ஜுட் சமந்த
புத்தளம், ஆணமடுவ தோணிகல கிராமத்தில் இன்று அதிகாலை வேளையில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அமைதியாக விடியவிருந்த அந்த விடியற்காலை பொழுது, காட்டு யானையின் தாக்குதலால் ஒட்டுமொத்த கிராமத்தையுமே அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது.
இன்று அதிகாலை தன் வீட்டின் அருகே காட்டு யானை ஒன்று உலாவருவதை உணர்ந்த தோணிகல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய சத்குமார முதியான்சேலாகே காமினி சரத் குமார் என்ற, அதை விரட்டியடிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த யானை அவர் மீது வெறித்தனமான தாக்குதலை நடத்திய சம்பவத்தில் குறித்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட உடல்
யானையின் தாக்குதலுக்கு இலக்கான அவரை, அந்த மிருகம் சுமார் 100 மீற்றர் தூரத்திற்கு தரதரவென இழுத்துச் சென்று வீசியுள்ளது. கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு பெரும் போராட்டத்திற்குப் பிறகு காட்டு யானையை அப் பகுதியிலிருந்து விரட்டியடித்துள்ளனர். தொடர்ந்து, தாக்குதலுக்குள்ளானவரைத் தேடிச் சென்றபோது, அவர் படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த ஆணமடுவ திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து மரண விசாரணைகளை மேற்கொண்டார். இந்த சோகமான சம்பவம் குறித்து ஆணமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். வனவிலங்கு – மனித மோதல் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


