் இப்போது தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமானது என்பதால் எங்களால் சுயமாக எந்த புனரமைப்பும் செய்ய முடியாது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அழிவை நேரில் வந்து பார்க்கக்கூட எவரும் வரவில்லை. அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் விஹாரை வளாகமே ஆற்றுடன் கரைந்துபோகும்” என எச்சரிக்கிறார்.
மறுபுறத்தில் கிராம மக்களும் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். “வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தெதுரு ஓயா பெருக்கெடுக்கும் போதெல்லாம், கிராம மக்கள் அனைவரும் விஹாரை வளாகத்தில் உள்ள இரண்டு மாடி தர்ம மண்டபத்திலேயே தஞ்சம் புகுவோம். அந்த நேரங்களில் தேரரே எங்களுக்கு உணவளித்துப் பாதுகாப்பார். வரவிருக்கும் மழைக் காலத்தில் ஆறு பெருக்கெடுத்தால், விஹாரை மட்டுமல்லாமல் முழு கிராமமுமே பேரழிவைச் சந்திக்கும்” என கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஆற்றின் போக்கை பழைய நிலைக்கு மாற்றி, வடகரையில் உள்ள மணல் குவியல்களை அகற்றுவதே இதற்குரிய ஒரே உடனடித் தீர்வாகும். தொல்பொருள் திணைக்களம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பெயர் பலகைகளை நடுவதோடு தனது கடமையை முடித்துக் கொள்ள முடியாது; எதிர்கால சந்ததியினருக்காக எமது வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதும் அவர்களின் தலையாய பொறுப்பாகும்.




