நிருபர்: அசாருதீன்
- புத்தளம், செல்லக்கண்டல் வனப்பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றின் சடலம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க இந்த யானையின் பிரேதப் பரிசோதனையில், அதன் வயிற்றில் நன்கு வளர்ச்சியடைந்த 15 மாத குட்டியொன்றும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- சுமார் 8 அடி உயரமான இந்த யானை, பல மாதங்களாக இப்பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில் காலில் காயங்களுக்காக சிகிச்சை பெற்றுள்ளது.
புத்தளம், செல்லக்கண்டல் வனப்பகுதியில் இயற்கை ஆர்வலர்களை மட்டுமன்றி, மனிதநேயம் கொண்ட அனைவரையும் கண் கலங்க வைக்கும் ஒரு துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது. காட்டின் கம்பீரமாக வலம்வந்த தாய் யானை ஒன்று, அநாதரவாக உயிரற்ற சடலமாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. இந்த யானையின் மரணம் வெறும் இயற்கையான ஒன்றல்ல; இதன் பிரேதப் பரிசோதனையின் போது வெளிவந்த தகவல் காண்போரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
மீட்கப்பட்ட இந்த யானைக்கு சுமார் 35 முதல் 40 வயது இருக்கலாம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். சுமார் 8 அடி உயரமான இந்த கம்பீரமான உயிரினத்தின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே அந்த நெஞ்சை உலுக்கும் தகவல் வெளிவந்தது. ஆம், அந்த தாய் யானையின் வயிற்றில் 15 மாதங்களான, நன்கு வளர்ச்சியடைந்த குட்டி யானையொன்றின் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமிக்கு வரக் காத்திருந்த ஒரு சிசுவும் தாயோடு சேர்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
உண்மையில் இந்த யானை அதிகாரிகளுக்குப் புதியதல்ல. இந்த தாய் யானை கடந்த பல மாதங்களாக இதே பகுதியிலேயே சுற்றித்திரிந்துள்ளது. அதுமட்டுமன்றி, பல சந்தர்ப்பங்களில் இந்த யானையின் கால்களில் ஏற்பட்டிருந்த காயங்களை அவதானித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், அதற்குப் பல தடவைகள் சிகிச்சைகளும் அளித்துள்ளனர். இவ்வளவு கண்காணிப்பில் இருந்த யானைக்கு திடீரென என்ன நடந்தது? அதன் மரணத்துக்கான உண்மையான காரணம் என்ன என்ற கேள்வி தற்போது வலுவாக எழுகிறது.
யானையின் கால்களில் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளன. அந்த துப்பாக்கிச் சூட்டு காயங்கள் ஊடாக உடலில் ஏற்பட்ட கொடிய கிருமித்தொற்றே (விஷம் ஏறியதால்) இந்த தாய் மற்றும் குட்டியின் மரணத்திற்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் தொடர்பான முழுமையான பிரேதப் பரிசோதனைகளை நிக்கவெரட்டிய மிருக வைத்திய காரியாலயத்தின் வைத்திய அதிகாரி செல்வி ஏ.எம்.பி.எம். அசாசூரிய தலைமையிலான மருத்துவக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். மனிதர்களின் இரக்கமற்ற செயலுக்கு மீண்டும் ஒரு தாயும் சேயும் பலியாகியுள்ளமை சமூக வலைத்தளங்களிலும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.





