அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, மத்திய வங்கிக்கு முன்பாக திரண்டு அதன் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவைப் பதவியிலிருந்து விலகுமாறு கோரி நடத்திய போராட்டம், அரசாங்கத்தின் மற்றுமொரு அரசியல் நாடகமென சர்வஜன அதிகாரம் கட்சியின் கம்பஹா மாவட்ட முதன்மை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஜயந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக, அரசாங்கம் தற்போதைய தோல்விகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த காலங்களில் அரசாங்கம் தனது பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி மத்திய வங்கியையும் நாட்டின் நிதியையும் தனிநபர்களுக்குச் சாதகமாக மாற்றியதன் மூலம் பெரும் களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டது.
இவ்வாறான சூழலில், அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தினால் ஏற்பட்ட கசப்பான விளைவுகளுக்குத் தற்போதைய மத்திய வங்கி ஆளுநரை மட்டும் பொறுப்பாக்கி, அவரைப் பதவியிலிருந்து நீக்குவதன் மூலம் தாங்கள் செய்த தவறுகளிலிருந்து தப்பிக்க அரசாங்கம் முற்படுகிறது.
குறிப்பாக, கடந்த காலங்களில் இடம்பெற்ற 2.5 மில்லியன் டொலர் மோசடி உள்ளிட்ட அனைத்து நிதி கொடுக்கல் வாங்கல்களும் மத்திய வங்கி ஆளுநரின் கட்டுப்பாட்டில் மாத்திரம் இருக்கவில்லை. மாறாக, நிதி அமைச்சர் தலைமையிலான நிதி அமைச்சின் பொறுப்பிலேயே அவை முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறான பின்னணியில், நாட்டை மீட்டெடுக்கப் போராடும் ஒருவரைப் பதவியிலிருந்து நீக்க அரசாங்கம் தனது ஆட்களைக் கொண்டு நேற்று நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளது. ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களை ஏமாற்றிவரும் இக்குழுவினர், தாங்கள் செய்த தவறுகளுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களை அடக்க இவ்வாறான நபர்களைப் பயன்படுத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அத்துடன், அரசாங்கம் பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. பாராளுமன்றத்தில் ஜயமங்கல காதாவைப் பாராயணம் செய்யத் தடை விதித்தது முதல், உள்ளூராட்சி மன்றங்களின் ஆரம்ப நிகழ்வுகளில் பஞ்சசீலத்தைப் பின்பற்றுவதைத் தடுத்தமை வரை இவை திட்டமிட்ட செயற்பாடுகளாகும்.
மேலும், வடக்கு மாகாணத்தில் பௌத்த பிக்குகளை அச்சுறுத்தியதும், அவர்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தியதும் அரசாங்கத்தின் பௌத்த விரோதப் போக்கையே காட்டுகின்றது. இவ்வாறான சூழலில், புனிதமிக்க வெசாக் பண்டிகை காலத்திலும் தொடர்ச்சியான மின்வெட்டுகளை மேற்கொண்டு பௌத்த மக்களின் மனதைப் புண்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என ஜயந்த அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


