நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சில நீர்நிலைகளை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி களனி மற்றும் களு கங்கையை அண்மித்த சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, களனி கங்கையை அண்மித்த ருவன்வெல்ல, சீத்தாவக்க, தொம்பே, தெஹியோவிட்ட, எஹெலியகொட, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கோபிட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், அதனை அண்மித்த சில தாழ்நிலப்பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபத்தா, கிரியெல்ல ஆகிய தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்குரிய அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பு ஆமர் வீதி பகுதியில் ஜெயத்தவனாராமய விஹாரையை அண்மித்த வீதியில், வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளாதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
அத்துடன் கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின், ரன்வல பஹன பகுதி, நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


