ஜுட் சமந்த
கிறிஸ்துவுக்கு முற்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டதும், தென்னிந்திய பிராந்தியத்தின் புகழ்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகப் போற்றப்படுவதுமான வரலாற்றுப் பெருமைமிக்க திருத்தலம்தான் சிலாபம் – முன்னேஸ்வரம். 1753 இல் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னரால் புனரமைக்கப்பட்டு, மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் 1988 இல் உத்தியோகபூர்வமாக புண்ணிய பூமியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இத்தலத்திற்கு தற்போது சர்வதேச அளவிலும் பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.
காளியம்மன், ஐயனார் உள்ளிட்ட பல பரிவார ஆலயங்களைக் கொண்ட இந்த புண்ணிய பூமியில், ஆகஸ்ட் – செப்டம்பர் காலப்பகுதியில் நடைபெறும் வருடாந்த ‘நிக்கினி மகோற்சவம்’ மிக முக்கியமானது. நான்கு வாரங்கள் நீடிக்கும் இத்திருவிழாவில் தீமிதிப்பு, மாம்பழம் எறிதல், இரதோற்சவம் மற்றும் தீர்த்தோற்சவம் வரை அனைத்து சமய சடங்குகளும் வெகு கோலாகலமாக இடம்பெறுகின்றன. மாற்று மதத்தவர்களும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கூட திரளும் இந்த புனித பூமியின் பளபளப்பிற்குப் பின்னால், மறைக்கப்பட்ட ஒரு கசப்பான உண்மை ஒளிந்திருக்கிறது.
பக்தர்களின் வருகையை முன்னிட்டு இப்பகுதியில் பல தற்காலிக வர்த்தக நிலையங்கள் முளைத்துள்ளன. ஆனால், அங்கு வரும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கோ அல்லது இரவும் பகலும் வியாபாரம் செய்யும் வர்த்தகர்களுக்கோ முகம் கழுவவோ, ஒரு மலசலகூடத்தைப் பயன்படுத்தவோ குறைந்தபட்ச சுகாதார வசதி கூட இங்கில்லை என்பதுதான் அந்த அவலம்.
“நாங்கள் நில உரிமையாளர்களுக்கு வாடகை கொடுத்து, பிரதேச சபைக்கும் வரி செலுத்தித்தான் வியாபாரம் செய்கிறோம். ஆனால் எங்களுக்குக் குளிக்கவோ, இயற்கை உபாதைகளைக் கழிக்கவோ ஒரு இடமும் இல்லை. அதிகாரிகளிடம் கேட்டால் கோவில் நிர்வாகத்திடம் போய்க் கேளுங்கள் என்கிறார்கள். அண்மையில் இங்கு வந்த ஒரு வெளிநாட்டுப் பெண்மணி கழிப்பறை வசதி இல்லாமல் பட்ட அவஸ்தை சர்வதேச அளவில் தலைகுனிவை ஏற்படுத்தியது” என அங்குள்ள வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டு குறித்து சிலாபம் பிரதேச சபை அதிகாரியிடம் வினவியபோது, “நவீன கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளை அமைப்பதற்கு அரசாங்கத்திடம் நிதி தயாராக உள்ளது. ஆனால், அதைக் கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் காணி வழங்க மறுக்கிறது. அவர்கள் கோவில் வளாகத்திற்கு அருகில் காணி ஒதுக்கிக் கொடுத்தால் உடனடியாக நாம் சுகாதாரத் தொகுதியைக் கட்டித்தரத் தயார்” எனத் தெரிவித்தார்.
ஆனால், கோவில் நிர்வாகத்தின் தரப்போ இதற்கு நேர்மாறான வாதத்தை முன்வைக்கிறது: “வர்த்தக நிலையங்களால் கோவிலுக்கு எந்த வருமானமும் கிடைப்பதில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தருவது அரசாங்கத்தினதும் உள்ளூராட்சி மன்றங்களினதும் கடமை. எங்கள் கோவில் காணிகளை இதற்காகத் தர முடியாது. அரசிற்குத் தேவைப்பட்டால் சூழவுள்ள தனியார் காணியை சுவீகரித்துக் கட்டிக்கொள்ளட்டும். முன்னேஸ்வரத்தில் இருப்பது ஈஸ்வரன் கோவில் மட்டுமல்ல, எல்லாப் பாரத்தையும் நாங்கள் மட்டுமே சுமக்க முடியாது” என நிர்வாக உறுப்பினர் ஒருவர் பதிலளித்துள்ளார்.
ஒருவர் மீது ஒருவர் பழியைப் போட்டுக்கொண்டு அதிகாரிகள் பந்தை உருட்டிக் கொண்டிருக்கும் இந்த இழுபறியால், பக்தர்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்ந்தும் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. பல காலங்களாகத் தொடரும் இந்த அவலத்திற்கு அதிகாரிகள்தான் செவிசாய்ப்பார்களா? அல்லது முன்னேஸ்வரத்தை ஆளும் ஈஸ்வரன்தான் தலையிட்டுத் தீர்த்து வைப்பாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



