நாட்டில் நிலவும் டெங்கு அபாய நிலையை கருத்தில் கொண்டு, பாடசாலை சீருடையுடன் சேர்த்து கைகளையும் கால்களையும் முழுமையாக மூடும் பொருத்தமான ஆடைகளை மாணவர்கள் அணிந்து வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்மானம் தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் நுளம்புக்கடியில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கும், பாடசாலை மாணவர்களிடையே டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களின் பங்களிப்புடன் விசேட நுளம்பு ஒழிப்பு மற்றும் பாடசாலை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் அதிபர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாணவர்கள் முறையான தரத்திலான நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வூட்டுமாறு அதிபர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


