கடலின் அமைதியை ஒரே நொடியில் குலைத்து, அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் பதற்றத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்ற சம்பவம் ஒன்று வென்னப்புவ கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. அலைகளின் ஓசையோடு சேர்த்து கரைக்கு வந்து சேர்ந்த அந்த ஒரு மர்மப் பெட்டி, அப்பகுதி மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று (28) மாலையில் சிந்தாத்ரிய கடற்கரைக்கு அடித்து வரப்பட்ட அந்தப் பெட்டியைக் கண்ட மீனவர்கள், அதை நெருங்கிப் பார்த்தபோதுதான் அங்கே ஆபத்தின் அறிகுறி தென்பட்டது. சுமார் 1 அடி நீளமும் 6 அங்குல உயரமும் கொண்ட அந்தப் பெட்டியின் மேற்பரப்பில் “9 mm CTN” மற்றும் “IND.GOVT.EXPLOSIVE 1.4S” என்று அச்சிடப்பட்டிருந்தது. இந்திய பாதுகாப்புப் படையினரால் ஏதேனும் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்தப் பெட்டி, அதில் படிந்திருந்த சிப்பிகளின் தன்மையைப் பார்க்கும்போது நீண்டகாலமாக கடலில் மிதந்து வந்திருக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெட்டியின் மீது காணப்பட்ட அச்சமூட்டும் வாசகங்கள் மற்றும் தகவல்கள் காரணமாக, அதற்குள் துப்பாக்கி ரவைகள் அல்லது சக்திவாய்ந்த வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற அச்சம் கணப்பொழுதில் பரவியது. சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த வென்னப்புவ பொலிஸார், உடனடியாக அந்த இடத்தை தமது முழுமையான பாதுகாப்பின் கீழ் கொண்டுவந்தனர்.
இரவு நேர இருளுக்கு மத்தியில், நிலைமையைக் கையாள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கும் பதற்றத்திற்கும் மத்தியில் விசேட அதிரடிப்படையினரால் அந்த மர்மப் பெட்டி மிகுந்த அவதானத்துடன் திறக்கப்பட்டது.
பெட்டி திறக்கப்பட்டபோதுதான் அதில் மறைந்திருந்த உண்மை வெளிவந்தது! அதற்குள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது போல சில ரிகிஃபோம் (Rigifoam) துண்டுகளும், சுமார் 10 ஜீவ கைக்குண்டுகளின் பாகங்களும் (Hand grenade parts) காணப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜுட் சமந்த



