ஜுட் சமந்த
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் அதிர்ச்சித் தகவல் ஒன்று கல்பிட்டிப் பகுதியிலிருந்து வெளியாகியுள்ளது. டீசல் விலைச் சேமிப்பைக் குறிவைத்து, சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி பயணிகளை ஏற்றிச் சென்ற 7 பேருந்துகளை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
நீண்ட நாட்களாகவே இவ்வாறான முறைகேடுகள் நடப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, புத்தளம் பிராந்திய போக்குவரத்துப் பிரிவினரும் கல்பிட்டி பொலிஸாரும் இணைந்து வீதிகளில் அதிரடி வேட்டை ஒன்றை அரங்கேற்றினர். கொழும்பில் இருந்தும் புத்தளத்தில் இருந்தும் கல்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்துகள் மட்டுமன்றி, அரச இ.போ.ச (CTB) பேருந்துகளும் இந்தத் திடீர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.
அப்படியே எரிபொருள் டாங்கியைத் திறந்து சோதித்த பொலிஸாருக்குக் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. இயந்திரங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மற்றும் சுற்றாடலுக்குப் பெரும் புகை மாசடைவை ஏற்படுத்தக் கூடிய மண்ணெண்ணெயை ஊற்றி, எவ்விதப் பயமுமின்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆபத்தான முறையில் பயணிகளின் உயிரோடு விளையாடிய 7 பேருந்துகளின் சாரதிகளையும் கையும் மெய்யுமாகப் பிடித்த பொலிஸார், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். லாபத்தை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் இவ்வாறான மோசடிகளுக்கு எதிராக இனிமேலும் சோதனைகள் தொடரும் என பொலிஸ் தரப்பு எச்சரித்துள்ளது.



