இன்று ஆளுநரைச் சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் எனச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், கர்நாடகாவில் எடியூரப்பா விவகாரத்தை மேற்கோள் காட்டும் சிலர், விஜய்க்குப் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும் என்கிறார்கள்.
தமிழ்நாடு தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, இன்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோறியுள்ளது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், விஜய் கட்சிக்கு இப்போது 10 எம்.எல்.ஏ.க்கள் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இதற்காக அவர் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது.
ஒருவேளை எல்லாமே திட்டமிட்டபடி நடந்தால்.. ஓரிரு நாட்களில் விஜய் முதல்வராகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது. இருப்பினும், அதன் பிறகு அவர் சட்டசபையில் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி இருக்கிறது. அதை நிரூபிக்கவில்லை என்றால் ஆட்சி கவிழும்! இருப்பினும், 15 நாட்கள் இருப்பதால் அதற்குள் தேவையான பெரும்பான்மையைப் பெற முடியும் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும் 15 நாட்களுக்குப் பதிலாக ஒரு நாள் மட்டுமே கூட டைம் வழங்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
இதற்கு 2018ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த எடியூரப்பா விவகாரத்தை உதாரணமாகச் சொல்கிறார்கள்.. அதாவது அப்போது கர்நாடக தேர்தலில் 104 இடங்களைப் பெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், இது பெரும்பான்மைக்குத் தேவைப்பட்ட 112 இடங்களை விட 8 இடங்கள் குறைவாகும். எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அப்போதே ஆளுநர் அழைப்பு விடுத்தார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்தார்.
இதனை எதிர்த்து காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அவசர மனுத் தாக்கல் செய்தது. அதில் குதிரை பேரம் நடக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை அப்போதைய சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அதில் “குதிரை பேரத்தைத் தவிர்க்க உடனடியாகப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” என்று கூறி, 15 நாள் அவகாசத்தை வெறும் 24 மணிநேரமாகக் குறைத்து உத்தரவிட்டது. பெரும்பான்மைக்குத் தேவையான 112 இடங்கள் இல்லாததால், எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே உணர்ச்சிகரமாகப் பேசி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
விஜய்யின் தற்போதைய நிலை எடியூரப்பாவின் நிலையை விடச் சற்று நெருக்கடியானது. எடியூரப்பாவுக்கு 8 இடங்கள் மட்டுமே தேவைப்பட்டன, ஆனால் விஜய்க்கு 10 இடங்கள் தேவைப்படுகின்றன. எனவே, எடியூரப்பாவைப் போலவே 24 மணி நேரம் மட்டும் கூட டைம் வழங்கப்படலாம். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை விஜய் அரசு எந்தவொரு முக்கியக் கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாது.
எடியூரப்பா விவகாரத்தில், “பெரும்பான்மை என்பது நம்பர்களை பொறுத்தது; அதன் உண்மைத்தன்மை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்கப்பட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அந்த நம்பர் தான் விஜய்க்கும் இப்போது தேவைப்படுகிறது. எனவே, விஜய்க்கு ஆளுநர் இரு வாரம் டைம் வழங்கினாலும் கூட அது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் செல்ல அதிக வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், வெறும் 24 மணி நேரத்தில் பெரும்பான்மையைப் பெற வேண்டி இருக்கும்.


