அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சர்வதேச அங்கீகாரம்
நிருபர் – எம் என் முஹம்மது
அக்கரைப்பற்று மாநகர சபை, ஜெர்மன் அரசின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் சர்வதேச நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு தெரிவாகி, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
நேற்று (17) நடைபெற்ற அக்கரைப்பற்று மாநகர சபை அமர்வில், மாநகர முதல்வர் A.L.M. அதாஉல்லா அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானம் சபையின் ஏகமனதான அங்கீகாரத்தைப் பெற்றது.
இதன்படி, Engagement Global நிறுவனத்தினால் 2025 முதல் 2027 வரை நடைமுறைப்படுத்தப்படும் “Connective Cities Deep Dive Workshop – Water Resilience” எனும் சர்வதேச திட்டத்தில் பங்கேற்க அக்கரைப்பற்று மாநகர சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 84 முன்மொழிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 8 நகராட்சிகளில் ஒன்றாக அக்கரைப்பற்று மாநகர சபை இடம்பெற்றுள்ளதுடன், இலங்கையிலிருந்து தெரிவான ஒரே மாநகர சபையாகவும் திகழ்கிறது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த முன்மொழிவு, நகரின் நீர்வள முகாமைத்துவத்தை மேம்படுத்துவதையும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
திட்டத்தின் மூலம் வறட்சி மற்றும் வெள்ள அபாயங்களை சமாளிக்கும் நகரத்தின் திறன் மேம்படுத்தப்படுவதுடன், நீர்வள முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச சிறந்த நடைமுறைகள் பகிரப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளன. மேலும் மாநகர சபையின் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகத் திறன்கள் வலுப்படுத்தப்பட்டு, நிலையான நகர அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தழுவல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதேவேளை, திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளைப் பெற்றுக்கொள்ளவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூத்த கல்வியாளர்கள் நிபுணத்துவ ஆலோசகர்களாக இணைக்கப்படுவதற்கும் மாநகர சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த சர்வதேச அங்கீகாரம் அக்கரைப்பற்று மாநகர சபை, அம்பாறை மாவட்டம், கிழக்கு மாகாணம் மற்றும் இலங்கை நாட்டிற்கு சர்வதேச அரங்கில் பெருமை சேர்க்கும் முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.
மேலும், இந்த வெற்றியானது அக்கரைப்பற்று மாநகர முதல்வரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான A.L.M. அதாஉல்லா அவர்களின் அபிவிருத்தி நோக்கு, நிர்வாக அனுபவம் மற்றும் தூரநோக்குச் சிந்தனையின் பிரதிபலிப்பாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


