கடந்த மே 13 ஆம் தேதி முதல் புத்தளம் மாவட்டத்தில் நிலவி வரும் கடும் மழை, வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய இடர் நிவாரண சேவை மையம் (NDRSC) இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாவட்டத்தின் 70 கிராம சேவகர் பிரிவுகளில் மொத்தம் 9,106 குடும்பங்களைச் சேர்ந்த 33,301 நபர்கள் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவ பெரும் பகுதியினர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8,666 குடும்பங்களைச் சேர்ந்த 31,876 பேர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- முந்தல்: 162 குடும்பங்கள் (522 நபர்கள்).
- கருவலகஸ்வெவ: 108 குடும்பங்கள் (330 நபர்கள்) – இங்கு 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
- நவகத்தேகம: 71 குடும்பங்கள் (239 நபர்கள்).
- ஆணமடுவ: 69 குடும்பங்கள் (222 நபர்கள்).
- தன்கொடுவ: 13 குடும்பங்கள் (45 நபர்கள்).
வனாதவில்லுவ பகுதியில் ஒரு வீடு முழுமையாகவும், 3 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மேலும், பள்ளம மற்றும் நவகத்தேகம பகுதிகளிலும் வீடுகளுக்கு பகுதியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி விகாரவெவ மற்றும் பத்தையம ஆகிய குளங்களின் கட்டுகள் உடைந்துள்ளன. நிலைமையைக் கட்டுப்படுத்த உடப்பு பகுதியில் ஆற்றின் முகத்துவாரத்தை வெட்டி நீரை வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தன்கொடுவ பகுதியில் ஜங்குராவெல – அபரஞ்சிமுல்ல கிராமத்திற்குச் செல்லும் வீதி வெள்ள நீரினால் அரித்துச் செல்லப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த வீதி உடைந்தால் அக்கிராமம் தனிமைப்படுத்தப்படும் சூழல் நிலவுவதால், அங்கிருக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிவாரணப் பணிகள்: தற்போது மாவட்டத்தில் 5 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 168 நபர்கள் தங்கியுள்ளனர். இது தவிர, 582 குடும்பங்களைச் சேர்ந்த 1,957 நபர்கள் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக, இந்த அனர்த்தத்தினால் புத்தளம் மாவட்டத்தில் இதுவரை மரணங்களோ, காயங்களோ அல்லது எவரும் காணாமல் போனதாகவோ தகவல்கள் எவையும் பதிவாகவில்லை. மாவட்ட இடர் நிவாரண அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலாளர் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



