விமான நிலையத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகளைத் தோலுரித்துக் காட்டிய நேர்மையான அதிகாரிக்கு இடமாற்றத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, சுகாதாரத் துறையில் பெரும் புயல் கிளம்பியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான பொதுச் சுகாதார பரிசோதகரை (PHI) நடைமுறைகளை மீறி இடமாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்ள இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் நீண்டகாலமாகப் பல்வேறு பாரதூரமான முறைகேடுகள் இடம்பெற்று வந்துள்ளன. குறிப்பாக, சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மாயமானமை மற்றும் விமானங்களில் கிருமிநாசினி புகைமூட்டுவதற்காக (Fumigation) கொண்டுவரப்பட்ட விலைமதிப்பற்ற இரசாயனப் பொருட்கள் மர்மமான முறையில் காணாமல் போனமை உள்ளிட்ட அதிர்ச்சித் தகவல்கள் இதில் முக்கியமானவை.
இந்த மோசடிகள் அனைத்தையும் ஆதாரங்களுடன் முறைப்படி வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, உரிய தரப்பினருக்கு விமான நிலைய பிரதான பொதுச் சுகாதார பரிசோதகர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால், அதிகாரிகளோ குற்றவாளிகள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல், முறைகேட்டை அம்பலப்படுத்திய அந்த அதிகாரியையே பழிவாங்கும் நோக்குடன் அங்கிருந்து திடீரென இடமாற்றம் செய்து மூடிமறைக்க முற்பட்டுள்ளனர்.
அதிகாரிகளின் இந்த அநீதியான செயற்பாட்டுக்கு எதிராக கடந்த வாரமே நாடளாவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனினும், அந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத சுகாதார அதிகாரிகள், தங்கள் தவறைத் திருத்திக் கொள்ளவோ அல்லது இடமாற்றத்தை இரத்து செய்யவோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாகவே, அடுத்த கட்டமாக நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் டெங்கு ஒழிப்புப் பணிகளிலிருந்து முற்றாக விலகும் கடுமையான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அச்சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். “அரசாங்கத்தையோ அல்லது பொதுமக்களையோ அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது எங்கள் நோக்கமல்ல; ஆனால் அதிகாரிகளின் இத்தகைய எதேச்சதிகார முடிவுகளால் இறுதியில் பாதிக்கப்படப்போவது இந்நாட்டு மக்களே என்பதை நினைவூட்டுகிறோம்” என்றும் அவர் ஆணித்தரமாக எச்சரித்துள்ளார்.


