களுத்துறை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்விப் பாரம்பரியத்தில் மற்றுமொரு மகுடம் சூடும் தருணம் கனிந்திருக்கிறது. “நூற்றுக்குப் பின் ஓர் ஊற்று” எனும் கம்பீரமான மகுட வாசகத்துடன், மக்கொனை அஹதிய்யா அறநெறிப் பாடசாலை தனது 25 வருட காலப் பயணத்தை நிறைவு செய்து, வரலாற்றுப் பதிவாக “வெள்ளி விழா” காணத் தயாராகிவிட்டது.
இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக மற்றும் அறநெறிக் கல்வியில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ள இப்பாடசாலையின் இந்த உத்தியோகபூர்வ வெள்ளி விழா நிகழ்வுகள், எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, மக்கொனை அல்ஹஸனியா மஹா வித்தியாலய பிரதான மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை மிகவும் பிரம்மாண்டமான முறையில் அரங்கேறவுள்ளது.
விருதுகளால் நனையப் போகும் சாதனையாளர்கள்!
ஒரு பாடசாலையின் இருப்புக்கு பின்னால் இருக்கும் உழைப்பைக் கௌரவிப்பதே இந்த விழாவின் பிரதான நோக்காக மாறியிருக்கிறது. அந்தவகையில், தற்போது அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வரும் 25 ஆசிரியர்கள் மற்றும் கடந்த 2024-2025 காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய 10 ஆசிரியர்கள் என மொத்தம் 35 ஆசிரியப் பெருந்தகைகள் இதன்போது விசேட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இவர்களுடன் தோளோடு தோள் நின்று உழைத்த அஹதிய்யா அபிவிருத்திச் சங்கத்தின் 15 உறுப்பினர்களுக்கும் விசேட விருதுகள் வழங்கப்படவுள்ளதோடு, பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்த 19 மாணவக் கண்மணிகளும் இதன்போது மேடையில் ஏறிப் பரிசில்களைத் தட்டிச் செல்லவுள்ளனர்.
விழா மேடையை அலங்கரிக்கும் முக்கிய பிரமுகர்கள்
மக்கோனை அஹதிய்யா பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் ஜ.எம்.எம் உவைஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், நாட்டின் மிக முக்கிய ஆன்மீக, கல்விப் பிரமுகர்கள் ஒன்றுகூடவுள்ளனர்.
நிகழ்வின் பிரதம அதிதியாக பேருவளை ஜாமியா நளீமியாக் கலாபீட முதல்வர் அஷ்-ஷேக் ஏ.சீ. அகார் முஹம்மட் கலந்துகொள்ளவுள்ளதுடன், கௌரவ அதிதிகளாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் அர்கம் நூராமித் மற்றும் ஹாசிம் உமர் பவுண்டேசனின் தலைவர், கொடைவள்ளல் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோரும் சிறப்பிக்கவுள்ளனர்.
இவர்களுடன் விசேட அதிதிகளாக பிரதமரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ரிப்லான் ஹஸன், களுத்துறை வலயக் கல்விப் பணிப்பாளர், அகில இலங்கை அஹதிய்யா மத்திய சம்மேளனம் மற்றும் களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
வெளியாகிறது “ரிஹ்லத் அன் நூர்” நினைவு மலர்!
இந்த வெள்ளி விழாவின் வரலாற்று மைல்கல்லாக, மக்கொனை அஹதிய்யா அறநெறிப் பாடசாலையின் கால் நூற்றாண்டு காலப் பயணத்தையும், அதன் சாதனைகளையும் தாங்கி, “ரிஹ்லத் அன் நூர்” (ஒளியின் பயணம்) எனும் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா நினைவு மலர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
அறநெறிக் கல்வியூடாக ஒழுக்கமுள்ளதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப மக்கொனை மண்ணில் உதித்த இந்த “ஊற்று”, வெள்ளி விழாவைக் கடந்து இன்னும் பல்லாண்டு காலம் சமூகத்திற்கு ஒளியூட்ட ஊர் மக்கள், நலன்புரிவோர், பழைய மாணவர்கள் என அனைவரையும் இந்த வரலாற்று நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு மக்கொனை அஹதிய்யா பாடசலையின் செயலாளர் ஜிப்ரியா இப்றாஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.


