ஊடகத்துறைக்கு புதிய அத்தியாயம்! இலங்கையில் பட்டயம் பெற்ற ஊடக உயர்தொழிலர்களுக்கான நிறுவகம் உருவாகிறது
கொழும்பு: இலங்கையின் ஊடகத் துறையை மேலும் தொழில்முறைப்படுத்தும் நோக்கில், நாட்டின் ஊடகத் துறையில் பணியாற்றும் உயர்தொழிலாளர்களுக்கான தொழில்சார் நியமங்களை அறிமுகப்படுத்தி அவற்றைப் பேணுவதற்காக “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” என்ற புதிய அமைப்பை நிறுவுவதற்கான சட்டமூலம் அரசாங்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய, 2026 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள இந்த விசேட வர்த்தமானி, நாட்டின் ஊடகத் துறையில் புதிய மாற்றத்திற்கான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.
சட்டமூலத்தின் படி, புதிய நிறுவகம் சுயாதீனமாக இயங்கும் ஒரு கூட்டுத்தாபனமாக அமையவுள்ளதுடன், ஊடகத்துறையில் செயற்படும் பல்வேறு துறையினரையும் ஒரே தொழில்சார் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதை பிரதான இலக்காகக் கொண்டுள்ளது.
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பதிப்பாசிரியர்கள், தொகுப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஊடக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து உயர்தொழிலாளர்களுக்கும் இந்த நிறுவகத்தில் உறுப்புரிமை வழங்கப்படவுள்ளது. அதேவேளை, தகைமை மற்றும் திறமைகளை அடிப்படையாகக் கொண்டு உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ஊடகக் கல்வி மற்றும் பயிற்சி நெறிகளை மேம்படுத்துவதற்காக பரீட்சைகள், ஆராய்ச்சிகள் மற்றும் சர்வதேச தரத்திலான கற்கைநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. உலகளாவிய ஊடகப் போக்குகளுக்கு ஏற்ப உள்ளூர் ஊடகத்துறையை முன்னேற்றும் முயற்சிகளும் இந்த நிறுவகத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, உறுப்பினர்களும் மாணவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய விசேட நடத்தைக் கோவை தயாரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஊடகத் துறையில் தொழில்சார் ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
நிறுவகத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ள 15 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் பேரவையொன்று அமைக்கப்படவுள்ளது. இதில் 8 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், மேலும் 7 பேர் நியமனத்தின் மூலம் இணைக்கப்படவுள்ளனர்.
ஆளும் பேரவை முறைப்படி உருவாகும் வரை, அமைச்சரால் நியமிக்கப்படும் இடைக்காலப் பேரவை ஒன்று செயற்படும். இதில் அமைச்சின் செயலாளருடன், ஊடகத் துறையில் குறைந்தது 20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆறு நிபுணர்கள் இடம்பெறுவர் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டமூலம் அமலுக்கு வந்தால், இலங்கையின் ஊடகத் துறையில் தொழில்முறை தரநிலைகள், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய திருப்புமுனையாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


